ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

“க.அம்சப்ரியாவின் “என் இரவு ஒரு தேநீர் கோப்பையாகிறது..” கவிதை நூல் குறித்து...



“என் இரவு ஒரு தேநீர் கோப்பையாகிறது“
க.அம்சப்ரியா- கவிதை நூல் குறித்து..
வாழ்க்கை
உன் கானகப் பயணம்
உன் சுயநலம்
யாரும் உன்னுடன் வரவில்லையென
இடைவிடாமல் சபிக்கிறாய்
அதன் போக்கில் ஊர்ந்து போகும்
சர்ப்பங்களை உன் பகைபோல்
கற்பனைத்து ஓலமிடுகிறாய்
மிருகங்களின் வனத்திற்குள்
உனக்கென்ன வேலையென்று
முறைத்துப் பார்க்கும் ஒரு
யானைக்கூட்டத்தை
உன் பகையாளர்களைப் போல் எண்ணி
பின் வாங்குகிறாய்
வழி மறிக்கும் விலங்குகள் யாவும்
தன் வாழ்வை நிச்சயப்படுத்திக் கொள்ளும்
பேராபத்தில் திகைத்தோடுகின்றன
தயவு செய்து கானகப் பயணியே
வெளியே வா
உன்னை வேட்டையாடத் தோதானவை
உன் மனித மிருகங்களே
நீ வேட்டையாடவும்தான்- பக் 69
   
         அம்சப்ரியாவின் கவிதைகளைப் பேசுகிற பொழுது அவருடைய நீண்ட நெடிய கவிதை உறவுகள் நினைவிலாடுகிறது. தமிழச்சூழலில் அம்சப்ரியாவின் இடம் அவருடைய கவிதைகளுக்குரிய இடம் பற்றியும் ஞாபகங்கள் போகிறது. எனக்கும் பொன் இளவேனிலுக் குமான கவிதை குறித்த உரையாடல்களில் அம்சப்ரியா இருந்திருக்கிறார். கவிதை,சிறுகதை,நாவல் உரையாடல் களிலும் அவர் இருந்திருக்கிறார்.கண்ணதாசன். மருதகாசி, வண்ணதாசன்,கலாப்ரியா வைரமுத்து, முத்துலிங்கம் அறிவுமதி,மரபின்மைந்தன் முத்தையா,பொன்னடியான், புலமைப்பித்தன்,நா.காமராசன்,தமிழன்பன்,அப்துல்ரகுமான் பிறகு நவீன கவிதைகளை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு தொண்ணூறுகளுக்குப்பிறகு நடந்த ராஜீவ் படுகொலைக் குப்பிறகுத் தமிழக்கவிதைச்சூழல் தமிழர்களுக்கு எதிராக வும் தமிழக்கவிதையில் தேசியமும் வன்முறை, இன வன்முறைகளுக்கு எதிராகவும் எழுதப்பட்டது. இப்படியாக தமிழ்காலத்தின் அரசியல் நிலவரையியல்கள் பொருத்து கவிதைகளில் பாடுபொருள்கள் மாறிமாறி வந்தது. இதில் நவீன பின் நவீன கவிதைகள் மற்றும் அதன் கவிஞர்கள் மட்டுமே காலத்தின் அசைவுகளையும் வரலாற்றின் அசைவும் மனித மனதின் அகபுற உணர்வுகளையும் எழுதினார்கள். வெறும் அழகியல் கூறுகளுடன் எழுதிய அரைமாடி மரமண்டைகள் சினிமாவுக்குப் பாட்டு எழுதப் போனார்கள். வேறுவழியில்லாமல் கறுப்புச்சட்டை அணிந்து கொண்டார்கள். அவர்களே அவர்களுக்குத் துக்கம் கொண்டாடிக கொண்டவர்களில் கறுப்புச் சட்டைக் காரர்களைச் சொல்லலாம். இலக்கியப் பிரதிகளை அவர்கள் வெறுக்கத்துவங்கிய பிறகு மக்களிடமிருந்து அவர்கள் அன்னியமானார்கள். சமகாலத்தில் பெரியார் குறித்த அக்கறையையும் கைகழுவிக் கொண்டார்கள். தங்களுக்குச் சௌகரியமாக ஆளும் திராவிடக் கட்சிகளு டன் இணைந்து பொதுப்பணிக்கான்ட்ராக்ட்களில் இணை ந்து கொள்வதோடு சரி அவர்களுடைய அரசியல் இயக்க ங்கள். அவர்களுக்கு வயதும் வழக்குகளும் மொழியின் மீதும் இலக்கியப்பிரதிகளின் மீது ரசனையும் இல்லாமல் போனதே அவர்கள் காற்றாக மாறியதற்குக்காரணம்.
       திராவிட இலக்கியத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்று பெரியாரையும் அண்ணாவை பேருந்து நிலையக் குறியீடுகளாக மாற்றியதுதான். அதிலும் இரண்டு வகை அண்ணாக்கள் எல்லாப் பேருந்து நிலையத்திலும் இருக்கி றார்கள் ஒரு அண்ணா திமுக அண்ணா இனி ஒன்று அதிமுக அண்ணா. மற்றவர்களின் அண்ணாவை மற்றவர் உபயோகப்படுத்தப்படமாட்டார்கள்.
அம்சப்ரியாவின் கவிதைகளுக்கும் திராவிட இலக்கியத் திற்கும் என்ன சம்பந்தம். அவர் இந்த வகைமைகளை யெல்லாம் தன் கவிதைகளில் கட்டுரைகளில் படைப்பு களில் கொண்டுவந்தவர்கள். அரசியல் நிலைபாடுகள்தான் ஒரு படைப்பாளியின் படைப்புகளில் வரும் மாற்றங்கள். ஒருவன் இனியும் தன்னம்பிக்கை குறித்தோ உடல் ரத்த தானம் குறித்தோ முதியோர் இல்லம் குறித்தோ இருபது ருபாய் கவிதைகள் எழுதுகிறவனின் உலகம் அவன் உழலும் சாக்கடையில்தான் இருக்கிறது எனலாம். தன் சாதிக் கவிஞனைத்தவிர வேறொரு சாதி கவிஞனுக்கான அங்கீகாரத்திற்காக பல எண்ணற்றக் கவிஞர்கள்  கடற்கரைப் பழம் பெரும் புலவர்களின் சிலைகளுக்கரு கில் வரிசையில் காத்திருக்கிறார்கள். இந்த சாதியில் பிறந்தமைக்கும் பெருமையும் கீழ்மையும் கொண்டு தன்னை வறுத்தி மெய்வறுத்தம்பாராமல் கண் துஞ்சாமல் இரவு பகல் உழைக்கிறார்கள். பத்திரிக்கை அலுவலகங் களை மாற்றுகிறார்கள். தேசியப்பத்திரிக்கைகளில் சேர்ந்தி ருந்தால் மாநில சுயாட்சி அவசியமற்றது என்கிறார்கள். மாநிலப் பத்திரிக்கைகளில் சேர்ந்திருந்தால் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் தமிழுக்குமாய் உழைக்கிறார்கள். பாவம் அவர்கள் வேறு என்னதான் செய்யமுடியும்.
அம்சப்ரியாவின் இனியொரு கவிதையை வாசிக்கலாம்.
கடலின் கோப்பை நிரம்பி வழிகிறது
கோப்பை நிரம்பி வழிகிறது
துயரங்களில் சிறிதும் இனிப்பற்ற
அத்திரவத்தில்
துளியும் கசப்பில்லை
மீன்களின் சுவாசம்
அலைகளை மீறி
கரைசேர்கிறது
உப்புக்காற்றின்
வெப்பச் சூட்டில்
குளிர்ந்த துயரம்
மென் பனிக்கட்டியாகிறது
ஒரு கோப்பை நிறைய
துயரத்தை
விருந்தாக்கும் யுவதி
கசப்பின் சிநேகிதியாக்குகிறாள்
நள்ளிரவில் சூரிய உதயத்தை
எதிர் கொள்ளவியலாமல்
கடல் தற்கொலையாகிட
கோப்பை கவிழ்ந்து
ஆடையைச் சரிசெய்து கிளம்புகிறாள்
முற்றிய அச்சிறுமி--44

இந்த அரசியல் டிஸ்கோ,கரேத்தே,பிரேக்,டிஸ்கொதோ, பஃப். டேட்டிங், சாட் பாலே நடனம் எதுவும் தெரியாதவர் அம்சப்ரியா. அவருக்குத் தெரிந்தது தமிழும் கவிதையும் கவிதையில் அழகும். வெள்ளந்தியான மனிதர்களும்தான். இதெல்லாம் சந்தையில் செல்லுபடியாகுமா. அவர் எங்களைப் போல குடிக்கப்பதும் இல்லையென அறிந்தேன். சந்தைக்குத் தேவை பலசரக்கு சாமானங்கள். அல்லது பலசரக்குச் சாமானம் விற்கிற கடையில் வேலை செய்யவேண்டும். தமிழாசிரிர்களால் முடியுமா. இந்த ஐம்பதாண்டுகாலத்தில் அதிகம் கேவலப்படுத்தப் பட்டவர்கள் பிராமணர்கள். அடுத்து தமிழாசிரியர்கள். க.அம்சப்ரியாவிற்கு அனுசரனையான கட்டுரையை எந்த விமர்சகனும் எழுதியதை நான் வாசித்த நினைவிலில்லை.
கவிதைகள் இரண்டு நிலைகளில் வாசிக்கப்படுகிறது. நூல் வெளிவருகிற இடம், பொருள், ஏவல், ரிஷிமூலம் நதிமூலம் எல்லாம் பார்த்துதான் வாசிக்கப்படுகிறது. ஒவ்வொரு தளத்தின் மேஸ்திரிகள் அவர்களின் சித்தாள்கள், வாத்தியகாரர்கள், மோளஸ்தர்கள், பெட்டிக்காரர்கள், பந்தக்காரர்கள், பட்டாசுக்காரர்கள், ஒருதலைவிருப்பதாரிகள், உறுமி வாசிக்கிற பத்திரிக்கைகளில் பணிபுரிகிறவர்கள்.  நேர்காணல்கள் தருவதற்கு ஆலாய்ப் பறக்கும் நடனமாடும் நடனசிகாமணிகள்,
நவீன கவிதை உலகத்தை கடந்த பத்தாண்டுகளில் “வளவுகளாக்கிய பெருமை தற்கால கவிதை விமர்சகர் களுக்குண்டு. பொதுவாகப் பட்டியல் போடுவதே கூட சிலரைத் தவிர்ப்பதற்குத்தான் என்பதை நானே ஒரு ஆளுமை பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஒரு மூத்த ஆளுமை சொல்கிறார் “வத வாதன்னு தொகுப்புகள்..குவியுது.“ ஏதோ இவர் பாராபட்சம் பார்க்காமல் அப்படியே வாங்கிக் குவித்து அதற்கு விமர்சனம் அல்லது அறிமுகம் எழுதி அந்தக் கவிஞனுக்கு மரியாதை செய்து விட்டது போல..
அட பன்னாடையே.. அவன் உணர்வை எழுதித்தானே ஆவான்.. அவன் சொல்ல வேண்டியதை அவன் மரணத்திற்கு முன்பாகச் சொல்லத்தானே செய்வான்..  ஏதோ நீதான் பதிப்பகத்தில் சிபாரிசு செய்து ஆள் குறித்து பிடித்து விட்டது மாதிரிப் பேசுகிறாயே...
