செவ்வாய், 10 மே, 2016

கடங்கநேரியான் கவிதைகள்

“சொக்கப்பனை“
“வியாபகம் மற்றும் வியாப்பியம்“
கடங்கநேரியான் கவிதை நூல் குறித்து
        
கவிதைகளில் எது நல்ல கவிதை எது கவிதை அல்லாத கவிதை எனும் விவாதம் என்றுமே இருக்கும். ஏற்றத் தாழ்வுகளும் சமூகத்தில் மேலோர் கீழோர் வசதி படைத்தோர் அதிகாரம் படைத்தோர் நிலமுடையோர் நிலமற்றோர்  இவ்வடுக்குகள் தீர்ந்து மறையும் வரையும் இதுவே நல்லது இது முறையற்றது எனும் மாறிகளும் மாறிலிகளும் ஊண் குறுத்துகள் போலுதித்துக் கொண்டே இருக்க வாய்த்தவை.
        
சமணர்கள் கழுவேற்றப் பட்ட துயர் வரலாற்று காதையை நினைவு படுத்தப் படுகிற கலாச்சாரப் பண்பாட்டு நிகழ்வாக இந்த சொக்கப்பனை ஏற்றுகிற நிகழ்வு நடந்து வருவதை நினைவு கொள்ளவைக்கிற தலைப்பு.. நந்தனாக, ஏகலைவனாக, புத்தனாக, நந்தியாக, பன்றியாக, கழுமரமாக இப்படியே தன் ஆன்ம பலத்தை புனைந்து கொள்கிற கவியாக இத் தொகுப்பில் அறியமுடிகிறது.

கொய்வதினும்
கொய்யப்படுவதே விருப்பமானதெனக்கு
வேல் கம்பு
நெஞ்சு கீறுவது வரம்
எதிர்பார்த்து நிற்கிறேன்
மாரிக்கால தவளைகளின் பாடலைப் பாடுகிறேன்
சர்ப்பங்கள் வளைக்குள்
ஒடுங்குகின்றன
கொள்ளிக் கலையமுடைத்து
நீர்க் கடனைடைக்க
இரண்டு மகவுகள் உண்டெனக்கு
மாயவலையறுக்கும் சூக்குமம் அறிந்தவை
என் குளத்து மீன்கள்
இறுதியாத்திரைக்குத்
தயாராக நிற்கிறேன்
எதிர்திசை பார்த்து
ஆனாலும்
உங்களது கண்கள்
என் முதுகிலேயே........ பக்-44
    கடங்கநேரியானின் மூன்றாவது கவிதை தொகுப்பில் உள்ள கவிதைகள் முழுக்கவும் அரசியல் அறக்கோட்பாடுகளின் வழியாக சமூகஇயலின் புனைவுகளைப் பேசுகிறவை. இயற்கை களவையுயும் நீர்நிலை மேலாண்மையை பேசுகிற குடியாக இக் கவிஞன் இருக்கிறார். தான் வாழ்கிற நிலத்தின் மலைகளின் நீரியல் ஆழங்களை, காற்றில் செயற்கையாக கலக்கப்படுகிற நச்சுகள் பற்றியும் கவிதை பேசுவது அவசியம்.
     
தனிமை,காமம்,சுயகழிவிறக்கம்,திணிக்கப்பட்ட ஏழ்மை, நிராகரிப்புகள் தீவிரமாக அண்டும் பயங்கரங்கள் பற்றியும் கவிதைகள் உண்டு. நீரின் அவசியத்தை தீவிரமான பிரச்சாரமா கவே பல வரிகள்.

கவிதைகள் கருத்துகள் சொல்வதற்கும் தத்துவச்செறிவுகள் அகச்சிக்கல்களை எழுதுவதும் மட்டுமல்ல மேற்சொன்ன புற நிலைகளும் பற்றி சமஅளவில் கவிதைகள் எழுதப்பட்டுதான் வருகின்றது. சமூக கொந்தளிப்புகள் ஏற்படுகிற பொழுது இப்படியான கவிதைகளே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன என்பதை தமிழ்கூறும் நல்லுலகம் அறியும்.
தமிழ் கவிதைகளில் அகத்திற்கும் புறத்திற்கும் சரிசம அளவில் முக்கியத்துவம் அளித்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பசியின் நிவாரத்திற்கான போர் என்பதையும் பசி ஆறியபின் உரையாட வேண்டிய கலைகள் குறித்த ரசனையும் இவ்விரண்டுமே எது முதன்மை என்பதை ஆய்வதைவிடுத்து இரண்டும் அவரவர் பசி ரசனையும் குறித்த ஆர்வமும் அறிவும் குறித்தவை. நம்மிடம் பொதுமக்களுக்காக பேசுதல் பேசுதல் எழுதுதல் என்பதைக் கூட அநாகரீகமானவை. அறக்கோட்பாடு களுக்கு பொருந்தாதவை எனும் கருத்துகள் உண்டு. நிலவுடமையின் கருத்துகளும் சாதிய மத நிறுவனமயத்தின் கருத்துகளும் பொதுமக்கள் ரசனையில் பொதுகவிதை ரசனையில் முழுமையாக விரவியுள்ளது என்பதையும் கவிதை ரசனை பேசுகிறபொழுது நாம் கவனத்தில் கொண்டால் மிக எளிதில் நல்ல கவிதையை ரசித்துவிடலாம். இதெல்லாம் கவிதையா எனப் புறக்கணிக்கிற கவிதையில் உள்ள கவிதானுபவம் மேலோச்சி நிற்கிற தரிசனத்தையும் காணலாம்.

முன்னுரையில் கவிஞன் எழுதி வைக்கிற சொற்களும் உவமைகளும் கடப்பாடுகளும் சொல்லியே ஆகவேண்டிய பிரச்சனைகள் முக்கியமானவை. இங்கு கடங்கநேரியான் வைத்துள்ளவை யென்பதை நீங்கள் வாசித்தால் கவிதைகளை வாசிக்கும் போது பொதுரசனையும் கவிதைரசனையும் புரிந்து கொள்ளலாம்.

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே
வித்திவான் நோக்கும் புன்புலம்
கண்ணகன் தாட்குஉத வாதே அதனால்
அடுபோர்ச் செழிய, இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின்  நீர்நிலை
பெருகத்தட்டோர் அம்ம,
இவண்தட் டோரே,
தள்ளா தோர்இவண் தள்ளாதோரே..
 குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு நீரின் அவசியத்தை அதனைக்காக்க வேண்டிய கடமையை அறிவுறுத்தியிருக்கிற கவிதை. இந்த நூலின் முன்னுரையில் இக்கவிதையைப் பயன் படுத்தியிருக்கிற காரணம் நமக்கு எளிதில் புரிந்து கொள்ளமுடிகிறது. அரசனுக்கும் மன்னர்களுக்கும் குறுநிலமன்னர்களுக்கும் குடிகளுக்கும் அருகில் மிக அருகில் கவிதை இருந்துள்ளதை அறியலாம். தற்கால கவிதை அரசுகளுக்கு அருகில் உள்ளதா..அன்றி எனில் ஏன் இல்லை எதன்பொருட்டு விழுந்து போனது இவ்விடை வெளி..ஓரிடத்துக் கவிதையில்

சொற்கள் அனைத்தும் தீர்ந்து
விட்டதாவெனக் கேட்டாள்
ஸ்பரிசம் ரயில் பூச்சியெனச்
சுரைக் குடுவைக்குள்
இருண்டு கிடக்கிறதென் காலம்.. பக்-28
    
நீர் பற்றிய படிமங்கள், நீரைக்குறித்த புனைவுகள் அதிகமான வரிகள். உணவும் நீருணவும் பற்றிய சொல்லாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளது. இதன் தாக்கத்தைப் பற்றிய அறிமுகத்தை தன் உரையில் குறிப்பிடுகிற பொழுது புத்த தேவன் தோற்றம் பற்றிக் கூறுகிற கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் கவிதையான
“பெருங்குள மருங்கில் சுருங்கைச்
சிறு வழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையொடு உயிர் கொளப் புகும்

“சுருங்கை“ என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய் அதாவது பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒரு புறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன் தரும் அதுபோல செவித்துளை வழியாக நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இக் கவிதையின் பொருள். சமகாலத்தின் அரசியல், சமூக எதிர் நிகழ்வுகள் பற்றிய தனது நிலைப்பாடுகளைத் தனது கவிதைகளுக்குள் பேசியிருக்கிறார்.
     
ஏற்கெனவே குறிப்பிட்டது போல் ஏற்றத்தாழ்வுகள் பூமிப்பரப்பைப் போல நிலவடிவமைப்பு போல எதிர் கவிதை ஆக்கம் என்பது புறத்திணையில் எழுதப்படுகிறவைகள். கடங்க நேரியான் கவிதைகள் நிலவியல் சூழல் கொள்ளைகளை, நிறுவனமயப்படுத்தி பெருஞ்சுரண்டல்களை நடத்தும் அரசியலையும் சாடுகிறார். சில கவிதைகள் முழுமை பெற்ற பிறகு தொடர்வதும் கவிதைகளுக்குள் பொருந்திக் கொள்ளாத தன்வயப்படுத்தப்படுகிற அகச்சிக்கல்களையும் சேர்த்து குழப்பிக் கொள்வதையும் குறிப்பிடவேண்டும்.
      
எனினும் எதிர்நிலைக் கவிதைகளின் பதிவுகள் சரிக்குச் சரியாக தமிழ்க் கவிதையில் பதிவாகியே வருகிறது. சமூக ஏற்றத்தாழ்வுகளின் பாதிப்புகள், பண்பாட்டுச் சீரழிவுகள் பற்றி யும் கவிஞர்கள் மொழியின் ஓழுங்கும கட்டமைப்பும் துவங்கி காலத்திலிருந்து எழுதுகிறார்கள். அவ்வரிசை கவிதைகளும் சமகாலத்தின் பதிவுகளை ஒப்படைக்கிறது.
      
கவிதையாக்கம் செம்மையான கவிதைகள் பல உள்ளது. பனை மரங்களைக் காணும் போதெல்லாம் தோன்றுகிற கவிதைகள். இவ் வெயில் காலத்தின் மரநிழல்களில் திசைகள் விட்டு திசைகள் மாறி வந்து பெருநகரத்தின் மர நிழல்களில் குவிக்கப்படுகிற நுங்குகளிலும் பதநீர்த் தாழைக் குவிகளில் கவிதைகள் தென்படுகிறது. சொக்கப்பனையாகிற நெருப்பின் தகிப்பும் சொற்களில் சுடுகிறது.சீத்தலைச் சாத்தனார் நெருப்பு குறித்து பேசுகிற பொழுது நெருப்பும் புகையும் ஆகிய இரண்டில் நெருப்பில் புகை அடங்கித்தோன்றும். இதனால் நெருப்பு வியாபகம். புகை வியாப்பியம் எனப்படும். அதாவது ஒன்றில் ஒன்று அடங்கி உடன் நிகழும் பொருள்களில் அடங்காது மற்றதைத் தன்னில் அடக்கும் என்பதாகும்..(மணிமேகலை-400)
ஆதி முனியெனத் தேய்ந்தும் வளர்ந்தும்
நிலை கொண்டிருக்கும்
நிலவு
திரண்டு
உருகிப் பொழிவது
காற்றோடு கரைவதென
வருவதும்
போவதுமாய்
மேகத்திரள்
சம்பந்தரின் தயவில்
குருதி பருகிய
சமணப்பள்ளியின் காலடிக் குளம்
சலனமற்றிருக்கிறது
இவ்விரவில்
நீராடி கரையேறும் கவி
எண்பது கிலோமீட்டர் பயணம் செய்தாக வேண்டும்
உள்ளாடையை உலர்த்தும் போது
சமணத் துறவியின் ஆடை அணிகிறான்
..............................
............ பக்-41
வாழ்த்துக்களுடன்
வெளியீடு
வலசைப் பதிப்பகம்
எச்.1-எச்-2 65 ஆர் எம் காலனி.
திண்டுக்கல்-1-

9976402706

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக