வியாழன், 2 மே, 2013

வானம் பார்த்த கதை- சிறுகதை- இளஞ்சேரல்


thdk; ghu;j;j fij- rpWfij- ,sQ;Nruy;;

 

அவன் சைக்கிளிலில் இருந்தபடியே பேசினான். முள் தாடி. பறட்டைத் தலை. கண்களை உறுத்தும் அளவில் வண்ண உடைகள். அவன் பேசுவது அவளுக்குக் கேட்கவே இல்லை. ஒவ்வொரு முறையும் ஊம் என்ன சொன்ன..எனக்கேட்டு மீண்டும் அவள் அவனிடமிருந்து வார்த்தை வாங்குகிறாள். அதிக நேரம் பேசமுடியாது. அதற்குள் மூட்டைப்புச்சியை நசுக்குவது மாதிரி பேசிக்கொள்ளவேண்டும். இரண்டு மணி நேரம் மின் தடையின் இடைவெளியில் சில நொடி உரையாடல். இரண்டு மணி காந்து வெயில். ஆற்றோரத்து மணலின் தணல் வெம்மை. ஆயினும் அவள் கண்களிலிருந்து வரும் வெளிச்சக் குளுமை அந்த வெயிலைக் கலையிழக்கச் செய்கிறது.

        வழிந்து ஓடும் வியர்வையை வழித்துக் கொட்டாமல் அவள் பேசுவதை அவன் ரசிக்கவே செய்கிறான். மரம் செடிகொடிகளில் சிறு அசைவு இல்லை. வற்றிய ஆற்றின் அரையணாக் கயிறு போல ஓடும் சாக்கடையின் வீச்சம் அடிப்பது அவர்களுக்குத் தோணவில்லை. அவள் அவன் சைக்கிள் கைப்பிடியைப் பிடித்தபடியே பேசுவதும் அவள் கையைப் பிடிக்கப் போகும் போது எடுத்துக் கொள்வதுமாகக் கழிகிறது பொழுது. சாப்பிட்ட உணவு. பார்த்த டிவி நிகழ்ச்சி நாளைய சந்திப்பு. அறிந்தவர்களால் வரும் அச்சுறுத்தல்கள் பற்றியெல்லாம் விவாதிக்கிறார்கள். அவள் உடை, ஒப்பனை அலங்காரம் பேசிவிட்டுப் பிரிந்து போனபின் உரையாடிய சொற்கள் தம்மை திரும்பத்திரும்ப தொந்தரவு செய்வதாக அவன் சொல்கிறான். அவளுக்கும் அப்படியாக உணர்வதாகவும்  தனித்து இருப்பதற்கான நெருக்கடிகள் அதிகமாகி வருகிறதாகவும் அவள் தெரிவித்தாள். அவன் நம்முடைய உறவை யாருக்கும் அறியாத  வண்ணம் காப்பாற்றி வருவதாகவும் தெரிவிக்கிறான். அவளும் அப்படியே சொல்கிறாள். ஆனால் அவர்களைச் சந்தித்துப் பேசுகிறவர்கள் “என்ன விசயம்..பாத்தா அப்படித் தெரியலையே“என சந்தேகிப்பதையும் இரண்டு பேரும் விவாதித்துக் கொள்கிறார்கள்.               

 

         அந்த உரையாடலுக்கு இடையிடையே அவன் கைகளைப் பற்றவும் அவள் விலக்குவதும் தொடர்கிறது.  சரளை மண் பாதையில் சைக்கிள்காரர்கள் இருசக்கரம் கனரக வாகனங்கள் கூட கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அதில் செல்பவர்கள் யாவரும் இவர்களைத் திரும்பத்திரும்பப் பார்த்தபடியே செல்கிறார்கள். அவர்கள் பிரிந்து கொள்ள முடிவு செய்து நகர்கிறார்கள். அவன் நீ சைக்கிளில் ஏறிக் கொள் என்கிறான். அவள் மறுத்து நடக்கத் துவங்குகிறாள். அவளை  நடக்க விட்டு பின்னால் மெதுவாக சைக்கிள் செலுத்துகிறான். நீ போ நேரமாகிவிட்டது நான் சாப்பிட்டுவிட்டு திரும்பவும் மி்ல்லுக்கு வர நேரம் சரியாக இருக்கும் நீயும் சாப்பிட்டு வா என்கிறாள். ஏழுநிலைபாட்டப்பன் கோவில் தாண்டி இட்டேரி மதவு கற்சாலையின் திருப்பத்தில் அவன் அவளுக்கு பறக்கும் முத்தம் தந்தான்.

         அவள் அதை கவனிக்கவில்லை. சரியான மண்ணுக்குட்டு. இனி அவனும் அவளும் ஒரு மணிநேர இடைவெளிக்குப்பின் மில்லுக்குள் பணியாளர்களாக நுழைவார்கள். யாருக்கும் யாரும் அறிந்து விடக்கூடாது நமது சிநேகிதத்தை என்பதில் உறுதியான ஒப்பந்த்துடன் இருக்கிறார்கள். வென்ற காதலைப் புனிதப்படுத்துவதோ ரகசியமாக அனுபவித்துக் காப்பாற்றுவதோ எதுவானாலும் காரியம் முடியும் வரை பொறுப்பதே நன்று.

         அவன் தன்னுடைய பனியனுக்குள் வைத்திருந்த பழகிய கிராபாஜி புறாவை எடுத்து வீசினான். இன்றைய சந்திப்பு மகிழ்ச்சி வெற்றியின் அடையாளம். அது இரண்டு மூன்று கரணங்கள் அடித்து அவள் செல்லும் திசைநோக்கி அவளுக்குப் பாதுகாப்பாகப் பறந்து பின் தொடர்ந்தது.

 

        வாடா தர்மா”- சிநேகிதன் சோமன் வாஞ்சையுடன் அழைக்கிறான். பொழுதின் கரிச்சல் தீர்ந்து குளுமையும் மசங்கலும் கவ்வியிருக்கிறது வாசல் முழுவதும். முப்பது நாற்பது புறாக்கள். வகைவகையான சாதிப் புறாக்கள். தூவியிருந்த சோளக்குருணைகளையும் அரிசியையும் கொத்தித் திண்கிறது. குட்ருக்கும் குட்ருக்கும் சந்த நயமான இசையழகு. எந்த நோட்டுப்புத்தகமும் வைத்து எழுதாத இசைக்குறிப்புகள். இணைப் புறாக்களை கழுத்து நுரைப்பொங்குத் தழும்ப வசியம் செய்யப் பாடுகிற ஆண்புறாக்களின் ஆரோகண அவுரோகண ராக ஆலாபனை. சோமன் கையில் சில குஞ்சுகள் ஏறிவிளையாடவும் அவர் மேல் சில புறாக்கள் உட்கார்ந்து எழுந்து பறக்கிறது.

    தனக்குப் பக்கத்தில் பாதி அருந்திவிட்டு வைத்த மோர் சொம்பை தர்மனிடம் நீட்டி இந்தாடா குடி என்கிறார். வக்காலி சரியா வர்றடா உனக்கு நல்லா மூக்கு வேர்க்குதுறா என்றார். வாங்கிய தர்மன் மோர் சொம்பின் கடைவாயில் தேங்கியிருக்கிறது. இந்தா நீயே முண்டு இதையும். நான் அம்மிணிகிட்ட வாங்கிக்கறன் தே ஆத்தா மோர் கொண்டா என்கிறார். டேய் குட்றா மூட்டு வேற ஊட்ல இல்லை. அப்படியா என்றவர் வெடுக்கென்று எடுத்து குடிக்கிறார்.

இத்தன உப்புப் போடுவாங்களா வலுசு ஐம்பதுக்கு மேலன்னா கொறைச்சர்றனும்றா.

தர்மன் சோமனின் பீடிக்கட்டை எடுத்து ஒன்று பற்ற வைத்துக் கொண்டே ரேடியோவைத் திருகினான். டேய் ஆப் பண்றா. ஏன் என்றிட மறுபடியும் குண்டு வெடிச்சிருக்காம். ஐதராபாத்ல சும்மா அதயே திருப்பித்திருப்பி சொல்லிட்டுருக்கு. பின்ன தயாரிச்சு வெச்சிட்டு பூசை பண்டவா வைப்பாணுக..சினிமாபாட்டு வைத்தான்

“நாளை இந்த வேளைதான் போய் வா நிலா“ பாடத் துவங்கியதும். சோமன் மெதுவா வெய்டா வயசுப்புள்ள இருக்கற ஊடு பாட்டுவக்கிறான் பாரு. பழைய டிஎம்எஸ் பாட்டு வைடா.

          பந்தயக் குஞ்சு என்ன சொல்லுது என்று கருப்பு கிராபாஜி குஞ்சைக் கைளில் ஏந்திப் பார்க்கிறான். அத்தனை நெகுநெகு என்று உள்ளங்கைகளை கிச்சு மூ ட்டுகிற பொங்குகளில் இலகு. மூக்கைப்பிடித்து இரண்டு பேரும் இயற்கையின் படைப்பே படைப்புடா தர்மா. நான் சொன்னது மாதிரி சோடி சேத்து வைச்சதுல எப்படி வந்திருக்குது குஞ்சு. இந்த டோர்ணமெண்ட்ல நம்மதாண்டா செயிக்கறம்.

      ஆமாம்டா. நல்லா பறக்குது. இடையில எங்கயும் உட்காரரது இல்ல. மிரள்றது இல்லை.புறாக் குஞ்சை தர்மன் மேல்நோக்கி வீசினான்.

இரண்டு கர்ணங்கள் அடித்து அழகாக மேலெழும்பி கணத்தில் மேற்குத் தாவியது. அதே நேரத்தில் சங்கிலிக்கிணறிலிருந்து 50.60 புறாக்கள் கிழக்கு நோக்கிப் பறந்து போகிறது.

        ஏண்டா அறிவிருக்கா பொழுது இறங்கிருச்சு இப்ப வீசற என்றான் இப்பப் பாரு என்றிட பா..பா. என்றதும் சங்கி அப்படியே காகிதம் போல ஆடாக் கம்பத்தில் அமர்ந்து பின் தர்மன் வாசலில் அமர்ந்தது. வெரிகுட் என்றான் சோமன்

ஆமாண்டா ஆடாவில உட்காந்துதான் கிழே இறங்கணும் பாத்துக்கடா. அப்பறம் நாலு மணிநேரம் பறந்து வேஸ்ட் ஆயிரும். நல்லாப் பழக்கியிருக்க.

         அவள் வந்தாள். அவன் தர்மனைப் பார்த்துச் சிரித்தாள். செந்தாமரை சிப்ட் முடிஞ்சுதா. ஆமாங்க்ணா. என்றாள். அவென்ங்க என்று தன் மகனைத்  தர்மன் கேட்க ஊட்டுக்குப் போறாணுங். என்கிறாள். ஏம்புள்ள சம்பளஞ் சேத்திக் கேட்கலாமில்ல.120 ருவாய் எல்லா வைச்சு என்ன திங்க முடியும் என்கிறார். அவள் தீவாளி முடிஞ்சு ஆளுகளுக்கு 20 ருவா சேத்தரணும் சொல்றாங்க நாங்க 50 கேட்கறம். கேட்கறது கேட்கறீங்க 200 கேட்டாதான அவன் 150 குடுப்பான் கேட்கறதோ கம்மியா கேட்கறீங்களே..

சோமன் அவன் கிடக்கறானு நீ போய் வேலையப்பாரு..இருக்கறத உட்டுட்டு பறக்கறதப் புடிக்கற கதையாயிரு. குடுக்கறத வாங்கிட்டு ஒழுங்கா வேலைக்குப் போ. மாசமானா கிருமமா சம்பளங்குடுக்கறானு ஆவ தேவைக்கு ஆயிர ரெண்டாயிரங் கொடுக்கறானு. டேய் தர்மா வந்தியா மூடிட்டு உன்ற வேலைய மட்டும் பாரு. என்றான். நாமளும் முப்பது வருசமா வேல பண்றம் என்னத்தக் கூலி ஏறிருக்கு வர்ற வரும்பிடிய வெச்சுத்திங்க வேண்டிதுதா. சும்மா ஆய் ஆய்னு பறந்து என்னத்தக் கொண்ட்டு போறம் பொறகுக்கு..

உன்னய மாரி பயந்த பேடிங்க இருக்கறதுனால தாண்டா சம்பளமே ஏறமாட்டங்குது. எனச் சொல்லிவிட்டு மறுபடியும் பீடியைப் பத்தவைத்தார் தர்மன்

அவள் காபி கொண்டு வந்து தந்தாள். வக்காலி எல்லா ஒசிலயே அமுத்துறா. பீடி மோர் இப்ப காபி..நானாட உன்ன காபி பீடி குடிக்க வேண்டாம்கற. பெரிசா நூறு வருச வாழப் போற யோகி. உன்ன மாதிரி ஆளுதாண்டா பொட்டு போய்ருவீங்க.. நாமல்லா கல்ல மாரி..தெரிமா..

        அவள் ரேசன் வாங்கி வைத்த சக்கரை சீமையெண்ணை கொண்டு வந்து வைக்கிறாள் அண்ணா எடுத்துக்கங்க ..அடடே அதிசயமா இருக்கே. சோமா காசு வேற இல்லயே..சரி புள்ள நாளக்க அவன் கிட்ட குடுத்தர்றேன். சரியான காரியக்காரண்டா உனக்குன்னு அமையுது பாருறா..உள்ளேயிருந்து மறந்த ரேசன் கார்டை சோமனின் மனைவி வந்து தருகிறாள். அண்ணா நானு கெழவரந்தான் போறன் குடுங்க ஊட்ல குடுத்தர்றன். வேண்டாம்மா தாயி ஏற்கனவே உன்ற பண்ணாடி நம்பள காயறான். சோமனோ குட்றா அவ அங்கதான போறங்கறா. தே வர்றப்ப மொழுகுதிரி இல்ல வாங்கிட்டு  வந்திரு.

இவ ஒருத்தன் மெழுகுதிரி எதுக்குப்பா..காடாத்துணியச் சுருட்டு கோட்டர் பாட்டல்ல சீமெண்ண ஊத்திப் பத்தவச்சா அது வருது ரெண்டு நாளு

தர்மன் நியாயவியாக்யாணம் பேச

சோமனுக்கோ அப்ப மொழுகுதிரி செய்யறவன் பொழப்பு. நீ வாங்கிட்டு வாளே..    

       அவள் தன்னை சிங்காரித்துக் கொண்டு வாசலில் இறங்கியபோது சோமன் எங்காத்தா மாலை நேர வெளில போற..வேல எதாச்சும் இருந்தாப் பார்ப்பியா.

யேய் மூஞ்சில குத்தவனாம்பா..போற புள்ளய எங்கனுட்டு. நீ போய்ட்டுவா என்கிறார் தர்மர். உனக்கென்றா நாளக்கு ஒருத்தனுட்டுக்குப் பொழைக்கப் போறவ எனக்கெல்ல தெரியும் எங்கஷ்டம்..

அதல்லா எதெது எதெது எங்கங்கன்னு யாருக்கு எங்க போட்டுவெச்சுருக்குன்னு யாருக்கும் தெரியாது. அங்காத்தாளுக்குத்தான் தெரியும்.

        

        வனும் அவளும் மசால்பூரி சாப்பிட்டார்கள். தள்ளுவண்டிக்கடைகள் வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.

விளக்கு வெளிச்சத்தில் ஊர் தன் பகலுக்கான தவறுகளை நாளைவரை ஒத்திவைத்தது.

“பாரத் மாதாகி ஜேஎன்ற விண்ணைப் பிளக்கிற கோசங்கள். இனிப்பு காரங்கள் அளித்தபடியே ஒரு கூட்டம் வருகிறது. அவனிடம் இனிப்பு வழங்கினார்கள்.அவள் சற்று தள்ளி மறைவாக நின்று கொண்டாள். என்ன விசயம் என்று கேட்க குஜராத்ல மோடி மறுபடியும் முதல்வராயிருக்கறாரு. அவனோ யாருங்க என்றான் மறுபடியும் அவர்களோ ஏண்டா அறிவுகெட்ட நாய்ங்க்றது சரியாத்தாண்டா இருக்கு பத்துவருசமா சிஎம்யா இருந்துருக்காரு தெரியலைங்கறயே போ போ என்றான். வருங்காலப் பிரதமர் மோடி பாரத் மாதாகி ஜே என்றான். அவனோ ஆமாமய்யா பிரதமரா வந்தாக் கிழிஞ்ரும். ஏற்கெனவே ஐஞ்சு வருசம் பிஜேபி ஆட்சியில தமிழ்நாட்ல இருந்த காதி கதர் தொழில்களை அழிச்சுப் பெறவு எல்லாத்தையும் வடநாட்டுக்குக் கொண்டு போய்ட்டானுக. ஏண்டா இந்தக் கதை தெரியாம அவிங்களுக்குக் கொடிபிடிக்கறீங்க. தென்னிந்தியாவில குடிசைத் தொழில்கள அழிச்சதே அவிங்கதாண்டா.. இதெல்லாம் அந்தக் காவிப் பித்தனுகளுக்குச் சொல்லவேண்டும் என்று நினைத்தான் . செந்தாமரையிடம் பேசவே அவனுக்கு நேரம் போதவில்லை. லட்டும் மிச்சரும் கூட காவிக்கலரில் இருந்தது. பாரத் மாதாகீ ஜே என்றான் மறுபடியும் அவன் காதுகளுக்கு அருகில். கூவும் போது கூர்ந்து கவனித்தால் திட்டுகிறானா..போற்றுகிறானா எனத்தெரியவில்லை..

          அவனுக்குள் மனசு .30 வருசமா சோதிபாசு சிஎம்மா இருந்ததை உனக்குத் தெரியுமான்னு கேட்க நினைத்து அவளைப் பார்த்தான் அவளோ எதுவும் பேசாத என்றாள்.

             

        ந்த இடத்தில் தான் சந்திப்பதற்கு சௌகரியம் நிறைய அடையாளம் அறிந்து கொள்ள முடியாத வடநாட்டு இளைஞர்கள் வியாபாரம் செய்யும் இடம் யாருக்கும் எளிதில் தெரியாதபடிக்கு மக்கள் புழங்கும் நெருக்கடியான பகுதி. அதுவுமில்லாமல் குடியானவர்கள் இங்கெல்லாம் வரமாட்டார்கள் இங்கு வா எதுவானாலும் பேசலாம் என்றவன் அவன்தான்.

வழக்கம் போல அதீத அச்ச உணர்வு மேலிட உடனே கிளம்பிவிட்டாள். நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கல்ல..எதுவும் எடுக்க வேண்டாம். கடைசியல இருந்து ரெண்டாவது பெட்டி நான் மேல உட்கார்ந்து இருப்பன் சோமனூர் தாண்டியதும் எம்பக்கத்துல  வந்துரு கோயில்ல எம் பிரண்ட்ஸ்க எல்லா ஏற்பாடோட இருப்பாங்க.. பயந்துக்காத எதுவும் ஆகாது எல்லாம் சரியாப் போயிரும்.. ஏன்னா இந்த புறா டோர்ணமெண்ட்ட விட்டா நாம தப்பிக்க முடியாது. உங்கப்பனும் எங்கப்பனுக்கும் ரோசனை பூரா பந்தயத்திலயே இருக்கும்ப்பா. காலைல வேலக்கி வர்றமாதிரி வந்திரு..என்றான் அவன்

அவள் கண்களில் சந்தோசமும் பயமும் சரிசமவிகிதத்தில் தாண்டவமாடியது.

 

         சுங்கம் மைதானம் களைகட்டியது. மொத்தம் 37 புறாக்கள். கிராபாஜி பந்தயம் நாளை தவ்டால் பந்தயம். கிராபாஜி சாதி நான்கு மணிநேரம் தான் பறக்கும். தவடால் எட்டுமணி நேரம் பறக்கும். தினசரி காய்கறி வியாபாரம் நடக்கும் வியாபாரப் பகுதியாதலால் எங்கும் காய்கறிகளின் மணம் எருதுகளின் மணம்.  வசவு வார்த்தைகள் இடையிடையே சைக்கிள் காய்கரிகாரர்களின் இடைஞ்சல் செய்யும் பயணங்கள் வேறு. வண்டிகளின் நுகத்தடிகள் இடப்பற்றாக்குறையால் மக்கள் நடமாடுவதற்கே இடைஞ்சல் இதில் புறாப்பந்தயம். வக்காலிகளுக்கு வேற எடங்கெடைக்கலையா. போ வெண்டியதான சினிமாக் கொட்டாய்க்கு.. நந்தாவனத்துக்கு என்று சுங்கம் காண்ட்ராக்டர் புலம்பிக் கொண்டிருந்தார்.                

         புறாக்களை ஏதோ ராஜகிரிடத்தைப் பாதுகாப்பது போல காத்துக் கொண்டிருக்கிறார்கள். சோமனும் தர்மனும் வெற்றி நமக்குத்தான் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். நல்ல உயர் சாதி கிராபாசிக் குஞ்சு ஆறுமாத மான துடிப்பான குஞ்சு. புறாவின் தீர்க்கமான பார்வை பறந்து காட்டுவதற்குத் தயாராக இருக்கிறது. புறாவின் இருபுறமும் அடையாத்திற்கு அடிக்கப்பட்ட வண்ண சாயங்களின் அடிப்படையில் பெயர்கள் பதிக்கப்பட்டு பந்தயத்திற்குத் தயாரானது. மைதானம் நேரம் ஆக ஆக சுற்று வட்டார புறாக் கூண்டுக்காரர்கள் நிறைய ஆரம்பிக்கிறார்கள். சிலர் குடித்திருந்தார்கள். எல்லாரும் பந்தய அறிமுகம் கொண்டவர்கள் தங்களுக்குள் உரையாடிக் கொள்கிறார்கள். வெற்றி வாய்ப்புள்ள புறாக்களை வந்து பார்த்து ரசிக்கிறார்கள். அதன் வளர்ப்பைக் கேட்டு அறிந்து கொள்கிறார்கள்.

        ஏழுமணியை இளங்காலை நெருங்கிக் கொண்டிருந்தது. பந்தய நடுவர் மாவட்ட புறாப் பந்தய வளர்ப்பு பொறுப்பாளர் விதிகளை எடுத்துறைத்தும் பரிசுகள் விவரமும் அறிவிக்கிறார். ஐந்து ஐந்து புறாக்களை சரியான நிமிட இடைவெளியில் வீசப்பட்டது. எல்லாப்புறாங்களும் விண்ணில் ஏறிப்பறக்கத் துவங்கியதும் ஆர்ப்பரித்தார்கள். சீட்டி விசில் சத்தம் பறக்கிறது. நடுவர்கள் கூண்டுக்காரர்கள் எல்லாரும் சைக்கிள்களை எடுத்துக் கொண்டு பறக்கும் புறாக்களைக் கண்காணிக்கத் துவங்குகிறார்கள். சில புறாக்கள் சுங்கத்தின் தாணிய வாடைக்கு உடனடியாக உட்கார்ந்து கொள்ள உரிமையாளர்கள் கல்லெடுத்து கோபத்துடன் கத்திக் கொண்டு விரட்டப்போக அவை தோற்றது என்று குறிக்கப்பட்டது. கண்டாரோலி வப்பாநோலி வசவு வார்த்தைகளுடன் பாய்ந்து பாய்ந்து துரத்துகிறார்கள் தோற்றுப் போய் மானத்தை வாங்கிக் காற்றில் பறக்கவிட்ட புறாக்களை..

புறாக்களைத் நாராசமாகத் திட்டுவதைக் கண்டு காய்கறி வாங்க  வந்த பெண்கள் இந்த நாய்கள செருப்பலயே பிய்யத் தொவட்டி அடிக்கோணும்..என்கிறார்கள்

         சோமனும் தர்மனும் சந்தோசம் கொண்டார்கள் புறா ஏறிய வேகமும் பறக்கும் வேகமும் கர்ணமடித்த அழகைப் பார்த்தால் நிச்சயமாக டெபாசிட் தொகை கிடைக்கம். முதல்பரிசான  ஒருகிராம் தங்கமும் ஐந்தாயிரம் பணமும் இரண்டாம் பரிசாவது கிடைக்கும் என்பது அங்கிருந்த புறா வல்லுநர்களின் கணிப்பு. வானத்திலிருந்து நடுவர்களும் புறாக்காரர்களும் கண்களை விலக்கவே இல்லை. வருவோர் போவோர் மீதெல்லாம் விழப்போகிறார்கள். பொதுமக்கள் யாரக்கேட்றா பந்தயம் வெக்கறீங்க எனக் கண்டபடியாகத் திட்டுகிறார்கள்.

         ஒரு மணி நேத்திலிருந்து உட்கார்ந்த புறாக்களின் எண்ணிக்கை அதிகமானது. புறாக்காரர்கள் போச்சு ஆறுமாச வளர்ப்பு என்று ஓத்தா ஒம்மா  வசவுகளைப் பொழிந்தான். வெறுத்துப் போன ஒருவன் அப்படியே கழுத்தைத் திருகி வீசினான் மைதானத்தில். மாவட்ட பொறுப்பாளர் விதியை ஞாபகப்படுத்தி இப்டி செய்தாய் என்றால் அடுத்த முறை போட்டிகளில் பங்கேற்க முடியாது என்றார்.அவனோ போதையில் மூடிட்டுப் போடா உன்ற யோக்யதக் கொண்ட்டு. உடனே குறித்துக் கொள்கிறார் அவர்.

      புறாக்கள் ஒரு சில அதற்குரிய அந்தந்த ஆடாக்களில் உட்கார்ந்தது. அதுபோலவே அவைஅவைகளின் திருட்டுத்தனமான இடங்களிலும் அமர்ந்து ஓய் வெடுத்துக்கொண்டும் பறந்தது. பிற்பாடு அவைகள் குறித்து போட்டியிலிருந்து விலக்கப்பட்டு முன்வைப்புத்தொகையை இழந்தது. முதல் ஐந்து இடங்களை பெறும் புறாக்கள் தொகையைத் திரும்பப் பெறும் டொபாசிட் கிடைக்காதவர்கள் கேவலமாகவும் புறா வளத்திருக்காம் பாரு என்றும் திட்டுவார்கள் என்பதால் பந்தய மைதான சுங்கத்திற்கே மாதத்திற்கும் வரமாட்டார்கள்.

        சோமன் தர்மனின் புறா டெபாசிட் பெறும் வாய்ப்பைப் பெறுகிறது.அப்போது தர்மன் அவனைத் தூக்கிக் கொண்டாடினான்.ஐந்தில் ஒன்றால் வானில் வட்டமடித்துப் பறக்கிறது. அப்படியே நிற்கிறது. வடிவ வடிவ அழகில் கிழே விழுவது மாதிரி பிறகு அப்படியே நிற்பது போல கத்தியை வீசுவது மாதிரியெல்லாம் பறந்து காட்டுகிறது. ஒய்வுப் பறத்தலை இறக்கைகளை அப்படியே கக்கத்தில் வைத்துக் கொண்டு நிற்பதாக பிறகு தொப்பென்று கீழ் நோக்கி வர மறுபடியும் விர்றென்று ஏறு வதும் பறத்தலை அனுபவித்துப் பறந்ததை புறா ரசிகர்கள் கைதட்டி கூச்சலிட்டார்கள். ஒரு மனிதக் கூட்டம் பறவை ஒன்றின் பறத்தலை ரசிப்பதை யாரும் கண்டு கொண்டமாதிரி தெரியவில்லை. சுங்கத்தின் காய்ந்து போன காய்கறிக ளின் கூறுபோட்டு விற்கும் கடைகள் துவங்கி வியாபாரம் நடக்கத் துவங்குகிறது.

     

        வளுக்கு அவன் தாலிகட்டும்போது அவள் ஓவென்று அழுதாள். வேண்டாம் கலியாணம் என்றாள். கீழே சுவற்றோரம் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். பதற்றம் கொள்கிறார்கள். நண்பர்கள் திகைத்தனர். டேய் அவளுக்குத் தைரியம் சொல்றா..  என்ன செந்தாமரை இப்பப் போய் வேண்டாங்கற.பாரு பிரண்ட்ஸ் முன்னால அவமானப்படுத்தாத எழுந்திரு.. அவன் கெஞ்சுகிறான்.

அவள் கதறி அழுதாள். நண்பர்கள் சமாதானப்படுத்த முனைய கோவிலிலி்ருந்த மற்றவர்கள் நிலமை அறிந்து அங்கிருந்து நகரத்துவங்குகிறார்கள்.

        என்னமோ ஏதோ விசாரிக்க அவர்கள் வர ஆரம்பித்ததும்  அவள் அழுது கொண்டே எழுந்து நின்றாள். பிற்பாடு சில நிமிடம் காலஅவகாசத்திற்குப் பிறகு தாலியைக் கட்டினான். மகிழ்வு சூழ அவன் நிம்மதி பெருமூச்சு விட்டான். யானை பலம் ஆட்கொண்டதாக உணர்வு பெற்றான். நண்பர்கள் வாழ்த்துச் சொன்னார்கள்

கைகுலுக்கினார்கள். கோவில் பூசாரி அவர்கள் தந்த அதிகபட்சமான ஐநூறு ரூபாயைத் தன் வேட்டிக்கட்டில் சொருகி முடிச்சிட்டார். இது சக்தியுள்ள தெய்வம்மா அழாத தாயி.. அம்மா காலடியிலதான நீ வந்து சேர்ந்திருக்க.. நல்லாப் பொழப்பப் பாரு. பதினாரும் பெற்று பெருவாழ்வு உண்டம்மா.. என்று எலுமிச்சை திருநீறு சில துளசிச் செடிகளைத்தந்து ஆசீர்வதிக்கிறார்.

மணமக்கள் சகிதமான நண்பர்களின் வாகனங்கள் ஸ்ரீஅன்னபூர்ணா  உணவகத்திற்குள் நுழைந்தது. அவள் மறுபடியும் இரண்டாவது சுற்று அழுகையை துவங்கிப் பின் நிறுத்தவேயில்லை.. ஏன் என்பதை அவனால் உணர முடிந்தது. புறாக் கூண்டுக்காரனான அவன் வானத்தில் ஏதெச்சையாக புறா சாக்கு பார்த்தான்

பல வெள்ளி கிராபாஜிகள் தங்கள் ஆடாக் கம்பம் நோக்கிப் பறந்து கொண்டிருக்கிறது.

         

    சோமனை புறாக்கூட்டமே தூக்கிக்கொண்டு ஆடியது. அதற்குள் தகவல் இருகூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பண்ணெண்டு ஊர்களுக்கும் சேதி போய் சனம் சுங்கம் வந்து வெற்றிவிழாவைக் காண்பதற்கு வந்தாகியது. நம்மூர் பெறாவே செய்ச்சிருச்சாய்யா..நெசமா என்றார்கள். அபுர்வமான காரியம்தான் காரணம் இங்கு விளைநிலங்கள் அதிகம்.. எந்த சாதிப்  புறாக்கள் ஆனாலும்  விரைவாக அமர்ந்து காரியத்தைக் கெடுத்துவிடும். எத்தனையோ வருசக்கனவை சாதித்தேவிட்டார்கள் சோமனும் தர்மனும். காலியாக சுங்கத்திக்குள்ளாகவே எளிமையான விழா. மதிய வெயிலைப் பொருட்படுத்தாமல் சனம் முச்சுடும் நிழல்தென்படுகிற இடுக்குகளில் நின்றபடியே வேடிக்கைப் பார்க்கிறார்கள். வென்ற புறாவை முத்தங்களால் மொச்சிச் கொண்டிருந்தான் சோமன். பறந்த களைப்புத்தெரியாமல் விடு.. தலை இன்னும் பத்து நாள் பறக்கறன் உனக்கு வேண்டி என்பதாக அந்தப்புறா வாயைத் திறந்தபடி வெக்கு வெக்கு என்று முழிக்கிறது.

             பரிசை வாங்கும் போது கண்ணீர் ததும்பியது. தர்மன் அழுதே விட்டான். வாழ்க்கையில உச்ச  சந்தோசம்ங்கறது இப்படியா இருக்கும்.. வக்காலி பத்து மூட்டை இருபது மூட்டை விளைச்சுக் கொண்டு வந்து அட்டாலியில் சோளத்தை அடுக்கும் போது கூட இப்படி அனுபவச்சிதில்லயே.. பரிசுப்பணம் தந்தபோது. மாவட்டத் தலைவர் நல்ல குஞ்சுறா சோமா..நல்ல சோடியாப் போட்டு சேர்த்து வைய்டா இத விட அபாரமான குஞ்சுக பொறிக்கும்றா. என்று புறா வாழ்வு பற்றி அறிவுறுத்தி, வாழ்த்திவிட்டுப் போனார். இது தர்மன் ஊராஊராக அலைஞ்சு திரிஞ்சு கொண்டு வந்த கிராபாஜிக்குஞ்சு. நம்பிய நம்பிக்கை வீண் போகவில்லை. தர்மா என் மானம் மரியாத என்ற கனவு லட்சியம் எல்லாத்தையும் காப்பாத்திட்டடா. நான் எப்படியெல்லாம் உன்னய எகத்தாளமும் கிண்டலும் பண்ணியிருக்கறன்.. மனசாரச் சொல்றண்டா புறாப் பைத்தியகாரனுகனுட்டு ஏகடியம் பேசுனவங்க முன்னால நாம சாதிச்சிட்டம்டா. போதும்டா இந்த கௌரிதி..

இந்தாடா வெச்சிக்கடா உன்ற கூண்டுலயே இருக்கட்டும். என்றான். தர்மனோ அட நீ வேற போ ..அது உன்ற கூண்டுல  கு்ஞ்சில இருந்தே வளர்ந்ததுறா எங்க கொண்டு போய்விட்டாலும் உன்ற கிட்டவே வந்துரும்றா.. வேணாம் என்று கட்டாயப்படுத்திட..வற்புறுத்தி திணித்தான் கைகளில். புறா சச்சரவு கண்டு அதிர்கிறது.

        அவனோ சரி சொன்னாக் கேட்க மாட்ட என்று நூல் வாங்கி இறக்கைகளைத் தைக்க ஆரம்பித்தான். (கண் திருஷ்டி மற்றும் மேலும் புறாக் கூண்டுக்காரர்கள் திருடிக் கொண்டு போய்விடுவார்கள் அல்லது திட்டம் போட்டு பிடித்துவிடுவார்கள் என்பதால் வெல்லும் புறாவிற்கு சில நாட்கள் இறகு தைத்து ஓய்வெடுக்க வைப்பார்கள் அந்தப் புறா தனி கவனத்துடன் பராமரிக்கப் படும்)

        சோமனின் புறா தர்மனின் புறாவாக கூண்டுக்கு வந்தது. அவன் தான் வைடா கொஞ்ச நாள் இருக்கட்டும் இங்கயும் அங்கயும் போகட்டும். அடுத்தாப்ல சுதந்திரதினம்தான பந்தயம். பாக்கலாம் நல்ல சோடி எப்படி அமைதின்னு..என்றான் சோமன்.

 

              சோமனின் மனைவி தலவாசலுக்கருகில் கண்ணக்கசக்கிக் கொண்டிருந்தவள் இவனப்பார்த்தும் எழுந்து கொண்டாள். ஏண்டி சுங்கத்துக்கு வந்திருக்கலாம்ல. இந்தாக் கொண்டு போய் வை என்றான். பணமும் ஒரு கிராம் தங்க நாணய டப்பியையும். அவளின் முகமே சரியில்லை. பாத்திர பண்டங்களை உருட்டினாள். நான்கு மணி வெயிலின் கருக்கம். கத்தி சிரைப்பால் தாடியெல்லாம் பற்றி எரிந்தது. காலையிலிருந்து வெயில் வானம் பார்த்து அலைந்த அலைச்சல். புறாக்கள் பந்தய காலமானதால் வெளியில் தீவனத்திற்கு எடுத்துவிடாததால் இவனைப்பார்த்ததும் அனத்துகிறது. சத்தமாக குடுகுகிறது. குறிப்பாக ஆண்புறாக்களின் குடுகம் கடுமையாக இருக்கிறது.

        கதவைத்திறந்து விட்டு தகரடப்பாவைத் திறந்து குருணையை வீசினான் .ஆய் ஆய் என்று தீவனத்தைப் பறந்து பறந்து கொத்தியது. மொலு மொலுவென்று புறாக்களின் மோதல்களும் இடித்துக் கொண்டும் கொத்திக் குலைந்து சாப்பிடுகிறது சிலவை தண்ணீர்க்குடுவையில் குளித்து நீந்தியது. கோபக் காந்துடன் மனைவி பெரிய மக்கிரிக் கூடையை எடுத்துவந்து புறாக்களை அடித்துவிரட்டத் துவங்குகிறாள். சோமனுக்கு விருட்டென்ற கோபம்.. அவளின் செயல் பைத்தியகாரத்தனமாகவும் இருக்கிறது காலையிலிருந்து வயிற்றுக்குத் திங்காமல் பாவம் சாப்பிடும்பொது விரட்டுகிறாளே.

        யேளெ கழுத முண்ட பெறாவ எதுக்குறி விரட்டற..என்றபடி அவளைப் பிடித்துத் தள்ளுகிறான். இந்த நாசங்கெட்ட சாதிகள கொண்டு திய வெச்சுக் கொளுத்துறா நாசமாப்போனவனே. அவனையும் சாத்து சாத்தினாள். அவனோ. என்றி சும்மா துள்ளறே..எப்பப் பார்த்தாலும் பெறாவுகள வெறட்டது கத்தறது. என்று தள்ளினான். அவள் தலைதலையாய் அடித்துக் கொண்டு மிகச் சன்னமாக அழ ஆரம்பித்தாள்.

         வெற்றியின் களிப்பில் இருந்தவனுக்கு ஏதோ உரைக்கத் துவங்கியதும் கொஞ்சம் முதுகின் வழியாக வியர்வை ஆறாக இறங்கி புட்டத்தின் வரியில் சள் என்று இறங்கி கீழே நிலம் நனையத் துவங்கியது. செந்தாமரை செந்தாமரை என்று வீட்டுக்குள் கூச்சலிட்டவனைப் பின்னால் வந்து மனைவி கழுத்தோடு சேர்த்துக்கட்டிக் கொண்டு ஊரே தூக்கும் அளவிற்கு கத்தி அழ ஆரம்பித்தாள்.

 

         சோமனின் புறா அவ்வப்பொழுது வந்து ஆடாவில் அமர்ந்து போகும். தர்மனின் வீட்டிலும் அமர்ந்து போகும் அது போலவே தர்மன் புறாவாக மாறும் போதும் சோமனின் ஆடாவில் அமர்ந்துபோகும். இரண்டுபேரும் இப்போது அந்தப் பந்தயத்தில் வென்ற புறாவை சீந்துவதும் இல்லை கேட்பாருமில்லை. அந்த வீதிக்கு பெறாக்கார வீதி என்று பெயருக்கு அழைத்தாலும் அந்த எடத்தில் வீதியில் வெத்து ஆடாக்களில் கூட வக்காலி ஒரு பெறாவக் கூடப் பார்க்க முடியாது இப்பொழுதெல்லாம் உங்களால் எங்களால் ஊர்க்காரர்களால்..

      

மாரி செல்வராஜின் சிறுகதை நூல் “தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்“ குறித்து


நவீன கலிங்கத்துப் பரணி     

 

சிறுகதைகளின் காலம்- 

மாரிசெல்வராஜின் சிறுகதைகள் குறித்து...

 

இளஞ்சேரல்- 

 

  சிறுகதைகள் ஒருவரின் அல்லது ஒரு குலக்குழுவின் வாழ்கால அனுபவத்தைப்பேசுகிற வடிவமாக மாற்றப்பட்டது. அல்லது கலைஅனுபவமாக மாற்றி இனியொருவருக்குத் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக பயண்படுத்தப் பட்டது. ஆதிகாலத்திலிருந்தே ஆபத்து காலத்தின் அனுபவங்களைப் பறவைகளின் வழியாகக் கற்றுக் கொண்ட மனிதன் சில ஆபத்தான வழிகள் குறித்த அனுபவங்களை சித்திரக்குறிகளாக எழுதிய காலத்திலிருந்து எழுத்து வடிவம் பிறந்தது.

         சமகாலத்தில் அனுபவம் அல்லாத புனைவுகளைகளையும் புதிரான கனவுகளையும் அதீதமான கற்பனைகளையும் இணைத்து சிறுகதை வடிவங்களாக எழுதிக் கொள்ளலாம் எனும் சுதந்திரம் எலக்ட்ரானிக் யுகம் வந்த பொழுது பரவலானது. மரபு சாராத எரிசக்திகளின் வழியாக மனிதனின் வாழ்வும் அனுபவங்களின் புரிதல்கள் கச்சாவாகவே கிடைத்தது அவனுக்கு..

         அறிவியல் புனைகதைகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் பொழுது தோல்வியில் முடியும் அனுபவங்கள் குறித்தும் எழுதப்பட்டது. விஞ்ஞான வாதமும் அஞ்ஞான வாதமும் குறித்த மூடநம்பிக்கைகள் பற்றியும் கதைகள் வரத்துவங்கியது. தோல்வியடைந்த போர்க்கருவிகள் பற்றிய கதையாடல்களை நாம் புராணகதைகளாக எழுதி எழுதி பிரமித்து இருக்கிறோம்.

        மாரி செல்வராஜின் சிறுகதைகளை வாசிக்கும் போது திரைக்கதைகளின் ஸ்டோரி போர்டை வாசிப்பதான உணர்வு மேலிட்டது. காட்சிகள் அளவில் சிறியதாகவும் உரையாடல்கள் மிகக் குறைந்த அளவிலும் பேசுகிறார்கள்.உணர்வு மேலிட்ட நிலத்திலிருந்து மக்களின் குரலும் உணர்ச்சி வெளிப்பாடும் இப்படி சுருக்கமாக வெளிப்படாது. அவர் வாசகனுக்கு தொந்தரவு கொடுக்காத சுவராசியமான நடையை அவர் தெரிவு செய்திருக்கலாம்.“செம்புலப் பெயனீர்கதை உண்மையாகவும் வாழ்க்கையின் மீது தீவிரத்தன்மையும் அதே வாழ்க்கையின் மீது உக்கிரமான வெறியும் கொண்ட தம்பதிகளைக் காண முடிகிறது. தமிழ் வீரம் என்பதேகூட ரத்த உறவுகளைக் கொன்று குவிப்பதில் அதிகமாகப் போற்றப்படுகிறது. ஒரே நிலத்தில் எதிரிகள்.ஓரே குலத்தில் எதிரிகள்,ஒரே பட்டியில் எதிரிகள்,ஓரே ஜில்லாவில் எதிரிகள் என்று நாம் வீடு கட்டி அடித்த புராணங்களும் நம்மிடம் உண்டு.

        தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் கதையின் களமும் நிலமுமாக இருப்பது பரணியும் மனிதர்களின் ரத்தமும். ஒரு வகையில் இந்தக்கதை நவீன கலிங்கத்துப் பரணி என்று சொல்லலாம். ஒரு கல் ஒரு கலவரம் எப்படி உருவாகிறது என்பதை நாம் இச்சிறுகதையின் வாயிலாக நாம் அறிய நேருகிறது. ஒரு கதையாளன் அல்லது கதைசொல்லி மனிதநேயமிக்கவனாக இருக்கிறபோதுதான் அவன் கலை உயிருடன் இருக்கும் இல்லையெனில் அவை வெறும் செய்தித் தொகுப்பாக மாறிவிடுகிறது. இந்தக் கதையில் வரும் கலவரங்களை நாம் ஒவ்வொருவரின் வாழ்விலும் கண்டுதான் வருகிறோம். எப்பொழுதும் அதிகாரத்தின் விகாரத்திற்குக் கூட்டத்தைக் கண்டால் பிடிக்காது. இப்பொழுதும் கூட இரவு பத்துமணிக்கு மேல் கிராமத்திலோ நகரத்திலோ கூடுங்கள் பாரா வருகிற காவல் துறைக்குச் சந்தேகம் வந்து விடும். பிரிட்டிஷ்காரன் சுதந்திரம் தந்த பொழுதே இந்த அடிமை நாய்கள் எப்போதும் பயந்து கொண்டே இருக்க வைத்துக் கொள். பயத்தை உண்டு செய்வதே ஒரு ஆட்சியாளர்களின் தலையாய கடமை. அதற்கு நீ எந்த அறிவை வேண்டுமானாலும் உபயோகம் செய். முடிந்தால் பகுத்தறிவைக் கூட பயண்படுத்து.

             இந்தக் கொடுரக் கொலைகளைச் செய்த அரசாங்கம் தான் மறுபடியும் ஆட்சிக்கு வந்தது. அந்த மாவட்ட மக்களே மறுபடியும் அதே அரசாங்கத்திற்கு வாக்களித்து இருக்கிறார்கள் என்பதையும் சேர்த்து வாசிக்கலாம். மாரி குறிப்பிடும் அந்தக் கல் வெற்றி பெற்ற அரசாங்கமாகவும் இருக்கலாம். தமிழ்ப் பழமொழியே என்ன பேசுகிறது அல்லது பேசச் சொல்கிறது “ஆயிரம் பேரைக் கொன்னாத்தான் அரைவைத்தியன் ஆகமுடியும்“ என்று தானே பேசுகிறது.

    தமிழ்ச்சிறுகதைகளுக்கு வாசிப்பு தளம்  மணிக்கொடி காலத்தில் பரவலாக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு வந்த சொர்க்கம் பற்றிய வதந்திகள் கூட கதைகளாக எழுதப்பட்டது. அப்படித்துவங்கிய வாசிப்பு எழுச்சி காலமானது அப்பொழுது தமிழகம் இடதுசாரி சிந்தனைகளின் வசம் இருந்தது. பெரியாரும் அண்ணாவும் ஜீவாவும் கல்யாணசுந்தரமும் பி.ராமமூர்த்தியும் தமிழகத்தின் பட்டி தொட்டிகள் உள்பட எங்கு காணிணும் பொதுவுடைமைக் கொள்கைகளைப் பேசினார்கள் எழுதினார்கள். ஒவ்வொரு பிரதிகளிலும் எட்டுக் கதைகள் கூட பிரசுரம் ஆனது.

       சாதிய மேல் கட்டுமான அடுக்கு ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒரு நிர்வாகமிக்க அரசாங்கத்தை அமைப்பதற்கு நிலக்குவியலை மனதில் கொண்டு எழுத்தியக்கம் பிறந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இயந்திரமயமாகி வந்த வாழ்வியல் கூறுகள் மெல்ல மெல்ல குடும்ப உடைப்புகளுக்கும் வழிவகுத்தது என்று சொல்லவேண்டும். பெண்கள் கல்விகற்றதும் கல்வியை மேம்படுதத எடுத்த முயற்சிகள் வாசிக்கவும் மக்களுக்கு வாய்ப்பு அளித்தது. அதன்வழியாக மக்கள் பொதுவுடைமைச் சிந்தனையை எல்லோரும் எழுதினார்கள். அண்ணாவின் சிறுகதைகளும் திராவிட இயக்க மேடைகளும் சிறுகதைகளுக்கு உதவின. அதன் வழியாக சிறுகதைகளுக்கான விளம்பரத்தை ஜெயகாந்தனும், லஷ்மி. சிவசங்கரி, பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்கள் வெகுசன ஊடகங்களில் உரிமைக்குரல் எழுப்பும் மனித உணர்வுகளை எழுதினார்கள். ஏறக்குறைய 60 70 80 காலங்களில் எல்லா சிறுகதை எழுத்தாளர்களும் தங்கள் கதாபாத்திரங்கள் யாவும் உரிமைக்குரல் எழுப்புவதாகவும் தியாக உணர்வுகளை சித்தரிப்பதாக வும் எழுதினார்கள். பிற்பாடு திராவிட இயக்கங்களின் ஆட்சிகளின் வழியாகக் கண்டடைந்த வெறுப்பும் எதிர்பாராத அளவு தமிழ்மக்களின் வாழ்வாதாரமும்  உழைப்பும் வீணடிக்கப் பட்ட கதைகளைத் தங்கள் கதாபாத்திரங்களின் வழியாக எழுதினார்கள்.

         மாரி செல்வராஜ் கதைகள் இயல்பான மனநிலைகொண்ட மாந்தர்களின் வாழ்வைப் பேசுகிறது. அவர்கள் இழந்ததை நினைவுட்டுகிறது. ஒவ்வொரு நாளை இழப்பதும்கூட இழப்புதான் இங்கு ஈடு செய்ய முடியததாக நாளும் இருக்கிறது. கட்டமைக்கப் படுகிற நிறுவன ஆதிக்கத்தின் கீழாக அடிமையாகிற மனித உணர்வுகள் பற்றியும் 2000 திற்குபிறகு எழுதத் துவங்கியவர்களில் கரிசல் படைப்பாளர்கள் முக்கியமானவர்கள். தீப்பெட்டி இயந்திரம் வேண்டாமென்று போராடும் மக்களையும் தீப்பெட்டி இயந்திரம் வந்தால் வாழ்வு பறிபோய்விடும் என்று போராடும் மக்கள் பற்றியும் எழுதுகிற படைப்பாளர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். தலித் எழுத்து  பெண்

எழுத்து. சிறுபாண்மை மக்களின் எழுத்து என்னும் பிரிவாக சிறுகதைகளின் தன்மையை பகுக்கத் துவங்கியதும் இரண்டாயிரத்திற்குப் பிறகுதான்.

       மனித மனங்களின் இருக்கத்தையும் நாம் பெறமுடியாத அனுபவத்தை வாசிப்பின் வழியாக அடைவதற்கும் சிறுகதைகள் பயண்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் எழுதப்பட்ட ஐரோப்பிய சிறுகதைகள் எல்லாம் போரின் விளைவுகளை,குற்றங்களை,தண்டனைகளை,சிறைகளின் கொடுமையை,பனியின் சூழ்நிலையைப் பற்றி எழுதி உலக மக்கள் கவனத்தை ஈர்த்தது. இந்திய விடுதலைக்காலங்களில் எழுதப்பட்ட சிறுகதைகளில் சுதந்திரக் கனவை விதைத்தது.

மொழி வாரி மாநிலம் எனும் கோரிக்கைகளின் பொழுது இன எழுச்சியை மையப்படுத்தி எழுதினார்கள் சிறுகதையாளர்கள். கிராமப்புற இளைஞர்கள் தாம் உழைப்பிற்காகவும் வருமானத்திற்காகவும் பெருநகரங்கள் நோக்கிச் சென்று அங்கு தாம் பெற்ற அனுபவங்களையும் கதைகளாக எழுதினார்கள்.

             தற்கால நிலை என்பது சிறுகதைகளுக்கு அளிக்கப் படும் மரியாதையும் பக்கங்களும் குறைந்தே வந்து கொண்டிருக்கிறது. சிறுகதைகளின் வாசிப்பு இடத்தை தொலைக்காட்சித் தொடர்கள் நிரப்ப ஆரம்பித்தது. எப்படி சினிமாவை தொலைக்காட்சி விழுங்கியதோ அப்படியே வாசிப்பு அனுபவத்தையும் விழுங்கியது. குறிப்பாக பெண் வாசகர்கள் எனும் ஒரு தளத்தை தொலைக்காட்சி தொடர்கள் நசித்துவிட்டது. புத்தக விற்பனையை டாஸ்மார்க் தகர்த்ததோ அதுபோலவே சிறுகதைகளின் வளர்ச்சியையும் தகர்த்தது. ஆயினும் மாரி செல்வராஜ் சிறுகதைகளை எழுதுவதும் வரவேற்கத்தக்கது.

        நவீன காலத்தின் அச்சு நெருக்கடி மற்றும் மந்த விற்பனை காரணமாக நூல்களின் தேக்கநிலை ஏற்பட ஆரம்பித்ததின் விளைவாக சிறுகதை எழுத்தாளர்கள் தொலைக்காட்சி,திரை ஊடகம்,பத்திரிக்கைத் துறைகளுக்குத் திரும்ப ஆரம்பித்தார்கள். ஒருவகையில் இந்த இடங்களிலெல்லாம் கொஞ்சம் இவர்களால் நவீன மயம் ஆனது. மொழியின் அழகும் காட்சிகளில் விசாலமான அழகும் மேம்பட்டது என்றே சொல்ல வேண்டும்.பாலுமகேந்திரா.மகேந்திரன்,ருத்ரய்யா,எம்.ஏ.காஜா,ஜே.வி.ருக்மாங்கதன்.அம்சன்குமார் போன்ற படைப்பாளர்கள் சிறுகதைகளை ஊக்குவித்தனர்.இதில் தங்கர் பச்சானையும் சேர்க்கலாம்.

           உலக இலக்கிய வகையில் சிறுகதையே மகத்தான வடிவம்.செவ்வியல் தன்மையுடன் வாழ்விலையும் கலையையும் நுட்பத்தையும் பேசுவதற்கும் சித்தரிப்பதற்கும் சிறுகதையைப் போன்ற ஒரு வடிவம் வாய்க்காது. சோ.தர்மன், இமையம்.உமாமகேசுவரி,என்.ஸ்ரீராம்.ஜே.பி.சாணக்யா பெரிய அலையையே உருவாக்கினார்கள் என்று சொல்லாம். ஒரு கலைஞன் மகத்தான கலைஞனாக மாற விரும்புகிறவன் சிறுகதையைத் தான் தேர்தெடுப்பான். அல்லது கதைகளை வாசிப்பததின் வாயிலாக கலைஞன் தன்னிடமிருக்கும் கலைகளின் செவ்வியல் தன்மையை மேம்படுத்திக் கொள்கிறான்.

 

        சிறுகதைகளின் வழியாக நாம் கண்டது எல்லாமே நிலவுடைமைகளுக்கு எதிரான குடும்பச் சிதைவுகளையும் ஆதிக்க வர்க்கங்களுக்கு எதிராகவும் ஆதரவாகவும் செயல்பட்ட மனிதமனங்கள் பற்றியும் பேசத் துவங்கியது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கதைப்பாங்கிலும் உரையாடல்களுக்கு இடையில் கதை சொல்லல் பாங்கில் கொஞ்சம் சுவராசியமும் பாலியல் வருணணைகளும் சொற்றொடர்களும் உபயோகப் படுத்தப்பட்டன. அதற்கென சில சிறுகதை எழுத்தாளர்கள் உருவாக்கவும் உற்பத்தியும் செய்யப்பட்டார்கள். தொழில் முறை எழுத்தாளர்கள் இப்படித்தான் உருவாக்கப்பட்டார்கள். எப்படி காட்சிபிம்பங்களில் கொஞ்சம் உணர்ச்சி வயப்பட வைக்கிற சித்திரங்கள் உபயோகப் படுத்தப் படுகிறதோ அதுபோன்றே வெகுசன எழுத்துக்களில் தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதித்தள்ள ஊக்குவிக்கப்பட்டன. அதற்காகவே நடுத்தர வாழ்வின் இல்லாமைகள் போதாமைகள் எதிர்த்துப் போராட முடியாமைகள் என்பதாக நிரம்பக் கதைகளை உற்பத்தி செய்து குவிக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் வாசக தன்மை நிரம்பியவர்களாக புதியதாக கல்வி கற்ற பெண்களுக்கு இலக்கிய வாசிப்பின் மீது ஆழ்ந்த பிரியம் ஏற்பட்டது. பெண்கள் அதிகமாக் கற்காத போது அவர்கள் கல்வி கற்றவர்கள் புத்திசாலிகள் பொறுமை மிக்கவர்கள் நளினமானவர்கள் அப்பாவிகள் அவர்களை எளிதில் ஏமாற்றலாம் என்து போன்ற கற்பனைகளை கொட்டிக் கொட்டி எழுதி விற்ற காலமும் இருந்தது. பெண்கள் வாசகத் தன்மை சார்ந்த எழுத்துக்களை ஏறக்குறைய எல்லா சிறுகதை படைத்தவர்களும் எழுதினார்கள். ஒன்று கதைகளில் ஆண்வர்க்கம் மோசம் என்றும் எல்லாமே ஆணாதிக்கம்தான் என்றும் பிறகு நேரெதிராக இது வரை நடந்த போராட்டங்கள் யாவும் வர்க்கப் பேராட்டங்களே என்று இன்னொரு தரவும் வாதிட்ட எழுத்துகளும் பிறந்தது. வாசகர்கள் எளிய நடுத்தர மனம் படைத்தவர்களாகவே அதுமட்டுமின்றி மந்தித்தனம் கொண்ட வாசகர்களாக மாற்றியதும் ஒருகாரணமாகும். இன்றும் ஐம்பது வயது கடந்த அல்லது முப்பது வருடமாக வாசிக்கும் ஒருவருக்கு எது கலைப்படைப்பு என்று அறியாதவராகவே வளர்த்து வைத்து இருக்கிறோம். குறிப்பாக சிறுகதைகள் பற்றிய ஆர்வம் குறைந்ததற்கும் பிரசுரங்களுக்குக் கதைகள் தேர்வு செய்யப்படாததற்கு இந்த மந்த நிலையும் காரணமாக இருக்கிறது.

மகாத்மாவைக் கொல்ல ஒரு திட்டம் அற்புதமான சிறுகதை. இதில் அம்பேத்காரும் காந்தி பற்றிய உரையாடல்களும் சித்திரங்களும் வந்துபோகிறது.

அது போலவே எனக்கு ரயில் பிடிக்காது. சிறுகதையில் பால்யமும் ரயில் பாதைகளும் விடுமுறை நாட்களைக் கழிக்கிற சிறுவனின் மனஓட்டங்களுடன் மாட்டின் மீது வருகிற எரிச்சல் என்பதாக கதையின் களம் கிராமியத்தின் காட்சிகளும் சித்திரங்களும் நிறைந்திருக்கிறது.

என் தாத்தாவை நான் தான் கொன்றேன் கதையின் தனது தாத்தாவின் மரணத்தையும் ராஜ்கிரன் குறி சொல்கிற மீனா சினிமா டிக்கெட் சித்தப்பாவிடம் அடி உதை பாசம் உறவு பற்றிய காட்சிகள் அழகாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

நவீன சிறுகதை வடிவங்களி்ல் பரிசோதனை முயற்சிகளின் வடிவமாகவும் மாரிசெல்வராஜ் கதைகள் பதிவாகியிருக்கிறது. பொதுவாக அறிவியல் புனை கதைகள் என்னும் பெயரில் நடக்கும் கந்த்ரகோளம் சொல்ல விளக்கமுடியாது.

மாரி அதையெல்லாம் தவிர்த்து எளிய வாழ்வு கொண்ட மனிதர்களின் தொகுப்பற்ற வாழ்க்கையை எழுதிச்செல்கிறார்.

         பொதுவாக கலைசார்ந்த படைப்புகளை வாசித்தல் தேர்ந்தெடுத்தல் என்கிற ஆர்வம் குறைந்து போனதற்குக் காரணமே அப்படியான அற்புதமான கலைப்படைப்புகள் வரவில்லை என்று மேதாவித்தனமாக உளறுகிறவர்களை நாம் வைத்துக் கொண்டிருப்பதும் அல்லது ஏதாவது ஒரு வகையில் கலைப்படைப்பு வெளிவந்திருந்தால் அதைத் தூக்கிக் கடாசி விமர்சிக்கிறேன் பேர்வழி என்று நாரடிப்பதும் கூட ஒருவகையில் பாசிசத்தனம்தான். நல்ல படைப்புகள் வராமல் போவதற்குக் காரணம் நல்ல படைப்புகள் வந்து விடவே கூடாது அதில் ஒருவன் நம்மைத்தாண்டி போய்விடகக்கூடாது என்பதில் தெளிவாக மூத்தத் தலைமுறைகள் இருப்பதும் ஒரு காரணமே. அதுபற்றியெல்லாம் தைரியமாக எழுதுவதற்கோ கூட இன்னும் கட்டுப்பாடும் சாதி விலக்கமும் இருக்கவே செய்கிறது. இன்னும் கூட ஒரு மகத்தான தலித் படைப்பை ஒரு உயர்ஜாதி படைப்பாளி ஏற்றுக் கொண்ட சரித்திரம் இன்னும் நிகழவில்லை. அதுபோலவே நீ என்ன பெரிய மயிறு என்று அவர்களுகம் இவர்களுடைய கலைப்படைப்பை இவர்களும் ஏற்றுக் கொண்ட வரலாறும் இன்னும் நிகழவில்லை. ஆனாலும் நாம் இன்னும் ஐரோப்பிய சிறுகதைகளைப் பற்றிபேசிக் கொண்டிருக்கிறோம்.

         மகத்தான கதைகள் எழுதியவர்களில் மௌனி முக்கியமானவராக இருக்கிறார் ஆனால் தலித்  படைப்பாளர்கள் எத்தனை பேர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று யோசித்தோமானால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

          சிறுகதைகளில் கலை நுட்பம் பற்றிய அக்கறையை சுந்தரராமசாமி எடுத்தார் என்றே சொல்ல வேண்டும்.அவர் புதுமைப்பித்தனை ஆகர்ஷமாகக் கருதியதும் மலையாளக் கதைகள் மற்றும் அம்மக்களின் உறவுகளின் அந்நியோன்யம் அவர்களுடைய நிலம், உறவுகளின் பிரிவு அதன் மூலம் அவர்கள் எதிர்கொள்ளும் சூழல்கள் பற்றிய விவரணைகளை அதிகமாக எழுதினார். அவரும் வண்ணநிலவனும் நேரெதிர் தன்மைகளைக் கொண்டிருந்தனர். பிற்பாடு இடதுசாரி இதழ்களில் வெளியான கதைகள் முழுக்கவும் சாதி மத முரண்களால் சமூகத்தில் மக்களின் வாழ்நிலையைப் பற்றி பகிரங்கமாகவே பேசியும் எழுதியது. ஆனால் அந்தக்கதைகளுக்கு தொழிலாளர் வர்க்கம் மத்தியில் பேராதரவு கிடைத்தது. அந்த தரவிலிருந்து சிறுகதையாளர்கள் நிறைய உருவானார்கள் எனினும் அந்தக் கதைகளுக்கு வேறொரு தரப்பிலிருந்து வந்த விமர்சனம் மலத்தை விடவும் கேவலமான விமர்சனத்தை நெகு நெகு சால்ரா இலக்கிய வியாதியஸ்தர்கள் வைத்தார்கள். உண்மை தத்ரூபமாக வெளிப்பட்ட காரணத்தாலெ அக்கதைகள் எல்லாம் வறட்டுத்தனமானவை மற்றும் கலை நேர்த்தி இல்லாதது என்றும் பேசினார்கள். அந்தக் கதைகளை விடவும் படுகேவலமான கதைகளை புரட்சிக்கதைகளை மொழிபெயர்த்துத் தந்து பதிலுக்குப் போட்டியாகக் களம் இறக்கியதையும் நாம் பார்த்திருக்கிறோம். தற்காலத்தில் சிறுதையின் வடிவம் மாறியிருக்கிறது. அதை மாற்றிய பெருமை முழுக்கவும் இடது சாரி சிந்தனாவாத கலைஞர்களால் சாத்தியமாகியிருக்கிறது. ஒரு நுட்பமான கலைவடிவமொ உலகத்தரமான வடிவமோ எதுவாயினும் அதைச் சிருஷ்டிக்கிற ஒருவனாக இடதுசாரி கலைஞனாகவே இருக்கிறான். அவனால் உண்மையை அழகாகப் பேசமுடியும். கலைஞன் எப்போதும் நடித்துக் கொண்டே இருக்கமாட்டான் அவனுக்கு என்று ஒரு உடலும் உடல் தேவைக்கான வாழ்வும் இருப்பதால் அவனுக்குக் கலை என்பது ஒருவகையில் முகச்சவரம் செய்கிற வடிவம் மட்டுமே. கலையைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பவர்கள் யாவரும் காடு காடாய் ஏரி ஏரி ஏரியாய் பழங்குடிமக்கள் வாழும் பகுதிகளுக்குப் போய் அவர்களுடன் வாழ்ந்து கொண்டு அவர்கள் பற்றி அறிந்து எழுதுகிறார்கள். பிறகு அம்மக்களின் அறியாமையைக் கிண்டல் செய்வதும் அவர்களுடைய குடும்பம் கலை அரசியல் பொருளாதாரம் குறித்து அதிமேதாவித்தனமாக எழுதுவதுமாகவே இருக்கிறது. அப்படியானா வர்களுக்குத்தான் இங்கு நாம் பீடங்களை அமைத்துத் தருகிறோம். மன்னிக்கவும் மறைமுகமாக அமைத்துத் தரப்படுகிறது. இப்படித்தான் எழுத்து யுகம் போகவேண்டும். இப்படி மாற்றி எழுது. இது போன்ற ஆக்ரோசமான படைப்பு வந்து கொண்டிருக்கிறது பார். நீ என்ன புடுங்கிக் கொண்டிருக்கிறாயா. போட்டுத்தாக்கு அவனை அவன் எழுத்தைக் கிழி,.டேய் விமர்சகா எட்றா உன் பேனாவை போடு அறிவாயுதத்தை கலை இருக்கா கேள்..நுட்பம் இருக்கா கேள். எல்லாம் இருந்து விட்டால் அவனை விடாதே அவன் டேன்ஜர். அவன் எழுத்தின் நிலையை மாற்றிவிடுவான் அப்படியே அமுக்கு அவனை..இழிவாகக் கருதப்பட்ட சமூகத்தின் அடுக்கிலிருந்து மேலேறிவந்தால் அவனை சக்கரவியுகம் அமைத்துச் சாய்ப்பதற்கும் அந்த எழுத்துக்களை கலை இல்லை நுட்பம் இல்லை. செய்நேர்த்தியில்லை. அடர்த்தி இல்லை என்று நிறுவன விமர்சகர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களுக்குத் தேவை கொஞ்சம் பரபரப்பு.

              அவன் பற்றிக் கேள்விப்படாத மாதிரியே இரு..அப்படியா யார் அது என்று கேள். அவனைக் கொல்வதற்கு அந்தக் கேள்வி ஒன்று போதும். அவன் குலத்தின் கதையையே கொல்ல முயற்சி செய். நீ யெல்லாம் ஞானபீடம் வாங்கினாலும் என் சாதிக் காரன் சோப்பு டப்பா வாங்குறதுக் குச் சமம் என்று பேசு..அவனை அவன் எழுத்தின் ஆக்ரோசத்தை அழிக்கத் துவங்கு. முடிந்தால் நீயெ உன் சொந்த செலவில் தண்ணி வாங்கிக் கொடு..அவசரம் அவசரம் அவன் எழுதாமல் பார். விடாதே பார் அவனுக்கு அதிகமாக லைக் விழுகிறது. அடித்துத் துரத்து என்பதுதான் தற்போதைய இலக்கிய வகைமை இதிலிருந்து மாரி செல்வராஜ் போன்ற சிறுகதையாளர்கள் தப்பிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்..

        சிறுகதைகளின் வாயிலாக நாம் அறிய விளைவது பிறிதொருவரின் அனுபவம் மட்டுமல்ல ஒரு சமூகத் தொகுப்பின் கலைவடிவங்களையும் அவர்களின் தலைமுறைகளின் கலாச்சாரச் சடங்குகளையும் அறிந்து கொள்கிறோம். மாரி செல்வராஜின் கதைகள் தாமிரபரணி,திருநெல்வேலி மண்டலத்தைச் சார்ந்த மண்ணின் மனிதர்கள் வாழ்வு எதி்ர்கொள்ளும் சம்பவங்கள் என்பதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எளிய மனிதர்களி்ன் தவிர்க்க வியலாத குற்றங்களும் அதன் பின்புலமும் அவர்கள் எதிர்கொள்கிற தற்காப்பு நடவடிக்கைகளும் சிறப்பாக கதைகளாக எழுதப்பட்டிருக்கிறது.

       நம் யதார்த்தமான வாழ்வில் நம்மால் நம்பிக் கொள்ளவே முடியாத இடர்களை கலை அனுபவத்தின் வாயிலாக அவர் எழுதிச் செல்கிற காட்சிகள் உணர்வுப் புர்வமாக அமைந்திருக்கிறது.சிறுகதைகளுக்கென்று ஒதுக்கப்படும் பக்கங்களை சிற்றிதழ்களும் குறைத்து விட்டது.நவீன இலக்கியப் பத்திரிக்கைகளும் குறைத்துவிட்டது. சிறுகதைகளை ஊர்விலக்கம் செய்வது போன்ற மனப்பான்மையை தற்கால நவீனம் ஏற்படுத்தியிருக்கிறது. சினிமா இனி எப்படி மேடு ஏறுவதற்கான வாய்ப்பில்லையோ அதுபோலவே சிறுகதைகளுக்கான வாழ்வும் அப்படித்தான். ஒருவேளை பொக்லைன்கள்,புல்டோசர்கள் ராட்சத கிரேன்கள்,ரொலிங் ஷட்டர்கள் வந்து நமது வேலைவாய்ப்பைக் குறைத்து இருக்கிறது. மிக சுலமாக உடலுழைப்பு இல்லாமல் வேலை செய்வதற்குக் கருவிகள் வந்துவிட்டது.

               தொலைக்காட்சி ஊடகங்களில் சொற்ப வருமானத்திற்காக பணிபுரிந்து தன் நவீன சிந்தனையையும் பல்லாண்டு காலம் வாசித்த கிளாசிக் இலக்கியங்களை மறந்து கற்பனை செய்து வைத்த அனைத்து நவீன பின் நவீன படைப்பு ஆசைகளை தூக்கி கூவம் ஆற்றில் வீசிவிட்டு எடுபிடிகளாக தான் வாசித்ததிற்கும் தன் படைப்பிற்கும் சம்பந்தமி்ல்லாத வேலையைத் தன் கலைபசியின் பொருட்டு வாழ்ந்து கொண்டிருக்கி பல்லாயிரம் கலைஞர்களை இந்தக் கதைகள் ஞாபகத்தில் கொண்டு வருகிறது. கலை என்பதை கலை வெளிப்பாடும் கலைஞனைத் தீவிரமாகப் பாதுகாப்பதும் ஆக இருக்க வேண்டும். கலையை ஏவுதல் என்கிற மனோபாவத்தை இந்த நவீன காலத்தில் ஒருசில பதிப்பு நிறுவனங்கள் ரகசியமாகவே மேற்கொண்டு வருகிறது என்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது.

             மாரி செல்வராஜ் கதைமாந்தர்கள் ஏற்கெனவே வாழ்ந்தவர்கள்.வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அதிகாரத்தின் ஒடுக்குமுறைகளை சகித்துக் கொள்கிறவர்கள். அதிகாரம் தந்துதவுகிற ஜாமீன் வசதியை வைத்து வாழப் பழகிக்கொண்டவர்கள். எளிய மனித சமூகத்திடம் முன்புபோல எல்லாம் ஆயுதங்கள் எல்லாம் இப்போது இல்லை. அவர்கள் ஒரு போதும் அதிகாரத்தின் மீது எறிந்ததில்லை.  ஆனாலும் எப்படியோ அதிகாரத்தின் துறைக்கு கற்கள் எறிவது போன்ற படங்கள் கிடைத்துவிடுகிறது.

            மாரியின் கதைகளில் வரும் பெண்களும் அவர்களின் உலகும் விசனப் படவைக்கிறது. ஆறுகளின் வழியாகவும் மண்வளம் வழியாகவும் மக்களின் சமூகப் பழக்கவழக்கங்கள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருப்பதை உணரமுடிகிறது. சரிபாதியாக ஐந்து கோடி பெண்கள் இருந்தாலும் அத்தனை பேருடைய கதைகளையும் சிறுகதையாளர்கள் சில நூறு பெண்களின் கதைகள் வழியாகத்தான் பேச முடியும்.

              நல்ல தங்காளும் பாஞ்சாலியும் முத்துலட்சுமியும் ஜான்சிராணியும் கல்பனாசாவ்லாவை மற்றும் சிலர் வாழ்க்கைச் சம்பவங்களை வைத்துப் பேசுகிற சைவ வைதீக திராவிடப் பகுத்தறிவு சமூகத்தில் இப்படித்தான் கொஞ்சம் பெண்களைக் குறித்தும் பேசவேண்டும். விதியை நம்புகிற அளவிற்கு எந்த சமூகமும் பெண்களை அவர்களுக்கான இடஒதுக்கீடுகளை நம்புவதில்லை. இன்றும் ஊராட்சிப் பதவிகளில் பெண்களின் பின்னால் இருந்து கொண்டு அதிகாரத்தைச் செலுத்தும் பல்லாயிரம் கணவர்களின் சிறுகதைகளையும் மாரி செல்வராஜ் எழுதவேண்டும். எழுத முடியுமா தெரியவில்லை.

           சிறுகதைகள் வாசிப்பு நமக்குள் இறுக்கத்தையும் நாம் பால்ய காலத்தின் ஓட்டங்களையும் சிந்திக்க வைப்பவை. எனினும் வாசிக்கக் கிடைக்கிற வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. ஒரு வேளை வலியில்லாமல் வாசிப்பதற்கும் மனதில் எளியவிதமாக பதிவதற்கு ஏதேனும் சூப்பர் கம்ப்யுட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் தமிழ் வாசிப்பு மனமும் புத்தகங்களும் விற்பனை ஆகும் என நம்பலாம் அது வரை சிறுகதை எழுதுபவர்கள் காத்திருக்க வேண்டும் முடிந்தால் சூப்பர் கம்ப்யுட்டர் கண்டுபிடிக்கத் துவங்கவேண்டும். மாரி செல்வராஜ் கதைகள் காட்சி விவரிப்புகளில் தடங்கல்கள் இருக்கிறது. துண்டு துண்டாக ஒரு சம்பவங்களை கோர்ப்பது உறுத்துகிறது. மற்றபடி ஒரு கதையாளனை மிகவும் ஆர்ப்பரித்து வரவேற்க வேண்டிய காலத்தில் இருப்பதால் மாரியின் நூலை நாம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறோம். நன்றி