இந்தக் கிரிக்கெட் கமெண்டரி காலரியில் பழைய வீர ர்கள் அன்றைய ஆட்டத்தைப் பற்றிய விவரணைகள் பேசுவார்கள். இவர்கள ஆடிய காலத்தில் ஒரு வெங்காயமும் செய்யாதவை உலகத்திற்கே தெரியும். ஆனால் தற்பொழுது ஆடுகிற ஆட்டக்காரன் குறித்தும் ஆட்டம் பற்றியும் இல்லாத டெக்னிக்குகளைச சொல்லி ரசிகர்களைக் கடுப்பேற்றுவார்கள். அப்படித்தான் தனக்கே விளங்காத சொற்கள் கண்டு அலர்ஜியாகி அந்த நூலையே தவிர்த்து விடுகிறார்கள்..குறிப்பிட்ட கவிஞர்கள் குறிப்பிட்ட பதிப்பகங்கள் வெளியிடுகிற கவிதை நூலை உடனடியாக வாங்கிப் பெற்று எழுதி சிலாகித்துத் தள்ளுகிறவர்கள்.சிலர் எழுதுகிற கவிதைக்கு மட்டும் ஒருதலைவிருப்பம் தெரிவிக்கிற ஜண்டுபாம் கவிதை வாசகர்கள் பேக் ஐடிகள். “உங்க நூலுக்கு அவரு விமர்சனம் எழுதியிருக்காரு பாத்தீங்களா..“ யார் அவரு..என்றது எந்த நூலுக்கு என்று கேட்கிற ஏர்வாடி ஸ்பைடர் மேன்கள். ஆகாயத்தாமரைகள் போலக் குவிந்திருக்கிறார்கள். ஆனால் இந்தக் கிழட்டு விமர்சகர்களால் கவிதை நூல்கள் விற்பனையாகிறதா வென்றால் அதுதான் இல்லை. “கவிதைன்னா என்னதாண்டா சொல்லித்தொலைங்கடா“ வென்றால்..ஹிஹி..என்பான். பிறகு எதாவது தொலைக் காட்சியிலோ பத்திரிக்கை பேட்டியிலோ ஊர் உலகத்தில் இல்லாத வெள்ளைக்காரப் பெயர்களைச் சொல்லிப் பைத்தியம் பிடிக்கவைப்பான்கள்.   தமிழ்ப்படங்களில் ரவுடிகள் எல்லாம் கடற்கரைக் குப்பத்தைச் சார்ந்தவர்கள்தான் என நிறுவிவருகிற நிலை இருப்பதை அறிவோம். கவிதை உலகிலும் குப்பத்து ரவுடிகளைப் போல ரவுடிகள் அல்லது ரவுடித்தனமான கவிதைகள் தான் தரமான கவிதைகள் என்பதை நிறுவுவதற்கு கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்,  சுகுமாறன். சமயவேல், ஆனந்த், யுவன் சந்திரசேகர், பிரபஞ்சன், விக்ரமாதித்யன் உள்ளிட்ட அவர்களுக்குக் கீழ் சேவகம் செய்கிறவர்களைத் தவிர கவிதைகளில் என்ன பரிமாணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எந்த நிலத்திலிருந்து எந்தப்புதிய குரல் பேசுகிறது என்பதும் தெரியாது. எல்லமே..அப்படிங்களா..அப்படியா. .தான்..ஓஹோ வென்று  பீ மிதித்த காலைப் பார்ப்பது மாதிரி அந்தக் கவிஞனிடம் நடந்து கொள்வார்கள். தவணைத் திட்டத்திற்கு ஆட்களைக் கவருகிற விதமாக எழுதி மேலேத்தி விடுவார்கள். சனஞ்சேராத, சாதி சேராத, சாதியில் சேர்த்திக் கொள்ளப்படாத சில பைத்தியகாரக் கவிஞர்கள் பெப்பளத்தானுகளைப் போல வாழ்நாள் முழுக்க எழுதிக் கொண்டும் நூல்களை சிறுபத்திரிக்கைகளை நடத்திக் கொண்டே குண்டி வத்திச்சாக வேண்டியதுதான்.
அந்தக் காலத்தில் பாரதி, பாரதிதாசன் புதுமைப்பித்தன் ந.பிச்சமூர்த்தி, செல்லப்பா, வறுமையில் செத்தார்கள் என்றால் நாடே சிரமப்பட்ட நாட்கள். இன்றைய காலத்திலும் அது நிகழவேணடுமா. மிகப்பெரும் தமிழ்ப்பரப்பை தமிழக்கவிதையின் பரப்பை முப்பது நாற்பது பேர்தான் நிர்ணயிப்பதா. நான்கைந்து இடைநிலை இதழ்களும் ஒரு சில தொலைக்காட்சிகளும்தான் முடிவு செய்வதா தமிழக்கவிதையை. இது குறித்து எந்தக் கண்டனமும் தெரிவிக்காமல் சுகர் பிபி கொழுப்பு மாத்திரைகளும் தூக்கமாத்திரைகளையும் எந்த நேரமும் சாப்பிட்டுத் தூங்குகிற வயோதிகத் தமிழக்கவிகளை விமரிசகத் தூதர்களை நம்பிக் கொண்டிருக்கலாமா.
கவிதை குறித்த விமர்சனங்கள் அறிமுகங்கள் அவசியமா அல்லது அவசியமே இல்லை என்பான்கள். நல்ல வாசகன் எத்தனை யுகமானாலும் கண்டு கொள்வான். என்பான்கள். அவனுடைய கவிதைகள் மீட்டெடுக்கப் பட்டுவிடும் என்றுதான் கருத நினைக்கிறார்கள். அது இந்தக் கேசவமூர்த்திகள் இருக்கும் வரை நடக்காது. நம் திடுமங்களும் பறைப்பலகைகளும் அணலில் காய்ந்து கொண்டேயிருக்க வேண்டும் நண்பர் அம்சப்ரியா அவர்களே..கவிதை விமர்சகர்கள் எல்லாம் பெரு நகரத்தின் ஓட்டல்கள் முன்பு இருக்கிற எச்சிலைத் தொட்டிகளுக்கருகில் அமர்ந்திருக்கிறார்கள் அல்லது அங்குமில்லை. நான் அறிந்த வகையில் குருப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி,ராகு கேது சனீஸ்வர பகவான் கோவில் களின் தூதுவர்களாக டிராவல் ஏஜென்சிகளாக மாறியதாக கேள்வி. எல்லாம் இந்த இரண்டு ஆண்டுகால உழைப்பின் பயண். சிலர் ராசி பலன்கள் தொலைக்காட்சிகளுக்காக எழுதிவருகிறார்கள், எனும் தகவல்கள் வந்துள்ளது. எங்கிருந்தாலும் வாழ்க..அவர்கள் அரசியல் வெல்லட்டும். அவர்களின் ஆக்கங்கள் வெல்லட்டும்..அவர்கள் நினைத்து விரும்பிய புகழும் செல்வமும் கொழிக்கட்டும்.. க.அம்சப்ரியா போன்ற தமிழாசிரியர்களுக்கும் ஏனைய பிற மொழிப் பைத்தியக்கவிஞர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கட்டும். தக்க தண்டனை கிடைக்கட்டும்..“இறைவா பரம்பொருளே..ஈசனே..வேலவா..விண்ணவா..“
“வாழ்க தமிழ்..வெல்க தமிழ்..
எனினும் வளர்ந்த நாடுகளில் அல்லது வளர்ந்து கொண்டிருக்கிற நாடுகளில் கவிதை உள்ளிட்ட இலக்கியப்படைப்புகள் பெறுகின்ற அங்கீகாரம் நமக்கு ஆச்சர்யம் தருபவை. அந்த இலக்கியப்பிரதி நிச்சயம் ஏதாவது ஒரு புதிய செய்தியை மறுமலர்ச்சிக்கான வழியைத் தெரிவித்து இருக்கும் என்றுதான் அங்கீகரிப்பார் கள். ஆனால் வளர்முக நாடுகளில் இலக்கியப் பிரதிகளுக் குள்ள நிலையென்பது வேறு. தமிழில் நிலவுகிற தரித்திர காலத்தில் ஒர் கவிஞனின் தொகுப்புகள் மெஜாரிட்டி இருந்தும் வெற்றிபெறாத மசோதாக்கள் போலத்தான்.
அம்சப்ரியாவின் இந்தக்கவிதை இந்தக் காலத்தின் அபுனைவை விமர்சிக்கிறது.
துரோகம்

அவன் அந்த இடத்தில்தான்
தன்னை அச்சுறுத்திய
அதனைக் கடந்து போனான்
ஒவ்வொரு முறையும்
அவ்விடத்தைக் கடக்கிறபோதெல்லாம்
படம் எடுத்தாடுகிறது
இல்லாத சர்ப்பம்..-பக் 45
     
கவிதை உலகளாவிய பாடுபொருள் கொண்டவை. அதன் மொழியும் நடையும் உணர்த்தும் கருப்பொருளும் தனி மொழிக்கோ தனி அடையாளத்திற்காகவோ அல்ல. அதன் உள்ளார்ந்த பொருளும் அதன் செயப்பாட்டு வினையும் காட்சிகளும் உலகின் நிலப்பரப்பின் அத்துனை செயல்பாடுகளையும் கவிதை உள்வாங்கியே பேசுகிறது. தமிழில் எழுதப்படுகிற கவிதையின் காலமும் உணர்வும் தமிழருக்கானது மட்டுமல்ல. கவிஞன் தமிழனுக்காகவும் தமிழ் மொழியின் பலத்தைக் காட்ட மட்டுமே எழுதுவதில்லை. தமிழில் உலக உயிரிகளின் இயல்புகள் பேசப்படுகிறது என்றுதான் நாம் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
அம்சப்ரியாவின் கவிதைகளை எத்தனை பருவங்களாக வாசிக்கிறேன் என்பது நினைவிலிருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சி,தொழில் வளர்ச்சி,தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி உள்பட பல்வேறு காலநிலைகளின் சூழல்களில் வாசித்து வருகிறேன். தமிழ்நாட்டில் அதிக காலமாக கவிதை எழுதிவருகிறவர்களில் அவரும் ஒருவர். மிக அதிக காலமாக கவிதைகள் என்ற பெயரில் எழுதிவருகிற வர்கள் என்ன எழுதுகிறார்கள் எப்படி எழுதுகிறார்கள் என்பதை என்னுடைய முந்தைய கட்டுரைகளில் சொல்லியிருக்கிறேன். கவிதைகளை நேசிப்பவர்களின் பட்டியலில் முதலில் அவர் வருகிறவராகவே அறியப் பட்டிருக்கிறார். இதற்கு அவர் பெற்ற ஏழு உயரிய விருதுகள் சாட்சி.
பொள்ளாச்சி இலக்கிய வட்ட நூல் வெளியீட்டு விழாவில் பேசிய உயர்திரு.எட்வின் அய்யா அவர்கள் அம்சப்ரியா சரியாக அங்கீகரிக்கப்பட வில்லையென்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கவிதை அவருக்கு உரிய அன்பையும் தகுதியான இடத்தையும் வழங்கியிருக்கிறது என்பதை நான் உள்ளன் போடு எட்வின் ஐயாவிற்குச் சொல்லிக்கொள்வேன். சில தொகுதிகளில்தான் வாக்கு வங்கி சரிந்திருக்கிறது. அது சரிசெய்யப்படவேண்டுமென்றுதான் இப்பொழுது துடைப்பத்தை எடுத்திருக்கிறோம்.
அம்சப்ரியாவின் கவிதைகளில்தான் குழந்தைமையின் குழந்தைமையும் அழகுணர்ச்சியின் அழகுணர்ச்சியும் அன்பின் அன்புடைமையையும் நிலவியல் காட்சிகளின் நிழல்களும் பரிமாணங்களையும் காணமுடியும். அதன் நிறங்களில் அம்சப்ரியாவின் அனுபவங்கள் தென்படும். நெடிய அனுபவமிக்க சொற்களாலானது அவருடைய கவிதைகள்.
விளையாட்டு மைதானத்தில்
தொலைத்த தன் ஒரு ருபாயைத்
தேடிச் சலித்த குழந்தை
விசும்பலோடு நகர்ந்ததை
எதிர்கொண்ட அம் மைதானம்
ஒரு பணம் காய்க்கும் மரத்தையும்
விரும்பியபோது
காசுகளைத் தரும்
ஜாமின்ரி பாக்ஸ் ஒன்றையும்
குழந்தையின் கனவுக்கு அனுப்பி வைத்தது
படுக்கையெங்கும்
காசுகள் நிறைய நிறைய
தூக்கத்தில்
சிரித்துக் கொண்டேயிருந்தது குழந்தை!- பக்-54

       குழந்தைகளின் இழப்புகள் பற்றிய நம் சிந்தனை கள் நம்மில் எப்படி உதிக்கிறது. நாம் நம்முடைய எதிர்பார்ப்பில் குழந்தைகளின் இழப்புகளை எப்படி மதிப்பீடு செய்கிறோம். நம் அவர்களுக்குரிய அவர்கள் வேண்டுகிற இறைஞ்சுகிற பொருட்களை நாம் வாங்கித் தந்திட முடிகிறதா நம்மால். ஒரு ருபாயை மட்டுமா குழந்தை தன் வாழ்நாளில் தொலைக்கிறது.
அம்சப்ரியாவின் கவிதைகளின் மீது குற்றம் குறைகளைச் சொல்லமுடியாதபடியாக எழுதியிருக்கிறார். மிகுந்த அடர்த்தியும் சொல்லாக்கமும் சிறுகதைகளின் பாணியி லும் அமைந்திருக்கிறது. அதனால்தான் தமிழ் கூறும் நல் உலகத்தின் மீதும் அம்சப்ரியாவின் மீதான கவனம் திரும்ப வேண்டுமென்பதற்காக சமகால இலக்கிய அரசிய லையும் பொருளியல் அரசியலையும் முன்வைத்திருக்கி றேன்.
கவிஞனின் சொற்கள் டண்டணக்காவிற்கு ஆடுதல் அல்ல. அவன் டான்ஸ, பாட்டுப் போட்டிகளுக்கான ஜட்ஜஸ் அல்ல. அவன் இந்த சமூகத்தில் வாழ்கிறவன். ஒரு ஐந்து வயது குழந்தையின் மேதமை இன்னும் வளர வேண்டும் என்று துன்புறுத்துகிற நடுவர்களைப் போலத்தான் நம் இலக்கியப் பிதாமகர்கள் என்று பீத்திக் கொண்டிருக்கிற அடிமாட்டு யாவாரிகள் கவனத்திற்குச் செல்லவேண்டும் என்பதற்காக கொஞ்சம் மசாலா சேர்க்கப்பட்டுள்ளது. ஐந்து வயது குழந்தையிடம் கலைகளின் நுட்பத்தை, சாரீரத்தை, அழகை. பாவனையை, வேதியியலை, புவியலை, அரசியலை, கண்க்கியலை, வேதபரிபாஷபுரணத்தை,இன்னும் இன்னும் இன்னும் என்று எத்தனை சித்ரவதையை நாம் செய்கிறோம். தூய முதல் தர இலக்கியமென்று குப்பைக் கூளங்களை நிறுவுறுகிற தடிமாடு மலைமாட்டு முண்டங்களிடம் நாம் சரியானவற்றை, செவ்வியல் தன்மை வாய்ந்த அம்சப்ரியாவின் கவிதைகளைப் போன்ற கவிதைகளையும் கவிஞர்களிடமும் எதிர்பார்ப்பதில் தவறொன்றுமிருப்பதாக எனக்குப்படவில்லை.
ஆகவெ இப்பொழுது பாராட்டும் பகுதி...எங்கே எல்லோரும் நான் சொல்வதைத்திருப்பிச் சொல்லுங்கள்..
வாழ்க தமிழாசிரியர்கள்..வெல்க தமிழ்..வளர்க திராவிடக்கட்சிகளின் ஒற்றுமை..பெரியார் அண்ணா புகழ் ஓங்கட்டும்..புரட்சித்தலைவர் நாமம் வாழ்க..டாக்டர் கலைஞர் நாமம் வாழ்க...மக்கள் முதல்வர் வாழ்க..தமிழக முதல்வர் வாழ்க... தமிழ்நாட்டு குருமகா சன்னிதானங்கள் வாழ்க...மடங்கள் வாழ்க..பிராமணர்கள் வாழ்க. மலையடிவாரங்கள் வாழ்க.....
தேவநேயப் பாவாணர் வாழ்க..மறைமலையடிகள் வாழ்க. உ.வே சா. வாழ்க..ஜீவா வாழ்க..குன்றக்குடி அடிகளார் வாழ்க..மபொசி வாழ்க, மு.வ.வாழ்க. சி.பா. ஆதித்தனார் வாழ்க..சரத்குமார் வாழ்க..சத்யராஜ் வாழ்க. மணிவண்ணன் வாழ்க..தி க  சி வாழ்க வ.வே.சு ஐயர் வாழ்க..
ஆர்.கே..சிதம்பரம் செட்டியார் வாழ்க.. பத்து மாநகராட்சிகள் வாழ்க..மேயர்கள் வாழ்கள் கவுன்சிலர்கள் வாழ்க..குப்பை டிராம்கள் வாழ்க..துப்புறவாளர்கள் வாழ்க..
குப்பைகள் வாழ்க..குடும்பிகள் வாழ்க..இலக்கியம் வாழ்க..
அவர் வாழ்க இவர் வாழ்க.. அட எல்லாருமே வாழ்க வாழகப்பா.....
வெளியீடு

பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
பில்சின்னாம்பாளையம்
சமத்தூர்-642 123
பொள்ளாச்சி
விலை ரூ-70- பக் 95

90955 07547
98422 75662










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக