செவ்வாய், 4 டிசம்பர், 2012

பிரான்சிஸ் கிருபா நூல் அறிமுகம்


 உள்ளும் வெளியும் ஆன்மத்தாலும் அறிவாலும் உணரும் ஒவ்வொன்றுக்குமான உச்ச அரும் பொருளைத் தன் அடித்தட்டையான கப்பலில் ஒன்று திரட்டிய இந்தப் புதிய நோவா, படு முரட்டுச் சாலைகளிலே கட்டி இழுத்து வருகிறான்..

         ஓர் நாடோடி இஸ்லாமிய பக்கிரியைப் போல.என் தப்பு வாத்தியத்தைக் கொட்டி முழக்கி இந்தக் கவிஞனின் புகழ்பாடி நடக்கிறேன்.---

             யூமா.வாசுகி- முன்னுரையில்

 

ஏழுவால் நட்சத்திரம்- கவிதை

ஜெ. பிரான்சிஸ் கிருபா

 

கருணை

 

ஆயிரம்

சுத்தியல்கள்                  

ஒரே ஒர் ஆணி

இயேசுவே

இந்த ஆணியையும் ரட்சியும்!

                  பக்-32

          

 

ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் பைபிள்

 

                          பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாசித்தவைகள் அதோடு உணர்வின் தகிப்பில் யோசனை மேல் யோசனையாய் அந்தக் கவிதைகளையே நினைத்துக் கொள்ளும் எனக்கு ஒரு முழுத் தொகுப்புக் கிடைத்தால் விடுவேனா நான். அவரை நான் சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தித்து இருக்கிறேன்.அப்பொழுது அவர் காமராஜ் படத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பதாக சொன்னார். பிறகு தமிழினி ஸ்டாலில் பேசிக் கொண்டிருந்தோம். அவருடைய கவிதைகள் என்னை மிகவும் பாதிப்பதாகச் சொன்னபோது நிஜமாகவா என்றார்.அதன் பொருள்.வந்து சேர்ந்து விட்டதா மணி ஆர்டர் அப்பாடா என்பது போலிருந்தது.கன்னி நாவல் பற்றி பேச்சு வந்த போதும் மிகவும் நளினமாக நெளிந்தபடியும் பாராட்டுதலை அறைகுறை மனதுடன் சங்கடப் படுவதை உணர்ந்த பிறகு விடைபெற்றுக் கொண்டேன்.

        அவருடைய எந்தக் கவிதையை வாசித்தாலும் அவை எனக்காகவே எழுதியது போன்ற பிரமை ஏற்படுவதை அறிந்தேன்.இப்படி சொல்வதின் மூலமாக அவருடன் எனக்கு எந்தக் கொடுக்கல் வாங்கலும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.

          இந்தத் தொகுப்பில் அதிர்ச்சியான விசயம் கவிதைகள் என்று வந்திருக்கிறது. ஏனெனில் நவீன கவிதை என்று ஏன் பதிவாகவில்லை என்கிற கேள்வி உறுத்துகிறது.

       தமிழ்ச் சூழலில் சுஜாதா 90 களில் ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டுப் போனது இன்று வரை தொடர்கிறது. அது, ஒரு கவிதைத் தொகுப்பில் மிஞ்சினால் ஐந்து கவிதைகள் தான் தேறும் என்பதும்.பிறகு அதையே பிடித்துக் கொண்ட நவீன மூத்த தலை முறை கவிஞர் இப்பொழுது வரை ஒரு கவிஞன் தன் வாழ்நாளி்ல் பத்து நல்ல கவிதைகள் எழுது வதே சாதனை என்கிறார். நமது விமரிசக மேதாவிகள் ஐந்து கவிதைகளை  பொறுக்குவதும் பிறகு நீ இன்னும் பத்துக் கவிதைகளை எழுதவில்லையென்பதுமாக கூட்டத்திற்குள் பாம்புகளை விட்டு வேடிக்கை பார்க்கிற மனோ பாவத்தை வளர்த்துக் கொண்டனர். சுஜாதாவின் கூற்றுக்குப் பிறகு நவீன கவிஞர்கள் தத்தம் தொகுப்புகளில் எல்லாக் கவிதைகளையும் சிறப்பாக படைப்பதற்கு முயன்று அதில் வெற்றியும் பெற்றனர். நோகாமல் நோம்பி கும்பிடும் அளவான தொகுப்புகளை எடுத்துக் கொண்டு சிரமப்படாமல் விமர்சனம் எழுதிக் கொள்கிற வகைமையையும் சுஜாதா ஏற்படுத்தியதும் கவிதைகளை கீழ்த்தள்ளிய நிலை எனலாம்.பிறகு அவரே கவிதைகள் குறித்துப் பேசமால் விட்டதும் பிறகு எனக்கு இனிமேல் கவிதைத் தொகுப்புகளை அனுப்பாதீர்கள் குறிப்பாக ஹைக்கூ தொகுப்புகளை அனுப்பாதீர்கள் என்று இறைஞ்சிக் கொண்ட பிறகுதான் தமிழ் நவீன கவிதையும் வளர ஆரம்பித்தது கவிதை எழுதுபவர்களை தன் மேதமையால் வளர்க்காமல் குறும்பா மின்னல்களையும் நறுக்கு சவடால்களும் தான் கவிதைக் கூறு என அவர் உருவாக்கிய சித்திரங்களை தகர்த்த பெருமை பிரான்சிஸ் கிருபா போன்ற வர்களுக்கு உண்டு.

  

விரயம்

 

கண்களைக் கட்டி

அழைத்து வரும் கனவுகளை

கடைசித் தெருவில் விட்டு விட்டு

ஓடிப்போவதை விட

குப்பைத் தொட்டியில்

ஆசுவாசமாய்க்

கொட்டிவிட்டுப் போயிருக்கலாம்

முதல் தெருவிலேயே நீ- பக்.24

 

     

கிருபாவின் கவிதைகளை உறுதிமொழி எடுத்துக் கொள்ள சத்தியபிரமாணம் செய்ய பயண்படுத்தலாம். எனக்குத் தெரிந்து புதிய ஏற்பாடு பழைய ஏற்பாடுகளை தேவாலயங்களுக்கு எடுத்துச் செல்பவர்கள் தயவு செய்து பிரான்சிஸ் கிருபாவின் நுல்களையும் எடுத்துப் போங்கள். கடவுளிடம் கேள்வி கேட்கும் தைரியத்தை உங்களுக்கு வரவழைப்பார்.110 கவிதைகளும் 2012 ஆண்டு மட்டுமல்ல ஒரு லட்சம் வருசத்திற்கு கிருத்துவத்திற்குத் தேவையான ஆகாரத்தை பிரான்சிஸ் கிருபா தந்திருக்கிறார். எந்தப் பக்கத்தை எப்பபோது எந்தச் சூழலில் திருப்பி வாசித்தாலும் மௌத் ஆர்கனில் ஜெயச்சந்திரனின் மலையாளப்பாடலும் சீர்காழியின் விநாயகர் துதியும் கிஷோர் குமாரின் இந்தி பாடலும் மிதக்கிறது. தேங்காய்ப் பன் ரோலை நீள் வெட்டுக்கத்தியால் பேக்கரிக்காரன் அறுப்பது மாதிரி இருதயத்தை சீராகத் துண்டாக்கிய பிறகு சில பீட்ரூட் சதுரங்கள் சிதறியதை எடுத்து வாயில் போட்டுக் கொள்வோமே அப்போது கிடைக்குமே ஒரு சுவை.. அந்த சுவையை விவரிக்க முடியுமா பொல்லாத நரம்பில்லாத நாக்கே..

          வீட்டில் பட்சணங்கள் தீரத்தீர அப் பட்சணங்கள் மீது பிரியங்கள் கூடுவதும் இறுதியான பட்சணத்தின் சுவை தருமே பிறவியின் பலனை.. அப்படியான பிறவிப் பயணைத்தருகிறது கிருபாவின் கவிதைகள்.

 

ஓவியச் சோறு

 

நிலவு

துவர்ப்பாய்த் துவர்க்கிறது

 

சூரியன்

புளிப்போ புளிப்பு

நட்சத்திரங்கள்

உப்புக்கரிக்கின்றன

 

மேகம்

உப்புசப்பே இல்லை

 

மின்னல்

கசப்போ கசப்பு

 

இப்படியாக

எல்லாவற்றின் சுவையும்

தாறுமாறாக இருந்தாலும்

ஒரு வெள்ளைக் காகிதத்தில்

வண்ணப் பென்சில்கள் உதவியுடன்

குட்டிச் சிறுமி

சமைத்துப் பரிமாறும் பாங்கு

தெய்வச்சுவை..       ---பக்.100

          ருசியறிய விரும்பும் நாக்கிற்கான தெய்வச் சுவையை நாம் தெரிவு செய்வது எப்படி எனும் தீராத முடிவுறாத யோசனையை நாம் வாழ்வில் வைத்துக் கொண்டே இருக்கிறோம். எல்லோரும் பசுமைப்புரட்சிக்கு முந்தைய காலங்களிலும் சுவையை அறிந்திருக்கிறோம்.

பிறகு நம்மிடம் உணவு தானியங்களை கையிருப்பும் வைத்திருக்கிறோம். தற்காலத்திலும் சுவையை அறியத் துடிக்கிறோம்.வெகுளியான சிறுமியின் கைப்பக்குவமே தெய்வச்சுவை என்று கவிதையால் மட்டுமே பேச முடியும் நிரூபிக்கவும் முடியும்.சுவையை நாம் வாசிப்பு

எழுத்து. இருப்பு,வருமானத்திற்கான அலைச்சல்.தீர்ந்து போகாத அலைக்கழிப்பு இவற்றுள் எல்லாம் நாம் பொருத்தலாம்.

         பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளில் அவர் நவீன வாழ்வின் காலத்தைப் பற்றிய அக்கறையோ அல்லது அவை செய்யும் மாய்மாலங்கள்,ஃபிளக்ஸ் விளம்பரங்கள். சாதி சங்க மாநாடுகள், சாமியார்களின் லீலைகள்,அரசியல் வாதிகளின் ஊழல்கள்.பதவி சுகம் கொண்ட பவிசுகளின் சொத்துப் பதுக்கல் செய்திகள் பற்றியெல்லாம் அக்கறையில்லை. ஒரு வகையில் அவை கவிஞனுக்கோ எளிய மக்கள் மீது பிரியம் கொண்டவனுக்குத் தேவையும் இல்லாது.

 

என் வானிலே....

 

மணக்கண்ணாடி நிலம் உடையாமல்

நிழலாக நடந்து கோவில் வாசலில்

முளைத்து நிற்கிறேன் குடைக் காளானாக

சிடுசிடுவெனப்படபடக்கும் சிட்டுக்குருவிகளின்

 

வியர்வைத்துளிகள்

மழையாகத் தவிக்கின்றன

 

என் குரலுக்குள் கலைகின்ற கார்மேகம்

உன்பெயர் தேடித்தேடி அலைந்து

முடிவுற்றதோ பெருவானம்

 

நடை திறக்குமா? சிலை சிரிக்குமா?

என்றிரு கேள்விகளை

அடைகாத்தது தொடுவானம்

 

குஞ்சு பொரித்த பிறகு பஞ்சமில்லை

நள்ளிரவுக்கு நட்சத்திரங்கள்..

        கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத மக்களின் உள்ளக்குமுறல் எப்படியிருக்கும். அப்படி ஒருவேளை அம்மக்களை கோவிலுக்குள் அனுமதித்து இருந்தோம் என்று வைத்துக் கொண்டால் கிருத்துவத்தின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.

இன்றும் ஆலயப்பிரவேசத்திற்காக ஏங்கும் மக்களைப் பார்க்கிறோம். கிருபா இப்படியான கற்பனையை இக்கவிதையில் காண்கிறார். கோவிலுக்குள் மக்கள் அனுமதித்திருந்தால் ஒரு வேளை நாட்டிற்கு சுதந்நதிரம் கிடைத்திருக்குமா..சுதந்திரம் பெற்ற நாட்டில் கிருத்து வத்தின் வளர்ச்சி எப்படியிருந்திருக்கும்.

        தொகுப்பில் உள்ள கவிதைகளில் எங்கும் ஒரு நவீன பாவம் அல்லது தாக்கம் தென்படவில்லை. கடந்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக அவருடைய எழுத்து முழுக்கவும் இறையியலின் கருத்தாக்கங்களில் உழல்கிறது. நிரப்பிவைத்து அடைக்கப்பட்ட மனித மனங்களின் இருப்புகளையே சுற்றிசுற்றிப் பேசுகிறது.

எங்கினும் எவ்விடத்திலும் மனிதனையும் அவன் சந்ததிகளிடமிருந்து பிரிந்துபோவதுமில்லை. தனியனாக கவிஞனாக பேசுவதுமில்லை. குழு குழுவாக தனித்தனி தேவாலயங்களை உருவாக்கி தனித்தனியாக சிறு நிறுவனம் உருவாக்கி தனித்த ஜெபக்கூடங்களை உருவாக்கி அங்கேயே கடவுளைக் கண்டு தனது தீர்க்க தரிசனங்களையும் தந்து விடுவதற்காக காத்திருப்ப வர்கள் கிருத்துவர் மட்டுமல்ல எல்லா மதத்தின் மனிதர்களும் அப்படியாகவே இருக்கிறார்கள். பிறகு கண் காணாமலேயே இறக்கவும் கடவாதா கிறார்கள்.

        மனிதனின் மதம் மதத்தின் மனிதன் இருவேறுபாடுகளுக்குள்ளாக ஒரு படைப்பு ஒரு கவிதை தொகுப்பு தமிழில் வெளிவருவது அபுர்வம். அதிலும் கிருபா போன்ற கவிதையில் மேதமை கொண்டவர்கள் கொண்டு வருவது சாலச்சிறந்தது. மதம் ஒரு அபினி என்று பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் கார்ல் மார்க்ஸ் சொன்னதையே மத நிறுவனங்கள் தன்னுடைய தேசிய கீதமாக ஏற்றுக் கொண்டு அபினியாக்குவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டதின் விளைவை நாம் அனுபவிக்கிறோம். ஒரு குழுவைக் கட்டி வைத்துக்கொள்வதற்கு மதத்தை விட்டால் வேறுவழியுமில்லை. நாமும் ஒரு மதத் தலைவனாக இருந்தால் பார்த்தால் தெரியும் சிரமம்..

 

பாடம்

 

ஆலம் விழுதுகளில் கிளிகள்

எப்படி மரமேறுமென்று

உன் ஜடைப்பின்னலில்

நடித்துக் காட்டிய

என் விரல்களைக் கோபித்துக் கொண்ட

உன் கூந்தல்

முதுகை விட்டுத் தாவி

மார்பில் விழுந்தது

செல்ல முகச்சுழிப்போடு

உன் விரல்களே பின்னத் தொடங்க

இப்போது கற்றுக் கொண்டிருக்கிறேன்.

ஆலம் விழுதுகளில் கிளிகள்

எப்படி மரமிறங்குமென்று.......பக் 63

     பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகள் நவீன கவிதைகள் இல்லையென்று உறுதியாக சொல்ல முடியும். அது போலவே அவரையும் நவீன கவிஞன் இல்லையென்றும் சொல்ல முடியும். காரணம் அவருடைய உலகத்தின் நவீனம் என்பது வேறு வகையானது. பிருந்தாவன சொர்க்கம் தருவது. அழகான நித்திரை தருவது. அங்கு ஒழுங்காக மூத்திரம் பெய்கிறவன் இருக்கிறான். அங்கு ஒழுங்காக கடவுளை சபிக்கிறவன் இருக்கிறான். அவ்விடம் அரசாங்கம் இல்லை. அங்கு சாயப்பட்டறை இல்லை. எல்லோரும் வெள்ளை உடைகளையே உடுத்துகிறார்கள்.மிக அழகாகவும் நேர்த்தியாகவும் ரசனையுடனும் புணர்கிறார்கள். வெகுநேரம் கலவியில் இருக்கிறார்கள்.

அங்கு பல்கலைக்கழகங்கள் ஆற்றங்கரையோரம் சேரிப் பகுதியில் நிறுவப்பட்டிருக்கிறது. அங்கு கன்னிகள் கன்னிகளாகவே இருக்கிறார்கள். அவளை தாரமாக்க கவிஞர்களும் கவிதைகளுமாகத் துதிக்கிறார்கள்.. கடவுள்களும் மத நிறுவனங்களும் பெட்டிக்கடை வைத்திருக்கிறார்கள்.

 

நீ..நீயாகி

 

நீரில் வாழும் 

இந்த மலர்களுக்கு

நீச்சல் தெரியவில்லையே

எனக்

கவலைப் படுகிறாய்

 

படு

பட்டுப் பட்டு

ஒரு சொட்டு

நீராகிப் பார்

 

அப்போது அறிவாய்

தண்ணீர் பற்றியும்

தாமரை நீச்சல் பற்றியும்- பக்-41

 

 

     நாமெல்லாம் அங்கு போக ஆயிரம் வருசம் ஆகலாம்.. அல்லது போக முடியாமலும் போகலாம். நாமென்ன வருத்தம் கொள்ளவா போகிறோம்.. சரி பார்க்கலாம் நண்பர்களே..

 

இருமுடி கொண்டைப் பையை எடுடி போக்கத்தவளே....

 

சாமியே சரணம் ஐயப்பா

சாமி சரணம் ஐயப்ப சரணம்

ஏத்தி விடப்பா இறக்கி விடப்பா...

 

வெளியீடு- நியு செஞ்சுரி புக் ஹவுஸ் லிட்..

தொலைபேசி-044-26251968-26359906-26258410

               பக் -117விலை ரூ.80

       

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக