புதன், 25 டிசம்பர், 2013

விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கு விழா- கோவை பதிவுகள்...


ஈஸ்ட்மென் கலர் விழா

விஷ்ணுபுரம் விருது வழங்கு விழா- 22.12.2013-கோவை-2013

இளஞ்சேரல்

 

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது வழங்கு விழா சிறப்பாக நடைபெற்றது. இலக்கியப் படைப்பாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பும் மக்கள் கூடி நிரம்பிய அரங்கு. வாசகர்கள், படைப்பாளர்கள், பல்வேறு திசைகளிலிருந்து வந்து கலந்து கொண்டிருக்கிற நண்பர்கள் என்பதாக நிகழ்வு முக்கியமானதாக அமைந்தது.

 முதலில் டிசம்பர் மாதம் விழா நடக்குமே எங்கு நடைபெறுகிறது எனும் தகவல் எனக்கு வந்து சேரவில்லை. அல்லது நானும் விசாரிக்க முற்படவுமில்லை. எப்படியும் தகவல் வரும். முதலில் இலக்கியச் சந்திப்பின் முப்பத்தி ஏழாம் நிகழ்வு குறித்து விபரங்கள் கேட்ட போது தொலைபேசியில் பேசிய எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் அவர்கள்தான் தகவல் சொன்னார். ஒரு வகையில் விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். விழாவை மூன்றாவது ஞாயிறுக்கு மாற்றி வைத்தமைக்காக.

இலக்கியச் சந்திப்பின் இறுதி ஞாயிறு விழாவில் மும்பையிலிருந்து புதியமாதவி கலந்து கொள்கிறார். நிகழ்வு முடிவில் அமைப்பாளர் செல்வேந்திரன் இந்த மாதம் உங்கள் நிகழ்வில் யார் கலந்து கொள்கிறார்கள் என கேட்டபோது ஆச்சர்யம் கொண்டேன். புதிய மாதவியின் பத்து நூல்கள் குறித்து ஐயா கோவை ஞானி, சுப்ரபாரதி மணியன், முனைவர் சுசீலா, சக்தி செல்வி, பொன் இளவேனில், யாழி, மயுரா ரத்தினசாமி ஆகியோர் பேச உள்ளார்கள் என்றேன்..

பிற்பாடு பொன் இளவேனில் ஒரு நாள் முன்பு நிகழ்வின் தகவலை அலைபேசியல் கூப்பிட்டுச் சொன்னார். பிறகு முகநூல்களைத்திறந்து விரிவாக அறிந்து கொள்கிறேன். லட்சுமி மில்ஸ் அருகில் இருந்த அறிவிப்புப் பதாகையைக் கவனித்திருக்கிறார் விழாவின் நிரலை அறிந்து கொள்வதின் மூலமாக மற்ற வேலைகளுக்கு நேரம் ஒதுக்க சௌகரியமாக இருக்கும்.

                காலையில் நண்பர் கோபால்ராஜ் அவரிடமிருந்து அழைப்பு.  அவருடைய அழைப்புகள் எல்லாமே மிக முக்கியமானவை. எந்த  அழைப்பையும் நிராகரிக்க முடியாத செய்திகள் நிரம்பியவை. துயரமான செய்தியைச் சொன்னார். முனைவர். வே.பரமேசுவரன் காலமானார் என்பதுதான். நம்புவதற்கும் இயல்பிற்கு வருவதற்கும் நெடுநேரம் ஆகிறது. வள்ளலார் பாடல்களில் கொள்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். எனது முதல் கவிதை நூலான கொட்டம் தொகுப்பிற்கு விமர்சன உரையாற்றியவர். என் கவிதைகள் குறித்துப் பேசிய ஒருசிலரில் அவரும் ஒருவர். ஆர்.வி.எஸ் கலை அறிவியல் கல்லூரில் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் தற்சயம் பணியாற்றி வந்தவர். அவருடைய சகோதரர்கள் பள்ளித்தோழர்கள். செந்தில்குமார் சங்கர்கணேஷ் மற்றும் இரண்டு சகோதர்களும் மிக நெருக்கமான நண்பர்களாகவும் இருந்தார்கள். கலை இலக்கியம் விளையாட்டுக்களில் அவர்களின் குடும்பம் மிகுந்த ஈடுபாடுகொண்டவர்கள். அவர்களுடைய குடும்பம் திராவிட இயக்க கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்கள். அவருடைய இழப்பு என்னால் சுதாரித்துக் கொள்ள முடியவில்லை. அவர் குட்டிக்கும் (இளவேனில்) தகவல் சொல்லுங்கள் என்றார். அவரிடம் சொன்னபோது நம்பவில்லை. தெளிவாக விசாரித்துக் கொண்டார். நாம் போய்த்தான் ஆகவேண்டும் என்றார். புறப்படுவதற்கான ஏற்பாடுகள் துவங்கியது. மார்கழி மாத மரணம் மோட்சம் என்பது போலவும் அவர்கள் நேராக சொர்க்கம் செல்வார்கள் என்பதும் உண்மையாக இருக்கட்டும் என பிரார்த்தனை செய்து கொண்டேன். வெயில் வீச்சிலும் பனி படர்ந்திருக்கிறது. குருவிகளின் சத்தம் இல்லை. நாய்கள் குரைக்க வில்லை. அதிகாலை நான்கு மணிக்குத் துவங்கிவிடுகிற மைக் செட் சப்தங்களுக்கு எழுந்து விடுகிற உயிரினங்கள் உறங்கும் நேரம் இது தான் என்னவோ. தரையிலும் ஆகாசத்திலும் விறுவிறுப்பு கூடிக் கொண்டே வருகிறது. அவர் குறித்த நினைவுகள் தவழ்கிறது. அவர் கடைபிடிக்கும் மென்மையான உணர்வுகள் அலாதியானவை. களைப்பும் சோர்வும் நீங்க உணவை முடித்து விட்டு தோழர் ராஜேந்திரன் அலுவலகத்திற்குச் சென்றோம். அங்கு கோபால்ராஜ் இருந்தார். அவருடன் மற்ற நண்பர்களுக்கான செய்திகள் பரிமாறிவிட்டுக் கிளம்பிப் போனோம். சூலூருக்குச் சென்றோம். வழியெங்கும அவர் நினைவுகளைப் பேசியபடியே போகிறோம்.

       கண்ணாடிப் பேழையில் நீண்ட துயிலிலிருந்த அவருக்கு அஞ்சலி செலுத்தினோம். அவருடைய வீட்டின் முகப்புக் கதவின் தூணில் பவிநுதல் இல்லம் என்று பொறிக்கப்பட்டிருக் கிறது. அதுவரையிலும் சாதாரணமாக இருந்த நானும் இளவேனிலும் கலங்கிப் போனோம். அவருடைய இளவல்கள் நான்கு பேரும் ஆற்றொணாத் துயரில் இருக்கிறார்கள். அங்கு கூடிய உறவினர்கள் அவர் காலமான அதிர்ச்சியை நம்பமுடியாமல் பேசிக்கொள்கிறார்கள். ஐம்பது வயதுக்கும் குறைவாகவே வாழ்நாளை முடித்துக் கொள்வது என்பது அனைவருக்கும் வேதனை தரும்தானே..

          அவருடனான நினைவுகளை நான் தோழர் சா.சிதம்பரம் அவர்களுக்குத் தகவல் சொல்லிவிட்டுப் பேசினோம். .இந்த வலி தீர நெடுநாள் ஆகும். மனசுக்கும் உடலுக்கும் நிம்மதி தேவைப்பட்டது. அது விஷ்ணுபுரம் நிகழ்வின் மூலமாகத் தீரலாம். பழகிய முகங்கள் மறந்தே விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படும் முகங்களைத்தான் மறக்கவே முடியாது. மறக்க முடியாத முகங்களை நம் முகங்களை அவர்களுக்குக் காட்டுவதின் மூலமாக ஒரு பழிவாங்கலைச் செய்ய முடிகிற சிற்றின்பம் இலக்கியத்தில் சுவராசியம் தான்.

 இனியொரு புறம் அகமனம் சிற்றின்பத்திலும் ஈடுபட எத்தனிக்கிறது. மதியம் ஒரு மணிக்குத்துவங்கிய கிரிக்கெட் போட்டியில் ஆறுதலாகியது. மனசெல்லாம் கிரிக்கெட் டிராவாகுமா வெற்றிபெறுமா என்பதில் யோசிக்கிறது. துயர வீடுகளில் அருந்தும் மதுவின் வாடை என் உடலெங்கும் வீசத் துவங்கியது. . பாட் சிம்காக்ஸ் தென்னாப்ரிக்கா வெல்லும் என்றும் அருண்லால் இந்தியா வெல்லும் என்றும் ஆருடன் சொன்னார்கள். டுபிளசிஸ் டிவில்லியர்ஸ் இருவரும் செமத்தியாக நாங்கூரம் இட்டிருந்தார்கள். இஷாந்த் சர்மா, ஜாகீர் கான், முகமது சமி மூவரும் மாங்கு மாங்கு என்று தெற்கும் வடக்குமாக பந்துவீசினாலும் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது.

இளவேனில் வந்து விட விழாவிற்குக் கிளம்ப ஆயத்தமானோம். ஓயாத அலைச்சலாக இருந்தமையால் இன்று வேறொரு விழாவான களம் இலக்கியச் சந்திப்பில் நடைபெற்ற ஜெயமோகன் படைப்புலகம் நிகழ்வுக்குப் போகமுடியவில்லை. இப்படியாக ஒரு நாளில் பல விழாக்கள் துக்க விழா என்று வந்துவிட்டால் நம்மைப் போன்ற சம்சாரிகள் பாடு அதோ பாடுதான்.

      விழா நடைபெறும் அரங்கிற்குக் காலையிலிருந்தே லாரிகளில் மூட்டை மூட்டையாக அறம், விடுதலையுணர்வு, நுட்பம், துல்லியம், உள்ளுணர்வு,ஸ்தூலம் போன்ற வஸ்துகள் வந்திறங்கிக் கொண்டிருந்ததாக அறிந்தோம்.. விழாவிற்கு வருபவர்களுக்கு அளிப்பதற்காக. மேலும் கிருஸ்துமஸ் தாத்தா உடைகள், விக் தாடிகள், சிங்கம்11 மீசைதாடி கெட்டப் முகமூடிகள் வாயிலில் நிரம்பக் கொண்டிருக்கிறது. நமது முகங்கள் நகரத்திற்கான முகங்களாக மாறுகிறது. அல்லது மாற்றிக் கொள்கிறோம். செஞ்சிலுவை மன்றத்தைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் சிக்னலில் நின்ற வாகனங்களுக்கு முன்விளக்கு நடுமையத்தில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள். நாங்கள் வந்த இளவேனில் வண்டிக்கும் ஒட்டினார்கள். சற்று நேரத்தில் அந்த மாணவர்கள் முகங்கள் மாறுகிறது. அந்த ஐந்து வழிச்சாலை விழாவின் அரங்கமாக மாறுகிறது. நிரம்பிய அரங்க இருக்கைகளில் உட்கார்ந்திருக்கிறவர்கள் முகங்களில் அந்த கருப்பு ஸ்டிக்கர் மினுக்குகிறது. ஒரு முறை கண் கண்ணாடியைச் சுத்தம் செய்து அணிந்து கொள்கிறேன். மீண்டும் ஒரு முறை ஸ்பிரைட் பாட்டிலில் கரைந்து வைத்திருந்த விஎஸ்ஓபி பீரியமியத்தின் மிடருகளை விழுங்கிக் கொள்ள எல்லாம் சரியானது. இளவேனில் கொஞ்சம் தண்ணி கொடு என்றார் நான் வேறொரு பாட்டிலிலிருந்த வெண் தண்ணீரை அவருக்கு அளித்தேன். அவர் என்னமோ உன்கிட்டருந்து வாசம் வருது என்றார் நானோ ஆரம்பிச்சிட்டியா என்றபடி என் தோள்பையைக் காட்டினேன். அவரும் விஷ்ணுபுரத்தின்  மற்ற விழாக்களுக்கு கொண்டு வந்த அதே பேக் கோட வந்திட்டிருக்கியே எப்படியா என்றார். நான் வேணும்னா ஒரு பேக் வாங்கிட்டு வந்தர்றேன் மாமாசம் கொஞ்சம் கொஞ்சமா பணம் கொடு என்றார். யோவ் இந்த பேக் ராசியான பேக்யா. இதவாங்கினதுல இருந்துதான்யா ஜெயமோகன் கோயமுத்தூர் வந்திட்டேயிருக்கார்..அதனால நான் மாத்தமாட்டேன் என்றேன்.

           மசங்க மாலையின் நகரத்தின் யுவதிகள் வடக்கிலிருக்கும பெருமாள் கோயிலுக்கு மார்கழி சேவித்தலுக்குப் போகிறார்கள். அரங்கம் மார்கழியின் மாலைக் குளிருக்கான ஏக்கத்தில் மிதக்கிறது. உடல் கொஞ்சம் சூடானால் தேவலை. பிஸ்கட் வண்ணத்திலிருந்த தரை முழுக்க இலக்கியம் பேசிகளின் தாரைகளாக பதிகிறது. அரங்க வாயிலில் இருந்த காவலர் தெய்வீக சத் சங்கத்தைச் சேர்ந்தவர் போலிருக்கிறார். பாரம்பரிய உணவுத் திருவிழா குறித்த நோட்டிஸ்களை விநியோகிக்கிறார்.

போலீஸ் ஜீப்பும் காவலர்களும் இலக்கிய உரையாடல்கள் நிகழ்த்துகிறார்கள். நான் முதலில் சிபிராஜ் நடிக்கும் சூட்டிங் இங்கும் நடக்கிறதோ என்று யோசித்தேன். அவர் காவலர் கெட் அப்பில் கோவையில் பல இடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அந்தப்படத்தின் பெயர் (மன்னிக்கவும்) உண்மையிலேயே  நாய்கள் ஜாக்கிரதை. அந்தப் படசூட்டிங் ஒரு பகுதியோ என நினைத்து அரங்கம் மாறிவந்து விட்டோமா அல்லது கடைசிநேரத்தில் வேறு அரங்கிற்கு மாற்றியிருக்கிறார்களோ என நினைத்தபோது வாயிலில் இலக்கிய நண்பர்களைக் கண்டபிறகு யதார்த்தநிலைக்கு வருகிறேன். மேற்குத் தொடர்ச்சி மலையின் காற்றும் கூதக்காற்றும் என் ஆஸ்த்துமாவிற்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறது. நிழல் வெளிச்சம் தீண்டிக் கொண்டிருந்த டேபிளில் தேநீர் முடிந்திருக்கிறது. காலிகோப்பைகள் சிதறாமல் இருக்க பணிப்பெண்களும் இலக்கியம் பேசிக் கொண்டிருந்தார்கள். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுவது போல நானி பல்கிவாலா ஆடிட்டோரியத்தின் சீமாரும் இலக்கியம் பேசும். சீமார் (துடைப்பம்) தலைநகரில் ஆட்சியைப் பிடிக்கவில்லையா.

இளவேனில் வண்டியை ஒழுங்காக நிறுத்தினார். நோட்டிஸ் விநியோகம் இளவேனில் செய்ய முற்பட்டபோது அவர் மறந்து போய் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திருப்பது அறிய முடிந்தது. என் நூலுக்கு அவர் அச்சிட்டிருந்த நோட்டீஸ் அது. பார்த்தால் திராவிடர் கழகம் விநாயகர் சதுர்த்தியை எதிர்த்து ஒரு காலத்தில் அச்சிட்டுக் கொடுத்த நோட்டிஸ் போலிருக்கும். அதுபோலவே நானும் இலக்கியச் சந்திப்பின் 37 வது நிகழ்வின் அழைப்பிதழ்கள் கொண்டு வர மறந்தேன்.

         விழா துவங்குவதற்கு நேரம் ஆகியிருந்தாலும் இயக்குநர் பாலாவிற்காக காத்திருப்பது போலப் பட்டது. புத்தக விற்பனைப் பகுதிகளில் ஆர்வலர்கள் உள்பட பலர் நூல்களை ஆய்ந்து கொண்டிருக்கிறார்கள். விலைகள் ஒன்றும் அதிகமில்லை. இன்றைய விலைவாசிக்கு கட்டுபடியாகிற விலைதான். சமீபத்தில் நான் ஒரு பைபிள் வாங்க விசாரித்தேன். எல்லாம் முன்னூறு ருபாய்க்கும் மேல். இந்தியா கிருத்துவிற்குக் கொட்டிக் கொடுத்ததற்கு இலவசமாகவே தரவேண்டும். நம்மால் அந்த இரும்புக் கோட்டைகளுக்குள் நுழைந்து பார்த்தாலும் நாமும் ஒரு மெழுகுவர்த்தியாகிவிடுகிறோம்.

கோவையில் ஒரு மேசன் ஒரு எலக்ட்ரீசன் எட்டுநூறு ருபாய் சம்பளம் வாங்குகிறார்கள். தள்ளுவண்டிக்காரன் பத்தாயிரம் வரை பாக்கிறான். நம்மாட்கள் பத்து ருபாய்க்கு சமையல் புத்தகம் கூட வாங்க மாட்டான். ஆயிரம் ரூபாய் ஐநூறு ருபாய்க்கு முழு அரைபாட்டில்கள் வாங்கி சாப்பிடுகிறான். இலவசமாக கிடைக்கிற நூல்களைக் கூட வாசிக்காமல் மரப்பல்லிகளைப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருப்பார்கள். இன்சுரன்ஸ் பாலிசி ஏஜென்ட்களைக் கண்டால் தலைதெறிக்க ஓடுவது போலவே புத்தகம் வெளியிட்டவனைக் கண்டால் பாய்ந்து ஓடுவதைக் கவனிக்க முடிகிறது. இருப்பினும் வாசிக்கிறவன் எழுதுகிறவன் வெளியிடுகிறவன் பதிப்பிக்கிறவன் உள்பட எல்லாருமே உ.வே.சா மனநிலைக்கு வந்துவிட்டது நன்றுதான். வெந்ததைத் தின்று விதிவந்தால் சாகிறவர்கள் போலவே எழுதியதைப்பதிப்பித்துத் தொலையலாம் என்று நினைப்பதும் ஒன்றுதான். இழப்பதற்கு எல்லாம் இருக்கிறது. எப்படியோ காலம் ஏதாவது ஒன்றைத்தந்து கொண்டேயிருக்கிறது. நாளொன்று போனால் வயதொன்று போகிறது. புத்தகம் வாங்கியபடியே கீழிறங்கினோம்.

         டேபிளில் தேநீர் இல்லையென அறிந்த பிறகு அருகிலிருக்கிற அடுமனைக்குப் போனோம். ந.முத்து பாலா படங்களில் சித்தரிக்கப்படுகிற கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களை ஞாபகப்படுத்தினார். இளவேனிலும் நானும் மற்ற படங்களின் காட்சிகளைச் சொன்னோம். நெருக்கடி மிகுந்த ஐந்து வழிச்சாலை. பச்சை அம்புகளை மாறிமாறிப்பார்த்துக் கொண்டு கடந்தோம். ந.முத்து தேநீர் கட்டாயமாக வேண்டாம் நான் இப்போது அருந்தினேன் என்றார். திரும்பவும் என் கதைகள் குறித்து பேசினார். இரண்டு கதைகள்தான் படித்தேன். வேகமான வாசிப்புக்கு உகந்த கதைகளாக இல்லை. நிதானமாக வாசிக்க வேண்டும் என்றார். அருகிலிருந்த டேபிளில் புதிதாக சரிசெய்த யுவதியுடன் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் காமிரா பாவனைகள் காட்டிக் கொண்டிருந்தார். அந்த மங்கை வெட்கத்தை அடக்க முடியாமல் மலங்கியதற்கு காரணம் இருக்கிறது. எதிரில் பாலா படத்து பெண்  காண்ஸ்டபிள்கள் போல இருவர் அமர்ந்திருந்த காரணம்தான். பெண் காவலர்களை ஆண்கள் யாரும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அச்சம் காரணமாக, தேநீரகம் வெண் விளக்கு பொலிந்து திருநீர் கொட்டியது போலிருக்கிறது. டீ போடுகிற மாஸ்டர் ஐயப்பசாமிகளுக்காக மீண்டுமொருமுறை டபராக்களை அலம்புகிறார். இளவேனில் என்னை முறைத்துப் பார்க்க தேநீரை விழுங்கினேன். பெண் காவலர்கள் எழுந்து கொண்டபோது அநேகமாக பாலா அரங்கத்திற்கு வந்திருப்பார் என நினைத்துக் கொண்டேன். அதே நேரம் முத்துவிற்கு அழைப்பு வருகிறது. நானும் அந்த புதிய காதலர்களும் எழுந்து கொண்டோம். வாயிலை அடைத்துக் கொண்டிருந்த ஐயப்பசாமி கோல்ட்பில்ட்ர் பத்தவைத்தார். இளவேனில் நானும் தம் அடிக்கிறேன் என்றார். கடைவாசலில் ஒரு வாசகர் மீன்கள்தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்தார். அவரும் ஐயப்பனுக்கு மாலை போட்டிருந்தார்.

         ந.முத்துவின் அவசரம் புரிந்து வேகமாக இளவேனில் புகையை இந்திரலோத்துப் புகை அளவு ஊதினார். அரங்கிலிருந்த மற்ற இலக்கிய ஆர்வலர்கள் புறப்படுகிறார்கள். நாங்கள் வேகமாக நடந்து வந்தபோது வரவேற்புரை முடியும் தருவாய். அரங்கசாமி பேசியிருக்கலாம். மேடை போகஸ் லைட்டில் மின்னியது. இரவு வந்திருக்கிறது. நிரம்பிய நாற்காலிகள் கருநீலம். வெல்வெட் குஷனில் நேர்த்தியான வரிசைகளை ஒழுங்காக இலக்கிய ஆர்வலர்கள் பயண்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். செயற்கை செண்ட், சூடிய மலர்களின் மணம். அரங்கில் தெளிக்கப்பட்டிருக்கிற ரும் ரெப்ரெஷ்னர் மணம் என்பதாக ரம்மியம் வீசுகிறது. நானி பல்கிவாலா அரங்கம் தன் இயல்பில் தயாராகிவிட்டது. ஞாயிறு குறிப்பாக இந்த விழா சனி மாலையாக இருந்திருந்தால் சத்தியமாக உட்காரவே இடம் கிடைத்திருக்காது. எந்தக் கூட்டமாக இருந்தாலும் சரி. அரங்கம் நிரம்பிவிடும்.

ஆனால் இலக்கியக் கூட்டம் என்றால் போதும் வியாக்யானமாக ரசிகர்கள் தவிர்த்திடுவார்கள். ஏனென்றால் இலக்கியம் வாழ்க்கையைப் பற்றி அளவளாவுகிற துறை. அறிவுரை சார்ந்த உரையாடல்களே இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அவர்களுக்கு.

அந்த அளவு நம் சமூகத்திற்கு இலக்கிய விழிப்புணர்வு இருக்கிறது. எப்படியென்றால் எந்தப் படைப்புகளை, படைப்பாளிகளை, எந்த முகத்தை, எந்த சாதியை, எந்த நிறத்தை, அறிவார்த்த நிலையைத் தவிர்க்க சில இலக்கிய முகாம்கள் தவிர்க்கும் அல்லவா அதுபோலவே பொது அறிவுக் கூத்தாடிகளும் தவிர்த்துவிடுவார்கள். அப்படித்தவிர்க்கிற அறிவை நமது பொதுமைச் சமூகம் வளர்த்திருக்கிறது. அப்படி வளர்வதற்கு நிதியுதவிகள் செய்கிறது. இந்த நிலையை மாற்ற விடாமல் எழுதிக்கொண்டிருக்கிற ஒரே ஜீவன் நான்தான். சுபமங்களா இதழ் சில அரிய முயற்சிகளைச் செய்தது. சுந்தர ராமசாமி உடல் நிலை மோசமாகாத வரை சிறப்பாக நடந்தது.         நானும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிகத்தீவிரமாக எழுதிவருகிறேன். அதற்கு செவிசாய்த்து இயங்கியவர்கள் இருவர்கள் தான் ஒருவர் மனுஷ்ய புத்திரன் இனியொருவர் ஜெயமோகன். இருவரிடமும் பேசியும் எழுதியும் வலியுறுத்தியதின் விளைவே இந்த சில மாற்றங்கள் தமிழ்ச்சூழலில் நிகழ்ந்தவை. அமைப்புகளை விமர்சித்த காலங்களில் ஜெயமோகனிடம் அது அவசியமே என்று விடாப்பிடியாக வாதிட்டு எழுதியதன் விளைவாகவே விஷ்ணுபுரத்தைத் துவக்க வேண்டிய அவசியம் வந்தது. விருதுகள் ஒரு படைப்பாளிக்குத் தடையே என்று வாதம் புரிந்த காலத்தில் அவசியம் என்றபோது பிற்பாடு புரிந்து கொண்டு விருதுகள் அளிக்க முன்வந்ததும் ஒரு மாற்றம்தான். இப்படியாக கண்ணுக்குத் தெரியாத முயற்சிகளை பீஸ் காரியருக்குள் இருந்து கொண்டு பணியாற்றுகிற பீஸ் கம்பியைப் போல என்னுடைய முயற்சிகள் சிலருக்குப் பயண்படுகிறது என்பதை இந்த இடத்தில் கர்வத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஒரு இடத்தில் என்னை முன் நிறுத்துவதற்கு நான் கேவலம் கொள்கிறேன் என்பதையும் உணர்கிறேன்.

“ஜெயமோகன் கூட ஐய்ப்பனுக்கு மாலைபோட்டிருக்கார்என்றேன்

“யோவ் அது டிசர்ட் கலர்யா அது..“ அட ஆமாம்.. சூழ்நிலைக்குத் தகுந்த வண்ணம் உடையாகவும் அமைந்திருக்கிறது. இந்திரா பார்த்தசாரதி டில்லித் தமிழர்க்குரிய உடை. அரங்கசாமி அவருடைய பிரத்யேகமான உடையிலிருக்கிறார். ரவிசுப்பிரமணியன் முகத்தில் தான் பாடப் போகிற ராகங்களின் சங்கதிகளை உருப்போட்டுக் கொண்டிருப்பதாகப் பட்டது. அவருடைய சிகையலங்காரம் யதார்த்தமான இசையாசிரியரின் பாவனைகளுக்கு உட்படுவதற்கு சௌகரியமாக அமைந்திருக்கிறது. சுரேஷ்குமார இந்திரஜித் கோல்ப் விளையாட்டு வீரரின் ஆகுரிதியில் இருக்கிறார். இங்கிருந்து பார்க்கிறபோது தெளிவத்தை ஜோசப் நாகேஷ் தோற்றத்தில் தெரிகிறார். சுரேஷ் என்கிற கணக்காய அதிகாரியும் சிறந்த வாசிப்பாளருமான அவர் ஜீன்ஸ்  செக் சட்டையணிந்திருக்கிறார். விழாவின் மேடையலங்காரம் சர்வதேச இலக்கிய மேடைக்குரிய பொலிவை அறிய முடிகிறது.

   மேடைக்கு வராமல் கீழே அமர்ந்த படியே நிகழ்வுகளைக் கண்டுகளித்துக்கொண்டிருந்த பாலா அழைக்கப்பட்டார். அவர் மிகுந்த பவ்யமாக மணப்பெண் போல மேடைக்குச் சென்று அமர்ந்தார். அவருக்கு உதவியாளர்கள் உதவினார்கள். தெளிவத்தையின் நூல்கள் வெளியிடப்பட்டது. நாஞ்சில் நாடன், செழியன் ஆகியோர் மரியாதை செய்தார்கள். நிகழ்வை ஒருங்கிணைத்து நெறிப்படுத்திய செல்வேந்திரன் இயக்குநர் பாலா குறித்து ஜெயமோகன் எழுதிய குறிப்புகளை வாசித்தபோது அவர் தான் பேசப் போகிறார் என்பதை உறுதிசெய்தோம். ந.முத்து முதல்யே பேசினா எல்லாரும் புறப்பட்டிருவாங்களே..என்று நினைத்த சந்தேகத்தை உறுதிசெய்தார். பாலா பால்தாக்கரே ஒப்பனையில் இருந்தார். உடையலங்காரமும் அரங்கின் பார்வையாளர்களை அவர் கவனித்தவிதமும் அதிர்ச்சியாக இருக்கிறது. கால்களை மிகவும் குறுக்கம் செய்து நடந்த பாங்கு நாம் யாரையும் உதைத்துவிடக் கூடாது என்பதில் ஜாக்கிரதை உணர்வு வெளிப்பட்டது. மேடையிலிருந்தவர்கள ஒருவித அச்ச உணர்வு வந்து போனதை அறிய முடிகிறது.

பாலா பேசத் துவங்கும் போதே சிலசொற்களை அவர் பேசிவிட அவை ஒலிவாங்கியின் வழியாக வந்து சேர்வதற்கு சில நொடிகள் ஆனது. இந்தி சீரியலுக்கு வசனம் ஒருபக்கம் போக அவர்களின் முகபாவங்களும் உச்சரிப்பும் வேறுபக்கம் போவது போலவே இருக்கிறது. இலக்கியவாதிகளுக்குண்டான குணாதிசயங்கள் பற்றியும் தான் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் அளித்த வரலாற்றைச் சொன்னார். சேது படம் ஒரு மலையாளச் சிறுகதைதான். அதற்கடுத்த நந்தா கதை கூட இலக்கியத்தின் பாதிப்பின் உருவானது. பிறகு பிதாமகன் ஜெயகாந்தன் சிறுகதை, நான் கடவுள் ஜெயமோகன் எழுதிய ஏழாம் உலகம் நாவல், எச். டேனியல் எழுதிய ரெட் டீ எனும் எரியும் பனிக்காடுதான் பரதேசி படம் அதனுடன் எடலாக் குடி ராசா எனும் கதை இணைந்தது தான். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் தொகுப்பில் இருந்த கதை. நாஞ்சில் நாடன் வசனம் எழுதினார். இப்பொழுது எடுத்துக் கொண்டிருக்கும் படத்திற்குக் கூட ஜெயமோகன் எழுதுகிறார். இப்படியாக எங்கள் படங்கள் இலக்கியவாதிகளின் பங்குடன் எடுக்கப்படுகிறது. இன்று எதுவும் தீண்டத்தகாதது ஒன்றுமில்லை என்றானபோது சினிமாவும் தீண்டத்தகாத தொழில் இல்லை. நீங்கள் அனைவரும் சினிமாவுக்கு வரவேண்டும். நான் இலக்கியப் பேச்சாளர் இல்லை. விருது பெருகிற தெளிவத்தை ஜோசப் அவர்களின் கதைகள் குறித்துச் சொன்னதைப் பார்க்கும் போது அவர் கதைகள் முக்கியமானதாக இருக்கும் என நினைக்கிறேன் விருது பெறுகிற அவருக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்து விடைபெறுகிறேன் என்றார்.

அவன் இவன் படத்தைக் குறிப்பிடவில்லையே என ந.முத்து தெரிவிக்க அது எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது இது ஜெயமோகன் விழா எப்படிச் சொல்வார் என்றேன். அவர் பேசும்போது ஜெயமோகன் பக்கம் திரும்பிப் பார்த்துப் பேச இளவேனில் “யப்பா இதெல்லாம் நீதான் பேசணும்..இதயும் அவர் எழுதிக்கொடுப்பாரா என்னய்யா இதுமாதிரி நடந்துக் றது டிரேட் போல.. விஜயும் பிரபு தேவாவும் இப்படித்தான் நடந்துக்குவாங்க தெரியுமா இதெல்லாம் ஒரு டிரேட் மார்க்கா..“என்றார். ஆனா ஒண்ணுயா.. விதியப் பாத்தியா.. வசனத்திற்கே வேலையில்லாத பாலாவின் படத்திற்கு தன்வாழ்நாள் அனைத்தும் எழுதிக்குவிக்கிற ஒரு படைப்பாளி வசனம் எழுத வேண்டியிருக்கு.. கவனிச்சயா என்றேன்.. இந்த அமைப்பு கூட புதுமைப்பித்தனுக்கு கிடைக்கலையே..பாரதிதாசன் படாத கஷ்டமா..அந்தக் காலத்தில ஐம்பது பாட்டு எழுதின காலத்தில கூட நம் நவீன கவிஞர்களுக்கு ஒரு பாட்டு கூட சினிமாக்காரன் தரலையே..பாலா வாங்கங்கறாரா வந்திறாதீங்கன்னு சொல்றாரா...எங்களுக்கு அமைதிப்படை அமாவாசை தான் நினைவுக்கு வருகிறது.

         பாலா பேசிய பிறகும் அரங்கத்திற்குள் இலக்கிய ஆர்வலர்கள் வந்து கொண்டேயிருந்தார்கள். அலைபேசி வந்த பிறகு மிகத்துல்லியமாக சாவு வீட்டுக்கு வருவதை விடவும் நேரடியாகவே மக்கள் மின்மயானத்திற்குள் நுழைவதுபோன்று வர ஆரம்பிக்கிறார்கள். நேரம் இழப்பதைக்கூட துல்லியமான நேரம் பார்த்து இழப்பவர்கள் ஆயிற்றே நம் காலத்தவர்கள்...பாலா பாலாவிற்கு டப்பிங்க் பேசி சப்பென்று முடிந்த நிலையில் அரங்கத்தில் யார்தான் சிறப்புப் பேச்சாளர்கள் ஒருவேளை தெளிவத்தை ஜோஸப் பட்டையெடுக்கப் போகிறாரா.

மேடையில் வழக்கம் போலவே இலக்கியப் பெண்கள் யாருக்கும் விழாவில் பேச வாய்ப்பு தரப்பட்டிருக்கவில்லை. அதுமட்டுமின்றி கோவையில் வாழ்கிற படைப்பாளர்களுக்கும் வாய்ப்பு தரப்பட்டிருக்கவில்லை. இருந்தாலும் இழிவையும் தாண்டி மொண்ணைத்தனத்தையும் தாண்டி இடது சாரிகள், மொழி உணர்வாளர்கள்,நவீன இலக்கியப் படைப்பாளர்கள், கோவையில் இயங்கும் தமிழ் அமைப்புகள், ஆன்மீக இலக்கிய ஆர்வலர்கள், ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள் என்று அரங்கில் குழுமியிருந்த காட்சி ஆச்சர்யப்படவே வைக்கிறது. உள்ளுர் இலக்கியவாதிகள் மேடையைத் தொண்ணாந்து பார்த்தபடியும் தொடர்ந்து இலக்கியப் பகுதிக்குள் பெண்களைப் புறக்கணிக்கிற பணியைச் செய்கிற விஷ்ணுபுரம் இலக்கிய மேடை குறித்து எழும் விமர்சனங்களை நான் தவிர்த்தேன். “எங்கிட்ட ஏன்யா கேட்கறீங்க உங்களுக்கு வாய் இல்லையா.. போலீசு நிக்குது.. பாருங்க.. தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் போட்டாலும் போட்ருவாங்க.. தமிழே பேசக்கூடாது இப்ப நீங்க பேச வேண்டியது புலம் பெயர் தமிழ் என்ன பெரிசு புரிஞ்சுதா.. நீங்களே போய்க் கேளுங்களே நானென்ன உங்களுக்கு பொணையா..அவிங்க கடிச்சா தின்றுவாங்க..

அவர்களோ.பதிலுக்கு இன்னக்கி கர்நாடக சங்கீதம் கேட்க வந்தம்னு நெனச்சிக்கறம்..வா உட்காரலாம்.. இந்த முறை நாங்கள் மேலும் இறுதியான  வரிசையில் அமர்ந்தோம். ந.முத்து தனது தோழர்களுடன் இணைந்து கொண்டார். ஜான்சுந்தர் எங்கள் வரிசைக்கு வந்தார். பின்னால் திரும்பிப்பார்த்தால் ஒரு பக்கம் சரஸ்வதி கையில் வீணையுடனான மிகப் பெரிய தத்ருபமான சிலை. வலது பக்கம் லட்சுமியின் சிலை. நடுவில் வெங்கடேசப் பெருமாள்சிலை. நாங்கள் மூன்று பேரும் மிகச்சரியாக அவர் நெஞ்சுக்கருகில் அமர்ந்து மேடையைப் பார்க்கவும் சரியான அளவான தொலைவு. அரே வெங்கடேசப் பிரதிப பிரதீப்ப் ப்ரியம் வெங்கடேசப் பெயர்ச்சப் பெயர்ச்ச..

      இந்திரா பார்த்தசாரதி பேச அழைக்கப்பட்டார். அரங்கிலிருந்த மக்களின ஐயப்பாட்டுடன் அவரும் ஒன்றிணைந்தமை அறிந்தோம். அதாவது இதுவரை தெளிவத்தை ஜோஸப்பின் எழுத்து எதையும் படித்ததில்லையென்றார். இளவேனில் அந்த ஸ்பிரைட் பாட்டிலக் காட்டு என்றார். நான் மறுத்தேன்.

இ.பா பேசினார். ஆனாலும் அவர் கதைகள் குறித்து இங்கிருப்பவர்கள் நண்பர்கள் பேசியதிலிருந்து மகத்தான எழுத்தாளராக அறியமுடிகிறது. ஆங்கில இந்திய எழுத்தாளர்களுக்கு இருக்கும் மரியாதையும் தமிழில் எழுதுகிற இந்திய எழுத்தாளர்களுக்கு இருக்கும் மரியாதை பற்றிப் பேசினார். மிக அளவான வாழ்த்துரை. பத்மஸ்ரீ விருது பெற்ற நவீன எழுத்துக்குச் சொந்தக்காரர். தனது முதுமையைக் காரணம் காட்டி வராமல் தவிர்க்காமல் வந்திருந்து வாழ்த்திய அவருக்கு நன்றியறிதலைத் தெரிவிக்கிறார் தெளிவத்தை..

அரங்கு குளிருட்டப்படாமலே இளைய இரவின் குளிரில் நனையத் துவங்கியபோது ரவிசுப்பிரமணியன் பாட அழைக்கப்பட்டார். முதலில் கொஞ்சம் பேசினார். நிகழ்விற்கு வரவிருந்த பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் கவிதைகளை ஜெயமோகன அனுப்பிவைத்து நீங்கள் பாடலாகப் பாடவேண்டும் எனக்கேட்டுக் கொண்டார். பிறகு அந்த நீள் கவிதைகளைச் சுருக்கி சிறுசிறுபாடல்களாக கோர்வை செய்திருக்கிறேன். என பாட ஆரம்பித்தார். தார,மத்ய, உச்ச என மூன்று ஸ்தாயிகளினாலும் சொல் பிசகாமல் நுட்பமான சங்கதிகளுடன் பாடி ஆச்சர்யப்படவைத்தார். இந்த அரங்கில் டிசம்பர் சீசனில் சங்கீதக் கச்சேரிகளை நான் கேட்க வில்லை. அந்தக் குறையை அவர்  ஆரபி,இந்தோளம், நாட்டைக்குறிஞ்சி என பல ராகங்களில் பாடியது சிலிர்க்க வைக்கிறது.  அந்தக் கவிதையின் பொருளும் சொற்களும் உணர்ச்சிகரமாக இருக்கிறது.

ஒரு காலத்தில் காமராஜர் காலமானபோது தமிழ்நாடெங்கும் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் சில பாடல்கள் இந்த ராகத்தில்தான் ஒலித்தது. எங்கள் ஜின்னிங்பாக்டரி சாலை வீதியானது ஜனதாக் கட்சிக்காரர்கள் நிறைந்த பகுதி. எழுபத்தி நான்கு வருடம் என நினைவு. அதுமட்டுமல்ல எந்த விழாவிலும் இருகூரில் பாடுகிற மைக் செட் காமராஜர் குறித்த பாடல்கள் ஒலித்த காலம். எனக்கு ரவியின் குரல்வளம் இந்தச் சம்பவங்களை நினைவுட்டியது. இளவேனில் சிதம்பரம் ஜெயராமன், கோவை சௌந்தர ராஜன் குரலிலும் பாட்டின் எடுப்பு இருக்கிறது என்றார். அரங்கம் ரவியின் கட்டுப்பாட்டில் வருகிறது. சில வரிகளை அவர் கடல் அலைபோலவும் ரயில் பூச்சியின் நெளிவு சுளிவுடன் பாடிக் கிறங்க வைத்தார். குறிப்பாக அவருக்கு “மசங்கதிகள் அற்புதமாக வந்து பேசியது என்று சொல்லலாம். அவருடைய பல ஆக்கங்களை நான் பார்த்துக் கேட்டிருந்தாலும் இந்த நிகழ்வில் அவர் பாடியது ரசிக்கத்தக்கவகையில் அமைந்தது. பாலச்சந்திரன் சுள்ளிக்காடு இருந்து கேட்க்க கொடுத்துவைக்கவில்லை. அடுத்ததாக சுரேஷ்குமார இந்திரஜித் வாழ்த்துரை வழங்க அழைக்கப்பட்டார்.

            தெளிவத்தையின் சிறுகதைகள் நான்கு குறித்துப் பேசினார். தமிழர்களின் பழம் பெரும் புலம் பெயர்தல், அலைக்கழித்த வாழ்க்கை குறித்த ஆய்வு சிறப்பாகவும் துயர மிகுதியாகவும் இருக்கிறது. குறிப்பாக அம்மா எனும் கதை பற்றிய உருவகம் சிறப்பாக இருந்தது. ஏற்கெனவே இலக்கியவாதிகள் அறிந்து வைத்திருக்கும் புதுமைப்பித்தனின் சிற்பியின் நகரம் கதையுடன் இந்தக் கதையை ஒப்பிட்டுப் பேசினாலும் ஒப்புமை சரியாகவே இருந்தது. மரணத்தின் வாயிலில் இன்று மரித்துவிடுவார் என்று மூன்று முறை காத்திருந்தும் மரணிக்காத அம்மா ஏமாற்றுவதைச் சொல்வதாக கதை இருந்தாலும் இறுதி வரியில் இந்த முறை அம்மா ஏமாற்றமாட்டாள் என்பதாக கதை முடிகிறது. தொகுப்பில் இருக்கிற மற்ற கதைகளை அறிமுகம் செய்தாலும் இந்தக் கதையின் விரிவைச் சொல்லி அவருடைய நாவலான குடைநிழல் குறித்தும் பேசினார். மலையகத் தமிழர்களின் வாழ்வு, அவர்கள் பத்திரப்படுத்திவைக்காத ஆவணங்கள் இல்லாமையால் சுமார் பத்துலட்சம் மக்கள் தங்கள் தாயகம் நோக்கித்திரும்பி வந்து பிறகு ரீபேட்ரியாட் என்று தாயகம் திரும்பியோர் என்று வகைமைப்படுத்திய விவரங்கள் பற்றியெல்லாம் சு.இந்திரஜித் விரிவாக ஆய்வில் விளக்கினார். யாழ்ப்பாணத்தமிழர்கள் மற்றும் வடகிழக்கு மாகாணத்தமிழர்கள் மலையகத்தமிழர்கள் என்று பலவேறுபாடுகளின் பின்னணி. தேயிலைத்தோட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மக்களின் பின்னணி. தமிழகம் உள்பட பல தென்னிந்திய நிலங்களில் ஏற்பட்ட பஞ்சம். இதன் காரணமாக நடந்த புலம் பெயர்தல் குறித்தெல்லாம் தெளிவத்தையின் படைப்புகளில் ஊடாடி வருவதைச் சிறப்பாக அவர் உருவகம் செய்தார். 68 களிலிருந்து இலங்கையின் இறுதிப் போர்வரை மலையகமக்களின் வாழ்நிலை பற்றிய செய்திகள் அறிய முடிகிறது என்கிறார். பிறகு அவர்கள் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்த செய்திகளையும் பகிர்ந்து கொள்கிறார். இலங்கை தேசம் பத்துலட்சம் மக்களைத் தங்கள் நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டபோது நடந்த கொடுரமான சாவுகள். புலம் பெயரும் போது ஏற்பட்ட சிக்கல்களில் அலைக்கழிக்கப்பட்ட சம்பவங்கள் எல்லாம் இவரின் படைப்புகளில் எதிரொலிக்கிறது என்றார். சு.இந்திரஜித் பேசிய பிறகுதான் அரங்கம் யார் இந்த தெளிவத்தை ஜோஸப் என்பதை அறிந்து கொண்டார்கள். அரங்கின் பங்கேற்பாளர் உள்பட பலருக்கு புலம் பெயர்ந்த எழுத்து குறித்து அறிய நேர்கிறது. நல்ல அறிமுகத்தை வழங்கியவருக்கு அரங்கு கைதட்டலைத் தருகிறது.

நமது வாழ்த்தை துயரமான நிகழ்வாக இருந்தாலும கைதட்டிதான் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. துன்பம் குறித்தும துயரம் குறித்தும் பேசுபவர்கள் இலக்கியவாதிகள் என்று பொதுமையான ரசனையாளர்கள் வருவதில்லை. ஆனால் ஒப்பாரியையே கலையாக்கி அ டிமைப்படுத்திக் கொள்கிற பிரசங்கங்களுக்கு மக்கள் சென்று தேம்பித்தேம்பி அழுவதை குடும்பம் குடும்பமாகச் சென்று அழுதுவருகிறார்கள். வேறு வழியில்லை. இந்த இரவின் மதக்கப் பொழுதிலும் சரியான நேரத்தில் மேலும் வருகையாளர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள். நான் ந.முத்து, இப்பொழுது ஜான் ஆகியோருடன் பேசியபடியே நிகழ்வைக் கவனித்துக் கொண்டிருந்தமையால் இளவேனில் காகிதத்திலும் வாங்கிய புத்தகங்களிலும் குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்தார். யோவ் என்னய்யா பேசிட்டிருக்கறே..நான் உனக்கு வேண்டி நோட்ஸ் எடுத்திட்டிருக்கறேன்..என்ன கவனி என்கிறார்..நானோ அடப் போய்யா மாங்கு மாங்குனு எழுதினா ஒரு லைக் விழும். அந்தக் கருமத்துக்கு எழுதாமயே விட்டர்லாம் என்றேன்..யோவ் மண்ணு..எவன் லைக்கலைன்னா என்னய்யா நீ பார்த்ததை எழுது. இலக்கியத்துக்குள்ள இந்த லைக்குகளை நம்பியா வந்தோம்..என்றார். நான் நிமிர்ந்து உட்கார்ந்து சுரேஷ் பேசியதைக் கவனிக்க ஆரம்பித்தேன். அவரும் என் சாதி. காரணம் பலகுரலிசைக்காரர். உலக இலக்கியங்களின் சிறந்த வாசிப்பாளர் என்றார்கள். அவரின் முதல் மேடை என்கிறார்கள். பலகுரலிசைக்காரருக்கு முதல் மேடை என்பதுதான் நெருடலாக இருக்கிறது. விகடகவிக்கு உலகமே மேடைதான். பார்வையாளர்கள் எல்லாரும் அப்பாவிகள். சுரேஷ் அப்பாவிகள் என்று பங்கேற்பாளர்களைக் கருதாமல் சிறப்பாகவே பேசினார்

           இந்திராபார்த்தசாரதி அவர்களின் எழுத்தைத்தான் முதலில்வாசித்ததாகப் பெருமை பொங்கச் சொன்னார். தான் ஒன்பதாவது படிக்கும்போது  துணைப்பாட நூலில் இ.பா வின் சிறுகதைகள்தான் தனக்கு இருந்தது. நீங்கள் கேட்கலாம். எப்படி ஒன்பதாம் வகுப்பில் இலக்கியம் வந்திருக்கும் என்று. நான் படித்தது சிபிஎஸ்சி சிலபஸ் என்பதால். அதற்காக இன்றைய காலத்தில் அந்தப் பிரிவில் ஏன் தமிழிலக்கியம் இல்லையென்று கேட்காமல் விழாவை கவனி என்றார் இளவேனில். என்னய்யா கேட்க கூடாதா என்ன..வரவர அவர் சாந்தசிவம் ஆகி என்னை கராத்தே மணியாக்கிவிடுகிறார். அவருடைய சிறுகதைகளை வாசிக்கத்துவங்கியதிலிருந்து தமிழ் நவீன இலக்கியங்களை வாசிப்பதற்கு அவருடைய படைப்புகள் உதவியது என்றார். பிறகு நண்பர் தியாகுவின் நூலகத்தில் அவருடைய எல்லாப்படைப்புகளையும் நான் தேடிப்படிக்க ஆரம்பித்தேன். அவருடன் இன்று எனது முதல் இலக்கிய விழாவில் அவருடனே அமர்ந்திருப்பது என் பாக்கியம் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு நன்றி.  இ.பா.வின் கிருஷ்ணா,கிருஷ்ணா நாவல் மிகச் சிறந்த நவீன இலக்கியப்படைப்பு இந்த நாவலை ஏறக்குறைய தொண்ணூறு பிரதிகள் வரை நண்பர் தியாகுவும் நானும் வாங்கித் தந்திருக்கிறோம். அதுமட்டுமல்ல நாம் அனைவரும் நமது வீட்டில் வைத்துக் கொண்டாட வேண்டிய படைப்பாக இந்த நாவல் இருக்கிறது என்றார். விஷ்ணுபுரம் விழா பல விருதுகளுக்கு அடித்தளம் இடும் விழாவாக அமைந்து வருகிறது. இதன் மூலம் நமது இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கு ஞானபீடம் விருதும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன் என்றார் சுரேஷ்.

அவருடைய குரல் வளம் சிறப்பாக இருந்தது. ஒரு சமயத்தில் கார்ட்டுன் படங்களுக்கும் அனிமேசன் படங்களுக்கு தமிழில் குரல் கொடுப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. சூழலியல் படங்களுக்கு தமிழில் பின்னணி பேசுவது போன்ற தொனியில் அவர் பேசியது ஒரு ஆவணப்படத்தைக் கண்டு களித்துக் கொண்டிருப்பதாகவே உணர்வு 

          நான் ஒவ்வொரு முறையும் டிஜிட்டல் வாட்ச் பார்ப்பதும் பிறகு மேடையில் மேலும் பேச வேண்டியவர்களின் வரிசையையும் பார்த்துக் கொண்டிருந்தபோது அடுத்ததாக ஜெயமோகன் தவிர யாருமில்லை. பிறகு தெளிவத்தை ஜோசப். எதிர்பார்த்தது போலவே பேச வந்தார். விழாவிற்கு வந்திருக்கிற தனது ஆசான்கள் நெடுநாளைய நண்பர்கள் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன் இந்த விழாவை கடந்த இரண்டு நாட்களாக சிறப்பாக கலந்துரையாடல், படைப்பாளர்களுடன் நேர்காணல், சிறப்பு சந்திப்பு இப்பொழுது இந்த விருது வழங்கு விழா இப்படியாக சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிற நண்பர்களை நெஞ்சாரத்தழுவிக் கொள்கிறேன் அவர்களுக்கு நன்றி. இங்கு வந்திருக்கிற நண்பர்கள் தனது சக படைப்பாளர்களைப் பெயர்களுடன் வரவேற்று மகிழ்ந்தார். அதீதமான அறிவுடைய இலக்கிய வாதிகளுக்குள்ளாக இருக்கிற முரண்பாடுகளை பாலா சுட்டிக்காட்டியதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் முதலில் ஒரு கதையுடன் ஆரம்பித்தார். பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் கவிதைகளில் ஒரு வாக்கியம் வரும் கொலச் சோறு என்பது. அதாவது மரணத்தின் விளிம்பில் இருக்கிற ஒரு கைதிக்கு அல்லது ஒரு உயிருக்கு இறுதியாக சாப்பிடக் கேட்பதைத்தருவார்கள். அதில் எல்லாவித பலகாரங்களும் உணவும் இருக்கும். அவன் விரும்பி உணவு பரிமாறுவார்கள். அதற்குப் பெயர்தான் கொலச்சோறு. அவன் மறுபடியும் சாப்பிடப்போவதில்லை. அவன் சாவிற்கு அளிக்கப்படுகிற சோறாக இருப்பதால் அந்தப் பெயர். ஒருவகையில் இலக்கியவாதிகளும் கொலைச் சோறு சாப்பிடுகிறவர்கள்தான். மலையாளச்சிறுகதை ஒன்று உண்டு. ஊருண்ட நாராயணப் பிள்ளை எழுதிய ஒரு கதை. அதாவது யானையை கொல்வதற்கு முயற்சி செய்கிற கதை. அந்தப் பாகனின் தாத்தாவும் பாகன் தான் அவரையும் யானை ஒரு திருவிழாவில் கொன்றிருக்கிறது. அதுபோலவே தன் தந்தையையும் ஒரு திருவிழாவில் யானை கொன்றிருக்கிறது. ஒரு கணம் நான் என் தந்தைக்கு உணவு எடுத்துக் கொண்டு போயிருக்கிறேன். நான் போகும் சமயம் என் தந்தையை யானை இரண்டு முறை தலைக்கும் மேல் தூக்கி நிலத்தில் அடித்தது. பிறகு வயிற்றில் மிதித்துக் கொல்கிறது. அப்பாவின் குடல்கள் குதவழியாக வெளிவருகிறது. அந்தக்கதையில் பாகன் பேசுகிறான். நான் கொண்டு போன சோறு தெறித்து விழுகிறது. அப்பா என்னைப் பரிதாபமாகப் பார்த்து உயிரைவிடுகிறார். பிறகு அவன் அந்த அப்பா தாத்தா பிடித்த தொறட்டிக்குச்சியை எடுத்துக் கொண்டு நானும் பாகனாக மாறினேன் என்கிறான். அந்த அரண்மனையில் யானைக்குப் பாகனாகச் சேர்கிறான். அந்த யானைக்கு ஒருவாரத்தில் விஷம் வைத்துக் கொன்று பழிவாங்கப் போனவன் யானையுடன் பழகப்பழக சிநேகம் கொள்கிறான். பிறகு ஏன் யானையைக் கொல்லவில்லை என்று தன் உறவினர் கேட்டபோது நான் கொல்லத்தான் போனேன் ஆனால் நான் யானையுடன் சிநேகித்துப் போனேன் சாரே. சிநேகம் பண்ணிட்டா யாரையும் கொல்லமுடியாது என்கிறான். இப்படித்தான் இலக்கியத்தை சிநேகம் செய்யது விட்டால் விலகவே முடியாது. சண்டைகள் மறந்து போய் சிநேகம் வந்துவிடுகிறது என்றார். இந்த சமயத்தில் அரங்கில் பலத்த கைதட்டல்கள். ஒரு வரிசையில் மிக அதிகமான கைதட்டல் வந்த இடத்தைக் கவனித்தேன். அங்கு தேநீர் அடுமனையில் பார்த்த காதலர்கள் உற்சாகமாகக் கைதட்டி ஆர்ப்பரிக்கிறார்கள்..

      தெளிவத்தையின் எழுத்துகள் இப்படியான கதைகளைக் கொண்டது அவருடைய படைப்புலகம். அவருடன் நேர்காணலில் அடுக்குகிற செய்திகள் பிரமிப்பானது. எந்தக் கதை எப்பொழுது பிரசுரமானது என்பதை நினைவில் வைத்திருக்கிறார். இது தீபம், கணையாழி, மஞ்சரி, அமுதசுரபி என்று இலக்கியத்தைப் பற்றிய துல்லியமான பதிவுகளை வைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல நாம் இப்பொழுது இவருக்கு விழா எடுப்பது போன்று புதுமைப்பித்தனுக்கு விழா எடுத்தவர் அவர். மலையகத்தமிழர்களின் வாழ்வு குறித்த பதிவுகள் நிறைய சேகரித்து வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஏற்பட்ட கடுமையான பஞ்சம் பல உலகநாடுகளுக்கு மக்களை வெளியேற வைத்தது. இப்பொழுதும் மக்கள் தங்கள் தாய்தேசத்தின் அடையாளங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் தாங்கள் எந்தப்புலம் சாதி பின்னணி தெரியாமல் வாழ்கிறார்கள். ஒரு முறை நியுயார்க் விமான நிலையத்தில் தமிழில் பேசிக்கொண்டிருந்த இளைஞர்களைப் போய் விசாரித்தபோது அவர்களின் பெயர்கள் தமிழ்ப்பெயர்கள். சாதிப்பெயர்களை வைத்திருக்கிறார்கள். நுட்பமாக ஆராய்ந்தால் நம்மால் விளங்க முடியும். படையாச்சி, செட்டியார், பெயர்கள் மாறியிருக்கிறது. ஒரு டீவர் என்றார். தேவர் என்பதைத்தான் அவர்கள் டீவர் என்று சுருக்கியிருக்கிறார்கள்.

        ஒரு கட்டுரையில குறிப்பு வருகிறது பஞ்ச காலத்தில் ஆயிரத்தி ஐநூறு அடிமைகளை ஏற்றிக் கொண்டு சென்ற கப்பல் ஆஸ்திரேலியா செல்வதற்குப் பதிலாக நியுசிலாந்து சென்று விடுகிறது. அங்கு மைனஸ் பத்துடிகிரி செல்சியஸ் குளிர். சென்ற மக்களுக்கு கோவணம் மட்டும் இருந்திருக்கிறது. அங்கேயே மரணத்தைத் தழுவுகிறார்கள். இதுபோன்ற கொடுமைகளில் கொஞ்சம் பேர் தப்பிப்பிழைத்து ஆங்காங்கு வாழத் துவங்குகிறார்கள். இப்படியான அடிமைகளின் வாழ்வாக மலையகத்தமிழர்கள் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை இருந்திருக்கிறது. இந்த மறைக்கப்பட்ட வாழ்வைத்தான் தெளிவத்தை ஜோசப் எழுதிவருகிறார். அவருடைய நான்கு சிறுகதைத் தொகுப்புகள். ஒரு நாவல் இதன் மையமாக துயரமான வாழ்வே பேசப்படுகிறது. அலெக்ஸ் ஹீலி கருப்பின அடிமைகள் குறித்து நிறைய எழுதியிருக்கிறார். ஒரு கப்பலில் அடிமைகள் கடத்திக் கொண்டு போகிறார்கள் கப்பலில் கைகள் கட்டப்பட்ட நிலையில் எட்டுமாதங்கள் கழித்துதான் கைவிலங்குகள் அவிழ்க்கப்படுகிறது. அதற்கு  முன்பு வரையிலும் அதே நிலையில் மலஜலம் கழிப்பது எல்லாம் அங்குதான். கப்பலின் துவாரத்திலிருந்து வரும் வெளிச்சத்தின் வழியாக காலத்தை நேரத்தை அறிந்து கொள்கிறான். தனது இருப்பின் நாட்களை அறிய மலத்திலிருந்து துணுக்குகளை எடுத்து கப்பலில் நாட்கணக்கு குறிக்கிறான். அவனுக்கு உணவு மேலிருந்து எறியப்படுகிற பொழுது வாயால் கவ்வித்தான் உணவை சாப்பிடுகிறான். இப்படியான அடிமைகள் வாழ்வு போலவே தமிழர்களின் புலம் பெயர்வாழ்வும் இருந்த வரலாறுகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. தெளிவத்தை ஜோசப் எழுத்துக்கு அளிக்கப்படும் மரியாதை அவருடைய படைப்புகளின் வழியாக அறியமுடியாமல்போன மலையகத் தொழிலாளர்களின் வாழ்வு குறித்து அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது. அவருடைய முயற்சிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த விழாவிற்கு வந்திருந்து உரையாற்றிய என் உறவினர் ரவி சுப்பிரமணியன். இந்திரா பார்த்தசாரதி, இருபத்தி ஐந்து ஆண்டுகளாக எழுதிவரும் நண்பர் சுரேஷ்குமார இந்திரஜித், நண்பர்கள் இயக்குநர் பாலா அவர்களுக்கும் நன்றியைத்தெரிவித்துக் கொண்டு விடைபெற்றார்.

            வழக்கமான உரையிலிருந்து மாறுபட்டிருப்பதைக் கேட்க முடிந்தது. அவர் மேலும் அதிகமாகப் பேசியிருக்கலாம் என்று தோன்றியது. உணர்ச்சிமயமிக்க உரை. புலம் பெயர்ந்து பல தேசங்களில் வாழ்கிற தனது நண்பர்களுக்கு ஆதரவாகவும் அவர்களின மனநிலையை, மனச்சுமையை அவர்கள் தங்கள் தேசங்கள் பற்றிய மறு ஆக்க கனவுகளுடன் வாழ்வதை குறிப்பிட்டுப் பேசியதாக அறிய முடிந்தது. பொதுவாக இன்று  அதிகமாக ஆக்கம் செய்யப்படும் அடிமை இலக்கிய வகைமைகளைக் குறிப்பதாக அமைந்தது. அது மட்டுமின்றி இன்று நிலவும் அடிமைகள் வாங்குதல், தொகுப்புக் கூலி அடிமை முறை, கேம்ப் கூலிகள் என்று இளம்பெண்களை மூன்றாண்டு ஐந்தாண்டுகள் ஒப்பந்தமுறைகளில் வேலைவாங்குதல். கல்குவாரிகளில், ரயில்வே பணிகளுக்கு அடிமைகள் வாங்குதல் என்று நடந்து கொண்டிருக்கிற கொடுமைகள் குறித்த பதிவுகள் இல்லை. ஒரு படைப்பாளியைத் தற்காலத்தைக கவனியுங்கள் என்று சொன்னால் கோபம் கொள்கிறார்கள். இலக்கியம் என்பதே நேற்று இன்று நாளை என்பதுதான். முதலாளியத்தைச் சாடுவதை விடுத்து மக்கள் முட்டாள்கள், அறிவற்றவர்கள். சூப்பர்வைசர்கள், கண்காணிகள்தான் மோசமானவர்கள். முதலாளிகள் மிகவும் நல்லவர்கள். என நிறுவுகிற இலக்கியங்களின் சமகாலப் போக்குகளையும் அவர் குறிப்பிட்டுப் பேசியிருக்கலாம்.

      அடுத்தாற்போல விழா நாயகர் தெளிவத்தை ஜோஸப் பேச வந்தார். அவருடைய உரை ஆரம்பத்தில் நடிகர் ஐசரி வேலன் குரலாகவும் அவருடைய உடல் மொழியாகவும் அமைந்திருக்கிறது. அவர் அதிரடியாக இரண்டு பழமொழிகள் சொன்னார். ஒன்று பொண் கிடைத்தாலும் புதன் கிடைக்காது. அதாவது தனக்கு விருது அளிப்பு குறித்த செய்தி வந்த கிழமை புதனாம். அதற்கு அந்தப் பழமொழி. பிறகு ஜெயமோகன் தன்னுடைய நாவலை எழுத்துப் பதிப்பகம் மூலமாக அலெக்ஸ்சிரில் வெளியிடுவதாகவும் அது போலவே அந்த நாவலுக்கு முன்னுரையை எழுதலாம் என்றிருக்கிறேன் எனக் கேட்டபோது நான் கரும்பு தின்னக் கூலியா என்றுக் கேட்டேன் என்றதும். பங்கேற்பாளர்கள் தங்கள் முகங்களைப்பார்த்துக் கொண்டார்கள். நான் எண்ணற்ற கூட்டங்கள் கேட்டிருக்கிறேன். அது மட்டுமின்றி கோவையில் இது போன்ற அரங்குகளுக்குச் சிறப்புப் பேச்சை முதல் வரியிலேயே அறிந்து கொள்கிற நாசியை உடையவர்கள் கோவையின் பல்சமய உறவுமக்கள் எத்தனை சிறப்புரைகளைக் கேட்டிருப்பார்கள். நாற்காலிகளை ஜோஸப் காலி செய்யத் துவங்கினார்.

       இந்திரா பார்த்தசாரதி அவர்களுடனான பழம் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். நா.பார்த்தசாரதி நடத்திய தீபம் இதழில் மிகச்சிறந்த படைப்புகள் வெளிவரும். அப்படியான பொழுதில் நண்பர் ஒருவர் பார்த்தசாரதி என்பவர் ஒருவர் எழுதிவருகிறார் வாசித்தாயா என்றார். நான் நா.பா வா என்றேன் இல்லை இவர் இந்திரா பார்த்தசாரதி என்றார். அந்தப் படைப்புதான் தந்திரபூமி அந்தப் படைப்புதான தனக்கு ஆதர்சம். இன்று அவருடனே அமர்ந்து விருது பெறுகிற வாய்ப்புக் கிட்டியதற்காக மிகவும் மகிழச்சியாக இருக்கிறது என்றார். எனக்கு மட்டுமல்ல மலையகச் சிறுகதைகளின் தந்தை என்று அழைக்கப்படுகிற எம்என் எஸ் ராமையா அவர்கள் தொகுத்த சிறுகதைகளின் பாதிப்புதான் தான் எழுதவந்த நிலை என்றார். அவர் தொத்த சிறுகதைகளில் ஒன்றுதான் என்னுடைய மீன்கள் சிறுகதை. இந்தக் கதைக்கு அவர் எழுதிய குறிப்பு. இந்தக் கதை இதுவரையிலும் அறியப்படாத மலையக மக்களின் வாழ்க்கை குறித்து வெளியாகும் சிறுகதை எனறு. சு.இந்திரஜித் அவர்கள் மிகச்சரியாகவே மலையக மக்களின் வாழ்க்கைப் புலத்தை எடுத்துரைத்திருக்கிறார். தோட்டக்காட்டான் என்பதுதான் அவர்களின் அடைமொழி. பிறகு கள்ளத்தோணி என்பதாக மாறிய விதங்களை விவரித்தார்.

        நான் ஜெயமோகன், முருக பூபதி ஆகியோர் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்த போதுதான் இலங்கையில் இறுதிக்கட்ட போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. என்போன்றவர்கள் செய்வதறியாது தத்தளித்தோம். அப்பொழுது நாங்கள் அடைந்த துயரங்களை நேரில் கண்டவர் ஜெயமோகன். மலையக மக்களை யாழ்ப்பாணத்தைச் சார்ந்தவர்கள் ஏற்கவில்லை. சிரிமாவே பண்டாரநாயக ஒப்பந்த்தின் படியாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் அளவேயில்லை. இன்று சில மலையக மக்களின் எழுத்துகள் வெளியாகிறது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுக்குப் பல அச்சுறுத்தல்கள். நெருக்கடிகளையும் மீறித்தான் செயல்படவேண்டியிருக்கிறது. வனசாட்சி போன்ற நாவல்கள் வெளியாகிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் எடுத்த விழாவின் மூலமாக மலையக மக்களின் வாழ்வையும் இலக்கியப்படைப்புகளையும் அறிந்து கொள்வதற்கு உதவியிருக்கிறது அதற்கு எங்கள் மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டார்.

விழாவின் இறுதியில் செல்வேந்திரன் பங்கு கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இறுதியில் பாலாவின் பாதுகாவலர்கள் ராகுல் காந்தியைவிடவும் பாதுகாப்பாக அழைத்துப் போனார்கள். அவருக்கு வழிவிட்டு மளமளவெனக் கலைந்து கொள்கிறார்கள். பிற்பாடு புகைப்படங்கள் மற்றொரு இலக்கியக் கூட்டமாக நண்பர்களின் உரையாடல் தொடர்கிறது.

விழா நடைபெறும் அரங்கிற்குக் காலையிலிருந்தே லாரிகளில் மூட்டை மூட்டையாக அறம், விடுதலையுணர்வு, நுட்பம், துல்லியம், உள்ளுணர்வு,ஸ்தூலம் போன்ற வஸ்துகள் வந்திறங்கிக் கொண்டிருந்தது. விழாவிற்கு வருபவர்களுக்கு அளிப்பதற்காக. மேலும் கிருஸ்துமஸ் தாத்தா உடைகள், விக் தாடிகள், சிங்கம்11 மீசைதாடி கெட்டப் முகமூடிகள் வாயிலில் நிரம்பக் கொண்டிருக்கிறது. செஞ்சிலுவை மன்றத்தைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் சிக்னலில் நின்ற வாகனங்களுக்கு முன்விளக்கு நடுமையத்தில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள். நாங்கள் வந்த இளவேனில் வண்டிக்கும் ஒட்டினார்கள். சற்று நேரத்தில் அந்த மாணவர்கள் முகங்கள் மாறுகிறது. அந்த ஐந்து வழிச்சாலை விழாவின் அரங்கமாக மாறுகிறது. நிரம்பிய அரங்க இருக்கைகளில் உட்கார்ந்திருக்கிறவர்கள் முகங்களில் அந்த கருப்பு ஸ்டிக்கர் மினுக்குகிறது. ஒரு முறை கண் கண்ணாடியைச் சுத்தம் செய்து அணிந்து கொள்கிறேன். மீண்டும் ஒரு முறை ஸ்பிரைட் பாட்டிலில் கரைந்து வைத்திருந்த விஎஸ்ஓபி பீரியமியத்தின் மிடருகளை விழுங்கிக் கொள்ள எல்லாம் சரியானது. இளவேனில் கொஞ்சம் தண்ணி கொடு என்றார் நான் வேறொரு பாட்டிலிலிருந்த வெண் தண்ணீரை அவருக்கு அளித்தேன். அவர் என்னமோ உன்கிட்டருந்து வாசம் வருது என்றார் நானோ ஆரம்பிச்சிட்டியா என்றபடி என் தோள்பையைக் காட்டினேன். அவரும் விஷ்ணுபுரம் மற்ற விழாக்களுக்கு வந்த அதே பேக் கோட வந்திட்டிருக்கியே எப்படியா என்றார். நான் வேணும்னா ஒரு பேக் வாங்கிட்டு வந்தர்றேன் மாமாசம் கொஞ்சம் கொஞ்சமா பணம் கொடு என்றார். யோவ் இந்த பேக் ராசியான பேக்யா. இதவாங்கினதுல இருந்துதான்யா ஜெயமோகன் கோயமுத்தூர் வந்திட்டேயிருக்கார்..அதனால நான் மாத்தமாட்டேன் என்றேன்.

 

  வண்டியை ஒண்டிப்புதூரில் நிறுத்திவிட்டு பேல் பூரி சாப்பிட்டோம். நல்ல பசி. பத்துமணியை நெருங்கியிருக்கிறது. இரவின் சாலைகள் எங்கோ போய் அடிமைப்பராரிகளின் உறக்கத்திற்குள் நுழைகிறது. கடந்த விழாவில் நாஞ்சில் நாடன் கேட்டுக்கொண்டபடியே விருது தொகை ஒரு லட்சமாக உயர்த்தியிருக்கிறார்கள். சாகித்ய அகாடமியும் ஒரு லட்சம் தான் தருகிறது. அரசாங்கத்தின் தொகை மற்ற விருது அளிப்பவர்களின் தொகையை விடவும் குறைவாக இருப்பதை அரசு பரிசீலித்து ஐந்து லட்சமாக ஆக்கவேண்டும். ஒரு லட்சத்தை வட்டிக்குப் போட்டால் டிடிஎஸ போக ஐநூறு கிடைக்கும் புல்லுக்குக் கூட தேறாது. நாற்பது ஐம்பது வருடம் எழுதிவிட்டு சாகிற காலத்தில் அவுன் அவுன்சாகவா குடிக்க முடியும்.

    பேல் பூரி வருகிறது. எங்களுக்காக குருமாப் பாணியை நன்கு சூடாக்கித்தருகிறார்கள். வெங்காயம் வெட்டித்தூவினார்கள். உப்பு அதிகமாகவே சுவைத்தது. இளவேனில் யோவ் உப்புயா என்றார் பரவாயில்லய்யா..விழா முடிஞ்சிதான வருது..முன்னாடி வரலையல்ல அதே போதும்..“

      இரவு பத்தரை மணிக்கு விஜி தோசை ஊற்றினாள். கார்த்தி உறங்காமல் நெளிந்து கொண்டிருந்தான். யாரோ அழைப்பு மணியைக் கிள்ளியிருக்கிறார்கள். போய்ப்பார்க்கிறேன். முனைவர் வே. பரமேசுவரன் வந்திருந்தார். ஆச்சர்யத்துடன் முகமலர்ந்து வரவேற்றேன். நானும் அவரும் சில தோசைகளும் சிறு மீதி மிடறுகளும் அருந்திவிட்டு உறங்கப்போனோம்.

அரே வெங்கடேசப் பிரதீப பிரதீபப் ப்ரியம் வெங்கடேசப் பெயர்ச்சப் பெயர்ச்ச....

       

      

        

 

 

 

 

 

 

 

 

 

 

 

1 கருத்து: