வியாழன், 31 ஜனவரி, 2013

Kathir Bharathi's Book Review

கதிர்பாரதியின் மெசியாவிற்கு மூன்று மச்சங்கள்
கவிதைத் தொகுப்பை முன் வைத்து

இரதி மணாளன் கவிதை உலகம்-

இளஞ்சேரல்
        
      
        உலகத்தின் வளங்களையெல்லாம் கன்னம் வைத்து அபகரித்துக் கொள்ள முனைகிற வல்லாதிக்க மேலாண்மையைத் தகர்க்கிற மொழியின் வீரியத்துடன் நவீன கவிதை இயங்கி வருகிறது. புத்தாயிரத்தின் உலக கவிகள் சந்திக்கும் மைக்ரோ க்ரைம் சைபர் கிரைம் அச்சுறுத்தல்களும் அதிகம். எல்லா மறைமுக நெருக்கடிகளையும் தன் கவிதைகளால் கடந்தும் எழுந்தும் பரவி வருகிறார்கள்.
       நவீன கவிதையின் புதிய நூற்றாண்டின் தேவைக்கான வடிவத்தை செழுமித்துத் தந்தவர்களில் ஒருவராக யுமா.வாசுகியும். ஜே.பிரான்சிஸ் கிருபாவும் இளைய தலைமுறையை பாதித்தவர்கள். தண்ணீருக் காகப் பிச்சை கேட்டுக் காத்துக்கொண்டிருக்கிற தமிழ் நிலத்தின் வறண்ட இதயங்களுக்காகக் கண்ணீர் சிந்தியவர்கள். தேய்ந்த சொற்களை மீண்டும் உருக்கி உருக்கி அணிகலன்களாக மாற்றி நமக்கு அணிவித்தவர்களில் முக்கியமானவர்கள்.
        அவர்கள் தான் தேவாதி தேவனாம் கருணா மூர்த்தியாம் இரட்சகப் பெருமாள் கிருத்துவை வரவழைத்து விடமுடியுமா அல்லது இங்கிருக்கும் ஒரு நவீன கவிஞனை கிருத்துவாக மாற்றி இந்த நிலமெங்கிலும் நடந்து சிலுவை சுமக்க வைத்து பாறைகளை வெடிக்க வைத்து நீருற்றை பீய்ச்ச வைக்க முடியுமா? தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க முடியுமா என்று யாசிக்கிறார்கள். நவீன கவிஞனின் கிருத்தும் மற்ற சமயத்தின் உருவாரச் சிலைகள் யாவும் அவனுடைய செல்லப்பிள்ளைகள். ஒரு வகையில் அவர்கள் தான் கொஞ்சம் தீர்க்க முடிகிற ஷரத்து விதிகளை கைவசம் வைத்திருக்கிறார்கள். கதிர்பாரதியும் தன் தொகுப்பில் முன் வைக்கும் கவிதையின் வழியாக  கிருத்துவிடம் பிரார்த்திக்கிறார்..

என் தேவனே...என் தேவனே..

திசைகளைப் பதற்றத்துள்ளாக்கி
மாநகர சாலையில் விரையும்
ஞாயிற்றுக் கிழமை கசாப்புக் கடைக் காரனின்
இருசக்கர வாகனத்தில்
\குறுக்கு வட்டாகக் கிடந்துக் கதறுகிற
மறியைப்பாத்ததும்
நீங்கள் என்ன செய்வீர்கள்
என் பிதாவே என் பிதாவே
ஏன் என்னைக் கைவிட்டீரென
கல்வாரி மலையில் அரற்றிய
என் தேவனே..என் தேவனே..என்று
கைத்தொழுவேன்
நான்
பக்-68
        யேசுவைப் போலொருவரைக் காண்பதோ அன்றியும் பிறர் போலிருக்கும்  அவரைப் பின் தொடர்ந்தோ செல்கிறோம். செல்லுதலும் கூட யார்க்கும் எளிய வழி அவ்வழியல்லவா.
          அவர்களின் சிகரெட் புகையின் வழியாகவாவது இந்திரனின் தேவதைகளை நசுக்கிவீசும் துண்டு சிகரெட்டினிலிருந்து உயிர்ப்பித்து ஜீன்ஸ் டிசர்ட் அணிவித்து, இரட்டை ஜடை போட்டு சீருடை அணிவித்து, அல்லது வடநாட்டு அழகியாக மாற்றி கொசுவம் வைத்து சுங்கிடிச் சேலை கட்டுவித்து குளிர்க் கண்ணாடி அணிவித்து வெண்கலத் தூக்குப் போசியில் கொஞ்சம் கருவாடு தந்து கோவில் நிலத்தின் வயலில் இறக்கி விடுகிறார்கள்.
    ஐநூறு கோடி சொத்துள்ள கதாநாயகன் வயலில் இறங்கி (டுப் போடாமல்) நாற்றுப் பெண்கள் மடி பார்த்துக் கொண்டிருக்கிறவனுக்கு உதவிட வைக்கிறார்கள்.
         வறண்டு கொண்டிருக்கும் அணைகள் தன்னுடைய  எல்லைகள் களவு போகும் தேசத்தின் குழந்தைகளுக்காக முகுந்த நாகராஜனும் வேலு சரவணனும் முருக புபதியும் புது எழுத்து மனோன் மணியும் இன்ன பிற சங்கல்ப விமோசினிகளும் இயங்குகிறார்கள். மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறகு நமக்குள்..





உன் பாசாங்குக்கும் பசப்புகளுக்கும்
மங்கியிருக்கும் நிலம்

எமக்கு வாய்த்தது நன்னிலம்தான்
நெகிழத் தொடங்கியிருக்கும் இக்கணத்திலிருந்து
அதனியல்பால் எல்லாம் கிட்டும்
எழுதுகோல் முளைக்கும்
கணனியும் கண்டடைவோம்
மரித்திருக்கும் குலசாமிக்கு உயிர்ப்பு துளிர்விடும்
சாங்கியமும் கொண்டாட்டமும் மீண்டும் நிறம் கொள்ளும்
நிலத்தின் வண்டல்களால் செப்புறும் மூளை
இருதயம் திடச்சித்தம் கொள்ளும்
கனவுகள் கள்வெறியுட்டும்
இறுகிக்கிடந்த இச்சைகளுக்கு  றெக்கை அரும்பும்
மூதாதையர்கள் தேடிக் களைப்படைந்த புதையல்கள்
அகழாமல் மேல்வரும்
நீளும் ஆயுள் ரேகைகளில் எம் சந்நதி வளப்பமுறும்
எல்லாம் கிட்டும் எமக்கு
யாவற்றுக்கும் முன்
உன் பசப்புகளுக்கும் பாசாங்குகளுக்கும்
மயங்கி இருக்கும் நிலத்தை மீட்டாக வேண்டும்.
பக்-31-
        இந்தக் கவிதையின் விசாலம் உண்மையின் தடித்த தழும்பை மேன் மேலும் கீறிவிடுகிறது. தன் நிலம் இழந்தவனுக்கு ஆதரவாக கவிதை தன் மொழியின் அதீத ஆற்றல் கொண்டு முழங்கியும் ஆர்ப்பரித்தும் பேசுகிறது.
ஒரு சங்கல்பம். ஒரு தீட்சண்யம். எழுச்சி.
       
         மகன்களும் மகன்களின் நிமித்தமும்-பக்-21 நெடுங்கவிதைகள் ஒன்பது காட்சி சித்திரங்களாகப் பதிவாகியிருக்கும் கவிதைகளில் கதிர்பாரதியின் மொழி ஆவணமாக மாறியிருக்கிறது. தொகுப்பில் திரும்பத்திரும் பவும் அந்த மொழியின் அடர்த்தியும் எளிமையான. இயற்கையான கிராமத்தின் அழுக்கு வண்ணங்களில் மிளிரும் சித்திரங்கள். விவசாய மக்களின் தினக்காட்சிகள் நெடுங்கவிதையினூடே வந்து போகும் நகைமுரண் அணியின் சொல்லாட்சியும் அபாரம். 
        நம் காலத்தின் அரசியலும் வாழ்வின் நிமித்தம் மைதானத்தில் மழையும் நீரும் பொய்த்து,தற்கொலைக்கு முன்பு சாணம் திண்ணும் மக்கள் கூட்டத்தினுள் அரங்கேறும் வினோதமான காட்சிகள் இவை. நவீன கவிதையின் ருத்ரதாண்டவ நடனம் நிகழும் காலமும் சூழலும் இவைதான்.
       
       ஆழந்த குகைகளுக்குள் இறங்கும் முன்பு சில படிகள் போல சில வெட்டுத் தடங்களை உருவாக் கியிருப்பார்கள் முன்சென்றவர்கள். எனினும் போகப் போக ஒன்றும் தென்படாது. அவர்கள் அந்தப் பாதைகளின் வழியாக சென்றார்களா அல்லது பாதியில் திரும்பினார்களா தெரியாது. எனினும் பின் செல்லும் யோகியோ துறவியோ பின் தொடர்ந்து கொஞ்சம் ஆழம் போகவே விரும்புவான். நவீன தமிழ் கவிதையின் இயக்கத்திற்கு குகைகளும் அருவிகளும் பிடியில்லாத மாயக்கயிறுகளும் கயிற்றரவம் போன்ற பிரமைகளும் சாதாரணமாகவே தோன்றும் படிமங்கள். கவிஞனுக் குள்ளாக சொல்லும் காட்சிப்பிறழ்வும் வடிவம் செய்து கொள்ளும் அணிச்சை அபுர்வமான செயல்கள்.
    
        இந்த வரிகளை வாசிக்கலாம். ஏற்கெனவே இந்திராவின் எமர்ஜென்சி காலத்தில் 74-77 வரையிலான இந்திய தமிழ்க் கவிதைகளில் உருவாக்கிய படிமங்களாக இருந்தாலும் மரபின் உருவகத்தில் அற்புதமாக முழு கவிதையும் எழுதப்பட்டிருக்கிறது.

திலீபன் வைத்த கொலுவில்
வெளிமானை முதுகில் சுமந்து கொண்டு
புல் மேயத் தயாராக இருக்கிறது புலி்
பசுமாட்டு நிழலி்ல் சிங்கம் இளைப்பாற
கரடியும் குரங்கும் முகத்தோடு முகமுரசி
விளையாடும் பாவனையில் இருக்கின்றன
காந்திஜி கையில் துப்பாக்கி கொடுத்துவிட்டு
புல்லாங்குழல் வாசிக்கிறான் வேட்டைக்காரன்.
  
       கவிதைகளுக்குள் கவிதையின் பிரச்சனையை உள்ளடக்க பிம்பங்ளையும் படிமங்களையும் கலைத்துக் கலைத்துப் பின் வேறொன்றின் வழியாக புதிய பொருளை உணர்த்தும் கவிதைகளும் வரிகளும் சிறப்பு. ஒரே மாதிரியான வடிவொத்த கவிதையின் பொருள் உணரப் பட்டாலும் ஒவ்வொரு கவிஞனின் வாழ்வு வேறுவேறானது. சமகாலத்தில் நவீன கவிஞனும் தீவிர இலக்கியவாதியும் எதிர்கொள்ள நேர்கிற விமர்சனம் ஒரேமாதிரியாக ஒன்று போலவே எழுதுகிறீர்கள் என்பதுதான். முதலில் புரியவில்லை என்று சொன்னவர்கள் தான் இப்போது ஒரே மாதிரி என்கிறார்கள். கொஞ்சம் அவர்கள் முன்னேறி வந்ததற்காக மகிழ்ச்சி கொள்ளத்தான் வேண்டும்..
        நவீன கவிஞன் ஒருவர் விவசாயத்தில் ஈடுபடுவார். ஒருவர். நகரமாயமான வாழ்வின் நெருக்கத்தில் இருப்பார். ஒரு பாரம்பரியம் மிக்க தொழில் செய்து கொண்டிருப்பார். ஒருவர் நிதிபரிவர்த்தனை செய்து கொண்டிருப்பார். ஒருவர் தினசரி வியாபாரியாக இருப்பார்கள் இப்படியாக சில நவீன கவிஞர்களின் வாழ்வு கழிந்து கொண்டிருக்கும். எனினும் அவர்களின் மொழியும் காட்சியும் உணர்த்தும் பொருளும் சித்திரத்தையும் நீ்ங்கள் எப்படி ஒரே மாதிரி எழுதுகிறார் என்று சொல்வீர்கள்.
      
       ஒரு காலத்தில் கடல் வணிகத்தில் தமிழ் சமூகம் கொடிகட்டிப்பறந்தது. இன்று கடல் நிலம் தரைநிலம் முழுவதும் அந்நிய நாட்டினரின் ஆளுகையின் பிடியாக மாறப்போவதை காட்சிப்படுத்தியிருப்பதை வரவேற்கவும்..

வைகல்தோறும் அசைவின்றி,உலகு செய்க்
குறைபடாது, நீரில் நின்று நிலத்தேற்றவும்,
நிலத்தில் நின்று நீர்ப்பரப்பவும்,அறந்தறியாப்
பலபண்டம்,வரம்பறியாமை வந்து ஈண்டி
அருங்கடிப் பெருங்காப்பின்,வலியுடைவல்
லணங்கினேன்,புலிபொறித்துப் புறம் போக்கி
மதி நிறைந்த மலிபண்டம்-
பட்டிப்பாலை-124-136
    மேற் கவிதையில் கப்பலில் வந்த பொருள் கரையில் இறக்கியும்,கப்பலில் ஏற்றியும் அம்மூட்டைகளின் மேல்
சோழன் முத்திரையை வைத்தும்,சுங்கம் வாங்கும் குறைவில்லாத பண்டங்கள் என்பதால் அயல் நாட்டு  வணிகம் அறிந்தோம்.ஒரு சந்தை ஒழுங்கு இருந்தது.
         நம் நவீன காலத்தின் கவிஞன் கதிர்பாரதியின் லாபங்களின் ஊடுருவல் பக்-17 கவிதையில் உள்நாட்டுச் சந்தைகளுக்குள் நுழைந்த அந்நியர்களின் சந்தைப் படுத்தலை விமர்சிக்கிறார்.          
  ஆயினும் கோடாணுகோடி முதலீ்டு செய்யப்பட்டு கட்டப்பட்டு வெறுமையாகக் காட்சியளிக்கும் காலியாக இருக்கும் டைடல்பார்க் அறைகள் எத்தனை. இது பற்றிய ஆரம்ப சித்திரங்கள் எப்படியிருந்தது. மூவாயிரம் பேர் வேலை செய்த ஆலையை இழுத்து மூடி அந்த நிலத்தை இடித்துத்தள்ளி அங்கு இப்போது 6000 பேர் குடியிருக்கும் விதமாக அடுக்குமாடிக்குடியிருப்பு கட்டப்பட்டு தற்போது அங்கு அருபது குடும்பங்கள் மட்டும் வசிக்கும் சித்திரத்தை நவீன கவிஞன் பேசாமல் எழுதாமல் இருக்க முடியுமா.  நவீன கவிஞர்கள் மன அவசங்களையும் தன் முனைப்பின் நீர்மையையும் காமத்தையும் உடலை மட்டுமே பேசுகிறார்கள் என்று மத்திய மாநில அரசுகளுடன் இணைந்து இலக்கியப் பணியாற்றும் பிரபல கவிஞர்கள் பேசுகிறார்கள். புத்தி மதி சொல்கிறார்கள்.
       
        ந.முத்துசாமி.ஞானக் கூத்தன், ஆத்மாநாம், அபி.
எஸ்.வைத்தீஸ்வரன்,கிருஷாங்கினி,அம்பை, இரா.மீனாட்சி நாரணோ ஜெயராமன் போன்ற மூத்த தலைமுறையின் ஆளுமைகள் ஃபார்வாட் கம்யுனிட்டியாக  இருந்தாலும் மாறிவரும் தமிழின் புதிய தலைமுறையின் எழுத்து, கவிமொழியின் எதிர்காலச் சித்திரங்களைக் குறித்துப்  பேசியிருக்கிறார்கள்.
        சங்கக் கவிதைகள் ஒரு கவிதை நான்கு மாற்று ஈட்டுப் பொருளைத் தரும். நவீன கவிதைகள் இருபது வகையான ஈட்டுப் பொருளைத் தருகிறது. சங்ககாலத்தின் இருப்பும் ஒலியும் அச்சமும் துரத்தல்களும் இப்போது ஓய்ந்திருக்கிறது. குதிரைகள் இல்லை. கழுதைகள் இல்லை. புலிகள் இல்லை, கிராமத்தில் குரங்குகள் இல்லை. மனிதக்குரங்குகள் இல்லவே இல்லை.
      ஒரு அறை உலக உருண்டையாக மாறியிருக்கிறது தற்பொழுது. அதற்குள் காற்று இல்லை. ஒரு சொல் உலகத்தை நீர்க்குமிழியாக்கியிருக்கிறது. ஒரு கிராம் மாத்திரை அவனை நான்கு நாட்கள் அசைவற்று கிடக்கப் பண்ணுகிறது. முதல், இடை, கடைச் சங்கத்தில் இவை இருந்திருக்கிறதா.
      
          கவிதை நூல்களுக்கு விமர்சனம் எழுதும் போது எனக்கு அவசியமாக வேண்டியது, கொஞ்சம் சன்னமான இரைச்சல்,காற்றாடியின் இரண்டாவது நிலை சுழல், ராக்கோழிகள் மூன்று கட்டைச் சுருதியில் கிர்ர் சத்தம் வேண்டும். ரயில்கள் குறுக்கும் நெடுக்குமாகக் கடக்க வேண்டும். அல்லது ரயில் இன்ஜின் தேவையில்லாமல் உறுமிக்கொண்டே இருக்கவேண்டும்.
           ரயில் பாதைகளில் சிந்திய தானியங்களை காகம்,குருவி,புறாக்கள் கொத்திக்கொண்டிருக்கவேண்டும்.

       தன் இதழ்களையே இரும்பாக்கிக் கைவிரல்-கைகளாக்கிக் கொண்ட பறவைகளைப் போலவேதான் நவீன கவிஞன்-கவிதையின் நிலையும். வயதான யானையின் தும்பிக்கையாக, சரியான நேரத்தில் ஓய்வுதியம் பெற முடியாத, அர்ச்சனைக்கு போக முடியாத மலராக, இறுதியில் மிச்சமாகி யாருக்கும் உபயோகமில்லாது தண்ணீரோடு கறைந்து போகும் உணவாகவும் கவிஞனின் வாழ்வு இருக்கிறது. எப்போதும் கற்புரம் அவித்து “நான் மனிதனின் சொல்என்று சத்தியம் செய்யத் தயாராகவும்  இருக்க வேண்டும்.
       
         தொகுப்பில் உள்ள சில கவிதைகளில்  காலத்தின் ஆர்ப்பரிப்பு கூச்சல் பின் துரத்தல் இருக்கிறது.
காலத்தை அறுக்கும் ஆலகாலம், லாபங்களின் ஊடுருவல்,கடக்க இயலாத தெரு, காலத்தினாற் செய்த கொலை, ஆமாம் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள், கனவிலிருந்து எழுந்து போய் சிறுநீர் கழித்தேன் ஆகிய கவிதைகள் எனக்குப் பல சிந்தனைகள் கீழ்கண்டவாறு தோன்றிட வைத்தது என்பதைப் பகிர்ந்து கொள்கிறேன்.
    
       குடை ரிப்பேர்க்காரரிடம் ஒரு குடையிருக்கும். அந்தக் குடையை அவர் மழைக்கு உபயோகப்படுத்த மாட்டார். வெயிலுக்கும் நிழலுக்கு மட்டுமேயானது அது. ஒரு கணம் விரும்பி  அந்தக் குடையைக் கேட்டேன். அழகிய வேலைப்பாடு கொண்ட பிரம்புக் கொண்டையணிந்த குடையது. இந்தப் புதுசை வெச்சுக்கங்க என்றேன். அவரோ வற்புறுத்தாதீங்க“ என்றார். சாவி ரிப்பபேர், பூட்டு ரிப்பேர்க்காரர்கள் எல்லாம் ஒரு குடையின் கீழ் அமர்ந்திருப்பார்கள்.
        சமகாலத்தில் அக்குடை போலவே இன்றும் வண்ணக் குடைகளை மல்டி பிராண்ட் வீட்டு உபயோகப் பொருட்கள். கணணி விற்பவர்கள், கார் விற்பவர்கள் உபயோகப் படுத்துகிறார்கள். காவலர்கள் குடைக் காரர்களை விரட்டுகிறார்கள். வண்ணக் குடைக் காரர்களிடம் இளநீர் வாங்கி அருந்துகிறார்கள்.
          
         மேலும் நூலில் மற்ற கவிதைகளில் சில ஒரு வார்ப்பு அச்சின் உருவக் குமிழ்களில் சுண்ணக்களிமண் மாவும் களிம்பும் வார்க்கப்பினூடாகத் திணிக்கப்பட்டு அப்படியே தலைகவிழ்த்துக் கொட்டினால் ஒரு கடவுள் உருவம் கிடைக்கும்.அல்லது பொம்மைகள் கிடைக்கும். அப்படியாக கவிதைகள் உள்ளது. அதனின் கவிமொழி வாசிக்க ஏதுவாக சிறு உள்ளக்கிளர்ச்சி தருவதானாலும் அடுத்த நிலைக்கு கவிஞனை அனுப்ப மறுக்கும் கவிதைகள். அக்கவிதைகளை கதிர்பாரதியால்  மேலும் செழுமைப்படுத்த வேண்டியவை.
        
       கதிர்பாரதியின் முதல் தொகுப்பு என்பதை நம்ப முடியாமையின் காரணம் அதன் விலாசமான காலப்பரப்பு, கலை அனுபவத்தின் நேர்த்தி, கால ஒழுங்கின் வளம். ஒரு நிலைக்குள்ளாக தன்னை ஒழுங்கு படுத்திக் கொள்ள முனையும் ஆவல். தன் எழுத்திற்கும் தமக்குமான உடமையை வலியுறுத்தும் முயற்சி. ஆகியவையால்  தெளிவாக உணரமுடிகிற வலிமை.
     
சமகாலத்தின் அச்சு வரைகலையுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நூலாகவும் வெளியிட்டுள்ள புது எழுத்து பதிப்பகத்திற்கும் மனோன்மணிக்கும் வாழ்த்து சொல்லவேண்டியிருக்கிறது. வாய்ப்பிற்கு நன்றி...


வெளியீடு
புது எழுத்து
பக்-68
விலை ரூ.60-
ஆசிரியர்-கவிஞர்-கதிர்பாரதி
Cell-98417 58984


Puthuezuthu
2-205 anna nagar
Kaveripattinam-635112
Krishnagiri Dist
90421 58667

         


ஞாயிறு, 27 ஜனவரி, 2013

na.peria samy's poetry book "Madhuvahini"

சொற்கள் தீரும் வரை காத்திரு
ந.பெரியசாமியின் மதுவாகினிகவிதை நூலை முன்வைத்து...
       
ஒரு நாள் கிணற்றில் நீச்சலடித்துக் கொண்டிருந்தவர்களை குத்துக்காலிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னாலிருந்து காலால் எத்து விட்டார் மாமா. கையை காலை உதறி மேலேற இவ்வளவு தாண்டா மாப்புள்ள நீச்சல் என்றார். இவ்வளவு எளிதா இதற்கா இவ்வளவு நாள் பயந்து கிடந்தொமென நினைத்த கணத்தில் கிணறு என்னோடு சிநேகிதமாகிவிட நீச்சலில் சில லாவகங்களைக் கற்றறிந்தேன்”- முன்னுரையில் ந.பெரியசாமி.
      அதுபோலவே கவிதையைக் கற்றுக் கொள்ள முடியவில்லை என்பதாகப் பேசும் பெரியசாமி அறிய விளைவது கவிதை நீச்சலை விடவும் நுண் தொழில் அல்ல. மாயத்தின் புகையினை, பின்னணியை நாம் அறிய விழைய முற்படுவதே அபத்தம்தான். கவிதை திரும்பத்திரும்ப எழுதப்படுவதின் ஆக்கமே வாழ்வின் வினோதமான ஏமாற்றங்களும் திருப்பங்களும்தான்.
            ந.பெரியசாமியின் கவிதைகளில் கிணறும் அதன் சுற்றளவு உயிரினங்களும் திரும்பத்திரும்ப வருகிறது. புதிய படிமமாகவும் அனுபவமற்றவர்களின் கிணற்றுக்கும் படித்தவர்களின் போர்வெல்லுமான வித்தியாசம். போர் வெல்லில் இறங்கி நீந்த முடியாது. இழந்த பால்யத்தின் கனவுகள். அல்லது அங்கிருந்து அள்ளிப் பெற்றுக் கொண்டு வந்து அமுதசுரபி உணர்வு நிலைக்குக் கொண்டு செல்கிறது.





நினைவின் புழுதி



நிறைந்த கிணற்றிற்கு
ஒற்றைப் பூச்சூடி
அழகு ததும்பச் செய்து
துளித்தேன் நா பரிமாறி
உடல் தித்தித்து
மணம் படிந்த புழுதியோடு
இணைந்தலைந்த பொழுதுகளை
நினைவுள் பூட்டி
தவித்தலைவாய்
வார்த்தை சாவிகளோடு அலைவுறும்
என்னைப் போலவே---பக் 30
          சங்க காலத்தின் நிலவியல் சூழலுக்கு நம் கற்பனையை விரிக்க வைக்கிறது இக்கவிதை.ஒரு நற்பொழுது விரைந்து முடிந்து போவதும் துயரகாலம் விலகுவதற்கு நெடுநாள் ஆவது போலவுமான பிரமை இருக்கத்தானே செய்கிறது நமக்கும். மட்டுமின்றி மதுவாகினி சித்திரங்களாக கவிதைகளின் ஊடுபாவி கலக்கும் கவிதைகள் அபாரமானவை. பெரியசாமியின் கவிதைகள் என்பதான ஆழ அழுத்தம்


     நாம் ஒரு செயலுக்காக தொடர்பை ஏற்படுத்துவோம். அவர் நம்மிடம் உடனே பட்டியல் ஒன்று தருவார். பட்டியலை முடிப்பதற்காக சிலரிடம் நீங்கள் மேலும் தொடர்பு கொள்வீர்கள் அவர்களும் உங்களுக்கு சில பட்டியல்கள் தருவார் நீங்களும் சளைக்காமல் பட்டியல் பொறுப்புகளை முடிக்க இயங்குவீர்கள். இந்தப்பட்டியல் களால் மிகுந்து சோர்வுற்று நீங்கள் பழைய தொழிலுக்குத் திரும்பிய பிறகுதான் அறிவீர்கள் நீங்கள் பட்டியலில் இருக்கமாட்டீர்கள். பட்டியலைத்தயாரித்தவர்கள் தான் பட்டியலில் வரிசையாக இடம்பெற்றிருப்பார்கள். முந்ததைய நோகாத கவிதைகாலத்திலும் இடம்பெற்ற நிலை தற்கால நவீன கவிதை காலத்திலும் இடம்பெறுகிறது. சினிமா வாரிசுகள் அட்டகாசம் போலவே காலாவதி விமர்சகனின் கவிதை வாரிசுகளின் அட்டகாசம் தொடர்வதை யெல்லாம் ஏதாவது ஒருதருணத்தில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
   
பன்றிகளின் இருப்பைத் தேடும் மதுவாகினி

மதுவாகினிக்கு
பன்றிகள் மீது பரிவு அதிகம்
அவதாரத்தில் இறையடி கண்டதாலல்ல
நோய் பரப்பும் அசிங்க ஜந்தென
முகம் சுளிப்போரை விலக்கி
தேடித்தேடி இருப்பை அடைவாள்
அதுஅதுகள் தன்போக்கில் திரிய
ஏமாற்றத்தில் சோம்பியும்  கிடப்பாள்
என்றாவது தரிசிக்கும் பொழுதில்
தவத்தால் கருத்தரித்தவளாய்
கண்கள் பனித்திருக்கும்
என் இருப்பு குறித்து
எச்சலனமுமின்றி
அனிச்சையாக அவளே
தன் முலை வருடியபடி
விதந்து கொண்டிருப்பாள்
முட்டிய இழுக்கும் குட்டிகளுக்கு
ஒரு சேர பசியடக்கும்
தாய்மையை-பக்-38
கவிதையின் ஆழமான உணர்த்தலும் வாழ்வின் அணுஅணுவான துய்ப்பைப் பன்றிகள் மேற்கொள்வதை மொழியின் எந்த ஆதிக்கமும் இன்றி பதிவாகியிருக்கிறது. நவீன காலத்தின் இருப்பினைப் பேசுகிற ஒவ்வொரு சொல்லும் காத்திரமானதாக இருக்கும்..ந.பெரியசாமி அனுபவத்தால் தோய்ந்தவர். பன்றி மட்டுமல்ல சமூக விலங்குகளின் மூலமாக சுயவிலங்காக மனிதன் மாறி இன்பம் துய்க்க இயற்கை அழித்து முன்னேறுவதற்கு விலங்குகளைத்தான் பயண்படுத்தியிருக்கிறான்.
            ஒரு மணிநேரமே நிற்கும் போதைக்கு நாம் காட்டும் விசுவாசம் தமிழ்மொழிக்கும் நவீன இலக்கியத்திற்கும் என்றென்றும் காட்டவேண்டும். மாயைகளை உருவாக்கும் உலகம் அல்லாத உலகம் ஒன்று கடும் உழைப்பின் வாயிலாச் சுழன்று கொண்டிருக்கிறது என்பதையும் தற்காலத்தின் நவீனப் படைப்பாளர்கள் அறிந்து கொண்டால் தான் மேன் மேலும் முனைப்புடன் எழுதவும் இயங்கவும் முடியும்.
       
        காது அவிஞ்சான் பட்டி எனும் நெடுங்கவிதை நல்ல சித்திரம்.அங்கதம் சிலேடையாக வாசக மனதை குறுஞ்சிறிப் புக்கு இட்டுச்செல்கிறது.அதில் கதாசிரியனுக்குப்பின் கவிதையில் அரசாங்கம் உருவாக்கப்படுகிற பின்னணியை
அந்த அரசு பிற்பாடு யாருக்கெல்லாம் என்னன்ன கொடுப்பினைகளைத் தருகிறது.யாருக்கெல்லாம் நோய்கள் தருகிறது என்பதை விவரிக்கிறார். ஒருசில கவிதைகள் வாசிக்கும் போது நவீனகவிதையின் அலகு நுட்பம் கலை குறித்த மேய்ச்சல் தேடல் கூடாது. அழகியல் சார்ந்த இயற்கையியல் சார்ந்த மன ஒழுங்கின் அவசங்களைப் பேசுகிற கவிதைகளுக்கு கலை பார்க்கலாம். உணவை குப்பை டிராங்க் பெட்டியிலிருந்து நாய்களுடன் எச்சில் இலைகளிலிருந்த உணவு உட்கொள்ளும் மனிதனின் எழுதும் சொல்லும் கவிதையும்தான் நவீன கவிதையின் நுட்பம். மொழி.கட்டுமானம்.கவிதையின் வீரியம். நம் நல்ல காலம் அவன் எழுதுவதில்லை. வாசிப்பதுவுமில்லை. அதனாலெயே இன்பம் துய்க்கிறான் நாம் துன்பம் துய்க்கிறோம்.


        இந்தியக் குடியரசு தினத்தன்று மதுவாகினி தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. நம்முடைய மக்களாட்சியின் மாண்பை வைத்து நடக்கும் டாலர் வியாபாரம் கழுதைகளுக்குப் பொதி ஏற்றுவது போலவே மேலும் மேலும் ஏறும் விலைவாசி. கசாப்புக் கடையின் வாசலில் அடுத்த அறுப்புக்குக் காத்திருக்கும் வெள்ளாட்டைப் போலவும் செப்புக் கம்பி திருடியதற்காக குடியானவர்களால் தந்திக்கம்பத்தில் கட்டிவைத்து உதைக்கப்படுகிறவன் போலவே நம் வாக்காளர்களுக்கு பீலீங் இருக்கிறது. இதெல்லாம் பிரதிகள் வாசிக்கும் போது பேசக்கூடாது. உயர்ஜாதிக் குடியிருப்பு வீதியின் மைதானத்தில் எஸ்பிபி லதா மங்கேஷ்கர் இருவரும் வளையோசை கலகலவென சொக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
          ந.பெரியசாமியின் சில கவிதைகளில் இறுதி வரிகள் மகத்துவம் மிக்க கவிதைகளை சிதைத்திருக்கிறது.
உதாரணமாக..ஆதிக்கத்தில் வழிந்த எச்சில்..நேற்றும் பல்லியானேன். பொதுவாக நாம் கவிதை முடிந்து விடுகிற இடத்தைக் கண்டுபிடித்துக் கொள்கிற ஞானத்தை நாம் கற்றே ஆகவேண்டுமோ எனத்தோன்றுகிறது. அது பெரிய சவாலும் கூட.
         தோத்தான் கோழி, அவள் போட்ட விடுகதை, காலத்தின் நிழல்கள்,மழையின் பசியாறினோம் உள்ளிட்ட சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட வாசக சொர்க்கம் தரும் கவிதைகள். ந.பெரிய சாமியின் கவிதைகள் என்றால் பொருத்தமாக இருக்கும். தொகுப்பில் நிலம்,அவன் குடித்தனம்,அவன் நிராகரிப்பின் சொற்கள், ஒவ்வொரு பதின் பருவத்திலும் அவன் கண்ட நாளின் பொழுதுகள். எல்லாம் அட்சர சுத்தமாக எழுதப்பட்டிருக்கிறது.
         பொதுவாக நம் தேசத்தில் அனுபவசாலிக்கு மரியாதை கிடையாது. முன்காலத்தில் தமிழாசிரியர்க்கு இருந்த மரியாதை இந்தக் காலத்தில் நவீன படைப்பாளிக்கு இருக்கிறது. ந.பெரிய சாமி 80 சதவிகிதம் அழகான சொற்களின் கட்டுமானத் திறமைசாலியாக இருப்பதுதான் அவருடைய பலவீனம் என்று கருதுகிறேன்.
அவர் தன்னுடைய பட்டறிவுத்திறனை திறமையை 30 சதவிகிதமாகக் குறைக்கும் பட்சத்தில் நவீன தமிழ்க்கவிதையின் ஆகச் சிறந்த இடத்தை அடைய வாய்ப்பிருக்கிறது. அப்படியில்லையெனில் விமர்சகனாவது 30 சதவிகித திறமையை வளர்க்க வேண்டும். இதில் யார் முன் செல்கிறார்கள் என்பதுதான் தற்போதைய கவிஞன் விமர்சகன் இருவருக்குள் நடக்கும் பதினஞ்சாங்கரம்
        தமிழ் தேசத்தில் ஏற்றிய திறமையைக் குறைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதும் சிரமம்தான். முடிந்த வரை தம்மைத்தாமே மழுங்கடித்துக் கொள்வதை வேண்டுமானால் செய்து கொள்ளலாம்.
       கவிதைகளும் கவிஞர்களும் இல்லையென்றால் நிச்சயமாக கொஞ்சம் முற்போக்கு இளைஞர்கள் அந்தமான் சிறைகளுக்கும் குண்டனாமொ சிறைக்கும் அனுப்பப்பட்டி ருப்பார்கள். நல்லவேளை ராசாங்க விசுவாசிகளுக்கும் ஜனரஞ்சக வாசகர்களுக்கும் கவிதைகள் புரியாததால் நாம் கவிதைகளுடன் வாழ நேர்ந்து வருவதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
        கவிதைதான் கொஞ்சம் பொறுமிக்க அறிவைக் கற்றுத்தருகிறது. கவிதைகளில் பறக்கும் பறவை கவிஞனல்ல வாசகன். கவிதைகளில் இருக்கும் மரநிழல் கவினுடையதல்ல வாசகனுடையது. வாசகனுக்கும் அதாவது கவிதைகளை வாசிக்கிற பருவத்தில் இருப்பவர் எல்லோரும் வாசகர்கள் தான். கவிஞனுக்குமான உறவை பட்டை தீட்டப்பட்ட சொற்கள் மேலும் வலுப்படுத்துகிறது.
தன் கவிதையை தானே சுமந்து கொண்டும் அதுபோலவே தன் எழுத்தை தானே கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய காலமும் கூட. நெசவாளி.விவசாயி.கீரைக்காரன்,தக்காளிப் பழம்.கறிவேப்பிலை எந்தப் பொருளானாலும் அவனே தெருவிற்குள் கூவிக் கொண்டு நுழைவதைப் போலவும் வருங்காலத்தில் படைப்பாளியும் நுண்அரசியல் புலத்தில் மாநகரத்தின் வீதிகளில் கூவி விற்கவேண்டிய நிலையும் வரலாம். வந்தால் அதையும் அழகுற நடத்திக்காட்டுவான்
நவீன படைப்பாளி. வழுக்கி வழுக்கிப் போகும் அனுபவச் சொற்களைப் பற்றிக் கைக்கொள்தல் கடினம்.
       இறுகி மடித்துத் திருகி ஒழுங்குக் கூர் முனைகளற்று
மாயப்புரிதலுமற்று புகையினுள் அந்தரத்தில் ஒளித்து வைக்கப்படும் அனுபவமற்ற நகல் பாதிப்புக் கவிதைகளிலிருந்து பெரியசாமி விலகியிருப்பது முக்கியம்.
படிப்பு.கல்லூரி,மேல்படிப்பு, ஆய்வுப் பட்டப்படிப்பு, ஆய்வுப் பட்ட மேல் ஆய்வுப் படிப்பு, முனைவர்.முதுமுனைவர். ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்.தேர்வாணையக் குழு உறுப்பினர். பாடத்திட்டக்குழு உறுப்பினர். என்றெல்லாம் மேலே மேலே உயர்கிற நிலையை தமிழ்ப்பெருங்குடிக்குக் கிடைப்பது  எதற்காகவென்றால் கொஞ்சம் நவீன இலக்கியத்திற்கும் கொஞ்சம் கருணைகாட்ட வே்ணடம் என்பதற்காகத் தான் நவீன இலக்கியமா அப்படியென்றால் என்ன கேட்கிறவர்கள்தான் பீடங்களில் உட்கார்ந்து கொண்டு
மூளைக்கு நோகாத குண்டிக்கும் நோகாத சொற்கள் நீவி
நிதியை வெட்டிக் கடைமடைக்குத் திருப்பிக்கொள்கிறார்கள்.
          இலவசமாகக் கொடுத்தாலும் வாசிக்கும் அறிவில்லாத மெத்தப்படித்தவர்கள் பட்டியிலி்ல் இருக்கும் லட்சக்கணக்கான வாசகர்களுக்கு அறிவு புகட்டும் பணியையும் கூட எழுதி வெளியிட்டு கடைகளுக்குக் கொண்டு போய்ச்சேர்த்து பிறகு வாசிக்கும் அறிவையும் புகட்ட வேண்டிய கட்டாயத்திற்கு நவீன படைப்பாளி வாழ்வும் காலமும் நேர்ந்திருக்கிறது என்று சொன்னால் இதை உருவாக்கியவர்கள் யார். அல்லது அந்த நிலைமை யை மாற்ற என்ன முயற்சிகள் எடுக்கப்படுகிறது அப்படியான முயற்சிகளை யார் செய்கிறார்கள். அப்படி செய்கிறவர்களை நாம் ஊக்குவித்திருக்கிறோமா என்றெல்லாம் இந்தத் தருணத்தில் யோசிக்க வேண்டியிருக்கிறது. அனுபவமும் படிப்பினையும் படிப்பும் அறிவும் பழுத்த சொற்களும் இணைய வேண்டும்.
         நவீன காலத்தின் எழுத்து வடிவம் திரும்பவும் இருபது ஆண்டுகளுக்குப் பின்பாகத் திருப்பிக்கொண்டு போவதற்கு சில மூத்த காலாவதியாகிப் போன சொல்லாடிகள் முயற்சி செய்கிறார்கள். மிகபிரமாண்டமாய் வளர்ந்து கொண்டிருக்கும் கார்ப்பரெட் சமூகத்திற்குச் சரிசமமாக இயங்குவதற்கு நம்முடைய நவீன இலக்கிய வாதிகள் முயலாமல் பேடிகளாகவும் இருளைக் கண்டாலே ஒண்ணுக்குப் போகிறவர்களாகவும் மாறிக் கொண்டிருக் கிறார்கள். அவர்களும் மேல்தட்டு வர்க்கத்தின் உடல் பயிற்சிகள் உணவுப் பழக்க முறைகள் வாகன வசதிகள் எல்லாமே அவர்களைப் பார்த்துப்பின் பற்றுகிறார்கள். வீட்டுக்குள்ளே ஆய் போவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் நவீன படைப்பாளிகள்.
         வாசகனாக வாழ்வில் இளைப்பாறிக் கொள்தல் என்பதும் நமக்குக் கிடைக்கிற வரப்பிரசாதம் அல்லது கொடை எனலாம்.
       இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய வாக்காளர் தினத்திற்கான உறுதி மொழியை அலுவலகத்தில் எடுத்துக் கொண்டேன்.
          இதுபோலவே கவிதைக்கான தேசிய தினமொன்று உருவாக்கி உறுதி மொழியும் கவிதை மக்களுக்கான ஜனநாயக பிரதி என்பதை உறுதிப்படுத்தும் விதமாக மைக்செட் வைத்து மிட்டாய் கொடுத்துக் கொண்டாடினால் எப்படியிருக்கும்.யோசிப்பதற்கே அழகாக இருக்கிறது. பிரமிப்பாக இருக்கிறது. கவிஞனின் சொற்கள் அத்தனை சுகம் தருபவை. ந.பெரியசாமியின் பீடத்திற்கு அருகில் சில நேர்த்திக்கடன் மண் உருவாரங்களை வைத்து நம் நோய் நொடிகளைத் தீர்க்க நாம் முற்படலாம். தவறில்லை. முதலில் நான் மண்  நாய்க்குட்டி மற்றும் பாம்பு பொம்மை பாத அடிகள் பொம்மை சிறு மரத்தொட்டில் ஆகியவற்றை வைத்து வழிபடுகிறேன்..

வெளியீடு-
ந.பெரியசாமி
94876 46819
Na.periasamy@gmail.com
பக்-80
வி்லை-80
அகநாழிகை பதிப்பகம்
33 மண்டபம் வீதி
மதுராந்தகம் -603306