செவ்வாய், 10 மே, 2016

கடங்கநேரியான் கவிதைகள்

“சொக்கப்பனை“
“வியாபகம் மற்றும் வியாப்பியம்“
கடங்கநேரியான் கவிதை நூல் குறித்து
        
கவிதைகளில் எது நல்ல கவிதை எது கவிதை அல்லாத கவிதை எனும் விவாதம் என்றுமே இருக்கும். ஏற்றத் தாழ்வுகளும் சமூகத்தில் மேலோர் கீழோர் வசதி படைத்தோர் அதிகாரம் படைத்தோர் நிலமுடையோர் நிலமற்றோர்  இவ்வடுக்குகள் தீர்ந்து மறையும் வரையும் இதுவே நல்லது இது முறையற்றது எனும் மாறிகளும் மாறிலிகளும் ஊண் குறுத்துகள் போலுதித்துக் கொண்டே இருக்க வாய்த்தவை.
        
சமணர்கள் கழுவேற்றப் பட்ட துயர் வரலாற்று காதையை நினைவு படுத்தப் படுகிற கலாச்சாரப் பண்பாட்டு நிகழ்வாக இந்த சொக்கப்பனை ஏற்றுகிற நிகழ்வு நடந்து வருவதை நினைவு கொள்ளவைக்கிற தலைப்பு.. நந்தனாக, ஏகலைவனாக, புத்தனாக, நந்தியாக, பன்றியாக, கழுமரமாக இப்படியே தன் ஆன்ம பலத்தை புனைந்து கொள்கிற கவியாக இத் தொகுப்பில் அறியமுடிகிறது.

கொய்வதினும்
கொய்யப்படுவதே விருப்பமானதெனக்கு
வேல் கம்பு
நெஞ்சு கீறுவது வரம்
எதிர்பார்த்து நிற்கிறேன்
மாரிக்கால தவளைகளின் பாடலைப் பாடுகிறேன்
சர்ப்பங்கள் வளைக்குள்
ஒடுங்குகின்றன
கொள்ளிக் கலையமுடைத்து
நீர்க் கடனைடைக்க
இரண்டு மகவுகள் உண்டெனக்கு
மாயவலையறுக்கும் சூக்குமம் அறிந்தவை
என் குளத்து மீன்கள்
இறுதியாத்திரைக்குத்
தயாராக நிற்கிறேன்
எதிர்திசை பார்த்து
ஆனாலும்
உங்களது கண்கள்
என் முதுகிலேயே........ பக்-44
    கடங்கநேரியானின் மூன்றாவது கவிதை தொகுப்பில் உள்ள கவிதைகள் முழுக்கவும் அரசியல் அறக்கோட்பாடுகளின் வழியாக சமூகஇயலின் புனைவுகளைப் பேசுகிறவை. இயற்கை களவையுயும் நீர்நிலை மேலாண்மையை பேசுகிற குடியாக இக் கவிஞன் இருக்கிறார். தான் வாழ்கிற நிலத்தின் மலைகளின் நீரியல் ஆழங்களை, காற்றில் செயற்கையாக கலக்கப்படுகிற நச்சுகள் பற்றியும் கவிதை பேசுவது அவசியம்.
     
தனிமை,காமம்,சுயகழிவிறக்கம்,திணிக்கப்பட்ட ஏழ்மை, நிராகரிப்புகள் தீவிரமாக அண்டும் பயங்கரங்கள் பற்றியும் கவிதைகள் உண்டு. நீரின் அவசியத்தை தீவிரமான பிரச்சாரமா கவே பல வரிகள்.

கவிதைகள் கருத்துகள் சொல்வதற்கும் தத்துவச்செறிவுகள் அகச்சிக்கல்களை எழுதுவதும் மட்டுமல்ல மேற்சொன்ன புற நிலைகளும் பற்றி சமஅளவில் கவிதைகள் எழுதப்பட்டுதான் வருகின்றது. சமூக கொந்தளிப்புகள் ஏற்படுகிற பொழுது இப்படியான கவிதைகளே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன என்பதை தமிழ்கூறும் நல்லுலகம் அறியும்.
தமிழ் கவிதைகளில் அகத்திற்கும் புறத்திற்கும் சரிசம அளவில் முக்கியத்துவம் அளித்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பசியின் நிவாரத்திற்கான போர் என்பதையும் பசி ஆறியபின் உரையாட வேண்டிய கலைகள் குறித்த ரசனையும் இவ்விரண்டுமே எது முதன்மை என்பதை ஆய்வதைவிடுத்து இரண்டும் அவரவர் பசி ரசனையும் குறித்த ஆர்வமும் அறிவும் குறித்தவை. நம்மிடம் பொதுமக்களுக்காக பேசுதல் பேசுதல் எழுதுதல் என்பதைக் கூட அநாகரீகமானவை. அறக்கோட்பாடு களுக்கு பொருந்தாதவை எனும் கருத்துகள் உண்டு. நிலவுடமையின் கருத்துகளும் சாதிய மத நிறுவனமயத்தின் கருத்துகளும் பொதுமக்கள் ரசனையில் பொதுகவிதை ரசனையில் முழுமையாக விரவியுள்ளது என்பதையும் கவிதை ரசனை பேசுகிறபொழுது நாம் கவனத்தில் கொண்டால் மிக எளிதில் நல்ல கவிதையை ரசித்துவிடலாம். இதெல்லாம் கவிதையா எனப் புறக்கணிக்கிற கவிதையில் உள்ள கவிதானுபவம் மேலோச்சி நிற்கிற தரிசனத்தையும் காணலாம்.

முன்னுரையில் கவிஞன் எழுதி வைக்கிற சொற்களும் உவமைகளும் கடப்பாடுகளும் சொல்லியே ஆகவேண்டிய பிரச்சனைகள் முக்கியமானவை. இங்கு கடங்கநேரியான் வைத்துள்ளவை யென்பதை நீங்கள் வாசித்தால் கவிதைகளை வாசிக்கும் போது பொதுரசனையும் கவிதைரசனையும் புரிந்து கொள்ளலாம்.

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே
வித்திவான் நோக்கும் புன்புலம்
கண்ணகன் தாட்குஉத வாதே அதனால்
அடுபோர்ச் செழிய, இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின்  நீர்நிலை
பெருகத்தட்டோர் அம்ம,
இவண்தட் டோரே,
தள்ளா தோர்இவண் தள்ளாதோரே..
 குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு நீரின் அவசியத்தை அதனைக்காக்க வேண்டிய கடமையை அறிவுறுத்தியிருக்கிற கவிதை. இந்த நூலின் முன்னுரையில் இக்கவிதையைப் பயன் படுத்தியிருக்கிற காரணம் நமக்கு எளிதில் புரிந்து கொள்ளமுடிகிறது. அரசனுக்கும் மன்னர்களுக்கும் குறுநிலமன்னர்களுக்கும் குடிகளுக்கும் அருகில் மிக அருகில் கவிதை இருந்துள்ளதை அறியலாம். தற்கால கவிதை அரசுகளுக்கு அருகில் உள்ளதா..அன்றி எனில் ஏன் இல்லை எதன்பொருட்டு விழுந்து போனது இவ்விடை வெளி..ஓரிடத்துக் கவிதையில்

சொற்கள் அனைத்தும் தீர்ந்து
விட்டதாவெனக் கேட்டாள்
ஸ்பரிசம் ரயில் பூச்சியெனச்
சுரைக் குடுவைக்குள்
இருண்டு கிடக்கிறதென் காலம்.. பக்-28
    
நீர் பற்றிய படிமங்கள், நீரைக்குறித்த புனைவுகள் அதிகமான வரிகள். உணவும் நீருணவும் பற்றிய சொல்லாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளது. இதன் தாக்கத்தைப் பற்றிய அறிமுகத்தை தன் உரையில் குறிப்பிடுகிற பொழுது புத்த தேவன் தோற்றம் பற்றிக் கூறுகிற கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் கவிதையான
“பெருங்குள மருங்கில் சுருங்கைச்
சிறு வழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையொடு உயிர் கொளப் புகும்

“சுருங்கை“ என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய் அதாவது பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒரு புறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன் தரும் அதுபோல செவித்துளை வழியாக நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இக் கவிதையின் பொருள். சமகாலத்தின் அரசியல், சமூக எதிர் நிகழ்வுகள் பற்றிய தனது நிலைப்பாடுகளைத் தனது கவிதைகளுக்குள் பேசியிருக்கிறார்.
     
ஏற்கெனவே குறிப்பிட்டது போல் ஏற்றத்தாழ்வுகள் பூமிப்பரப்பைப் போல நிலவடிவமைப்பு போல எதிர் கவிதை ஆக்கம் என்பது புறத்திணையில் எழுதப்படுகிறவைகள். கடங்க நேரியான் கவிதைகள் நிலவியல் சூழல் கொள்ளைகளை, நிறுவனமயப்படுத்தி பெருஞ்சுரண்டல்களை நடத்தும் அரசியலையும் சாடுகிறார். சில கவிதைகள் முழுமை பெற்ற பிறகு தொடர்வதும் கவிதைகளுக்குள் பொருந்திக் கொள்ளாத தன்வயப்படுத்தப்படுகிற அகச்சிக்கல்களையும் சேர்த்து குழப்பிக் கொள்வதையும் குறிப்பிடவேண்டும்.
      
எனினும் எதிர்நிலைக் கவிதைகளின் பதிவுகள் சரிக்குச் சரியாக தமிழ்க் கவிதையில் பதிவாகியே வருகிறது. சமூக ஏற்றத்தாழ்வுகளின் பாதிப்புகள், பண்பாட்டுச் சீரழிவுகள் பற்றி யும் கவிஞர்கள் மொழியின் ஓழுங்கும கட்டமைப்பும் துவங்கி காலத்திலிருந்து எழுதுகிறார்கள். அவ்வரிசை கவிதைகளும் சமகாலத்தின் பதிவுகளை ஒப்படைக்கிறது.
      
கவிதையாக்கம் செம்மையான கவிதைகள் பல உள்ளது. பனை மரங்களைக் காணும் போதெல்லாம் தோன்றுகிற கவிதைகள். இவ் வெயில் காலத்தின் மரநிழல்களில் திசைகள் விட்டு திசைகள் மாறி வந்து பெருநகரத்தின் மர நிழல்களில் குவிக்கப்படுகிற நுங்குகளிலும் பதநீர்த் தாழைக் குவிகளில் கவிதைகள் தென்படுகிறது. சொக்கப்பனையாகிற நெருப்பின் தகிப்பும் சொற்களில் சுடுகிறது.சீத்தலைச் சாத்தனார் நெருப்பு குறித்து பேசுகிற பொழுது நெருப்பும் புகையும் ஆகிய இரண்டில் நெருப்பில் புகை அடங்கித்தோன்றும். இதனால் நெருப்பு வியாபகம். புகை வியாப்பியம் எனப்படும். அதாவது ஒன்றில் ஒன்று அடங்கி உடன் நிகழும் பொருள்களில் அடங்காது மற்றதைத் தன்னில் அடக்கும் என்பதாகும்..(மணிமேகலை-400)
ஆதி முனியெனத் தேய்ந்தும் வளர்ந்தும்
நிலை கொண்டிருக்கும்
நிலவு
திரண்டு
உருகிப் பொழிவது
காற்றோடு கரைவதென
வருவதும்
போவதுமாய்
மேகத்திரள்
சம்பந்தரின் தயவில்
குருதி பருகிய
சமணப்பள்ளியின் காலடிக் குளம்
சலனமற்றிருக்கிறது
இவ்விரவில்
நீராடி கரையேறும் கவி
எண்பது கிலோமீட்டர் பயணம் செய்தாக வேண்டும்
உள்ளாடையை உலர்த்தும் போது
சமணத் துறவியின் ஆடை அணிகிறான்
..............................
............ பக்-41
வாழ்த்துக்களுடன்
வெளியீடு
வலசைப் பதிப்பகம்
எச்.1-எச்-2 65 ஆர் எம் காலனி.
திண்டுக்கல்-1-

9976402706

கனிமொழி.ஜி கவிதைகள்

கோடை நகர்ந்த கதை- கனிமொழி.ஜி கவிதைகள் குறித்து
கவிதைகளைத் தன் குழந்தைகள் போல்
பராமரிப்பவரின் கவிதைகள்...

காலத்தின் கடைசி மந்திரம்

இறுதியாய் இந்தக் கானகம்
என் கட்டுப்பாட்டில் வந்து விட்டது
ஆக்கவும் இயக்கவும் மாற்றவும் மற்றவற்றிற்குமாய்
இனியிங்கு எதுவொன்றும் என் விருப்பம் --  பக்-22    

    வாழ்வு அளித்த பரிசுத்தங்களில் நுமக்கு சௌகரியமானவை  யெவை எனக் கேட்கும் பொழுது பற்பல சாத்வீகமான அசௌகரியங்களின் பட்டியல்கள் நீளும். விவரிப்புகளுக்கு அப்பாலும் கடலின் எல்லை நெளிந்து கொண்டிருப்பது போல கற்பனைத் தூண்டில்களை வீசிப்பார்க்கத் தோன்றும். மிக நெருக்கத்துடன் இறுகிக் கிடக்கும் தீராப் பிரச்சனைகளும் விலகியே போய்க் கொண்டிருக்கும் அட்சயப்பாத்திரமும் எழுதுகிறவர்களைப் பிடித்து உலுக்குகிறது. இசைக் கருவிகள் வாசிப்பவர்கள் தொடர்ந்து வாசிக்கிறார்கள். வெளியேறிக் கொண்டிருக்கிற மக்கள் வெளியேறுகிறார்கள்.
பகலும் இரவும்  வகைக் கொரு வெளிச்சங்களும் வகைக்கொரு கருங்கலுமாக இருவகைப் பொழுதுகளில் நீந்துகிறோம். தீராப் பசிக்கு இயற்கையின் ஓசையே இசையே ஆகாரமென வாழும் கோடினானுகோடி சீவராசிகளில் மனிதனும் ஒரு உயிரி.
          இருப்பைத் தன் சகவாசிகளுக்குத் தெரிவித்துக் கொள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட இசையே மொழியாகும். லட்சக்கணக்கில் பொழுதில் மசவெக்கையின் நிழலுக்கும் மாலையின் புழுதிக்கும் பறக்கிற வௌவால் குஞ்சுகள் தன் இனத்தையும் தாயையும் உடன்பிறப்புக்களையம் அது அறியும்.
     கவிஞனின் மொழியை கவிஞன் அறிவான்.கவிஞனை மனிதன் அறிவான். இச்சைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட கட்டளைத் தகர்க்கிற வழிகளை கவிஞன் அறிவான். கவிஞன் எல்லா ஒழுங்குகளையும் ஒழுங்கீனங் களையும் கலைக்கவும் கட்டுப்படுத்தவும் உரியவனாகிறான். கற்பிரதிகளிலிருந்தும் பாறைச் சித்திரங்களிலிருந்து கானுயிர்களின் வடிவங்களிலிருந்து மொழிச் சொற்களுக்கான வகைகளை வடித்துக் கொடுத்தான். மொழிச்சித்திரங்கள் அனைத்துமே மிருகவாசம் கொண்டவை.
      கனிமொழி.ஜி கவிதைகள் புலப்படுத்தும் காட்சிகளும் விவரிப்புகளும் சகலமும் பேசுகிறது. கோடை நகர்ந்த கதை மட்டுமல்ல வேனலையும் வெம்மையையும் சொல்கிறது. முந்தைய தொகுப்பான மழை நடந்தோடிய நெகிழ்நிலத்தில் மழைக்காலத்தின் நிலவியலைப் பிரதியாக்கினார். இத்தொகுப்பில் கடற்பகுதிநிலங்களின் தகிக்கும் வெம்மையை அகச்சித்திரங்களின் வழி தனலைப் பேசியிருக்கிறார்.
இரவு

பொழுதின் கூர்மை முற்றிலும் முடமாகி
விழும் கதிரின் ஒளிர் விளிம்புகளோடு
உருமாறும் முகிற்செறிவில் விரிகிறது
இரவு குறித்த ஒரு மாயச்சித்திரம்

உலர்ந்த தென்னை மட்டையொன்று
பிடிப்பிழந்து விழுந்த சத்தத்தில்
உடைந்த விரிசல் வழியே
மெல்ல வெளியேறுகிறது இவ்விரவு-  பக்17

         கனி யின் இக்கவிதை பல நூறு இரவுச்சித்திரங்கள் பேசும் “மணிமேகலை“காப்பியத்தின் சில கவிதைவரிகளை நினைவு கொள்ள வைத்தவை.

ஏஉறு மஞ்ஞையின் இனைந்து,அடி வருந்த,
மாநகர் வீதி மருங்கில் போகி,
போய கங்குலில் புகுந்ததை எல்லாம்
மாதவி-தனக்கு வழு இன்று உரைத்தலும்-
நல்மணி இழந்த நாகம் போன்று,அவள்
தன்மகள் வாராத் தனித் துயர் உழப்ப,
இன்உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள்,
துன்னியது உரைத்த சதமதி-தான்-என்
( துயிலெழுப்பிய காதை)
 ( சதமதி அம்படிப்பட்ட மயிலைப் போல் நெஞ்சம் நைந்தாள். தன் மெல்லிய அடிகள் வருந்துமாறு புகார் நகரின் பெருவீதிகள்வழியே சென்று மாதவியை அடைந்தாள். சென்ற இரவில் நடந்ததையெல்லாம் அவளிடம் வழுவாது கூறினாள். தன்னுடைய மகளான மணிமேகலை திரும்ப வாராததால் மாதவி பெருந்துன்பம்  அடைந்தாள். நல்ல மணியை இழந்த நாகத்தைப் போல வருந்தினாள் மணிமேகலைக்கு நேர்ந்ததை உரைத்த சதமதி இழந்த உடலைப் போல அசைவற்று நின்று கொண்டிருந்தாள் )
        கனிமொழி.ஜி கவிதைகளில் முழுக்கவும் வெப்பவியல் நிலங்களின் வெம்மையும் உம்மையுடன் இருக்கிறது. தன் கையில் எப்பொழுதும் சிறு தூண்டிலொன்றுடனே வாழ்வதான கனவிலும் எழுத்தில் கவிதையில் புனைவையும் இணைத்துக் கொள்கிறார். தற்பொழுது தான் வாழும் கடற்கரையோரங்களில் உப்பளங்களும் உவர்ப்பு மிகு நிலத்து மனிதர்களின் உணர்வுகளுமாக அமைந்திருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுதும் சமயத்தில் மீன்பிடி தடைகாலத்திற்கான ஓய்வில் மீனவர் சமுதாயம் தங்கள் சிறு கப்பல்களையும் படகுகளையும் கரைகளில் நாங்கூரமிட்டுவிட்டு ஓய்விலிருக்கிறார்கள். கோடையில் கடற்கரைகள் கடும் வெம்மையுடன் தகிக்கும். எல்லா நதிகளும் அணைக்குள் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. நதிகள் வந்து கடலில் கலக்கிற காலத்திற்காக காத்திருக்கிற கடலும் உவர்ப்பின் வழி ஊத்துப் பொருமி குடிநீராகிற கடல் நீரை அருந்துவதான கவிதை ஒன்று..கனிஜி கவிதைகள் புறம் பேசும் நிலப்பரப்பு குறித்தவை..
நதியருந்தும் கடல்

தீராவேட்கையுடன்
நீந்தி வருகிறதோர் நீரரவம்
நிதானமாய்ப் பற்றி அருந்துகிறது
நிலப் பெருங்கடல்----பக் 39
       வேனல் காலத்தில் பேசப்படுகிற கவிதைகள் குளிர்விக்க வேண்டிய அவசியமில்லை. இலையுதிர்காலத்திற்கு முந்தைய வேகையால் கறுகிக்காய்கிற மரஉச்சி இலைகளின் வாழ்வை பேசுகிறது உலக கவிதை ஒன்று..
ஏப்ரல்- நான்சி மோர்யான் (கியுபா)

வானத்தின் அடியில் பறக்கும் அந்த இலைகள்
எங்கள் தேசத்தின் தாய்மொழி
சூறாவளியின் பகைமையான சோர்வை
சுவாசிக்கும் இந்தப் பறவைகள்
அறியும். எல்லா ஆக்ரமிப்புகளையும்
கட்டவிழ்த்துவிடுவது ஏப்ரல்மாதம் தான் என்பதை
என் ஜன்ம பூமியே
கடலோரத்தில் கடுஞ் சீற்றத்துடன் நிற்கும் உன்னை நான்
காண்கிறேன்
நான் நடக்கும் இந்தப்புழுதி நிலம்
உன்னதமான பொதுத்தோட்டமாகும்
நாம் போரில் இறந்தால் மீண்டும்
நம் எலும்புகள் மணல் மீது உயிர்த்தெழும்
முன்நோக் முடியாத ஏப்ரல் மாதத்தில்
இயற்கைபோல் தூங்கும் இந்தத் தீவில்
நமது ஆவிகள் தங்கி வாழும்
இந்த தொகுப்பிலும் நிலங்களின் பல்வகைத் தரைகளின் கவிதைகள் உண்டு. நீள் கவிதைகளுக்குள் உள்ளாற ஓடும் சில வரிகளில் வாசிக்க அமைகிறது.

முத்தத்தின் வாசனை

வெம்மை இறங்கும் இம்மாலையில்
நசுங்கிய புல் வரப்பில் அமர்ந்து
அவள் நாசியை நினைவூட்டும்
வெள்ளை நிற எள்ளுப்பூ ஒன்றைப்
பிய்த்து முகர்கிறான்
எங்கோ இருக்கும் அவனை
ஒரு முத்தத்தின் வாசம் சூழ்கிறது... பக்-55

        இந்தக் கவிதை அகநானூற்று செவ்வியல் சங்க கவிதைகளின் காலத்தை நினைவு கொள்கிறது. எள் மலர் பற்றிய பதிவு ஆச்சர்யமாக உள்ளது.

வருவர் என்று உணர்ந்த மடங்கெழு நெஞ்சம்
ஐயம் தெளியரோ, நீயே பலவுடன்
வறன் மரம் பொருந்திய சிள்வீடு உமணர்
கணநிரை மணியின் ஆர்க்கும் சுரனிறந்து
அழிநீர் மீன்பெயர்ந் தாங்கு அவர்
வழிநடைச் சேறல் வலித்தி சின் யானே- அகநானூறு...

(அப்பறவைகள் போல), அவர் திரும்பி வருவார் என எண்ணும் அறிவற்ற நெஞ்சமே ஐயம் நீங்கித் தெளிவாயாக! வறண்ட மரங்கள் அடர்ந்த இடத்தில் சிள் வண்டுகள், உமணர்கள் வண்டியிலுள்ள மணிகள் போ ஓசையிடும் பாலை வழியைக் கடந்து நீர் அற்ற இடம் விட்டு நீர் உள்ள இடத்திற்கு மீன்கள் போவது போல, அவர் சென்ற வழியே  நடத்தலை நான் துணிந்துள்ளேன்..

     கனிமொழி.ஜி இரண்டாவது கவிதை நூல் இது. ஐம்பத்தி நான்கு கவிதைகள். சிலவை நீள் கவிதைகளும் காட்சிகளும் உண்டு. குறுங்கவிதைகளும் சிள் ஆச்சர்யங்கள் காட்டும் கவிதை வரிகளும் உண்டு. பற்பல பொருள் பேசும் உள்ளடக்க விவரிப்பு கொண்ட கவிதைகளும் உண்டு. நான் குறிப்பிடாத சிறப்பு மிக்க கவிதைகளான தேசமெங்கும் பெருமரங்கள், காலக் கடிகாரங்கள், கூடற்காலம், குறிஞ்சி நிலக்குருவி யொன்று, வலியின் நிறம், ஒரே வாகனம் உள்ளிட்ட கவிதைகளில் கவிஞரின் கற்பனை வளம் சாத்தியமாகி யிருக்கிறது. மிக நேர்த்தியாக முடிந்து விடாத சம்பவங்களும் கைநழுவிப் போய்விடுகிற அற்புதமான இயற்கை வாய்ப்புகளும் கவிஞனின் சொற்களாகிறது. அகச் சட்டகங்களுக்குள் புறவயப்பட்ட கட்டளைகள்தான் கவிதைகள் என்கிறார் கவிஞர். ஏமாற்றங்களிலிருந்து தனக்கான ஒரே ஓர் எள்ளுப்பூவைப் பறித்திருக்கிறார் கவிஞர்.. மேலும் பற்பலக் கவிதை நூல்களுடன் வலம் வருவாராக என..
வாழ்த்துக்களுடன்
இளஞ்சேரல்


வெளியீடு

கோடை நகர்ந்த கதை
கவிதைகள்- ஆசிரியர் கனிமொழி.ஜி

விலை ரூ 75-
உயிர்மை பதிப்பகம்
11-29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்

சென்னை 18