புதன், 16 அக்டோபர், 2013

uyir nizhal- photographic Exibition


உயிர்நிழல்- ஓசை அமைப்பின்
காணுயிர்ப் புகைப்படக்கண்காட்சி பதிவுகள்-

இளஞ்சேரல்


      கடந்த 4-10.2013 முதல் பதினாறாம் தேதி வரை உயிர்நிழல் காணுயிர் புகைப்படக் கண்காட்சி மிகச்சிறப்பாக் கோவையில் நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் இயற்கை ஆர்வலர்கள், மாணவ மாணவியர்கள் பள்ளிக் குழந்தைகள் உள்பட பொதுமக்களும் கண்டு பயண் பெற்றார்கள். ஓசை சுற்றுச் சூழல் அமைப்பும் தோட்டக்கலைப் பண்ணை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் நடந்த நிகழ்வு மறக்க முடியாத அனுபவத்தை தந்தது 
         வருடாவருடம்  இயற்கையைக் கொண்டாடும் நவராத்திரி விழாவாக அமைந்தது என்றால் மிகையில்லை. இயற்கை வளங்கள் நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் அழிக்கப்படுகிறது. மிக விரைவில் அழிக்க கூடிய வெடிமருந்துகள், ரசாயன மருந்துகள், கனரக இடிப்பு அழிப்பு கருவிகள் கண்டுபிடித்துவிட்டோம். இனி நாம் வாழ்வை கவலையுடன் தான் கழிக்க வேண்டிருக்கிறது. காடுகளின் சதவிகிதம் இருபது சதவிகிதம் தான் கைவசம் இருப்பதாக ஓசை கூறுகிறது. ஒரு முறை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தான் தாஜ்மகாலைப் பார்ப்பதற்கு இருபது முறைக்கும் மேலாகப் போயிருக்கிறேன். ஆனால் தாஜ்மகாலை நான் பார்க்க வில்லை காரணம் யமுனை நதியின் மாசும் சுற்றுப்புறங்களின் கழிவு மேடுகளைத்தான் பார்த்துவிட்டு வந்தேன். அந்த அளவு அந்த நதி கெட்டுப்போயிருக்கிறது. சுகாதாரக் கேடை நினைத்து உள்ளே போக மனம் வரவில்லை. என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.
         
 நான் திங்களன்று சென்றேன். ஊரிலிருந்து இருபத்தியைந்து மைல் தொலைவு வேளாண்மைப் பல்கலைக்கழகம். மாலையில் மழை அச்சுருத்தியது மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்கள் வாழைக்கன்றுகளை மாவிலைகளை மலர்களை தேங்காய் கரும்புகளை வாங்கிப் போகிறார்கள் இன்று விஜய தசமி. நாடெங்கும் கொண்டாட்டங்களில் மக்கள் திளைக்கிறார்கள். வழக்கம் போலவே சில துயரமான சம்பவங்கள். எங்காவது ஒரு திசையில் நடக்காமல் இல்லை. கொலுவைத்த வீடுகளுக்கு நண்பர்கள் அழைக்கிறார்கள். காலமும் நேரமும் வாய்க்கிறது.
      அரங்கிற்குப் போனபோது நம்பிக்கை தரும் வகையில் பண்டிகை நாட்களிலும் மக்கள் வந்திருக்கிறார்கள். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக இரவு பகல் என்று பணியாற்றும் சூழல் நண்பர்கள். ஓசை அமைப்பின் தலைவர் காளிதாசன் வரவேற்கிறார்கள் வருகிற ஆர்வலர்களை.
    அவரைச் சந்தித்த போது கவிஞர் அவைநாயகன் இருவருமாக சில தினங்களுக்கு முன்பாக தந்தி தொலைக்காட்சியில் சீமான் நடத்தும் மக்கள் முன்னால் நிகழ்வில் பேசியது ஞாபகம் வருகிறது. கோவையை மட்டும் வைத்து இயங்காமல் மாநிலத்தின் இந்தியாவின் பிற சூழல் அமைப்புகளில் ஒன்றாகவும் இயங்கியபடியே மாநில இயற்கைச் சூழல் செயல்பாட்டாளராகவும் செயல்படுகிறார். அவருடன் சில நிமிடங்கள் பேசினேன். குடும்பம் குடும்பமாக கைக்குழந்தைகளுடன் ஆர்வலர்கள் பங்கு கொண்டு திரும்புதல் ஆச்சர்யமாகவும் உள்ளது. இந்த முறை அரங்கில் பல புதிய அற்புதமான புகைப்படங்கள் நிறைய பதிக்கப்பட்டள்ளது. அதுமட்டுமல்லாமல் தனித்த உயிர்களின்  இயற்கைக் காட்சிகளின் வரிசையில் மிக நேர்த்தியாக அமைக்கப் பட்டுள்ளது என்றேன்.
           
    கடந்த மூன்று மாதங்களாக இயங்கிய பணி. ஒவ்வொரு செயல்பாட்டாளரும் உயிர்ப்புடன் கடுமையான உழைப்பின் மூலம் சாத்தியப்பட்டிருக்கிறது என்றார். ஒவ்வொரு உயிரினத்திற்கும் தமிழ்ப் பெயர் அதன் புவியியல் பெயர், ஆங்கிலப்பெயர்களின் வரிசைகள். அதன் புர்வீகம் வாழிடம் அதன் தற்போதைய இருப்பு குறித்த விவரங்கள் அடங்கிய செய்திப் பெட்டகத்துடன் தயாரிக்கப்பட்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் வைக்கப் பட்டிருக்கிறது. இந்த தயாரிப்புக்கு எடுத்திருக்கிற பொறுப்பு பிரமிக்க வைக்கிறது. ஒரு தகவல் களஞ்சியமாக அன்றி உள்ளப்புர்வமாக ஒரு உயிரினமாக மனிதன் உணர்ந்து கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இயற்கை தந்த உயிரினமாக மனிதன் தன்னளவில் உணர்கிற போது இயற்கை நிச்சயம் பாதுகாக்கப்படும் என்பது உறுதியான நம்பிக்கையை இந்தக் கண்காட்சி உணர்த்தியது.
   
          கண்காட்சிக்குள் நுழையும் போது என் மனநிலை வேறாக இருந்தது. மன நெருக்கடி. சொந்தப் பிரச்சனைகள், கவலை, நோய்மை, வழக்கம் போலவே பீடிக்கும் எதிர் அரசியல் செயல்பாட்டிற்கு எதிராக நடக்கும் அரசியல் நடவடிக்கைகள். முடியாமல் தத்தளிக்கும் வாழ்வியல் பிரச்சனைகள். வழிநெடுக மக்கள் தங்கள் கடவுளுக்கு நம்பிக்கையாக வாழ்கிற இயல்பு. அந்த பிரமாண்டமான ஷாப்பிங்  அரங்குகளைத் தங்கள் திரையரங்காகப் பார்க்கிறார்கள். சொந்த ஊர் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருக்கிற மற்ற மாவட்டத்து மக்கள். பிறமாநில மக்கள்.
        ஆர் எஸ் புரம் உள்ளாக வடம்பிடிப்பதற்குத் தயாராக இருக்கிற தேர்தான் கொஞ்சம் என்னை இயல்புக்குக் கொண்டுவருகிறது. பெருநகரத் திற்குள் அப்படியொரு அற்புதமான தேரை நான் பார்த்து வெகுநாளா கியிருக்கிறது. தன்னந்தனியாக யாருமற்று தனது வடக்கயிறுடன் நின்று கொண்டிருக்கிறது. அதன் மேல் சில மைனாக்கள். என் வண்டி கண்காட்சிக்குள் ஆர்வத்துடன் நுழைகிறது.

            முதல் வரிசையில் தினமும் அதிகாலையில் பார்க்கிற விரித்து வைத்த குடைகள் போன்றிருக்கிற மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அழகுப் புகைப்படங்கள். புகழ்பெற்ற இயற்கை புகைப்படக்கலைஞர்களின் காமிராவில் பிடிக்கப்பட்ட காட்சிகளின் அழகும். பிரமாண்டமும். அருவிகள், தேயிலைத் தோட்டங்கள். பசேலென்ற இயற்கையின் விரிப்பு. மனம் சட்டென்று மூங்கில் நெகுவாகப் பஞ்சாக மாறிவிடுகிறது. மலர்க்காடுகளின் வனங்களின் மடிப்பு. மலைகளின் அமைதியாக வனத்தினுள்ளாக நுழைந்து திரிவது போன்ற பிரமை. பார்வையாளர்கள் தங்கள் அலைபேசியில் படம் பிடிக்கிறார்கள். இணையத்தில் கூகுளில் இயற்கைக் காட்சிகளை தனித்து ரசிப்பதற்கும் ஒரு அரங்கில் பார்வையாளர்களுடன் லயித்துப் போய் ரசிப்பதற்கும் வித்தியாசம் உணர முடிந்தது.
        
பறவைகளுக்குத் தனியாக ஒரு வரிசை, மான்கள், தவளைகள், வாத்து, நாரைகள், குரங்குகள், வரையாடுகள். சிலந்தி, ஈசல், கழுகு, பாம்புகள், மரங்கொத்திகள், உடும்பு, பட்டாம்புச்சிகள், யானைகள், கடமான்கள், அரிய வகையிலுள்ள பூச்சிகளின் புகைப்படங்கள், காட்டுநாய்கள், எருமைகள், பன்றிகள், அந்தந்த உயிரினங்களின் உணவுவகைகள் அதன் இருப்பு. அதன் இனப்பெருக்கம். வாழ்நாள் போன்ற குறிப்புகளுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. நம் காலத்தில் நமக்கு அருகாமையில் வாழும் பறவைகள் பூச்சிகள் உயிரினங்களின் ஞாபகம் வருகிறது. வெகுவேகமாக அழிந்து வருகிற உயிரினங்களில் பூச்சியினங்கள் அதிகமாக உள்ளது. நம் உயிர்காக்க மருந்துகள் தருகிற அரியவகை உயிரினங்கள்.
     
புகைப்படக்கலைஞர்களின் தேடுதலும் ஆர்வமும் காட்சிகளில் தெரிகிறது. கல்யாண் வர்மா, அருந்தவச்செல்வன், உள்ளிட்ட கலைஞர்களின் படங்கள். நுண்ணுயிரிகளின் உடல் அமைப்புகளும் அதன் வண்ணங்களும் இயற்கையின் மகோன்னதமான ஆச்சர்யத்தை அளிக்கிறது. மின் ஒளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற அரங்குகள் பார்வையாளர்களுக்கு சௌகரியமாக உள்ளது. ஒவ்வொரு உயிரியின் பரிணாம வரிசையின் படங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணன் அவைநாயகன் மேலும் சில படங்கள் குறிப்புகளைத் தருகிறார். சற்று முன்பு முடிந்த சூழல் விழிப்புணர்வு நாடகப் போட்டிகளில் மாணவர்கள் உருவாக்கியிருந்த காட்சிகள் நடிப்பு முதன்மைப்படுத்திய கருத்துகள் குறித்துப் பாராட்டிப் பேசினார். அந்த மாணவர்களின் ஆர்வம் மகிழ்ச்சியைத்தருகிறது என்றார். மாணவ மாணவிகள் வரைந்திருந்த ஓவியங்கள் வைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துக் காட்டினார். குறிப்பிட்ட நேரத்திற்குள் வரைய முடியாத ஒரு மாணவன் தனது மேலும் சில நிமிடங்கள் ஒதுக்க கேட்டு வரைந்த ஓவியம் என்று படத்தைக்காட்டினார். புலியின் ஓவியம்.பின்னணியில் அடந்த கானகம். மற்ற ஓவியங்களிலும் மாணவ மாணவிகள் தங்கள் கற்பனையில் சில காடுகளை உயிரினங்களை வரைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு பார்வையாளர்களான நாமும் நம் மனதிற்குள்ளாகவும் ஒரு கானகத்தினை உயிரினத்தை வைத்திருக்கவேண்டும் என்று உணர்த்தியிருக்கிறார்கள்.
            தற்கால நவீன உலகத்தின் எஞ்சியிருக்கிற காடுகளைக் காப்பாற்றுவதற்கான எளிய வகைகளை எழுதியிருக்கிறார்கள். புதிய சாலைகளை அமைக்காதிருத்தல், அதிக ஒலியெழுப்பியபடி செல்வதை தவிர்ப்பது. பூங்காக் களை அமைப்பதை தவிர்ப்பது. காடுகளுக்குச் செல்லும் போது அணிய வேண்டிய உடையின் வண்ணம் பற்றியும் சொல்கிறார்கள். நாம் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கிறார்கள் ஓசை நண்பர்கள்.

       அண்ணனுடன் பேசியபோது பறவை பார்த்தல். அதன் இயல்புகளுடன் கவனித்துப் படம் பிடிக்கும் ஓவியங்களாக்கும் பார்வையிடங்களை, கண்ட  இடங்களை ஞாபகப் படுத்தினார். கோவையின் பூர்வீகமான பறவைகளின் இடம் சிங்காநல்லூர் குளத்தேரிக்கும் ரயில்வே பாலத்திற்கருகில் உள்ள குளம் தான் ஒரு காலத்தில் பறவைகள் வந்து போகிற இடம். மழைக்காலம் முடிந்து கோடைக்கு பல ஊர்களிலிருந்து பறவைகள் வந்து இனப்பெருக்கம் முடிந்து செல்லும் அழகைக் கண்டிருக்கிறோம் என்றார். கோவையின் குளங்கள், ஏரிகள், ஆறுகள், பாசனக் கால்வாய்கள்,கிணறுகள் எல்லாம் மூடப்பட்டு எஞ்சியிருக்கிற குளங்கள் நாசாமாகி வருவதையும் கவலையுடன் பேசினோம். குறிப்பாக நொய்யலில் கலக்கும் கிளை வாய்க்கால்கள் தரைமட்டமாகியிருக்கிறது. உடைக்கப்படுகிற சிமெண்ட் கட்டிகளால் கட்டிடக் கழிவுகளால் அடைக்கப்பட்டு மூடப்படுகிறது.
            கோவையில் கட்டப்படுகிற அடுக்குமாடிக்குடியிருப்புகளில் எங்கும் மரங்களுக்கு மட்டுமல்ல வாகனங்கள் நிறுத்தப்படுவதற்குக் கூட இடம் விடுவதில்லை. இன்னும் அங்கீகரிக்கப் பட்ட மனைப்பிரிவுகளில் பூங்காவிற்கான இடங்களில் கட்டிடப் பொருட்களைக்குவித்துக் கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். நாம் மெதுவாக கூட கேட்க முடியாது. பெரு நகர ஆக்கங்களில்  மற்ற மாநிலங்களில் நகரங்களிலும் இதே நிலை தொடர்கிறது.
      
       கடவுள் மதம் நிறுவனங்கள் பெயரால் கைவசப்படுத்தப்படும் இயற்கையான மலையடிவாரங்கள், காட்டுயிர்களின் வாழிடங்கள், அதன் வழித்தடங்கள் எல்லாம் மறிக்கப்படுகிறதைக் காண்கிறோம். தீம் பார்க் என்றும் செயற்கை நீர்வீழ்ச்சி, புதியதாக உருவாக்கப்படும் சுற்றுலாத்தலங்கள், புறவழிச் சாலைகள், காடுகளுக்குள் போடப்படும் சாலைகள் இவையெல்லாம் காட்டுயிர் களையும் பறவைகளையும் இழக்கச் செய்கிறது. பறவைகள் மனிதர்கள் இல்லாத தேசத்தில் வாழும் ஆனால் மனிதன் பறவைகள் இல்லாத தேசத்தில் வாழமுடியாது எனும் சலீம் அலியின் கூற்றை ஓசை தன்னுடைய பிரதானமான வாசகமாக வைத்திருக்கிறது.
      
         அரசு தாம் மக்களின் தேவைகளுக்காக இருக்கிறோம் என்பதாகவும் மக்கள் எல்லாவற்றையும் அரசு பார்த்துக்கொள்ளும் அதற்காகத்தான் தேர்வு செய்திருக்கிறோம் என்று விட்டுவிட்டதும் இந்த அழிவுக்குக் காரணமாகிறது. நமது தேசத்தில் தான் எந்தவொரு அரசியல் இயக்கமும் இயற்கையின் அழிவுக்கும் மாசுக்கும் போராட்டம் நடத்திடாத நாடு நமது நாடு. காரணம் வெறும் மனிதனின் உண்டு உறைவிடம் பாதுகாப்புக் குறித்தே இயக்கங்கள் நடத்திப் பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் நாம். நமது அரசியல் இயக்கங்களும் அப்படியாகவே தன்னைப் பாதுகாத்தும் கொள்கிறது. தமது அரசியல் பிரிவுகளில் எல்லா அமைப்புகளுக்கும் தொழில் பிரிவுகளுக்கு இளைஞர்களுக்கு, பெண்களுக்கு, மாணவர்களுக்கு, இலக்கியத்திற்கு, விவசாயத்திற்கு என்று பதவிகள் பிரித்துக் கொள்வதற்கு இணை சங்கம் வைத்திருக்கிற கட்சிகள் இயற்கைப் பாதுகாப்பு எனும் பிரிவு வைத்து அதற்கென இயக்கம் நடத்த முன்வருவதில்லை முன் வந்ததுமில்லை யென்பதை நாம் நினைவு கூர்ந்து கொள்வது அவசியம் எனக் கருதுகிறென். நீங்கள் யோசிக்கலாம்.

    அரசியல் கட்சிகளுக்கு எதிர் நடவடிக்கைகளில்தான் ஆர்வம் அதிகம் அதில் மக்கள் குறித்தோ இயற்கை குறித்தோ தெளிவான சிந்தனை வருவதற்கு வாய்ப்பில்லை. அதனால் இந்தக்கண்காட்சியில் அரசியல் கட்சி சார்ந்த பார்வையாளர்கள் நிச்சயமாக ஐந்து சதவிகிதம் கூட வருவதற்கு வாய்ப்பில்லை.  இங்கு திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் போலவேதான் இயற்கை குறித்த மரியாதையும் உள்ளது. என் சிற்றறிவுக்கு எட்டியவகையில் நாற்பது ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சிதான் நடந்து வருகிறது. ஆளும் எதிர்க்கட்சிக்காரர்கள் இயற்கை காணுயிர் காடுகள் குறித்துப் பேசியும் எழுதியும் இயக்கம் நடத்தியும் நான் அறியவில்லை.
       
         நம் சமூகவளர்ச்சி அரசியல் வளர்ச்சி சார்ந்த அமைப்பாக வேறூரூன்றி விட்டது. முழுக்கவும் அரசியல் அடிப்படையில் மனித சமூக வாழ்வு அமைந்து விட்டது. அப்படியாகவே நமது துன்பங்களை அனுபவித்து ரசிக்கப் பழகிக் கொண்டோம். அதனாலேயே நல்லவை என்று சொன்னாலே நமக்கு பெருத்த சந்தேகம் வந்துவிடுகிறது. அல்லது பராகாசூர நிறுவனங்கள் தங்கள் டாலர் முதலீடுகளால் அப்படியாகப் பழக்கியிருக்கிறது. நாம் என்னதான் போராடினாலும் கடைசியில் நம் டேபிளுக்கு வந்து தானே ஆகவேண்டும் எனும் மனம் ஆழமாக திராவிட அரசு அரசியல் மேலாண்மையில் படிந்து விட்டது. அதுபோலவே இந்திய மனோபாவமும் அதையொற்றியே நகர்கிறது.

      நம்மிடம் அதற்கென அமைச்சகங்கள் உள்ளது. அதிகாரங்கள் சட்டங்கள் பாதுகாப்பிற்கு உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள தன்னார்வ தொண்டு அமைப்புகள் இயற்கைப் பாதுகாப்பினர் தொடர்ந்து போராடித்தான் சில காப்பாற்றுதல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் அரசு அமைப்பின் மூலமாகத்தான் எளிதில் சில பாதுகாப்புகளை மேற்கொள்ள முடியும். என்னதான் தேசம் முழுக்க இயற்கை தன்னார்வ நிறுவனங்கள் போராடினாலும் இயக்கம் நடத்தினாலும் சட்டங்கள் மூலமாக விதிகள் மூலமாகத்தான் சில வழிகளில் இயற்கையைக் காப்பாற்றமுடியும்.
         ஓசை அமைப்பு வருடாவருடம் காணுயிர்க் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சிகளை நடத்திவருகிறது. வாய்ப்பு அமைகிற பட்சத்தில் கல்லூரிகள், கலாச்சார விழாக்களில் புகைப்படக்கண்காட்சிகள் நடத்திவருகிறது. இளைய தலைமுறையினர்கள், மாணவ மாணவிகள் பள்ளிகள்,கல்லூரிகளின் அமைப்புகளுக்கு இயற்கையான காடுகள், காட்டுயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு அமர்வுகளை நடத்துகிறார்கள்.
     
அவசியமற்ற வகையில் தேவையற்ற மரங்களை வெட்டுதல், சுற்றுப் புறங்களுக்கு ஏற்படுகிற மாசுகளைத்தவிர்த்தல் உள்பட பல பணிகளை இடையறாமல் செய்கிறார்கள். தங்கள் புலனுக்குத் தெரியவருகிற இயற்கை மீறல்களை சம்பவ இடங்களுக்குச் சென்று தடுத்து சட்டப்படியாக சில அறிவுறுத்தல்கள் வழங்குகிறார்கள். அரிய வகை உயிரினங்களைப் பாதுகாப்பது வேட்டையாடுதல் மூலமாக நடக்கும் பல செயல்களை அரசின் நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கவைக்கிறார்கள்.

        முக்கியமான பணியாக ஓசை பிரதிமாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை கோவை மாநகரில் மாலை நேரம் சூழல் சந்திப்பு எனும் மாதாந்திர சந்திப்பு நடத்துகிறார்கள். தற்பொழுது மிகச்சிறப்பாக ஐம்பது சந்திப்புகளைத் தாண்டி நடந்து வருவது அநேகமாக மாநிலத்திலேயே தொடர்ச்சியாக நடத்துவது ஓசை அமைப்புதான் எனும் போது நாம் ஓசை அமைப்பின் பணிகளை நாம் பாராட்டிட முடியும். இந்த அமர்வுகளின் வளர்ச்சியாகத்தான் ஒரு பரிணாமமாகத் தான் இந்தக் கண்காட்சி. சூழல் குறித்த விழிப்புணர்வுகளும் நாம் வாழுகிற நிலத்தைப் பற்றியும் நீர் குறித்தும் நீர் மாசு பற்றியும் மலைகள் காடுகள் காட்டுயிர்கள் குறித்தும் தொடர்ச்சியாக நாம் தேசமெங்கும் இயக்கங்கள் நடத்தியாக வேண்டும்.

        ஆனால் நம்முடைய போதாமை ஓசை போன்ற அமைப்புகள்தான் நடத்துகிறது. நாம் சாதிபிரித்துக் கொண்டிருப்பது போன்று இந்த இயக்கத்தை இவர்கள் செய்வார்கள். இது இது இவர்கள் தான் செய்யவேண்டும். அந்தப்பணியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் இயற்கை சாதி. இவர்கள் ஆன்மீகம் இவர்கள் அரசியல், இவர்கள் சாதிய இயக்கம். இவர்கள் இடஒதுக்கீடு இயக்கம் என்று நாம் பணிகளைப் பிரித்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் அந்தப்பணியிலிருந்து வேறு இடம் போகாமல் சில சமயம் தான் சார்ந்த இயக்கத்திற்கும் போகாமல் வாழ்வதுதான் நமது சமூக அரசியல் மேம்பாடு கற்றுத் தந்திருக்கும் பாடமாகியிருக்கிறது.
             
குறும்படங்கள் ஆவணப்படங்கள் திரையிட அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு படங்கள் திரையிடல் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. நான் போயிருந்தபோது புலிகள் குறித்த ஆவணப்படம் ஓடுகிறது. புலிகளை வேட்டையாடி அதன் தோல்களை சீனா, பர்மா, போன்ற கிழக்காசிய நாடுகளில் விற்கிறார்கள். கொல்வதற்கும் விற்பதைப் பெற்றுக் கொள்வதற்கும் அதற்கென தரகர்கள் இருக்கிறார்கள். புலிகளின் தோலுக்கும் நகங்களுக்கும் இருக்கிற கிராக்கிக்கு கொல்கிறார்கள். புலிகளைக் கொல்வதற்கும் உயிருடன் பிடிப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகிற வினோதமான கருவிகளைப் பார்த்தால் பயமாக இருந்தது. அதில் புலி மாட்டுகிறது. தாய்ப்புலிகளை இழந்த குட்டிப்புலிகள் கானகங்களில் உலாவுகிறது. கால் மட்டும் சிதைத்துப்பிடிக்கிற கருவியில் புலியில் கால்கள் நசுங்கி தன் கால்களைப் பார்க்கிறப்புலியின் வேதனையைக் காண முடியவில்லை.
         பிற்பாடு சுற்றுலாத்தலங்களில் காடுகளை வழியாக கொண்டிருக்கிற நெடுஞ்சாலைகளில் பயணித்துப் போகும் வாகனங்களால் அடிபட்டுச்சாகிறது. வெகுவேகமாக ஒலியெழுப்பிப் போவதால் கானகத்திற்குள்ளாக உயிரிகள் தங்கள் பாதை மறந்து தாறு மாறாக ஒடி பாதையில் வந்து இறக்கிற உயிரினங்கள் பற்றய புகைப்படங்கள். அது போலவே வனச்சரகத்திற்குள் செல்லும் வாகனங்களில் அடிபட்டு சாகும் காட்டுயிர்களின் நிலை பற்றிய புகைப்படங்களின் தொகுப்பு நம்மை துயர்கொள்ள வைக்கிறது. புலிகள் உள்பட பல உயிரிகளின் தோல்கள் திருடும் கொள்ளையர்கள் பற்றிய குறிப்புகளும் படத்தில் காட்டப்படுகிறது.
    
நம் சமூகத்தில் பெருந்தனக்காரர்கள் உருவாக்கிய வேட்டை கலாச்சாரம் இன்று நவீன கருவிகள் மூலமாக நடந்து கொண்டிருக்கிறது. படிப்படியாக காடுகள் அழிப்பிற்குப்பிறகும் உயிரிகளை அழிப்பிற்குப் பிறகும் வளங்களை வெட்டியெடுப்பதற்குப் பயண்படுத்தப்படுகிறது. தற்காலத்தில் ஓசை போன்ற சூழல் அமைப்புகள் வனச்சட்டங்களைத் தீவிரமாக அமுல் படுத்த விடுக்கும் கோரிக்கைகள் மூலமாக இப்பொழுது அரசுகள் சில நடவடிக்கைகளை எடுப்பது பாராட்டும் படியாக உள்ளது. ஒரு நிலம் கையகப்படுத்தப் படும் போது திட்டம் ஆரம்பத் துவக்கும் போது சூழல் அமைப்புகளின் கருத்தறிய முயற்சிப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளது. சமீபத்தில் விளைநிலங்களை பாழடிக்கும் அன்னூர் மேட்டுப்பாளையம் நீலாம்புர் புறவழிச்சாலை திட்டத்தை அரசு கைவிட்டது நினைவிருக்கலாம். இதற்கு மக்களின் விவசாயிகளின் இடைவிடாத போராட்டமே ஆகும்.
     
அப்படியாக சில தாதுக்கள் வெட்டியெடுப்பதற்கு வனத்தை அளித்து பிறகு சத்தான தாதுக்கள் கிடைக்காத பொழுது திட்டத்தைப் பாதியில் கைவிட்ட வன அழிப்புகளும் இருக்கவே செய்கிறது. மக்கள் வாழிடங்கள் மட்டும் சுத்தமாகவும் சுகாதாரமாக இருக்க வேண்டும் அப்படியிருந்தால் போதும் காடும் நாடும் சுத்தமாகும் என்னும் கருத்தியலுடன் பேசும் சூழலியல்வாதிகளும் நம்மிடம் உள்ளார்கள். வனமும் கானகமும் வளம் பற்றியும் சூழலியல் குறித்தும் தொடர்ந்து இயங்குகிற அமைப்பாக ஓசை பணியாற்றுகிறது. உலகின் அழகிய மலைத்தொடர்களில் ஒன்றாக மேற்கு மலைத்தொடர்களும் உள்ளதாக செய்திப் புகைப் படம் காட்டுகிறது. ஒருவகையில் மிகந்த மகிழ்ச்சியாகவே உள்ளது. இயற்கை பருவ நிலைக்குத் தகுந்த மாதிரி அழுகுற மேன்மேலும் உயிரினங்கள் பல்கிப் பெருகிட இந்த மலைத்தொடர் உதவிவருகிறது.
  
 ஓசை அமைப்பின் இந்தப் பணியும் இந்தக் கண்காட்சி நடைபெற உதவிய தன்னார்வ நிறுவனங்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். அரசு தோட்டக்கலைப் பண்ணை, பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கிற இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், பேராசிரியர்கள், சூழல் அமைப்புகளுக்கு கொலுவைத்துக் கொண்டாடி வணங்கினாலும் போற்றினாலும் ஆத்திகனும் நாத்திகனும் கோவித்துக் கொள்ளப் போவதில்லை. 
           

வெள்ளி, 4 அக்டோபர், 2013


கோவை இலக்கியச் சந்திப்பு- ஞாயிறு-29.9.2013

     முப்பத்தி நான்காம் நிகழ்வின் பதிவுகள்

        அது போன்ற பரகாசூர ஆடுகளை நான் பார்த்ததே இல்லை. தமிழிலக்கியத்திலும் வாசித்த மாதிரி தெரியவில்லை. எருமைக் கிடாவை அது போலப் பார்த்திருக்கிறேன். ஆநிரை கவர்தல் குறித்த சிந்தைகளிலும் இல்லை. ஆட்டுக்கார அலமேலு படத்தில் வந்த பிறகு அந்த ஆடுகள் புகழ்பெறத்துவங்கியது. சாண்டோ சின்னப்பாத்தேவரும் ராம நாராயணனும் மேனகா காந்தியும் புண்ணியமிக்க காரியங்கள் செய்திருக்கிறார்கள். பார்த்திருக்கிறேன். பிறகு ஈரோடு அந்தியுர் பகுதியில் மலைவரையாடுகளைப் பார்த்திருக்கிறேன். நவீன இலக்கியத்தில் ஆடுகள் பற்றிய பதிவுகளிலும் அந்த ஆடுகளை நான் பார்த்ததில்லை.

       நிகழ்வு துவங்கும் போதிலிருந்து வரிசையாக அந்த மைதானத்தில் கட்டிவைக்கப்பட்டு தீவனமிடப்பட்டது. அவ்வப்பொழுது முப்பது நாற்பது ஆடுகள் கொண்டு வந்து மைதானத்தில் கட்டிவைத்து மேய வைத்தார்கள். ஒவ்வொரு ஆட்டையும அழைத்துப் போகிற இளைஞர்களும் ஆடுகளுக்குத்தகுந்த பயிற்சி வீரர்கள் போலிருக்கிறார்கள் ஆட்டின்   நீண்டு விரிந்து வளைந்த கொம்புகளை முகமும் உருண்டு திரண்ட கண்களுமாக விட்டால் அவை ஒன்றையொன்று போரிட ஏதுவாகவும் இருக்கிறது. வலிமையான துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத வண்ணம் அதன் தோல். இது போன்ற ராட்சத எருமைக் கொம்புகளை நான் காங்கயம் காளைகளில் கண்டிருக்கிறேன். வளைந்த கொம்புகளில் துளையிட்டு அதன்வழயாக இரும்பு வளையம் போட்டு அதில் இரு கொம்புகளிலும் கயிறுகள் கட்டி அதைவிடவும் கட்டுமஸ்தான இசுலாமிய இளைஞர்கள் பிடித்து அழைத்துப் போனார்கள் நிகழ்வு முடிந்த பிறகு பள்ளி அலுவலரைக் கேட்டோம். பக்ரீத் அன்று இந்த ஆடுகள் ஏலம் விடப்பட்டு எடுக்கப்பட்டு அனைவருக்கும் உணவு படைக்கப்படுவதற்காக வளர்க்கிறார்கள். என்றார் பிறகு இது போன்ற ஆடுகள் எப்படிக் கிடைக்கிறது என்றபோது சாதாரண வெள்ளாடுகளும் வரையாடுகளின் கலப்பு. வெள்ளாடுவகைகளைச்சாராது என்றார். அது முட்டினால் சீனப் பெருஞ்சுவரும்பெர்லின் சுவரும் சாய்ந்து விடும்போலிருந்தது. நாங்கள் முதலில் அந்த மைதானத்தின் ஒருபுறத்தில் வெட்டுவதற்காகத்தான் கொண்டு போகிறார்கள் என்று பேசிக்கொண்டோம். இளங்கோ கிருஷ்ணன் வெட்டுவதற் காகவே கொண்டு போகிறார்கள் என்றார். அதுபோன்றுதான் இருந்தது சூழல். ஆடுகள் குளிப்பாட்டி நுரை மணக்க வலம் போனது.  அனைவரும் ஆமோதித்தார்கள்.  அந்த மைதானத்தின் மறைவாக இடத்தைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. அந்த ஆடுகள் நிச்சயமாக முப்பதிலிருந்து நாற்பது கிலோ தேறும். அப்படிப்பட்ட ஆடுகளின் வதைக் கூடம் எப்படியிருக்கும். இருந்தால் நிகழ்வு முழுக்க ஆடுகள் மீதே இருந்தது. நிகழ்வுகள்  துவங்கும் வரையிலும் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் இளைஞர்கள் காலைப்பயிற்சி கைப்பந்து ஆட்டத்திலிருந்த வீர ர்களின் ஆரவாரக்கூச்சல்களை இலக்கியச் சந்திப்பிற்காக குறைத்துக் கொள்கிறார்கள் சில இளைஞர்கள் கிளம்புகிறார்கள். ஞாயிற்றுக் கிழமை விளையாட்டுமைதானத்தில் பல நூறு விளையாட்டுப்பயிற்சியாளர்களுடன் இலக்கிய நிகழ்வுகளையும் நடத்துகிற வாய்ப்பும் கோவை இலக்கியச் சந்திப்பு பெற்றிருக்கிறது.

          நிகழ்வு முடிந்து ஆடுகள் வெட்டப்படாமல் போனது மகிழ்ச்சியாகவே இருந்தது. கோவை மாநகரில் அது போன்ற ஆடுகள் வளர்க்கப்படுகிறது என்பது வாழ்நாள் சாதனை விருது நிகழ்வு. அதற்கான மைதானமும் இடமும் எங்கிருக்கிறது. அது சாப்பிடுகிற அளவு தாவரங்கள் செடிகொடிகள் அருகிப் போயிருக்கிறது. ஒரு வேளை அந்த ஆடுகள் மாட்டுக் கறி சாப்பிடுகிறதோ என்னவோ.  அதன் மிரட்சியுட்டும் கொம்புகளை நாம் பொக்லைன் இயந்திரத் திற்னான பற்களாக உபயோகப்படுத்தலாம். அதிலுள்ள வரிகள் யாவும் வெடித்து வளவளப்பு ஆன் பாறைக் குளம்புபோன்று உள்ளது. ஆடுகள் வீட்டு விலங்குகள் என்கிற வகைமை மாறிவிட்டது. கொல்லப்படும் விலங்குகள் என்கிற வகைமையைச் சார்ந்து விட்டது. கடல் மீன்கள் போல. இலங்கையால் கொல்லப்படும் மீனவர்கள்போல. அல்லது இலங்கைத் தமிழ் அரசியல் போலவே.

      இருபத்தியைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சியில் அமர்கிறது. இலங்கை உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியும் முதல்வர் வேட்பாளருமான சி.வி விக்னேஸ்வரன் கூறியதாவது. ஜனநாயகம் தழைக்க மக்கள் வாக்களித்துள்ளனர். அதை இலங்கை அரசு எங்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டும். தமிழர்களின் தன்னாட்சிக்காக மக்கள் வாக்களித்துள்ளனர் வடக்கு மாகாணத்தில் உள்ள ராணுவத்தை அகற்ற முக்கியத்துவம் அளிக்கப்படும் இலங்கையைப் பிரிக்காமல் கூட்டாட்சித் தத்துவத்தின் கீழ் தமிழர்களுக்கென தன்னாட்சி கோரப்படும் என்கிறார். தமிழகத்தில் உள்ள இலங்கை ஆதரவு எதிர்ப்பு கருத்தாளர்கள் உடனடியாக எதற்கும் இருக்கட்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம் அவர்கள் பாராளுமன்றத் தேர்தலைக்கவனிப்பார்களா இந்தத்தேர்தலைக் கவனிப்பார்களா மோடி வித்தையில் லயித்துப் போய்க்கிறங்குகிறார்கள் புரட்சி அடைமொழி கொண்டவர்கள். மஸ்தான் வித்தைக்கு ஆடலாமா பாடலாமா அள்ளையில் பம்மலாமா என்று யோசிக்கிறார்கள்.

ஆனாலும் வெளிப்படையாக சி.கே. வாசன் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று பேசியதை தமிழருவி மணியன் வரவேற்று இருக்கிறார். இலங்கையில் கலவரம் நடந்த பொழுது ஒரு வார்டு உறுப்பினர் கூட இலங்கைக்கு எதிராகப் பதவி விலகாத போது தனது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியை விட்டு விலகியவரான அவர் சொல்வதற்கு உரிமை உள்ளது. இது பற்றி நாராயணசாமியைக் கேட்டால் தெளிவான பதில் தர வாய்ப்பிருக்கிறது.

          திருவாளர் மத்தியஸ்தன் திருவாளர் நடுநிலையும் என் வீட்டின் தொலைக்காட்சிப்பெட்டியின் சேனலைத்திருப்பினார்கள். அவர்கள் எப்பொழுதும் என்னுடன் வாதாடுவதற்காக வந்துவிடுவார்கள். குறிப்பாக இலக்கியச் சந்திப்பின் நிகழ்வுகளுக்குச் செல்லும்போதுதான் ஞானோதயம் தோன்றும். தென்னிந்திய சினிமாவின் நூறாண்டு நிகழ்ச்சியைப் பார்த்தான். திராவிடம் தழைத் தோங்கியிருக்கிறது. அடடா என்னவொரு ஒற்றுமை. அண்ணா இப்பொழுது இருந்து தரிசித்திருக்கவேண்டும். திராவிட நாடு திராவிடருக்கே என்று மறுபடியும் துவக்கியிருப்பார். ரஜினியும் கமலும் பின்வரிசையிலும் பகவதியம்மா கோயில் புசாரிகள் முன்வரிசையிலும் அமர்ந்திருந்த காட்சி மெய்சிலிர்க்கிறது. சினிமா நூற்றாண்டையொட்டி மக்கள் முன்னிலையில் திரைப்படங்கள் திரையிடுகிற முயற்சியை தமுஎகசங்கம் ஏற்பாடு செய்வதையும் இந்தக் கோலாகலத்தையும் நினைத்துப் பார்த்தேன்.

         இது மோடி சீசன் என்பதால் அவர் செய்தியில்லாமல் கட்டுரை அமைந்தால் தேச துரோகச் செயல். டாம்பா (அமெரிக்கா)வில் வெளிநாடு வாழ் அமெரிக்க பாஜக வின் நண்பர்கள் அமைப்பு புளோரிடாவில் நடத்திய இரண்டு நாள் மாநாட்டில் நிறைவில் காணொளி மூலமாகப் பேசிய மோடி“ செயலற்ற மத்திய அரசைக் காப்பாற்றத் துடிக்கும் சுயநல கும்பல்கள் என்று. பேசியிருக்கிறார்கள். காங்கிரஸ் எப்படியும் சில நூறு எம்பிக்களைப் பெறப் போகிறது. அப்படியானால் வாக்களித்தவர்கள் எல்லாரும் சுயநலகும்பல்களா எனத்தெரியவில்லை. இந்த செய்திக்குப் பிறகு வந்த செய்தியை மத்தியஸ்தன் கவனிக்கச் சொன்னார். கடந்த பத்தாண்டுகளில் வகுப்புக் கலவரங்களில் இரண்டாயிரத்து ஐநூறு பேர் மரணமடைந்ததாகச் சொன்னார்கள்.

         ஜெர்மனியில் பிரதமர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு போன வாரம் நடந்தது. மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க ஆளும் கிறிஸ்டியன் டெமாக்டிக் யுனியன் கட்சியில் தலைவரும் தற்போதையை பிரதமருமான எஞ்சலா மெர்கலுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கருத்துகள் தெரிவிக்கிறது. ஐரோப்பாக் கண்டத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போதும் ஜெர்மனியில் அதன் பாதிப்பு இல்லாமல் மெர்கல் திறமையாக ஆட்சி நடத்தியது அந்நாட்டுமக்களிடையே பெரும் மதிப்பை பெற்றுத்தந்துள்ளது. மெலும் ஜெர்மனியை வலிமையான பொருளாதார நாடாக உருவாக்கியத மற்றும் வேலையின்மையை குறித்த நடவடிக்கைகளால் அவர் மூன்றாவது முறையாகப் பிரதமராக வாய்ப்பு அதிகரித்துள்ளது.

         அமெரிக்காவில் பட்ஜெட் நிறைவேற்றப்படாமல் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி. எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒபாமாவின் வேண்டுகோளை நிராகரித்துள்ளார்கள். அரசு அலுவலகங்கள் ஸ்தம்பிக்கிறது. அமெரிக்க வீதிகளைக் காட்டுகிறார்கள்.மக்கள் சோகத்துடன் அலைகிறார்கள். வெள்ளை மாளிகையில் பேசிய ஒபாமா நாட்டை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற எதிர்க்கட்சிகள் உதவ்வேண்டும் என்கிறார். ஒரு நிலையில் வீட்டோ பவரைப் பயண்படுத்தி அவர் நெருக்கடியிலிருந்து மீட்பார் என்கிறார் ஒருவர். ஒவ்வொரு முறையும் அமெரிக்கா நெருக்கடி என்று நாடகமாடி கிழக்காசிய நாடுகளின் நாணயமதிப்பை இறக்குவதற்கும் சுரண்டுவதற்கும் முயற்சிக்கிறது. இதுபற்றி ஒருவரும் எழுதுவதில்லை. அமெரிக்கா திவால் ஆனால் கவலைப்பட ஒரு உள்ளம் உள்ளது அது சிதம்பரம். அவருக்கு மன்மோகனும் ஒபாமாதான் ஒபாமாவும் மன்மோகன்தான்.

மத்தியஸ்தன் இது ஜெர்மனியில் என்றான். மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியை பொருத்திப் பார்க்க கூடாது என்றார். நான் இலக்கியச் சந்திப்புக்கு நேரமாச்சு என்று புறப்பட்டேன். என்னைக் கடுப்பேற்று வதறக்காகவே இனியொரு செய்தியை வாசித்துவிட்டுப்போ என்றான். ஊழல் வழக்கில் சீன கம்யுனிஸ்ட் தலைவர் போ ஜிலாஜிக்கு ஆயுள் தண்டனை எனும் செய்தி. ஊழல் தொகையைக் கேள்விப்பட்டபோது வெறும் இருபத்தி இரண்டு கோடிதான். சிறிய தொகைக்கு ஆயுள்தண்டனையா. சரிதான். ஊழல்கள் லட்சம் கோடிகளைத்தாண்டும் போது இந்த அளவில் சிறியதாகச் செய்ததற்கு தண்டனை சரிதான். கவுண்டமணி செந்திலைப்பார்த்துக் கேட்பார் “என்ன பண்ணிட்டு ஜெயிலுக்கு வந்த..“ செந்தில் “சில்லறைத் தட்டுபாடுண்ணே.. எட்டணா நாணயம் அடிச்சென்“ எந்த ஊர்ரா என்பார் “கோயமுத்தூர்என்றதும் அறைவார். “கோயமுத்தூர் பேரையெ கெடுத்துட்டு வந்திருக்கே.“என்பார். அந்த மாதிரி அவர் ஊழலின் மரியாதையை கெடுத்திருக்கிறார்.

          நெடுநாளாக இழுத்துக் கொண்டிருந்த நீலாம்புர்-அன்னூர்- மேட்டுப்பாளையம் புறவழிச்சாலைத்திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு விட்டது. பல்லாயிரக்கணக்கில் விவசாய நிலமும் நீர்வளமும் பாதிக்கப்படும் என்று அந்தப் பகுதி மக்கள் போராடியது வீண்போகவில்லை. கோவை எம்பி தோழர் பி.ஆர்.நடராஜன் எடுத்த முயற்சிகள் வெற்றிபெற்றிருக்கிறது அவருக்குப் பாராட்டுவிழா நடந்தது. அவர் பேசுகையில் மக்களின் ஒட்டுமொத்தப் போராட்டம் இந்தத்திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டிய நிலைக்குச் சென்றது என்றார். தனது பதவிக்காலத்தில் எளிமையாகவும் எளிதில் மக்கள் சந்திக்கும் எம்பியாக அவர் இருந்துள்ளார். அவர் மக்களின் போராட்ட களத்திற்குச் செல்கிற வாதாடுகிற மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். வரும் தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பு அமையுமா தெரியவில்லை. இந்த நிலம் பற்றிய கவிதை ஒன்று நான் எழுதியிருந்தேன். அவ்விடத்தில் மகாகவி பாரதியின் நிலம் இருப்பதாகவும் பாரதியிடம் நிலம் பறிபோகும் மக்கள் மன்றாடுவதாகவும் பொருள் கொண்ட கவிதை. அந்தக் கவிதையை பாரதியின் பிறந்த நாளில் வாசித்தோம். . இப்பொழுது நிலத்தை மீட்ட பாரதியின் முகமாக பி.ஆர் நடராஜன் இருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்..

            நிகழ்வுக்கு நேரமானது. வண்டியைக் கிளப்பினேன். நடுநிலை, மத்தியஸ்தன் இருவரையும் ரயில் நிலையத்திலும் ஆம்னி பஸ் ஸ்டெண்டிலும் இறக்கிவிட்டேன். நிகழ்வுக்கு வருகிறேன் என்றவர்களை இன்று உலக இருதய தினம் தயவு செய்து எங்கும் நீங்கள் சுற்றாமல் வீடு போங்கள்

இன்றைய நிகழ்விற்கு இனிப்பும் காபியும் அளிக்கலாம் பங்கேற்பாளர்களுக்கு என்று யோசித்தபோது பாதுஷா சரியான இனிப்பு. மற்ற இனிப்பு வகைபோன்ற தித்திப்பு இருக்காது. சரியான அளவிலும் இருக்கும். கைகளில் சர்க்கரைப் பாகு ஒட்டவும் செய்யாது. பாதுஷாக்களின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் நம்மை சாப்பிட்டார்கள். நாம் சமகாலத்தில் பாதுஷாவை சாப்பிடலாம் என்று வாங்கினீர்களா என்றார்கள் சில நண்பர்கள்

           பேராசிரியர் சி.மா.இரவிச்சந்திரன் பேசும் பொழுது விருது பெற்றவர்கள் நாம் வாழும் காலத்திலேயேப் பாராட்டப்படுவதும் விருதுகள் பெறுவதும் மகிழ்ச்சி தருகிறது. இயல் விருது பெற்ற ஞானி அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தனித்தன்மையுடன் இயங்குபவர். அவருடைய தமிழ் இதழியல் பணியென்பது மகத்தானது. அது போலவே மொழிபெயர்ப்பாளர் எம்.ஏ.சுசீலா அவர்கள். தாஸ்தாயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் அசடன் போன்ற நாவல்கள் மட்டுமல்ல ஏராளமான மொழிபெயப்புகளைச் செய்திட்டவர். அரிய பல நூல்களை கட்டுரைகளை மொழிபெயர்த்தவர். இளம் ஆய்வாளர் விருது பெற்ற சவகர் திணைவியல் கோட்பாடுகளை நன்கு ஆய்ந்து திணையியல் சார்ந்த ஆய்வுகள் தமிழுக்கு அவசியம் என்பதை கவனப்படுத் தியிருக்கிறார். இளம் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக அவருடைய பணி சிறப்பு பெற்றிருக்கிறது. நம்முடைய நாஞ்சில் நாடன் அவர்கள் பல விருதுகளைப் பெற்றுக்கொண்டு வருகிறார். அவருடைய எழுத்தில் கோபமும் சீற்றமும் இருக்கும். படைப்பிலக்கியத்தில் கடந்த நாற்பதாண்டுகளாக நாவல் சிறுகதை கட்டுரை கவிதை என்று பயணம் தொடர்கிறது. அவர் பெறும் இயல் விருது நமக்கும் பெருமையளிப்பதாகிறது. மற்றும் இங்கு வந்திருக்கிற பல ஆளுமைகள் அனைவரும் தமிழுக்கும் படைப்பிலக்கியத்திற்கும் பங்காற்றி வருபவர்கள் இந்த முயற்சி வரவேற்கப் படவேண்டியதாக உள்ளது. அதே நேரத்தில் வெறும் பாராட்டுவிழாவாக அல்லாமல் இன்றைய சூழலில் படைப்பாளர்கள் திறனாய்வாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்த கட்டுரைகள் வாசிக்க இருக்கிறவர்களுக்கும் என் வாழ்த்துகளையும் நன்றியும் தெரிவித்து விடைபெறுகிறேன் என்றார்.

           விருது பெற்ற ஆளுமைகள் பற்றிய அறிமுகத்தை முனைவர் கு.முத்துக்குமார் செய்தார். தமிழ்ப் பேராய நடுவர்கள் குழுவால் எழுதப்பட்டு விருதுப் பட்டயத்தில் பொதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் சாதனைக்குறிப்புகளை வாசித்தார். ஞானி.,சவகர், எம்.ஏ.சுசீலா. நாஞ்சில் நாடன் ஆளுமைகளின் வாழ்நாள் குறிப்புகளை வாசித்தார். நான்கு ஆளுமைகளும் செய்த தமிழ்ப்பணிகள், செய்து கொண்டிருக்கும் பணிகள். தமிழ்ச் சூழலுக்குத் தேவையான மாற்றங்கள் குறித்த அக்கறையையும் குறிப்பிட்டிருந்தது அவருடைய குறிப்புகள். பங்கேற்பாளர்களுக்கு பல புதிய செய்திகள் கிடைத்தது

          சவகர் ஏற்புரையாற்றும் பொழுது தன்னுடைய ஆய்வுக்கான பின்புலத்தை விவரித்தார். சங்க காலத்தின் வாழ்க்கை முறைகள் எல்லாம் திணையியல் கோட்பாடு சார்ந்து இயங்கி வந்த காலத்தைத் தொகுக்க முனைந்தேன். தற்காலத்தின் இலக்கியக் கோட்பாடுகளையும் நாம் திணையியல் கோட்பாடுகளாகத் தொகுப்பது அவசியம் என்று கருதினேன். பழந்தமிழ் இலக்கியங்கள் வாழ்ந்த காலத்தின் இயற்கை, உணவு, வாழ்வு, பாசனம், உள்ளிட்ட ஆதாரங்களைப் பின்புலமாக கொண்டு கோட்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளதை அறிவோம். அந்த முயற்சிக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியே.நான் மதித்து வணங்கும் எனது ஆசான் ஞானி அவர்களுடன் விருது பெற்றதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். வாழ்த்திய உங்களுக்கு என் நன்றிகள்..

             மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற எம்.ஏ.சுசீலா ஏற்புரையில் தனக்கு வாழ்நாள் சாதனைக்காக கௌவரவித்திருக்கிறார்கள்.மிகச்சிறந்த நூல்களை மொழிபெயர்ப்பிற்கு உதவியவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஞானி அவர்களுடன் விருது பெற்றது மகிழ்ச்சியை தருகிறது. உலகப் பெற்ற படைப்புகளை நம் தமிழிலும் மக்கள் வாசிக்க வேண்டுமென்று மொழியாக்கம் செய்கிறோம். வாசகர்களும் தொகையைப் பொருட்படுத்தாமல் வாங்கிப் பயண்பெறவேண்டும். மொழிபெயர்ப்பில் உள்ள பிரச்சனைகளைத் தன் வாசிப்பின் அனுபவம் மூலமாக கடந்து வருவதாகக் கூறினார். வெகு இயல்பாகவும் எளிமையாகவும் உரையாற்றியார்.

           தன் ஏற்புரையில் ஐயா ஞானி தன்னால் அதிக நேரம் பேச முடியாது. பாராட்டுவிழா வேண்டாம் என்று சொன்னேன் இருந்தாலும் என்னை அதிகமாகவே புகழ்ந்துவிட்டார்கள். நான் ஏற்புரைக்கு ஒரு கட்டுரை வாசிக்க நினைத்தேன். நேரத்தின் அருமை கருதி அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்டுரை அடுத்த சந்திப்பில் வாசித்துக் கொள்ளலாம். என்றார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியது நண்பர்களுக்கு நெகிழ்ச்சியைத் தருகிறது.

         இயல் விருது பெற்ற நாஞ்சில் நாடன் பேசும் போது விருதுகள் அறிவிக்கப்படும் பொழுது நிலவும் பரபரப்பு பற்றிய உண்மைகளை எடுத்துரைத்தார். அமைப்பு சார்ந்தவர்களுக்கு விருதுகள் செல்வதும் அமைப்பு சாராத எழுத்தாளர்களுக்கு அவமதிப்பும் தொடரவே செய்கிறது. இயல் விருது எனக்கும் ஞானி அவர்களுக்குத் தருவதை விடவும் கண்மணி குணசேகரன் போன்ற படைப்பாளர்களுக்குத் தந்தமைதான் மிக்க மகிழ்ச்சியைத்தருகிறது. தான் இப்பொழுது சிற்றிலக்கியங்கள் குறித்த நூல் ஒன்று வெளிவருகிறது. நாஞ்சில் நாட்டு உணவு குறித்து ஒரு நூல் வருகிறது. தான் இன்னும் பத்து ஆண்டுகளில் படைப்பிலக்கியத்தில் மேலும் சில நூல்கள் எழுதவேண்டி யிருக்கிறது. தமிழ் மொழியில் பண்பாட்டில் எழுதப்படவேண்டிய வை ஏராளமாக இருக்கிறது. ஒரு படைப்பிலக்கியவாதியாக என்னுடைய எழுத்து தொடரும். விருதுகள் ஒரு நம்பிக்கைதான். அதையே நாம் பிடித்துக் கொண்டு இருக்கமுடியாது. நாம் தொடர்ந்து பயணித்துக் கொண்டே செல்லவேண்டியதுதான். சாகித்ய அகாதமியின் யுவபுரஸ்கார் விருதுக்கு லஷ்மி சரவணக்குமார், சந்திரா ஆகியோரை நாங்கள் பரிந்துரை செய்தோம். ஆனால் வேறொருவருக்கு தந்தார்கள். நிராகரிக்கப்படுகிற எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி தரும் பதில் என்ன என்றார். கோபத்துடன்தான் நாம் இதோ என் படைப்பு என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்க வேண்டியிருக்கிறது என்றார்.

             சாகித்ய அகாடமி ஒருங்கிணைப்பாளர் கி.நாச்சிமுத்து பேசும் போது விருதுகளுக்கு மிகச்சிறந்த இளைஞர்களின் படைப்பும் பலவீனமான எழுத்துடன் மூத்த ஆளுமைகளின் படைப்பும் வருகிறது தேர்வில் மிகவும் சிக்கல் ஏற்படுகிறது. இருப்பினும் முடிந்தவரை நல்ல படைப்புகளுக்கு விருது தருவதற்கு முயற்சி செய்கிறோம். எம்.ஏ.சுசீலா அவர்கள் நல்ல சிறுகதையாளரும் கூட. படைப்பிலக்கியத்திலும் நன்கு செயல்படுபவர். அவருடைய நூல்கள் கல்லூரிப்பாடத்திட்டத்திலும் உள்ளது. நாஞ்சில் நாடன் காவிய நடையில் தனது படைப்புகளை எழுதுபவர். சவகர் போன்ற இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுவது நல்ல முன்னேற்றம். அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் நன்றிகளும்.

         பாவலர் இரணியன் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார். இன்று தமிழ் எழுத்துகள் ஐந்து எழுதக் கூடத் தெரியாத தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. அனைவரும் பள்ளி இறுதி வகுப்பு வரை தேர்வு என்கிற அடைப்படையில் தமிழ் மொழி சிதைவுக்குள்ளாகிறது என்றார். சு,வேணுகோபால் பேசும் போது ஒரு வகையில் நாஞ்சில் நாடன் அவர்களுடன் போட்டியாகத்தானும் கம்பன் பற்றிய நூல் ஒன்று எழுதுவேன் என்றார். கர்நாடகாவில் ஒரு இலக்கிய விழாவில் சிவராம கரந்த, கிரிஷ்கர்ணாட். யு.ஆர் அனந்த மூர்த்தி போன்றவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது. அதே தமிழகத்தில் விழா நடந்தால் இருக்கக்கூடியப் புகைப்படங்கள் அண்ணா. கலைஞர்.எம்.ஜி.ஆர். அம்மா ஆகியோரின் புகைப்படங்கள்தான் இருக்கும். இங்கு படைப்பாளிகளுக்கு மரியாதை கிடைப்பதில்லை என்றார் தன்னுடைய நூல்களும் நான்கு வெளிவருகிறது.

        எம்.கோபால கிருஷ்ணன் பேசுகையில் நாஞ்சில் நாடன் தன்னுரையில் தாம் பேச நினைத்தவற்றை அவர் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது அத்தனையும் உண்மை. அமைப்பு சாராத மகத்தான படைப்பாளர்களுக்கு ஏற்படும் நிராகரிப்பு தவிர்க்கப் படவேண்டும். அவர்களும் தங்கள் உன்னதமான படைப்புகளால் தமிழுக்கு வளம் சேர்த்து வருகிறார்கள். திறனாய்வுகளும் விமர்சனங்களும் சரியாக முன்வைக்கப்படுமானால் படைப்புகளில் மேலும் வளம் ஏற்படும் என்றார்

         கவிஞர் சக்திசெல்வி தன்னுடைய கட்டுரையில் சமகாலத்தில் படைப்பாளர்கள் திறனாய்வாளர்களின் பங்கு குறித்து விரிவாக எழுதியிருந்தார். வெகு சன எழுத்துகளில் கவரப்படுகிற வாசகர்களை இலக்கியப் படைப்புகளை வாசிக்கவைக்க முயற்சி செய்யவேண்டியிருக்கிறது. தமிழ்ச் சூழலில் வகை வகையான எழுத்துகள் தொடர்கிறது. துறைசாந்த எழுத்துகள் மலினமாக உருவாகியிருக்கிறது. நவீனப் படைப்புகளும் தொடர்ந்து சிறப்பாக வெளிவருகிறது. இன்றும் வெகுமக்கள் சாதாரணமான படைப்புகளை வாசிக்கிறவர்களாவே இருக்கிறார்கள். நவீன இலக்கியத்தில் மிக முக்கியமான படைப்பாளர்கள் சிறப்பாக கவனம் பெற்றுவருகிறார்கள். தனக்கு மிகவும் பாதித்த எழுத்தாளராக கண்மணி குணசேகரன் ஆவார். சமீபத்தில் அவரைச் சந்தித்து உரையாடியது மறக்கமுடியாத நிகழ்வு. அவருடைய எல்லா நூல்களையும் வாசித்து இருக்கிறேன். எளிமையான மனிதர். அவருடைய படைப்புகளிலும் அவரைப் போன்ற எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறவராக உள்ளார். திறனாய்வாளர்கள் நல்ல படைப்புகள் வெளியானதும் அவர்களுடைய எழுத்தை வாசித்து வரவேற்கவேண்டும் என்றார். ஊக்கப்படுத்த வும் வேண்டியிருக்கிறது. என்றார் அவருடைய மிகவிரிவான கட்டுரை சமகாலத்தின் இலக்கியப் படைப்புகள்,படைப்பாளர்கள் விமர்சன முறைகள் குறித்து விரிவாக எழுதப்பட்டிருந்தது. அனைவரின் பாராட்டுதலையும் பெற்றதாகவே இருந்தது கட்டுரை.

       அடுத்து கவிஞர் அகிலா கட்டுரை வாசித்தார். மிகவும் ஆழமாகவும் நுட்பமாகவும் எழுதப்பட்ட கட்டுரை. இந்த சந்திப்பில் முக்கியமானதாக அறியப்பட்ட கட்டுரை வடிவங்களாக சக்திசெல்வியும் அகிலா அவர்களும் எழுதி அனைவரையும் ஆச்சர்யத்திலாழ்த்தினார்கள். ஆய்வு மனோபாவம் அன்றி படைப்பு மனோபாவத்துடன் எழுதப்பட்ட கட்டுரைகளாக இருந்தது. ஞானி அக்கட்டுரைகளைப் பெற்று வெளியிட ஏற்பாடு செய்யுங்கள் என்றார். அகிலா கட்டுரையில் தமிழ்ப் படைப்புகளின் ஆரம்பம் முதல் இன்று வரை நிகழ்ந்த பரிணாம முயற்சிகளைக் கவனப்படுத்தியிருந்தார். சரித்திரப்படைப்புகள் முதல் விஞ்ஞானப் புனைகதைகள் சிறுவர் கதைகள். வெகுசன எழுத்துகள் மாத நாவல்கள் என்ற அளவு கொண்டிருக்கும் படைப்புலகம் நவீனத் தமிழ்ப் படைப்புகளில் மேன்மையுடன் திகழ்கிறது. கடல் சார்ந்த மக்கள் படைப்புகள் தலித் படைப்புகள், பெண்ணிய எழுத்துகள் சிறப்பாக வெளிப்படுகிறது. திறனாய்வுகளிலும் பல ஆளுமைகள் தங்கள் கட்டுரைகளின் வாயிலாக தமிழுக்கு அணி செய்கிறார்கள் என்றார். திறனாய்வுகள் சரியான முறையில் நடக்கும் பொழுது அடுத்தடுத்த படைப்புகளில் படைப்பாளர் தன் எழுத்தில் மாற்றம் செய்வார். அவருடைய கட்டுரையில் மார்க்சீயத் திறனாய்வு, கோட்பாடுகளின் திறனாய்வு, தத்துவ நோக்கிலான திறனாய்வுகளை அதன் அவசியம் குறித்து எழுதியிருந்தார். நீண்ட முக்கியமான கட்டுரையாக அமைந்தது. இறுதியாக உரையாற்றிய எச்.பீர் முகமது பேசுகையில் ஞானி அவர்களின் எழுத்தியக்கம் திறனாய்வு அவர் நடத்திய இதழ்கள் வெளியிட்ட படைப்புகள் குறித்துப் பேசினார்.

       மார்க்சிய திறனாய்வில் கா.சிவத்தம்பி, அ.மார்க்ஸ்,எஸ்.வி.ராஜதுரை, எஸ்.என்.நாகராசன் போன்றவருக்கும் இணையாக சில சமயங்களில் அவர்களுடைய சிந்தனைகளுக்கும் மேலாக எழுதியிருக்கிறார்.வானம்பாடிகளில் துவங்கிய அவருடைய இலக்கியப்பணி தொய்வின்றி வளர்ந்து வந்திருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டில் ஒரு கருத்தரங்கில் ஞானியைச் சந்தித்துப் பேசிய போது என் சிந்தனைகளைப் பாராட்டி என் வயதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டார். பிறகு நான் அவருடன் தொலைபேசியில் உரையாடுவதுண்டு. ஏற்கெனவே என்னுடைய  நூல்களா குர்திஷ் இலக்கியம் மற்றும் கீழைச் சிந்தனையாளர்கள் வரிசை குறித்து ஞானி அவர்கள் உரையாற்றியது மறக்க முடியாத ஒன்று. அவருக்கு அந்த நூல் மிகவும் பிடித்திருந்தது. நம் சமூகத்தில் அறிவுலகம் அதுவரையிலும் மேற்கத்திய சிந்தனையாளர்களையே ஐரோப்பிய இலக்கியங்களையே போற்றிக்கொண்டிருந்தது. இந்த நூல்தான் கீழைத்தேய சிந்தனையாளர்கள் அளித்த கொடையை நினைவுபடுத்தும் விதமாக இருந்தது. எட்வர் சயீத் போன்றவர்களின் பங்கு அளப்பரியது. தற்காலச் சூழலில் எழுத்தாளர்கள் கீழைத்தேய மரபையும் பின்பற்ற வேண்டும். மீண்டும் நாம அடிமைச் சமூக சிந்தனை மரபுகளைப் பின்பற்றுவது போன்ற எழுத்துகள் வருகிறது. இது பற்றிய உரையாடல்களை தற்பொழுது எழுதுகிற படைப்பாளர்களிடம் விவாதத்தை வைத்தபோது அவர்களிடம் பதிலில்லை. ஞானி அவர்கள் தத்துவம் சார்நத கோட்பாடுகளை உருவாக்கியிருக்கிறார். எஸ். என்.நாகராசன் போன்றவரகளுடன் இணைந்து பல முயற்சிகளைச் செய்திருக்கிறார். அவருடைய நிகழ்,பரிமாணம்,தமிழ்நேயம், புதிய தலைமுறை போன்ற இதழ்களின் வாயிலாக அவர் செய்த பணிகள் பதிப்புகள் மிகவும் முக்கியமானவை. நவீன சிந்தனை மரபு சாராமல் அதே சமயம் அடிமைச் சமூகமாகவே மாறிக் கொண்டிருக்கிற நம் சமூகத்திற்கு விரிவான திறனாய்வு முறைகளும் கோட்பாடுகளும் அவசியம். இப்பொழுது அது போன்ற விமர்சகர்களும் இல்லை. விமர்சனமும் செய்வதுமில்லை. அவையாவும் ஒரு மாதிரியாகவே சென்றுகொண்டிருக்கிறது. ஞானி தன்வாழ்நாளில் தான் வாசித்த படைப்புகள் குறித்த பதிவுகளையும் விமர்சனங்களையும் எழுதிவிடுகிறவராக இருந்திருக்கிறார். அவர் கொடுத்த உழைப்பு என்றென்றும் தமிழ்ச்சூழலில் போற்றப்படுவதாக உள்ளது.

         சுப்ரபாரதி மணியன் தனது கட்டுரை வாசித்தார். சூழலியல் சார்ந்த கட்டுரையாகவும் இருந்தது. மாறிவருகிற உலகத்தின் தேவைகளுக்கு ஏற்ப படைப்பாளர்களும் படைப்புகளும் இருக்க வேண்டும். அவை போதாமையுடன்தான் உள்ளது என்றார். எழுத வேண்டிய விவாதிக்க வேண்டிய விசயங்கள் படைப்புகள் நிறைய உள்ளது. திறனாய்வுகளும் அதுபோன்றே விரிவாக்கப்படவேண்டியிருக்கிறது. ஒவ்வொரு படைப்புகளும் சார்புத்தன்மையுடன் பார்க்கப்படுகிறவையாகவும் உள்ளது. தொடர்ச்சியான படைப்பியக்கம் இந்தச் சூழலை மாற்றுவதற்கு தூண்டுகோலாக அமையும். நாம் அதில் தொடர்ந்து பயணிக்கவேண்டிய கட்டாயத்திலும் உள்ளோம் என்றார்.

தமிழ்ப் பேராயம் சார்பில் ஐயா கோவை ஞானி அவர்களுக்கு “பரிதிமாற்கலைஞர் விருதுவழங்கப்பட்டிருக்கிறது என்றும் செய்தியை நண்பர் கவிஞர் பா.தியாகு அலைபேசியில் தெரிவித்தபோது மகிழ்வை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டோம். சில நிமிடங்களுக்குள்ளாக வாணியம் பாடியிலிருந்து எச்.பீர் முகமதும் தொடர்பில் வந்து பேசினார். செய்திகளும் வாழ்த்துகளுமாக ஐயா ஞானி அவர்களுக்கு குவியத்துவங்குகிறது. அவர் மிகப்பெரிய ஆலமரம். சொல்வதும் பேசுவதும் இயங்குவதுமாக சிந்தை முழுக்கவும் தமிழ்ச்சமூகம் குறித்தும் படைப்பியலக்கியம் திறனாய்வு இதழியல் குறித்தும் யோசித்துக் கொண்டேயிருப்பவர். எழுதுகிறவர். தினசரிவாழ்வின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனிப்பவர். அரசியல் பொருளாதாரம், புதிய புதிய படைப்புகள் இதழ்கள், தற்கால சமூகம் பற்றியும் தொடர்ந்து தனது கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைப்பவராகவும் இருக்கிறார்.

            அவருக்கு அளிக்கப்பட்ட விருதுக்காக அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதற்காக நானும் இளவேனிலும் சந்தித்த போது மிகவும் மகிழ்வாக இருந்தார். தனக்கு விருதுகள் பாராட்டுகள் எதிலும் நம்பிக்கையில்லாவிடினும் பரிதிமாற்கலைஞர் பெயரில் தனக்கு விருது வழங்கப்படுவதில் மகிழ்ச்சிதான் என்றார். பிற்பாடு தன் உடல் நலக்குறைவை பொருட்படுத்தாமல் வா.செ.குழந்தைசாமியின் நூல் வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டார். விழாவின் இறுதிவரையிருந்து நிகழ்வுகளைக் கவனித்தார். விழாவிற்கு வந்திருந்தவர்கள் ஞானியின் வருகையை அறிந்து அவரிடம் நலம் விசாரித்தபடியே இலக்கியம் வரலாறு சமூகம் குறித்த தனது மதிப்பீடுகளை முன்வைத்தார். அவருக்குப் பாராட்டுவிழாவை நண்பர்கள் ஏற்பாடு செய்ய இருக்கிறோம் என்ற பொழுது அவர் மறுத்தார். எனினும் நாங்களும் நண்பர்களும் கேட்டுக் கொண்ட பொழுது பாராட்டுவிழாவிற்குப் பதிலாக சிறப்புக் கருத்தரங்காக நடத்தலாம். தற்காலப் படைப்பிலக்கியம், திறனாய்வாளர்களின் பணிகள் குறித்த அரங்காக இருக்கட்டும் என்றார்.

         நண்பர்களிடமிருந்து கட்டுரைகள் பெற்று வாசித்து அதன் மீதாக விருது பெற்ற எங்கள் உரையும் இடம்பெறட்டும். புதிய ஆர்வமுள்ள பலருக்கும் குறிப்பாகக் கல்லூரிகளில் பயிலும் மாணவர் மாணவியர் பேராசிரியர் மட்டத்திலிருந்து கட்டுரைகள் பெறுங்கள் என்றார். நிகழ்வுகள் ஏற்பாடாகியது.

                நிகழ்விற்கான அழைப்பிதழ்களை  சிறப்பாக அச்சிட்டுத்தந்தார் மயுரா ரத்தினசாமி. பணிகள் தொய்வின்றி நடந்தது. சென்ற வாரம் இதே பள்ளியில் கவிஞர் புவியரசு அவர்களின் மொழிபெயர்ப்பு நூலான “கரமசோவ் சகோதரர்கள்“ குறித்த அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றிருந்த நேரம்.

                மறுவாரமான இன்றும் விழா. இப்படியாக கோவை மாநகரில் தொடர்ச்சியாகவும் இடைவிடாலும் இலக்கிய நிகழ்வுகள் நடநது கொண்டிருப்பது மகிழ்ச்சியாகவும் உத்வேகமாகவும்இருக்கிறது. இலக்கிய அமைப்புகளையும் இலக்கிய நிகழ்ச்சிகளையும் பெருமளவிற்கு முடுக்கி விட்ட காரியத்தைச் செய்ததில் இலக்கியச் சந்திப்பு நிகழ்வுகளுக்குப் பெரும் பங்கு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழ் நிலத்தின் பல்வேறு திசைகளிலிருந்து பெறப்படும் செய்திகளிலிருந்து ஒரு மாதம் கூட இடைவெளி விடாமல் சற்றும் தரம் குறையாமல் மென்மேலும் இலக்கிய நிகழ்வுகளுக்கு பங்கேற்பாளர்களை அதிகப்படுத்தியும் நூல்கள் அறிமுகப்படுத்தியதிலும் கோவை இலக்கியச் சந்திப்பு முந்தைய எல்லாப்பதிவுகளையும் விடவும் நேர்த்தியாக நடத்தி வந்திருக்கிறது. இந்தச் சந்திப்புகளின் தாக்கமாகவே பல் வேறு நகர்களில் பல்வேறு கல்லூரிகளில் நிகழ்வுகளை இலக்கிய செயல்பாட்டாளர்கள் முடுக்கிவிட்டிருக்கிறார்கள் என்றும் சொல்லவேண்டும். இலக்கிய வளர்ச்சிக்குத்தேவையாகவும் இருக்கிறது. குழுசார்பு, தன் முனைப்பு, பதிப்பகக்குழு விரோதம் புறக்கணிப்பு. இது போன்ற மறைமுக மிரட்டல்களைத் தாண்டி சுயேட்சையான இலக்கியச் சந்திப்புகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோவை மாநகரில் நடைபெறுகிற மிக பிரமாண்டமான ஏராளமான பொருட்செலவில் நடத்தப்படுகிற கலை இலக்கிய நிகழ்வுகளின் தரத்திற்கும் மேலாகவே நிகழ்வுகளைத் தந்து நடத்தித் தந்து கொண்டிருக்கிறார்கள் பங்கேற்பவர்களும் பங்கேற்பாளர்களும்.

               ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்கிற படைப்பாளர்கள் எழுத்தாளர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் பாரம்பரியம் மிக்க இலக்கிய அமைப்புகள் தங்களால் இயன்ற உதவிகளையும் ஆதரவுகளையும் நல்கியதால் ஏற்பட்ட மாறுதல் என்று சொல்வதில் தயக்கம் இல்லை. ஊர் கூடித் தேர் இழுத்தல் போன்றதுதான். சமூக வளர்ச்சிக்கும் தேச வளர்ச்சிக்கும் சாதி மத இனவேறுபாடுகளின்றி உழைப்பது போன்றுதான் தமிழ்ப் பண்பாடும் கலாச்சாரமும் படைப்பிலக்கியம் நவீன பின் நவீனப் படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு எந்தப் பிரதிபலனுமின்றி பாடுபடுகிறப் படைப்பாளர்களை கோவை கொண்டிருக்கிறது. சக படைப்பாளர்களையும் வரவேற்கிறது என்றும் சொல்லவேண்டும்.

           நிகழ்வில் பங்கு கொண்டு சிறப்பித்தவர்கள் ஆட்டணத்தி, மருத்துவர் கோவி, மு.திருக்குமரன், கிருஷ்ணமூர்த்தி,ஜே.மஞ்சுளாதேவி, சி.ஆர். இரவிந்திரன்,க.வை.பழனிச்சாமி, நாசிர் அலி,வேனில் கிருஷ்ணமூர்த்தி, பொ.செந்திலரசு,கனகராஜன். இரா.புபாலன், க.சீ சௌந்தரராஜன், ஜெ.வீர நாதன், சு.இராஜகோபாலன்,பழமன் சு.பழனிச்சாமி, பொன் சந்திரன், ச.க..சோம சுந்தரம். சோ.இரவீந்திரன். கே.பெருமாள், பா.சிவக்குமார்,செந்தமிழ்த் தேனீ, வே.சுகுமாரன், நறுமுகை தேவி,இளங்கோ கிருஷ்ணன், என்.கார்த்திகேயன், பொ. பிரகாஷ் இரா நளினி, அன்புசிவா கா. ஜெயராமன். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். தலைமையேற்று நடத்திய பாவலர் இரணியன் நனறி கூறினார். நிகழ்விற்கான ஒருங்கிணப்பை முனைவர் கு.முத்துக்குமார் பொன் இளவேனில் சோ.இரவீந்திரன். அக்னி சிவகுமார், மேற்கொண்டனர்.