ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

கவிஞர் யாழியின் ”கேவல்நதி” குறித்து

-         பகலறையின் தாழ்ப்பாழ்
-         கேவல் நதி
யாழியின் நான்காவது கவிதை தொகுப்பு குறித்து
இளஞ்சேரல் 
ஒரு முறை மலைப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். பாதையின் ஒரு புறம் பெரும்பள்ளங்களும் மரங்களின் உச்சிகளும் தலை வனத்தில் நீண்ட வெள்ளி முடிபோல சிறுகச் சிறுகக் கொட்டுகிற அருவி. இவ்வனத்திற்கும்  அவ்வனத்திற்குமிடையான மலைச்சரிவுகளுக்கு அப்பால் காதலில் திளைத்துக் கொண்டிருக்கிற பறவைகளை பறவைகளின் மூதாதையர்கள் தங்கள் குரலில் அடிக்கடி அழைத்துப் பார்த்துக் கொள்வதும் பதிலுக்கு இதே இந்த மலைப்பகுதியிலருகில் தான் இருக்கி றேன் நிலப்பகுதிக்குச் சென்றிடவில்லை எனும் பதிலை ஷெனாய் மொழியில் கங்குமைனா சொல்கிறது. அங்கே என்னவாம் பிரச்சனை என் பதாக பற்பல பறவைகள் பேசுகிறது.
        பாதையில் எம் வாகனம் மூச்சிறைத்துக் கொண்டு ஏறுகிறது. பாதைகளின் திருப்பங்களுக்கு ஏற்ப இரு மருங்கிலும் நீண்டு குறுகுகிற சிறுவழிகளில் இரு சக்கரவாகனங்கள் நுழைந்து லாவகமாகத் தப்பித்து கீழிறங்குவதும் மேலேறுவதுமான சாகசங்கள். இருள்,வெயில்,பச்சயம், வாய்ப்புக் கிடைக்கும் போது பனிப்பொழிவும் கொஞ்சம் சிறுமழைத் தூறல்களுமாக பகலின் மலைப்பொழுது நகர்கிறது.
   மேலே ஏறுகிற பெரும் பாரம் கொண்ட  டிரக் லாரிகள் தன் எல்லா குதிரைத்திறன்களையும் இசைத்து ஏறிட முற்படுகிற வேதனை கண்டு கிழிறங்கி வருகிற மற்ற நான்கு சக்கரவாகனங்கள் சற்றே மேலேயே ஒதுங்கி நின்று கொள்கிறது. அந்த பாரவண்டி ஓட்டுநர் தனக்கு வழிவிட்டு மேலேயே தான் செல்லும் வரை காத்திருக்கிற அவ்வண்டியின் ஓட்டுநர்களுக்கு நன்றி சொல்லுகிற விதமாக மெல்லிய கீபோர்ட்டின் ஸ்வரக்கட்டை ஒன்றை மீட்டிடுவதைப் போல் நன்றியை மீட்டுகிறார்.
          இம்மலைக்காற்றில் தனக்கான நன்றி ஒன்று மிதந்து வருகிறது என்பதை அறிந்த ஓட்டுநர் பதில் நன்றியை இசைக்கிறார். பாதையைச் சௌகரியமாக கடந்து போன பின்பு மறுபடியும் ஒரு நன்றி. பதிலுக்கு இவரிடமிருந்தும். பெருமலைப்பாதைகளில் நித்தமும் நடந்து கொண்டிருக்கிற மொழி உரையாடல் இது. இந்த உரையாடல்களுக்கான இசைமொழியேதான் மொழிகளுக்கப்பாலான ஆன்மாவின் நன்றியறிதலாக இருக்கிறது என்பதை நாம் அறிந்தும் உணர்ந்திருக்கிறோமா. இந்த உலகில் மொழிகளைப் பயண்படுத்தாமலே உணரவைக்கப்படுகிற இசைமொழிகள் ஏராளமாகவே உள்ளது. கவிதைகளை எழுத இத்தொழில் முறைகள் கவிஞர்களுக்குப் பயண்படுகிறது.
         வாழ்வின் எல்லாப்பயண்பாட்டுத் தளங்களையும் வெட்டி முற்றாகத் தள்ளிவிட்டு பெருநகரத்தின் பொருட் சிக்கல்களில் ததும்புகிற மனங்கள் தனது கவிமனத்தைக் கண்டடைய ஒரு மலைப்பாதை போன்ற கவிஉலகை உருவாக்கிக் கொள்கிறது. கவிதை எழுதப்படுவது என்பதே தன்னை விடுவித்துக் கொள்ளவே. பலரின் தயவய எழுச்சிகளே உணர்வு கூடுதுறையில் மையப் படுத்தப்பட்டு பொதுவிவாதத்திற்கு வருகிறது.
        யாழியின் கவிதைகள் இவ்வகையின் சாட்சியங்கள். இயல்பாக விரித்துரைக்க முடியாத சம்பவங்களை அனுபவங்களை அவர் சித்திரமாக்கி விடுகிறார்.
கமலஹாசனும் ஜெயப்ரதாவும்
நடந்து கொண்டிருக்கிறார்கள்
பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்கறது
இது மௌனமான நேரம்
ஓடாத அந்தத்தேரின் சக்கரங்களுக்கிடையே
அகப்பட்ட மௌனம்
சிதைந்து வழிகிறது
தொலைக்காட்சிப் பெட்டிவழியே
அதில் நிரம்பத்துவங்கியது என் அறை
இப்போது
வேறிடம் தேடுகிறது
என்னறைக்குள்ளிருந்த மௌனம் –பக் 12
          மௌனம் சத்தம் அன்றி இறைச்சல் என்பதெல்லாம் ஒரே உணர்வுதான். எங்கும் இறைச்சலில்லாமல் இல்லை.கண்கள் மூடி கணம் அகமௌனத்தை யோசித்தால் நரம்புகளுக்குள் பாய்ந்து கொண்டிருக்கிற இரத்த ஓட்டத்தின் மௌனம் நமக்குப்புலப்படும். வெறுமனே ஓடாமல் நிற்கிற சக்கரங்களின் மௌனம் எனக்கு வேறுபல சிந்தனைகளைத் தோற்றுவிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு விசைத்தறியாளர்கள் காலவறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அதுவரையிலும் இரவு பகலாக ஒலித்துக் கொண்டிருந்த விசைத்தறிகளின் சத்தம் நின்று போய்விட்டது. இந்த மௌனம் பயங்கரமானதாகவும் கொடுரமானதாகவும் இருந்தவை. பலநாட்கள் நீடித்த இந்தப் போராட்டத்தின் மௌனம் மக்களை உறங்கவிடாமல் செய்துவிட்டது. இந்த விசைத்தறிகளின் சத்தம்தான் அவர்களுக்கான தாலாட்டாக, பாடல்களாக தன் உணர்வுகளை இயல்புகளைப் பேசிய சத்தமாக அமைந்திருந்தாக கூறினார்கள். தங்களால் உறங்க முடியவில்லையென்று இரவெல்லாம் சாலைகளில் திரிந்தவர்கள் கூறினார்கள். ஒரு மாதத்திற்கும் மேல் நீடித்த இந்தப் போரட்டத்தினால் உளவியல் அடைப்படையில் மக்கள் தங்களால் இந்த விசைத்தறிகளின் சத்தமின்றி வாழவே முடியாதோ என தங்கள் பேட்டிகளில் தெரிவித்தார்கள்.  இந்த அதிபயங்கர மௌனம் சிக்கலானது. கோரிக்கைகளைக் கேட்காத அரசின் தீவிர மௌனங்களும் இப்படியான தினுசுதான்.
       திடப்பொருள்களின் வழியாக நாம் காணும் மௌனங்கள் நம் அக இறைச்சல்களின் திறப்பாக அமைகிறது. எப்பொழுதும் நாம் கடைப்பிடிக்கிற மௌனங்கள் அதிகநேரம் தாக்குப்பிடிக்க முடியாத மௌனங்கள் என்ற நிரம்பக் கொட்டிக்கிடக்கிறது நம்மிடம். ஒரு நிலக்கடலைக் கூட்டைச் சட்டென்று நிலத்தில் கொட்டி இரு வேர்க்கடலைகளைச் சுவைத்துப் பார்க்கிற மௌனக் காத்திருப்பின் நீளம். யாழியின் கவிதைகளின் அளவுகள் இவ்வளவே. முகநூல் பக்கங்களில் அவர் பதிந்த ஏராளமான கவிதைகளில் இந்த மௌனத்தொலைவுகள் ஊடாக இருப்பதைக் காணலாம்.
இதே அறை படிமக் காட்சியில் வேறொரு கவிதையில்
நெடுங்காலத்திற்குப் பின்
அந்தச் சாளரத்தைத் திறந்தேன்
நேற்றுகளால் நிறைகிறது அறை
            நம் காலத்திலும் முந்தைய காலத்திலும் அறைகள் குறித்த கவிதைகள் உருவாக்கியிருக்கிறோம் அறைகள் பற்றிய கதைகளும் புனைவுகளும் புத்தாக்கப்பிரச்சனைகளையும் அறைகளுடன் ஒத்திசைவு ஏற்படுத்தி அறைகள் பற்றிய சுவராசியங்களில் நமக்கு மிகுந்த ஈடுபாடும் கிச்சு கிச்சும் உண்டு. சி மோகனின் நல்ல தலைப்பு நினைவுக்கு வருகிறது எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை என்பதாக. என்னதான் நட்பு உறவு சூழ இருப்பினும் இறுதியில் உடன் உறங்குவது அறையே. அறையின் கணலில் நமக்குப் பல செய்திகள் விசயங்கள் கருத்துகள் வந்து கொண்டே இருக்கிறது. அறை நம்முடன் விதண்டாவாதம் செய்வதில்லை. அதன் மௌனமே நம் பிரச்சனைகளுக்கு நாம் எடுக்கும் முடிவுகளை ஆமோதிப்பதுதான். அதனாலே அறைகளை நமக்குப் பிடிக்கிறது.யாழியின் கவிதைகளில் அவர் ஈடுபடுத்துவது குறைந்தளவிலான சொற்களையே கவிதைப் பேச்சுவார்த்தைகளுக்கு தேர்வு செய்வதுதான். மிகக் குறுகுறுகிய இடவசதியில் பொருள் படுத்துவது அவருக்குரிய கலை. அதில் அவர் தீவிர விருப்பம் கொண்டவர் என்பதை அறிவேன்.

தொட்டிக்குப் பழக்கப்பட்ட மீன்
கடலுக்குள் தேடுகிறது
செவ்வகத்தை...
சட்டென அதிர்ந்துதான் போனேன். பழக்கங்களுக்க அடிமையாவது ஒன்று. அதே பழக்கத்தை சென்ற இடத்தில் தேடுவதற்கு முயற்சிப்பதும் அப்படித்தானே. முன்னூறு வருடம் ஆண்ட வெள்ளைக்காரனைப் பிரிய மனமில்லாமல் நாம் நீங்களே இருங்கள்..எங்களுக்கு சுதந்திரம் வேண்டாம் என்று சொன்னவர்கள்தானே நாம். சுதந்திரநாளைத் துக்கநாள் என்று அறிவித்தவர்கள்தானே நாம்.
   இந்தக் கவிதையை மீண்டும் வாசித்தபோது. ஒரு முறை அலுவலகத்திற்குள் ஏதேச்சையாக ஒரு புறா ஒன்று நுழைந்து விட்டது. நாங்கள் உடனடியாக காற்றாடிகளை நிறுத்திவைத்தோம். எதற்காக அந்த உணர்வு ஏற்பட்டது என இன்றளவும் எனக்குப் புரியவில்லை. அலுவலக பணியாளர்கள் அச்சம் கொண்டு தவித்தார்கள். அவர்கள் பார்க்காத விபத்துகளா. எல்லாரும் சன்னல்களின் வழியாக அந்தப்புறாவை நகர்த்த முயன்று தோற்றார்கள். அந்தப்புறா நெத்துக்குத் தலாக கால்கள் பற்றி சுவற்றிலேயே பீதியுடனும் மூச்சுக் கேவக்கேவ பதறிக் கொண்டிருக்கிறது. அந்தப்புறா தன் ஆகாயம் தொலைந்து போய்விட்டது அல்லது அந்தர வெளி தீர்ந்து போய்விட்டதோவென பதறியது. எனக்குப் புறாப் பழக்கம் இருந்ததால் அதை மிக சாதுர்யமாக ஏமாற்றி அருகில் சென்று பிடித்து வெளியே கொண்டு வந்து விஸ்தாரமான ஆகாயவழிக்குக் கொண்டு வந்து விட்டதும் விருட்டெனப் பறந்து போனது.

யாழி இந்த தொகுப்பில் பற்பல புறாக்களை என் அகத்துக்குள் அனுப்பி வைத்திருக்கிறார்..ஒவ்வொன்றாக வெளியிலெடுத்து அனுப்பவேண்டும்..
வாழ்த்துகளுடன்

வெளியீடு-உயிர்மை பதிப்பகம்
“கேவல் நதி”- கவிதைகள் ஆசிரியர்- யாழி
பக் 64-விலை ரு-60
11-29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம் சென்னை-99763 50636



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக