புதன், 6 பிப்ரவரி, 2013

அ.வெண்ணிலாவின் “துரோகத்தின் நிழல்” கவிதை நூல் அறிமுகம்


சுகிப்பதின் இளமைப் பருவம்   

 

அ.வெண்ணிலாவின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பான “துரோகத்தின் நிழல்கவிதை நூல் பற்றி

-

இளஞ்சேரல்

           

 

சுகிப்பதின் இளமைப் பருவம்   

 

என் கவிதைகளுக்கான ஈரம்

குழாயடி ஈரமே

பெயரில் என்ன இருக்கிறது

மல்லிகையோ பவழமல்லியோ

பாரிஜாதமோ

சூடிக்கொள்ளக் கிடைப்பவை

டிசம்பர் பூக்களே

கையருகில் ஒரு வானமும்

ரசிப்பதற்கு ஒரு சூரியனும்

என்பதே கூட எனக்கு

ஆடம்பரமாகி விடுகிறது..பக்-45

 

          கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் கவிதைகள் சக மனிதர்களின் இழப்புகளைத் தொடர்ந்து பேசுகிறவை. குறிப்பாக அவருடைய கவிதைகளில் தொடர்ந்து இடம்பெறும் விசயம் சிறுமிகள் ருதுவாகும் காலங்களின் இம்சைகளையும் அந்த நாட்களை அவர்க்ள எதிர்கொள்ளும் சிக்கல்களையும் வலியுறுத்தியபடியே இருக்கிறார். அநேகமாக அந்தப் பிரச்சனை குறித்து தொடர்ந்து எழுதுபவரும் அவராகவே தெரிகிறார். அவர் கவிதைகள் அதிகம் வாசிக்க நேர்வதை விடவும் அவருடைய நிகழ்ச்சிகளில் மேடைகளில் பேசும் உரைகள் எனக்கு சரியானதாக தோன்றியிருக்கிறது. ஆவேசமற்ற அதே சமயம் உருவாக்கும் கேள்விகளும் வாதங்களும் முக்கியமானவையாக இருக்கிறது. பேச்சுக்களில் உரைகளில் விவாதங்களில் இல்லாத சாயலை கவிதைகளுக்குள் நிகழ்வது அதிசயமானது.கவிதைகளுக்கான மொழியை பேச்சில் தவிர்ப்பதுவும் பேச்சின் சாரம் கவிதைகளுக்குள் படியாமல் எழுதுவதும் முக்கியமானதை அவர் உணர்ந்திருக் கிறார். உலகின் எந்த மூலையில் பெண் பாதிக்கப்பட்ட நிகழ்வோ செய்தியே அறிந்தால் அவரிடமிருந்து கவிதையாக சொற்கள் வெளிப்படும். உலகத்தின் மனித சமூகத்தின் குறிப்பாக பெண்களின் மீது நிகழ்த்தப்படும் செய்கையான தாக்குதல்கள் குறித்த எதிர்வினையை தெரிவிப்பதில் சமூக அக்கறையுள்ள பெண்ணாகவும் இருக்கிறார்.

           கவிகளில் ஆண்கவி பெண்கவி என்பதில் எனக்கு சில முரண் உள்ளது. சமூகத்தில் பெண் எண்பவர்கள் வேறு இனம் என்பது போலவும் அவர்களின் உலகமும் எழுத்தும் கலாச்காரமும் பண்பாடும் அவர்களுக்கானவை எல்லாம் தனியேதான். அவர்களுக்கும் ஆண்களுக்குமான இணை சமூகம் என்பது மூட நம்பிக்கை என்று பேசிக் கொண்டிருக்கும் உலகமும் இருக்கிறது. எனினும் ஆண் பெண் இணைந்தவையே உலகம் என்பதில் வெண்ணிலாவும் முந்தய காலங்களில் கருத்து வேற்றுமை கொண்டிருந்தார் என்பதை அவருடைய முந்தய தொகுப்புகளிலும் உரைகளிலும் எழுத்துகளிலும் பார்த்திருக்கிறேன். வாசித்திருக்கிறேன். இந்த 40 வது வயதின் காலத்தில் அவர் நிறைய மாறியிருக்கிறார். அவருடைய எழுத்தும் கவிதையும் ஆண் பெண் தனித்தனி அல்ல இணை சமூகம் என்பதை ஒப்புக் கொள்வது போன்ற கவிதைகளை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

 

அந்தங்க வெளியாகி

விரிகிறது உலகம்

உன் கண்களின் விழித்திரை விலக்கி

உலகத்தின் பூக்களெல்லாம் மலர்கின்றன

உன் புன்னகையில் கழன்று பின் தொடர்கின்றன

உலகத்தின் உயிர்களெல்லாம்

உன் விரல் வழி வழிகின்றது

தொப்புள் கொடியின் ஈரம்

உன் கால் நகங்களில் சுருண்டு நிற்கிறது

உன் உயிர் முடிச்சு

உன் வழியே கிளைக்கிறது

உலகிற்கும் எனக்குமான உறவு

உன்னைத் தின்னக் கற்றுக் கொடுடா

உலகைச் சுவைக்க. பக்-65

         இக்கவிதையில் கருத்தாக்கமாக உருவாக்கும் ஆண் பெண் உறவின் ஆழமான சித்திரங்கள் பெண்ணிற் கென தனி உலகத்திற்கு வாய்ப்பில்லை என்பதை ஒப்புக் கொள்கிறார். ஆண் பெண் பற்றிய உறவின்பத்தைப் பேசும் கவிதைகளைத் தொடர்ந்து எழுதுகிறார். கவிதைகளுக் குள்ளாக நாம் காணக் கிடைத்தும் மகிழ்வு கொள்ள முடியாத படிக்கு நமக்கு இடறுவது மொழிதான். தமிழின் பொழுதும் பேசி சலித்த மொழி நடை. கருத்தை முன் நிறுத்தும் போது மொழியி்ன் இயல்பு சறுக்குவதை காணமுடிகிற சித்திரங்கள்.

புரிகிற கவிதையின் சிக்கலான அனுபவமும் திருகலாகி விடும் என்பதற்கு சில கவிதைகள் உதாரணமாக இருக்கிறது.

 

அது உலகப் போர் ஆனாலும் உள்ளுர் சாதி சண்டை ஆனாலும் குழு மோதல்களானாலும் முதலில் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும்.பிற்பாடு அவர்களுடைய சட்டங்குகளும் சடங்குகவிதைகள் சமகாலத்தில் தரும் ஆசுவாசமும் நிம்மதியும் தருகிற மரத்தின் நிழல் போல குளுமையாக இருக்கறதாகிறது. கவிதைகளின் ரசனை சார்ந்த அடுத்த படிகள் அடுக்கப்பட்டே போய்க்கொண்டிருக்கி்றது. இயற்கையின் சீதோஷ்ண நிலையும் மாறிய படியே இருப்பதை நாம் உணரலாம். வெயில் காலத்தில் காற்றும் காற்று காலத்தில் குளிரும் குளிர் காலத்தில் வெயிலும் வெயில் காலத்தில் பனியும் வீசுகிறதல்லவா. மேலோட்ட மான ரசனைகளின் ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக விலகி ஆழமான ரசனைகளின் மீது படியும் போது வாசகமணம் தானாகவே அடுத்த ரசனையின் தளத்திற்குப் போவதை ரசிகமணம் உணர முடியும். நாம் வேண்டுமானால் ரசனை என்கிற பட்டறவிற்கு முதல் இரண்டு வகுப்புகள் என்று கல்லூரிக்காலம் வரைக்குமான ரசனை படிப்பிற்கான வரை யறை அல்லது வாசிப்புப் பழக்கம் என்னவாக பரிந்துரைக் கலாம் என்று யோசிக்கும் போது நம் முன்னே வந்து நிற்பது பொது ரசனை பற்றியதுதான்.

     மனித சமூகத்தின் உலக இயக்கத்தின் இயற்கையின் அருட்கொடையின் தாய்மையான பெண்ணிற்கு வரலாற்றில் என்ன இடம் வழங்கப்பட்டிருக்கிறது.குறிப்பாக இந்தப் புத்தாயிரம் ஆண்டின் துவக்கத்திலிருந்து வெளிப்படுகிற இலக்கிய வகைமைகளில் அவர்களின் எழுத்தும் உடலும் பண்பாட்டு அடிப்படையில் காரணப்படுத்தப்படுகிறது.எனினும் ஒட்டுமொத்தமாக எழுதப்படும் கவிதைகளில் பெண்கள் தங்கள் பிரச்சனைகளை கவிதைகள் வாயிலாக எழுதப்படும் போது சந்திக்கும் நெருக்கடிகளை அ.வெண்ணிலாவும் அவர் கவிதைகளும் சந்தித்து இருக்கிறது. அவருடைய கவிதைகள் புதுக்கவிதைகளுக்கும் நவீன கவிதைகளுக்குமான மையத்தில் இயங்குபவை. பொதுவாகவே பெண் கவிதை அந்த மையத்திலேயே எழுதப்படுவதன் காரணம் அந்த மையத்திலேயே சமூகம் அவர்களை வைத்திருப்பதுமாகும்.

 

பறவைக்கு அன்பு செய்யத் தெரியுமா

தெரியவில்லை

பறவையொன்றின் சிறகடிப்பும்

உடல் கோதலும்

உன்னை நினைவூட்டுகின்றன

பார்க்கும் உயிர்களிடத்திலெல்லாம்

தோன்றும் உருவம் நீ

அன்பு செய்பவர்களுக்கு

பார்வை

கண்ணிலிருந்து மனசிற்கு இடம் மாறுகிறது

மனசெல்லாம்  பார்வை

பார்க்குமிடமெல்லாம் மனசு- பக்-72

         கனிமரம் எனும் திணைப் பிரிவு கவிதைகளில் மேற்கண்ட கவிதை அற்புதமானது. சங்க காலப் பெண் புலவர்களில் முப்பது பேரும் பின்னர் அவர்கள் வழிவந்த ஆண்டாள்,காரைக்கால் அம்மையார் பாடல்களில் இயற்கையாகவும் காலமாகவும் உணரப்பட்ட பெண் வாழ்வு

வெண்ணிலாவின் கவிதைகளிலும் ஊடாக வருகிறது. சங்க காலத்தில் அதியமானுடன் நட்பு பாராட்டிய அவ்வை பாடியது என 59 பாடல்களும் ஆண் பெண் வாழ்வு நட்பு அரசியல் திறம் மக்கள் காப்பு பற்றியெல்லாம் பாடியிருக்கிறார்கள். நாயன்மார்களின் காலத்தில் சிவபக்தி நிரம்பியிருந்தபோதும் ஆண்பெண் வாழ்வு பற்றி கடவுளுடன் விவாதித்த பெண்கவிகள் உண்டு. கம்பர்,ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த வாழ்ந்த அவ்வையார் பாடிய பாடல்களும் முக்கியமானவை சங்க காலத்தில் ஆண்ட மன்னர்களின் அவைக்களத்தை மட்டும் அலங்கரித்த சங்க கால அவ்வையார் சிற்சிறு நிலப்பகுதிகளை ஆண்ட குழுத்தலைவர்களையும் பாடினார்.ஊர் ஊராக அலைந்து சென்று உழவர்களுடன் உழவு பெண்களுடன் பழகி வாழ்வை எழுதியவர். அன்போடு அளித்த கூழ் உண்டும் பாடினார். அவர்களின் சிறு பிள்ளைகளின் வாழ்விலும் இன்பங்கண்டவர். ஆத்தி சூடி,கொன்றை வேந்தன், மூதுரை,நல்வழி இயற்றியவர்கள் வாழ்வு நிலைபற்றிய பாடல்களை தமிழ்ச் சமூகத்தின் உய்வுக்கு பாடியவர்கள்.

    இந்த நேரத்தில் அ.மங்கை “அவ்வை“ என்ற நாடக வடிவிலான நிகழ்த்துக் கலைவடிவில் படைத்த ஆன்மீக அவ்வையார்,மெரினா பீச் அவ்வையார், சங்க இலக்கிய அவ்வையார் பாடல்களில் வெளிப்படும் அவ்வையார் என அந்த பெண்கவிகளுக்குடனான உரையாடல்களை நிகழ்த்தியது நினைவில் வருகிறது.

        அ.வெண்ணிலா நிறைய வாசகிகள் வாசகர்களைக் கொண்ட பெண்கவிஞர் அவர் எழுதும் கவிதைகள் பெண்களின் வார மாத பருவ இதழ்களில் பிரசுரமாகும் வாய்ப்பு பெற்றவர். அவருடைய கவிதையின் மொழி புதுக்கவிதைக்கும் நவீன கவிதைக்கும் மையத்தில் புழங்கும் மொழி.எனினும் அந்த மொழியே பெண் இதழ்களில் வாசிக்கப் படுகிற மொழியாக இருப்பதால் அந்த வடிவத்தையே அவர் பயண்படுத்தி வருவதை கொஞ்சம் நவீன வடிவத்திற்கு மாற்றலாம்.

     “துரோகத்தின் நிழல்“தொகுப்பின் உள்ளாக கவிதைகளுக்கும் மேலெ பதிவிடப்பட்டிருக்கும் ஓவியங்கள் பாறை ஓவியங்கள் கல்வெட்டுகள் சித்திர எழுத்துக்கள் பழங்காலத்தின் சங்க இலக்கிய வகைமைகளை ஞாபகப் படுத்துவது புதுமையாகவும் நவீன மாகவும் இருக்ககிறது.

     கனிமரம்,தாழைக் காடு,பட்டினப்பாலை எனும் திணைப்பிரிவுகளின் கவிதைகள் முழுக்கவும் நவீன சங்க உலகமாக நம் காலத்தினை எழுதிப்பார்ப்பது என்பது வெண்ணிலாவின் கவி அனுபவத்தின் வெளிப்பாடு.

பட்டினப் பாலை-காண்டத்தில் அவருடைய ஒரு கவிதை உச்ச நிலையி்ல் அன்பு பற்றி பேசுகிறது.

 

எதிலிருந்து கிளைக்கிறது

உடலா,மனசா

ஆசையா,விருப்பமா

பசியா,அழுகையா

காமமா,காதலா

பந்தமா,பிடிவாதமா

தொப்புள் கொடி பிணைப்பா

எதிலிருந்தாவது கிளைக்கட்டும்

சிக்கும் அனைவரையும்

நித்தம் கொல்லும்

அன்பெனும் சனியனை

கொன்று புதையுங்கள்

பிறப்பிடம் தெரியாமல்-  பக்-86

     மேற்கண்ட கவிதை குறுந்தொகையில்

“நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;

நீரினும் ஆர் அளவின்றே-சாரல்

கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு

பெருந்ததேன் இழைக்கும் நாடனொடு நட்பே(குறுந்5)

       அன்பு எவ்வளவு பரந்து பட்ட விசயம் என்பதை அவரும் சங்கமும் பேசுகிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கடந்த 2012 ஆண்டின் சிறந்த மனிதர் யார் என்ற

விவாத்தின் போது பதிலளித்த எஸ்.ராமகிருஷ்ணன் திண்டுக்கல் எம் எல் ஏ பாலபாரதியை சிறந்த மனிதர் என்று பரிந்துரைத்தார்.சுப உதயகுமார் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு இணையாக பாலபாரதியை அவர் கூறியதன் காரணம் மூன்று முறை தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் ஒரு எளிய மனுஷியாக சாதாரண பெண்ணாக.பெண்ணிய இயக்கத்திற்காக தான் சார்ந்த கட்சி இயக்கத்திற்காக தொடர்ந்து பாடுபடுகிற அபுர்வமான மனிதராகத் தெரிகிறார் என்று பதிலளித்தார். அப்படிப் பட்ட பெண்கள் குறித்தெல்லாம் நமது சுவராசியமான பத்திரிக்கை களோ இதழ்களோ எழுதுவதில்லை.அவதூறு விஷயம் என்றால் தொடர்ந்து அந்தப் பிரச்சனையை ஞாபகப் படுத்திக் கொண்டே இருப்பது நமது ஜனரஞ்சகப் பத்திரிகா தர்மம்.

         அ.வெண்ணிலாவும் எழுத்து,பணி,ஆய்வு.களப்பணி என்று தொடர்ந்து இயங்கும் வாழ்வு அவருடையது. கவிதைகள் மீதான நுட்பமான விமர்சனம் தவிர்க்கிறேன். எளியமக்கள் வாழ்வு அவர்களுடைய பிரழ்வுகள் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள்.சிறுமிகள் துன்பப் படும் விசயங்களையெல்லாம் அவர் தொடர்ந்து  எழுதுகிறார்.அவர் போன்ற எழுத்தாளர்கள் பெண்ணிய சிந்தனையாளர்கள் வலியுறுத்தியதன் விளைவே தமிழ்நாடெங்கும் வகுப்பறைகளில் சிலவசதிகள் மேற்கொள்ளப் பட்டு இருக்கிறது. கவிதையை மறுமலர்ச்சிக் கான ஆயுதமாக முற்போக்காளர்கள் பயண்படுத்துகிறார்கள் என்பதற்காகவே அக்கவிதைகளின் மீது கலை என்னும் கட்டுப்பாட்டைத்தகர்க்கவும் முனைகிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும. பெண் கல்வி கற்றால் போற்றுகிறோம்.

வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாற்றினால் போற்றுகிறோம். அது போலவே சாதித்தாலும் போற்றுகிறோம். அப்படியாகவே எழுதினாலும் இயங்கினாலும் போற்றத்தானே வேண்டும்.

என்றாலும் கூட அவர் கவிதைகள் உருவாக்கும் கற்பனைகளும் மாய கணங்களும் அனுபவம் வாய்ந்த புனைவுகளாகவும் இருப்பதை தொகுப்பில் வாசிக்கக் கிடைக்கிறது.

 

பறவை அலகிலிருக்கும்

தானியம் ஒன்றினைப் போல்

என் கணங்கள் உயிர்ப்பானவை-பக்-77

       என்று நீளும் இந்தக் கவிதையின் சாரத்தை உள்வாங்கும் போது மீண்டும் சங்கக் கவிதையே ஞாபகம் வந்து தொலைத்தது.

 

கொடுங்கண் காக்கை கூர்வாய்ப் பேடை

நடுங்கு சிறைப்பிள்ளை தழீஇ,கிளை பயிர்ந்து

கருங்கண் கருணைச் செந்நெல் வெண்சோறு

சூருடைப் பலியொடு கவரிய குறுங்கால்

                       (நற்றிணை,387)

         நுலுக்கு ந.முருகேச பாண்டியன் எழுதிய முன்னுரையும் உள்ளது பெண்கவிஞர்கள் என்று தனித்துப் பிரித்துப் பேசியிருக்கும் அவருடைய உரை சிறப்பான அணிந்துரை. பெண் என்று தனித்த இனமாகப்பிரிக்க முற்படுகிற இலக்கியப் போக்குகளை அ.வெண்ணிலா சரியாகப் புரிந்து வைத்திருப்பதால் தான் என்னவோ கவிதைகளில் ஆணுக்கு உரிய இடத்தையும் இயற்கைக்கும் பறவைகளுக்கும் இடம் கொடுத்திருக்கிறார். ஐந்தாவது தொகுப்பில் அவர் கவிஞர்.வாழ்வின் ஓட்டத்திற்கு அவர் ஒரு சளைக்காத போராளி. இயங்குதல் என்னும் கோட்பாட்டின் மூலமாக படைப்பிலக்கியத்திலும் அவருடைய உழைப்பு தொடர்வது தமிழுக்குப் பெருமை.

 

கவிதை

துரோகத்தின் நிழல்

கவிஞர். அ.வெண்ணிலா

பக்-104 விலை ரூ.60-

அகநி வெளியீடு

எண்-3 பாடசாலை வீதி

அம்மையப்பட்டு

வந்தவாசி 604 408

அலை பேசி-94443 60421

akaniveliyeedu@gmail.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக