வியாழன், 28 ஜூலை, 2016

கதிர்பாரதியின் கவிதைகள் “ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்“

கதிர்பாரதியின் கவிதைகள்
“ஆனந்தியின் பொருட்டு  தாழப்பறக்கும் தட்டான்கள்“
       
“தட்டான்கள் தாழப்பறந்தால் மழை வரும் தெரியுமாஎன்ற
ஆனந்தியின் இமைகளிலிருந்து
முதன் முதலில் தட்டான்கள் பறந்தபோது
எனக்குள் மழைவரும் போலிருந்தது.....         பக்.26

    நவீன கவிதையின் அளவீடுகள் என்னென்ன..கவிதையிலிருந்து நவீன கவிதை எந்த வகையில் வேறுபடுகிறது. நவீன காலத்தின் மனிதனின் பிரச்சனைகளைப் பேசுகிறதா. நவீன காலம் என்பது என்ன..தொழிற்புரட்சியின் யுகத்திலிருந்து நவீன காலம் துவங்குகிறது. ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் நீர் மூழ்கி மோட்டார்களின் வழியாக நீரை உறிஞ்சுகிற வல்லமை பெற்ற மனிதனின் காலம் நவீன காலத்தின் துவக்கம். நெருப்பை உருவாக்கவும் கண்டுபிடிக்கவும் அடர்வனத்தின் தீயைக்கண்டு தெறிக்க சதுப்பு நிலப்பகுதிக்கு ஓடிவந்த காலம் நவீன காலம். குன்றுகளின் மீதும் மலைச்சரிவுகளில் கால்நடைகளைப் பழக்கி வேட்டையாடித் தின்ற காலத்திலிருந்து பெருமழைக்காலங்களில் நீர்த்தேக்கங்களின் ரம்மியம் பார்த்து கரைகளில் வாழும் பறவைக் கூட்டங்களின் குடும்பங்கள் பார்த்து குடும்பங்களை உருவாக்கிக் கொள்வதற்காக குடில்களை அமைக்கத் துவங்கிய காலம். பஞ்ச காலத்தில் பசிக்குப் பிறரிடம் பறித்துதான் திங்க வேண்டும் என்பதால் கருவிகளை உருவாக்கிக் கொலைத்தொழில் புரியத்துவங்கியது நவீன காலம். போதுமான அளவில் உடலில் ஆயுதங்களை வைத்துக் கொள்ள முடியாமையால் பெருங்கிடங்குகளை முதலில் உருவாக்கி பிறகு வீட்டை உருவாக்க முனைந்த காலம் நவீன காலம்.பறவைகளின் இயல்புகளைக் காப்பியடித்து வசந்த கோடை கார் பஞ்ச காலங்களில் இடம் பெயர முனைந்த காலம். உலகின் முதல் விவசாயி ஆன பறவையின் மலத்தின் வழி விளையும் உணவை உண்ணத்தொடங்கிய காலம். காட்டுத்தீயில் வெந்த மாமிசத்தின் ருசியைச் சுவைத்த காலம். விறைத்த குறியை மூடிக் கொள்ளவும் ருதுக்குறியின் உதிரக்கவிச்சியை உணர்ந்து முயங்க முனைய இலைகளின் ஆடையை அணியத் துவங்கிய காலம்.
         கூர்வாட்களால் உடன்பிறந்தோரைக் கொல்லத் துணியலாம் என்று போதனையைக் கற்ற காலம். பசிமறந்து அச்சமே துணையாகத் துடித்தடங்கி குழிகளிலும் விதைகளைப் போல வெடிகளை விதைத்து சிறுவர் சிறுமிகளை முன் நடக்கவைத்து பின் வெடிக்காலம் உணர்ந்த காலம். வேலிகள் அமைந்து அங்கேயே தின்று அங்கேயே பேண்டு கழித்து முயங்கி இனப்பெருக்கம் செய்யும் காலம். உலகத்து மணற்பரப்பு எல்லாம் ரசாயனம் தூவி உயிர்களை அழித்து உலோகப் பயிர் வளர்த்து ஒவ்வொரு பாறையாக வெடித்து வெடித்துப் பார்த்துக் குதூகலித்துக் கொள்கிற காலம்.
        இந்தக்காலங்கள் பற்றி உரையாடுகிற சொற்களை நவீன மொழி என்று சொல்கிறோம். அந்தந்த யுகங்களில் அந்தந்த கேந்திரங்களில் அந்தந்த பொழுதுகளில் நவீனன் பிறக்கிறான். அவன் பச்சயத்தின் பலனையும் சிறு சிறு காணுயிர்களின் கீச்சிடல்களையும் மரக்கிளைகளில் ஊஞ்சலாடும் அணில்களையும் மரத்து உடலைப் பங்கிட்டுக் கொள்கிற உயிருணிகளைப் பற்றிப் பேசுவான். ரசாயனத்தை அதன் வீரியத்தைப் பொசுக்குவான். எவ்வித கனரக உலோகமும் குரிமணி உயிரையும் காவு வாங்காமல் கவனித்துக் கொள்வான்
          கதிர்பாரதியின் இரண்டாவது கவிதைத்தொகுப்பு ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்“ வாசிக்க நேர்ந்த சமயத்தில் பல நூல்களுக்கான வாசிப்பு மற்றும் எழுதவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். முதல் தொகுப்பிற்கும் இரண்டாவது தொகுப்பிற்குமிருக்கிற கடந்து வந்த  தொலைவை ஒரு கணம் யோசித்துப் பார்க்கிற போது தமிழ் நவீன கவிதையின் அடுக்கும் உயர்ந்திருப்பதாக உணர்கிறேன். நவீன கவிதைக்குள் “லோட்செய்யப்படுகிற வீரியமிக்க கலன்கள் மிக முக்கியமானது. ஒரு கவிஞன் எந்தளவு உறுதிமிக்க புலன்களின் இருப்பைப் பொருத்துகிறான் என்பது அவன் கற்றதில் இருக்கிறது. அனுபவங்களுக்கு அப்பாலும் கற்பனையும் சமகாலத்தின் வெடிப்பும் பற்றாக்குறைகளும் அறிவுசார் சொத்துரிமைத்திருட்டுகளுக்கு அப்பாலும் செயல்படுகிற நவீன மனத்தின் ஆன்மாவையும் சேர்த்தே கணக்கிடச் சொல்கிறது. நன்செய் புன்செய் நிலங்கள்,வயல்கள், பொழிகள், ஏரிக் கழிகள், நீரேற்றங்கள் உள்பட பச்சயங்களும் உண்டு. அறுவடைக்குப் பிந்தைய அடுத்த காப்பிற்காகத் தயாராகிற உரமூறிய பதமிக்க தீவனப் பில்லுக்காடுகளும் உண்டு.
என் தாத்தாவிடம்
ஒரு கதை இருந்தது
சப்பரம் போல் ஜோடித்துத்திரியும்
கொள்ளிவாய்ப் பிசாசுகளும்
பலிகேட்டு நச்சரிக்காத
குலசாமிகளும் அதில் இருந்தன
அவற்றின் குழந்தைகளாக நாங்கள் இருந்தோம்.

என் தாத்தாவிடம்
உறக்கம் ஒன்று இருந்தது
அதன் தலைமாட்டில் பூவரசின் வேர்த்திண்டும்
கால் மாட்டில் உதயமரத்தின் நிழல் துண்டும்
சாமரங்களாக மாறி சேவையாற்ற
காலங்களும் பருவங்களும் களைப்பாறியதுண்டு.

            “எங்களிடம் நீர்முள்ளிப் பூக்கள் இருந்தனஎனும் நெடுங்கவிதையிலிருந்து மேற்கண்ட சில வரிகள். ஒரு தலைமுறையில் எல்லாம் மாறி அழிந்து மீண்டும் ஒரு புது யுகம் பிறக்கும் என்பதை வரலாறு நமக்கு அறிவிக்கிறது. நூறாண்டுகள் ஆகிவிட்ட வீட்டைக் கொஞ்சம் மராமத்துச் செய்து வாழ்ந்து கொள்கிறது மனித சமூகம். பல நூறாண்டுகள் அறுவடைகள் பார்த்த நிலம் மற்றும் வேளாண்மை மக்கள் ஞாபகம் வருகிறார்கள். புடவைக்கடையில் விற்பனையாளன் மிக லாவகமாகவும் நேர்த்தியாகவும் புடவையைப் பிரித்து நூல் மணக்க அயாசமாக வீசிப் பார்வையாளர்களுக்குக் காண்பிப்பது போல பல நெடுங்கவிதைகள் தொகுப்பில் உள்ளது.
    
         உரைநடைக் கவிதைகளின் தன்மையிலேயே கவிதைகளின் பயணங்களும் மிக நீண்ட விவரிப்புகளும் கொண்டிருக்கிறது. தலைப்புகள் மட்டுமே கவிதைகளைத் தனியாகப் பிரிக்காவிடில் ஒரு கவிதா விலாசத்தின் குறும்பாகள் எனக் கருத வாய்ப்பிருக்கிறது. மனிதனின் காம விகாரமும் தீர்வற்ற முறைபொருந்தாப் பசிக்கிறக்கமும் இந்த நிலத்தை சதுப்பு நிலமாக்கி வெள்ளாமையைப் பெருக்க வைத்தது. பசுமைப் புரட்சிக்கு முந்தைய மனிதன் இடம் பெயர்ந்து கொண்டிருந்தான். புதிய ஏரிகளை வெட்டி பெருநதியிலிருந்த நீரைக்கடத்தி வந்தான்.
             “என் புறாவைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன்.ஒரு குளத்துக் குரவையாகமீன் வளக் குறிப்புகள்..“ முக்கியமான கவிதைகள். சொற்களுக்குள் உருவகத்தீ கணன்று எளிதில் பற்றிக் கொள்ளக் கூடிய ரசனை மனங்களைப் பற்றிப் பரவுகிறது. செய்திகளும் விவரிப்பும் வழி அறிந்த ஒருவனின் கால்கள் போல தாவுகிறது. இலகுவாக நீந்திச் செல்கிறது. இன்று வரவேற்பு அறையில் மீன்தொட்டி இருந்தால் அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு நல்லது நடக்கும் என்றும். மீன் தொட்டி இருந்தால் நாமும் கடலில் மிதப்பது போன்ற பிரக்ஞை இருக்கும். பொதுவாக பற்பல வண்ணங்களைக் களித்துக் கொள்வதும் சாஸ்திரங்களில் உள்ளது என பற்பல வியாபாரங்களில் மனிதன் ஈடுபடுகிறான். எப்படியும் மனித சமூகத்திற்கு மனிதன் ஆற்றும் தியாகம் போல சில மீன்கள் நம் வரவேற்பரை செட் ஆவதற்குள் மரித்து விடுகிறது.
உம் முன்னோரில் இருவர்
ஐயாயிரம் பேருக்கு உணவாகி
புகழுடை தெய்வத்திற்கு நிகராக
வரலாற்றில் பொறிக்கப்பட்டிருக்கிறார்கள் தெரியுமா என
சுவைக்குதவாத அவற்றின்
இனத் தொன்மம் பற்றிப் பேசவேண்டும்..

              மனிதனைத் தவிர வேறெந்த உயிரினங்கள் தங்கள் வாழ்வின் பதிவுகளைச் செய்து வைத்திருக்கிறது. யானைகளோ,புலிகளோ, பறவைகளோ தங்கள் மூதாதையர்கள் பற்றிய ஏதேனும் குறிப்புகளைப் பதிவு செய்திருக்கிறதா. அன்றியும் குறிப்பிட்ட ஒரு உயிரி பற்றிய பதிவையாவது மனிதன்  செய்திருக்கிறானா. ஆனால் இந்நிலத்தின் அத்து ணை உயிரிகள் தாவரங்கள் பருவகாலங்கள் பற்றிய தொகுப்பை அதன் வளத்தை அழித்தும் வளர்த்தும்  நெறி செய்கிற பொறுப்பாளான மனிதன் இருக்கிறான்.

          ஒரு நவீன கவிதையில் முக்கியமாக இடம் பெற வேண்டியது. ஒரு கதை,ஒரு நாவல்,ஒரு சிறுகதை,ஒரு பயணக்கட்டுரை, ஒரு காப்பியம். ஒரு மருத்துவனின் குடுவை, மாந்த்ரீகனின் சல்லாப பாடல், ஒரு சூதாடியின் தந்திரம், ஒரு மழலையின் அறிவார்த்மான கேள்விகள். ஒரு வேசியின் தீர்க்கதரிசனம், விந்தின் பிசுபிசுப்பு. மதர்த்தமான உப்புக் கவிச்சி. அழுக்குக் கேசத்தின் வாசம். நமுத்த அணுகுண்டின் திரி, லாரியோ கார் குண்டோ வெடித்தபடியால் சிதறிய உடல்கள். இப்படியாக அவனவன் திசைக்குத் தகுந்த மாதிரியான உரையாடல்கள், பட்டாசுக் காயம் பட்ட உடல் போன்ற சொற்றொடர்கள். இடையிடையே செனாயோ வயிலினோ புல்லாங்குழலோ நாதஸ்வரமோ இசைக்கும் இசைக்குறிப்புகள்.
      இவையெல்லாம் நவீன வாழ்வை எழுதுகிற கவிஞனின் சுரைக்குடுவையில் மீந்திருப்பவை. அவன் இறைச்சலிலிருந்து ஒரு தேவ வசனத்தின் பிராக்ருத அதிர்வை ராகமாக்குவான். தேமலிலிருந்தும் அழுக்குச் சிரட்டைக் காயங்களிலிருந்தும் கடவுச்சீட்டை அந்நிய மண்ணில் இழந்திருக்கும் சமயத்திலும் சொற்கள் எழுதுவான். இந்த நவீனப் பொருளியல் சந்தை மற்றும் புலனுகர்வும் படித்தவர்களை பல நாடுகளை நோக்கிப் பறந்து போகவைக்கிறது. இங்கு முப்பது வருசம் சம்பாதித்து ஓய்ந்து சாவதை விடவும் அயல்தேசத்தில் ஐந்து வருசம் இருந்து வந்து விட்டால் இங்கு தலைமுறைக்கும் பிரச்சனையில்லாமல் வாழ்ந்து கொள்ளலாம் என்கிற வசவு உள்ளது. சமூகத்தில் முப்பது சதம் அன்னியச் செலாவணிக்காகவும் இந்தியாவின் கடன்சுமையை அதிகரிக்கவும் வாழ்கிற வர்களும் உண்டு. ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியான சமயங்களில் கீழ்த்திசைநாடுகளிலிருந்து ஆட்களை வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கொண்டு போய் ராணுவத்தில் உலகப்போர்கள் சேர்த்து அவர்களை வைத்தே கோடிக்கணக்கான மக்களைக் கொன்று புதிய நவீன உலகை ஏகாதிபத்தியம் நிறுவிக்கொண்டது.
       இந்தத் தொகுப்பில் வீரியமிக்க நவீன அரசியல் வாழ்வின் விமர்சனங்கள் இல்லை. சமகாலத்தின் கலாச்சார அரசியல் பற்றிய மிகக் கூர்மையான அரசியல் பார்வைகளும் விமர்சனங்களும் நவீன கவிஞனுக்கு முக்கியமானது.குறிப்பாக ஒரு பராரி ஏழை தேசத்தின் பிரதமர் தன் வாழ்நாலெல்லாம் வெளிநாடுகளுக்குப் பறப்பதையே தன் அலுவலகப்பணியென்று நினைத்துக் கொள்கிற தேசத்தின் கவிஞன் தன் பங்கை ஆற்ற வேண்டுமென்று நினைக்கிறேன்.
        குறுங்கவிதைகளில் கவித்துமிக்க தரிசனங்கள் அகப்படுகிறது. உரைநடைக் கதைகளில் திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிற அடுக்கடுக்கான விவரிப்புகள் சற்று அயற்சியைத்தருகிறது. கதிர்பாரதிக்கு இயற்கையின் மீதுள்ள கரிசனங்கள் கவிதைகளை அடுத்தடுத்த வாசிக்க வைக்கிறதும் கவிதைக்குத் திரும்பவைக்கிற உத்தியாக எழுதப்பட்டவைகள் மிகவும் நேர்த்தியாக வந்துள்ளது. குறிப்பாக “இரவுக்கு வெட்கமில்லை..“ கவிதையிலிருந்து சில வரிகள்..மிக சாதரணமான விவரிப்புகளில் குறும் நகைச்சுவையெனத் துள்ளிக் கொண்டிருக்கிற வெட்டுக்கிளியின் சுறுசுறுப்பு இக்கவிதையில் காணமுடிகிறது. கூத்தில் பார்வையாளர்களை மகிழ்வு கொள்ளச் செய்கிற கலைஞனின் உடல்பாசாங்கும் வசனங்களும் போல அறியும் இக்கவிதை கதிர்பாரதியின் அழகுணர்ச்சிக் கவிதைகளில் ஒன்று. கவிதையில் மேலிட்டு வருகிற மிகை தான் மிகு அழகு...
என் வானில் தேனிலா ஆடாதாவென ஏங்குகிற
அமாவாசையின் பிள்ளை நான்
எனினும்
என் கொல்லைப்புற வானை
கோடிக்கோடி நட்சத்திரங்களால் அலங்கரிப்பேன்
மல்லாந்து படுத்தபடி பார்ப்பேன்
ஒரு மூக்குத்தியாக்கலாமா என்றுகூட யோசிப்பேன்

எனக்கும்
உன் நினைவுகளுக்குமிடையில்
ஒரு சிகரெட்டின் அளவே இருக்கும்
இடைவெளியின் முன்முனையில்
ஆசையைப் பற்றவைக்கிறது இரவு
உறிஞ்சி இழுத்த இழுப்பில்
விடிகாலையின் கிழக்குக்கு
சிவந்து விட்டது.
          
 அணிகலன்களின் வழியாக ஒவ்வொரு மனித நாகரீகத்தின் வளர்ச்சியை அளவிடமுடியும். ஆப்பிரிக்கத் தேசத்து கருப்பின மக்களும் செவ்விந்திய பழங்குடிகளும் அணிகலன்களை உடலெங்கும் அணிந்து கொள்வதின் வாயியலாக அவர்களின் குலம் மற்றும் கலாச்சார மரபையும் பாதுகாத்துக் கொள்கிறார்கள். தென்னிந்திய மரபில் தொண்ணூறுகளுக்கும் வரையிலும் மூக்குத்தி மரபு இருந்து வந்தது. பட்டிக்காடா பட்டணமா படத்தில் சிவாஜி மூக்குத்தி அணிந்து நடித்தார். தாய்மாமன் மடியில் உட்காரவைத்து ஆண் பெண் குழந்தைகளுக்கு மூக்கு குத்தி முதலில் மூக்கையா மற்றும் மூக்கம்மா என்று உறவுகள் குழந்தைகளை எள்ளலும் கேலியும் பாட்டுப் பாடி விழாவைக் கொண்டாடுவார்கள். அசலான தமிழ் மரபு வழி அணிகலன். நம்மிடம் ஒவ்வொரு அணிகலனுக்கும் கலாச்சாரப் பின்னணியும் உள்ளது என்பதை இக்கவிதை ஞாபகப்படுத்துகிறது. காதலையும் அன்பையும் பிரிவாற்றாமையையும் பேசும் பல சொற்களில் காதல்,நட்பு,உறவுகள் பற்றிய விவரணைகள் இருக்கிறது.
      சில நாட்களுக்கு முன்பு முகநூலில் நண்பர்கள் வாயிலாக அனுப்ப ப்பட்ட பாலுறவுப் படங்கள் வந்து குவிந்தபோது பார்க்க நேர்ந்த அனுபவம். கூகுளில் விவரச்சேகரிப்புக்கு அடுத்தபடியாக வெகுமக்களால் கோடானு கோடி தடவைகளால் பார்க்கப்படுகிற காணொளிப்படங்களாக அவை உள்ளதை அறிவோம். அப்படித்தான் மாநிற கருப்பினப் பெண்களுக்கு “ப்ருநென்ட்டீஎன வகைமைப்படுத்தியிருக்கிறார்கள். அப்படி ஒரு குழுகலவிப் படத்தைப் பார்த்த சமயத்தில் நடித்துக் கொண்டிருந்த மங்கைகளில் ஒருவர் ஆசிய மங்கை என்கிறது பெயர்ப் பலகை.அம் மங்கை மூக்குத்தி அணிந்திருந்திருந்தார். மூக்குத்தியைப் பார்த்தேன். அக் காட்சிகளுக்கு அவ் உடல்களுக்கு அப்பால் அந்த மூக்குத்தி சூரியனின் நீள் கம்பி என்னைத் துளைத்துக் கொண்டிருக்கிறது
வாழ்த்துக்கள் கதிர்பாரதி
வெளியீடு உயிர்மை பதிப்பகம் -11-29- சுப்பிரமணியம் தெரு அபிராமபுரம்-சென்னை 18- விலை ரூ 85


லஷ்மிசிவக்குமாரின் நாவல் “இப்படிக்கு கண்ணம்மா..”

லஷ்மிசிவக்குமாரின் நாவல் “இப்படிக்கு கண்ணம்மா..
சுயசரிதையும் திரைக்கதையுமாக ஒரு நாவல்
         
தமிழில் நாவல் வடிவங்கள் நவீன வாசிப்பு முறைக்கு ஏற்பவும் விஞ்ஞான வளர்ச்சிகளுக்கு ஏற்பவும் மாறிக் கொண்டு வருகிறது. தமிழில் வாசிப்பு முறைகள் உச்சத்திற்கு இருந்தகாலம் எழுபதுகளும் எண்பதுகளும். இன்றும் வாசிக்கிறவர்களுக்காக எழுதப்படுவதாக அன்றி படைப்பாளியின் தனித்துவத்தின் வெளிப்பாடுகளை அறிவிப்பதற்கும் நாவல் பயண்படுகிறது.  பிக்சன் நான் பிக்சன் லீனியர் நான் லீனியர் விஞ்ஞான அடிப்படையிலான படைப்புகள் என்பதாகவும் வந்து கொண்டேயிருக்கிறது. தொடர்கதை அல்லது தொடர்நாவல் என்னும் பகுப்பிலும் நாவல்கள் வந்து கொண்டிருக்கிறது. பல தேசங்களின் நிலங்களைப் பேசுவதாக கலாச்சார விழுமியங்களைப் பதிவு செய்வதற்காகவும் நாவல்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்தக் கட்டுரை எழுத வாய்த்த நேரம் வரையிலும் நாவல் வகைகளில் ஏற்பட்டு வருகிற மாற்றங்களை அறிந்திருக்கிறேன். சமீபத்தில் வெளிவந்த நாவல்கள் பற்றிய சிறு குறிப்புகளேனும் உண்டு. பொதுவாக குழுயமைவாதங்களால் நாவலின் தன்மைகள் பழிக்கப்பட்டும் தரம் திணிக்கப்படுவதாகவும் உள்ளது. ஒரு குழுவிற்கு நாவல் சிறப்பாக இருக்கிறது என்னும் பதிவு வந்துவிட்டால் அதற்கு அடுத்த எதிர்க்குழுவின் ஜால்ராக்கள் உடனடியாக “அது ஒன்றுமில்லை..குப்பை..ஐயோ...உன்னை யெல்லாம் எவண்டா எழுதச் சொன்னான்..“என்பார்கள்..தமிழச்சூழலில் முன்னணியில் இருக்கிற எழுத்தாளர் என்பவரின் சமீபத்திய படைப்புகளை வாசித்திருப்பவர்கள் கூட இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று நூலின் விலை மற்றும் அப்படைப்பாளி  சார்ந்த குழு..
       பிரச்சனைகள் இருந்தவண்ணமே இருப்பினும் எழுதுகிறவர்கள் நாவல் எழுதுகிறவர்கள் படைப்பிலக்கியத்திற்கு பாடுபடுவர்கள் இயங்கிக் கொண்டிருக்கவே செய்கிறார்கள். சமகாலத்தின் ஒரு சில குழுவாதிகளிட மிருந்து கருத்துகளைப் பெறுவதற்காக இலக்கியத்திற்கு யாரும் வரவில்லை. எப்படியிருந்தாலும் எந்த திசையின் குழுவிற்கும் ஒரு சாராருக்கும் பிடித்தமான படைப்பை எந்தப் படைப்பாளியும் தரப் போவதில்லை. நான் என் அனுபவத்தை எழுதுகிறேன்..அதற்கும் நான்கு வாசகர்கள் இருப்பார்கள் எதிர்காலத்தில் வரலாம்.வாசிக்கலாம் என்னும் உந்துதலில் சில எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டுதானிருக்கிறான். இப்பொழுதும் கூட “வரப்பெற்றோம்என்னும் பகுதியில் பல நூற்றுக் கணக்கான நூல்கள் வெளிவந்தமிருக்கின்றது. உலகம் மிகவும் பெரியது. சிற்சில குழுக்கள் அடிப்படை வசதிகளில் தங்கள் வாழ்வில் செழுமையான வாழ்வு முறைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் எழுத்தும் ஏழ்மையும் சிறுபாண்மையினரின் பெண்களின் எழுத்தும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டேயிருக்கிறது.
          தமிழில் தற்காலத்தில் எழுதுபவர்கள் இரண்டு விசயங்களின் பால் முனைப்புடன் எழுதுகிறார்கள். தன்காலத்தை தன் பண்பாட்டுக் கூறுகளை,நவீன வாழ்க்கையின் போக்குகளின் வழியாக தன் மக்களின் எதிர்காலத்தின் பிரச்சனைகளைப் பேசுகிற படைப்புகளை எழுதுகிறார்கள். இந்த விஞ்ஞான அறிவில் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தடுக்க முடியாது அப்படியே அதற்காக இந்த மனித குலத்தின் வளர்ச்சியும் முக்கியம். ஏற்றத்தாழ்வற்ற நிலை, எல்லாருக்கும் எல்லாமுமாக பொதுப்பங்கீட்டு முறைகள். இயற்கை வளங்கள் பாதுக்கப்படவேண்டும். நீர்நிலைகள் அதன் வழியாக காணுயிர்களின் பாதுகாப்பு, தன் இனவிருத்தி உள்பட பல் வேறு மரபுக் கூறுகளை உள்ளடக்கிய படைப்புகள். அடுத்த விசயம் தன் தனிப்பட்ட படைப்பு வாழ்க்கையின் அடுத்த கட்ட வளர்ச்சி புகழ் பணம் வாழ்க்கை முறையில் வசதிகள் உள்ளடக்கிய சுழற்சி முறைகள் குறித்த எழுத்துக்கள் என்பதாக. நேரடியாகவே சொல்வதென்றால் திரைப்படத்துறைக்குள் நுழைவதும் அதன் மூலமாகத் தன் கருத்துக்களை தன் நவீன சிந்தனைகளை, படைப்பாக்க முயற்சிகளை மேம்படுத்துவது என்கிற முனைப்புகள் என்பதாக..
        தமிழில் கலை இலக்கிய முயற்சிகள் அனைத்துமே சினிமா எனும் மாயாஜால வாழ்க்கைக்கு என்று பேச முடியாது. ஆனால் சினிமாத் துறையின் மீதுள்ள பற்று என்பதே முக்கால்வாசிப் பேரைக் கலைஞர்களாக்கிக் கொண்டிருக்கிறது எனலாம்..காரணம் புகழும் பணமும் மிக எளிதில் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம் பிடித்துவிடுவதற்கான வாய்ப்புகள். தங்களுக்குப் பணம் கூட வேண்டாம் டைட்டில் கார்ட்டில் என் பெயர் வந்தால் போதும் என்று தன் உழைப்பையெல்லாம் தன் தனித்துவச் சிந்தனைகளையெல்லாம் குடிக்கும் பசிக்கும் அறைவாடகைக்கும் விற்கிற மகத்தான திறமைசாலிகளை எனக்குத் தெரியும். சென்னையிலிருந்து திரும்பி வந்தவர்களிடம் உள்ள நாவல்கள் எத்தனை தெரியுமா..தோல்வியின் எல்லாத் தழும்புகளையும் வைத்திருக்கிற ஒருவன் தன் கிராமத்தில் எப்படி பேனா பிடித்து எழுதுவான். எனினும் இலக்கியப் படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிற படைப்பாளிகள் தொடர்ச்சியாக எழுதியபடியே தங்கள் சினிமா முயற்சிகளைத் தொடர்ந்து வருவதையும் அறிவேன். இன்றைய தொழிற்நுட்ப வளர்ச்சி நிலையில் வெத்து வேட்டுகளும் டுபாக்கூர்களும் சினிமாவில் கால் வைக்கவே முடியாது என்பதும் திறமையற்றவர்களால் எந்த நிலையிலும் வெற்றி பெறமுடியாது என்பதே இன்றைய சினிமா சூழல். இது ஒருவகையில் வரவேற்கத்தகுந்த செய்தியே. சிறந்த படைப்புகளைத்திருடுதல், கதைகளைத்திருடுதல். தலைப்புகளைத் திருடுதல். தங்கள் அறைநண்பர்களின் மிகச்சிறந்த கதைக்கருக்களைத் திருடிக் கொள்ளுதல்,திரைப்படச் சூழல்களிலும் ஒரு இளம் கதாநாயகனை வைத்து அவரைச்சுற்றி இருபது பேர் ஜால்ரா அடித்துக் கொண்டு தங்கள் எதிர்காலத்திற்காக மற்றவர்களின் சிறந்த படைப்புகளைத் தங்களுடையது என்று சொல்லி மிக சாதுர்யமாக ஏமாற்றுதல். ராயல்டியை ஏமாற்றுதல் என்னும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை.
          திரைப்படத்துறையை மனதில் வைத்து எழுதப்படும் படைப்புகள் அதிகம்தான். கலை இலக்கியச் செயல்பாட்டின் அடுத்த படி சினிமாதான் என்னும் கருத்து ஆழமாக வேறூண்றி விட்டிருக்கிறது நம் படைப்பாளர்களிடம். இதற்குக் காரணம் சமகாலத்தில் புதிய நவீன சிந்தனையாளர்களின் வரவும் அவர்களுடைய இலக்கிய நண்பர்களுடனான உறவுகளுமே இந்த ஆசைக்குக் காரணம் என்றால் மிகையில்லை.
          ஒருவகையில் லஷ்மிசிவக்குமாரும் அந்த நிலையிலேயே தன் எழுத்து வாழ்க்கையைத் துவக்கியிருக்கிறார். சினிமாவிற்கான முயற்சிகள் என்பது தீண்டத்தகாதவை அல்ல. எந்த எழுத்தாளனுடைய படைப்பும் எழுத்தும் மிகப்பரவலான அறிதல்களுக்குள் தன் சிந்தனை,படைப்பு சென்று சேரவேண்டும் என்று நினைப்பதில் நூறு சதவிகிதமும் தவறில்லை. நான் அப்படியான முயற்சிகளை முழுமனதுடன் வரவேற்கிறேன். இந்தக்கட்டுரை எழுதும் போதும் கூட பலருடைய படைப்புகள் சினிமாவாக மாறிக் கொண்டிருக்கிறதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக “விசாரணைஇரா முருகவேளின் மிளிர்கல்.“ மற்றும் மு.சந்திரகுமாரின் “கட்டுதளையினூடே காற்றுஇன்னும் பல படைப்புகள் முதல் கட்ட தயாரிப்பு முறைகளிலிருக்கிறது.
“இப்படிக்கு கண்ணம்மா..“ நாவல் இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்று நாவலாகவும் திரைக்கதை வடிவமாகவும் எழுதப்பட்டிருக்கிறது. தன் வாழ்வில் ஏற்பட்ட விபத்தொன்றையும் தன் முகநூல் நட்புத் தோழியுடன் ஏற்படும் காதல் மற்றும் திருமணம் உள்ளிட்ட நகர்வுகளுடன் நகரும் நாவல். பின்னணியில் இலங்கையின் தற்போதைய நிலையையும் கணக்கில் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. அடிப்படையில் இந்த நாவல் தமிழ்நாடு-இலங்கை- தமிழினப்பிரச்சனைகள் உள்ளிட்ட முக்கியமான அம்சங்களைப் பேசுகிறது. தமிழில் முன்பு அறிந்த கே.பாலச்சந்தரின் “புன்னகை மன்னன்“ படம்தான் மிக அதிகமாக சென்சாருக்குள் சிக்கியபடம். மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால், மரியான், நந்தா, போர்க்களத்தில் ஒரு பூ உள்பட பல படங்கள் இலங்கை-தமிழ்நாடு அகதிகள் மற்றும் மீனவர்கள் பிரச்சனைகள் பற்றிப் பேசியிருக்கிறது.
     திரைக்கதை வடிவங்களில் பல முறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு மிகச்சிறந்த படைப்பை அப்படியே திரைமொழியில் படம் எடுத்து விடமுடியாது. அந்த இடத்தில் பலதுறை தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்களிப்புடன் காட்சிகள் விரியவேண்டியிருப்பதால் படைப்பாளனின் கதை அந்தந்தப் பகுதியில் சிதிலமடைய நிறைய வாய்ப்பிருக்கிறது. கதைக் களனும் நிலையும் பாத்திரங்கள் உலவும் இடங்களும் மிக முக்கியமாகது. ஒரு ஒற்றை வரிக்கரு மட்டுமே மிகச்சிறந்த படைப்பிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு அவை சமகாலத்தின் திரைமொழி,ரசனைச் சூழல், வியாபாரம் மற்றும் நடிகர் நடிகைகளின் கால்ஷீட்களுக்குப் பிறகு அக்கதை பல வடிவங்களில் திருத்தப்பட்டு எடுக்க ஆரம்பித்த போது ஒரு கதையும்திரைக்கதையும் எடுத்த பிறகு இனியொரு கதையுமாக மாறிவிடும் நிலையேதான் சினிமா உலகின் நூற்றாண்டு கதைகளின் லட்சணம்.
லஷ்மிசிவக்குமாரும் உள்ளிட்ட நண்பர்கள் நேரடியாகவே திரைக்கதை வடிவத்துடனும் அதே நாவலை நாவல் வடிவத்துடன் எழுதுகிற பாணி சிறப்பானது.உங்களுக்கு எதுவேண்டுமோ எடுத்துக் கொள்ளலாம் என்பது. சினிமாவில் கதை சொல்கிற முறைகள் மாறியிருக்கிறது. காரணம் திரையரங்குகள் இப்பொழுது முப்பது சதவிகிதம்தான் உள்ளது. நான்கு காட்சிகளுக்கும் வேறுவேறுபடங்கள் திரையிடப்படுகிறது. 3ஜி 4ஜி போன்ற நெட் வசதிகள் மற்றும் டவுன்லோட் சிஸ்டங்கள் வந்த பிறகு ரிபிட்ட் ஆடியன்ஸ் என்பது முற்றிலும் வழக் கொழிந்து போய்விட்டது. மற்றபடி இருபத்திநான்கு மணிநேர சினிமாவென தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு வேறு. இவைகளுக்கும் மத்தியில் சினிமாத்துறையும் அதைச் சார்ந்த பல லட்சம் தொழில்நுட்பக்கலைஞர்களின் வாழ்க்கை உள்ளது. அதுமட்டுமல்லாது இன்று படம் தயாரிக்க ஆகிற செலவுகள்,வாடகை, சம்பளங்கள்,திரையரங்கு விநியோக உரிமைகள்,சென்சார் போர்ட் பிரச்சனைகள் என தீராத பெருந்துன்பங்களில் சிக்கிச் சின்னாபின்னமா கிறார்கள்.மிகப்பெரிய அளவில் தொழிற்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பும் நல்ல உறுதியான அனுபவமிக்க தயாரிப்பாளர்களுக்காக காத்திருக்கிற சிறந்த கலைஞர்களின் வாழ்க்கை மிகவும் கேள்விக்குரிய தாகவே உள்ளது.
          இந்தச் சூழலில்தான் தேர்வு செய்யும் கதையும் பின்னணிக் களமும் முக்கியமாகிறது.சமூகத்தின் சென்சிடிவான பிரிச்சனைகளை எடுத்து தமிழின் முக்கியமான படமாக மாற்றலாம் என்று ஒரு கலைஞன் முனைந்தால் முதலில் சந்திக்கிற பிரச்சனை அரசியல்வாதிகளின் தலையீடும் சென்சார் போர்ட்தான். அதனாலேயே மிக சாதாரணமான படங்களை எடுக்கிறபொழுது அதில் எந்த அளவு கலாரசனையின் அடிப்படையில் எடுக்கலாம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அது மட்டுமல்ல அந்தப்படம்தான் பல கலைஞர்களுக்கான வாழ்க்கை எதிர்காலம்.
லஷ்மிசிவக்குமாரின் எழுத்து நடை இயல்பாகவும் தகவல்களின் கோர்வையாகவும் உள்ளது. எதிர்பாராத விபத்தொன்றில் தனது இயல்பான செயல்பாடுகளில் தற்காலிக தடை ஏற்பட்டு விட்ட பிறகு எழுத்தும் வாசிப்பும் என நகர்ந்து கொண்டிருக்கிற எழுத்தாளனின் உலகம் நம்மால் புரிந்து கொள்ளக் கூடியது. நாவலின் அத்தியாயங்களில் காட்சிகளில் இணையவெளியில் காதல்,சாட்டில் உரையாடல்,திருமண ஏற்பாடுகள், குடும்பச்சூழல்கள்,இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள நிலவரங்கள்,தன் காதலியின் குடும்பச் சூழல்கள்,இலங்கை ராணுவத்தின் செயல்பாடுகள் என நாம் தினமும் அறிந்துகொண்டிருக்கிற நாளிதழ் செய்திகளின் பின்னணியை மிகச்சிறப்பாக நம் கண்முன் நிறுத்துகிறார். திரைப்படத்துறைக்குள் நுழைவதற்கான ஏற்பாட்டிலிருக்கிற படித்தவர்கள் மற்றும் சென்னையில் பல்வேறு பணியிடங்களில் பணிபுரிகிற எண்ணற்ற வர்களின் வாழக்கை அம்சங்கள் நமக்குப் புலப்படுகிறது. நாவலின் களங்கள் கிராமம், ஊர்,நகரம் பெருநகரம்,இலங்கையின் பல ஊர்களின் சித்திரங்கள் கூகுளில் தேடிக்கிடைப்பது போன்ற களங்கள் கிடைக்கிறது. கதாபாத்திரங்களின் முகங்களும் பாவனைகளும் அவர்கள் பேசுகிற இலங்கைத் தமிழும் நமக்குப் பல பிரதிகளின் வழியாக கிடைத்தவையே. ஏறக்குறை இலங்கைத்தமிழ் என்பது தமிழ்நாட்டின் மாவட்டத் தமிழ் மொழிகளில் ஒன்றாகவே அறியப்பட்டுவிட்டது. நாவலின் முழுமையான கதையையும் அதன் முழுமையான சிறப்புகளையும் சொல்லி மேற்கொண்டு நாவலுக்குள் யாரும் நுழையாத வண்ணம் செய்வது அறிமுக உரை எழுதுபவனின் வேலையல்ல என்பது யாவரும் அறிவார்கள்.
           லஷ்மிசிவக்குமார் தஞ்சைத் தரணிப் பகுதி படைப்பாளராக இருப்பதால் அவருக்கு சோழநாட்டின் தமிழுக்கு நாம் கட்டியம் கூறவேண்டியதில்லை.சைவமும்வைணவமும் பக்தி இலக்கியங்களும் நவீன இலக்கியப் பிதாமகர்களான கரிச்சான்குஞ்சு,பி.எஸ் ராமையா. தஞ்சைபிரகாஷ்,க.நா.சு,மௌனி,தி.ஜா, மற்றும் பல மணிக் கொடி எழுத்தாளர்கள் எழுத்துலகத்தைக் கட்டி ஆண்ட எழுத்துப் பரம்பரையின் மண். அந்த நிலத்தின் எழுத்துக்குச் சற்றும் குறைவில்லாத எழுத்துநடை. நாவலின் நெல்வயல்களும் பாசன நிலங்களும் கண்ணுக்குள் நுழைந்து கொள்கிறது. உரையாடல்களில் சிக்கனத்துடன் பேசுகிறது. நமது அலோபதி மருத்துவ முறைகளின் ஏற்படுத்துகிற “சைட் எபக்ட்கள்பற்றிய விபரங்கள் நாவலின் உண்டு. நம் உடலுக்கு என்ன மாதிரியான மருந்துகளை நம் உடல் ஏற்றுக் கொள்கிறது என்பதை அறிந்து கொள்வதற்குள் நாம் போய்ச் சேர்ந்துவிடுகிற அளவு இன்று நம்மிடம் மருத்துவமுறைகள் வந்துவிட்டது. எல்லா மருத்து முறைகள் பற்றியும் விளம்பரங்கள் அதுபற்றிய தொலைக் காட்சி விவாதங்கள் எதிர்விளைகள் நமக்குப் பஞ்சமில்லாமல் கிடைக்கிறது. என்ன ஒரே குறை நம்மிடம் பணமோ அதற்குரிய உடலோ நம்மிடம் இல்லை. மருந்துக்கடைகள்,மருத்துவமனைகள்,மருத்துவப் பணியாளர்கள் போலி டாக்டர்கள்,சித்த ஆயுர்வேத,அக்குபஞ்சர், தொடு முறைசிகிச்சை, யோகமுறை,இயற்கை வைத்தியங்கள் என்று அதற்கெனவே உருவாக்கப்பட்ட மனிதச் சமூக அங்கத்தினர்கள் வைத்தியம் செய்துகொள்கிறார்கள். இதற்கிடையில் யோகாப் பயிற்சி வேறு நம்மைப் பற்றிக் கொண்டிருக்கிறது. இவையணைத்தும் செய்து கொள்வதற்கான நேரம் உள்ளதாவென்று தெரியவில்லை. எழுதப்படிக்கத் தெரியாத பரம ஏழைகள் பரம்பரை ஏழைகளின் பாடு தேவலை. மூன்றாது உலகப் போர்கள் தேவையே இல்லை.நம் மருத்துவமனைகளே போதும் மக்கள் தொகையை சிறப்பாக குறைத்துத்தருவார்கள் என்பது நிச்சயம். இந்த நாவலில் லஷ்மிசிவக்குமார் வலியிறுத்துகிற குறியீடாக அவரது இன்றைய இருப்பே மருத்துவத்தின் மீதான சாட்சி எனலாம். நமக்குக் கிடைக்கும் பதில் இப்படி யாராவது ஒருவருக்கு நடக்கலாம்ங்க..அதவெச்சிட்டு நாம மொத்தமா எல்லாத்தையும் குத்தம் சொல்லக் கூடாது என்பதுதான்.
         நாவல் பற்றிய விமர்சனமாகப் பேச நிறைய இருந்தாலும் கூட மிக தைரியத்துடன் இந்த நாவலை அவரே பதிப்பித்து உள்ளார். முதல் நாவல்வேறு. அதிகமாக தமிழ்நாவல்களை விமர்சிப்பதைப் போல அக்கு அக்காகப் பிரித்துப் பேசுவது சாத்தியமல்ல. நம் இதிகாசங்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ராமாயணம் மகாபாரதம் பற்றிய விமர்சனங்கள் இன்றும் பட்டிமன்றங்களில் ஒலிக்கக் கேட்கிறோம்.  படைப்பு வாசிக்க மட்டுமல்ல ஒட்டு மொத்தமாக அது நம் வாழ்வின் மீது நாமே வைத்துக் கொள்கிற விமர்சனமே. இன்னும் சொல்லப்போனால் இந்த நாவலே கூட இந்த வாழ்வின் மீது படைப்பாளி தான் வைத்த விமர்சனமே எனலாம். இன்று புதிதாக எழுதப்படுகிற எந்தவிதமான படைப்பு அம்சங்களுமே விமர்சன மரபு கொண்டவை. மகத்தான படைப்பாளர் என்று அறியப்பட்ட படைப்பாளியின் படைப்புகளைக் கூட நார்நாராக் கிழிக்கிற விமர்சகர்கள் நம்மிடம் உண்டு. ஆனால் அவர்களால் ஒரு பாராவோ பத்தியோ எழுத தெரியாது. அவர்கள்தான் விமர்சகர்கள். நூலை இலவசமாக கொடுத்துவிட்டால் அதுவே அந்தப்படைப்பாளிக்கு தான் வைத்துக் கொள்கிற ஆப்பு..நீங்கள் ஆட்டோமேடிக்காக இலக்கிய உலகத்திலிருந்து வெளியேற்றப்படுவீர்கள்.
            லஷ்மிசிவக்குமாரும் இந்த நாவலில் சில புதுமையான கதைசொல்கிற முயற்சியை மேற்கொண்ட அதே நேரத்தில் சரளமான வாசிப்பு  முறையைக் கையாண்டிருக்கிறார். வெகுசன வாசிப்பின் சௌகரியத்திற்காக எப்பொழுதும் ஒரு நாவல் சென்று விடக்கூடாது. அதற்கென நாவல் உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள் அப்பணியை அவர்களுக்கு விட்டுவிடுவோம். நாவலில் வரும் பாத்திரங்களின் உரையாடல்களை இன்னும் பயண்பாட்டு மொழியிலேயே வைத்திருக்கலாம். நாவலுக்குள் நாவலும் சிறுகதைகளும் திரைக்கதை அமைப்புகளும் வைத்திருப்பது நல்ல முயற்சி. வாழ்வின் சுயத்தின் ஒரு பகுதியை படைப்பிலக்கியமாக மாற்றியிருப்பதற்கு வாழ்த்துக்கள். தமிழ்க் குடும்பத்தின் சமகாலப் பொருளாதாரப் பிரச்சனைகளை உரையாடல்களின் மூலமாகவே புரியவைக்க முனைந்திருக்கிறார். நாவலின் அரசியல் களத் தன்மை இல்லாத நிலை பெருங்குறையாகப் படுகிறது. இவ்வுலகில் அரசியல் பின்புலமில்லாமல் ஒன்றுமில்லை. அல்லது அரசியல் படுத்தல்கள் சம்பந்தமான தர்க்கமும் விமர்சனங்களும் தேவை. அத்துனை பிரச்சனைகளுக்குமான அரசியல் மறைபுலம் அவசியமாகிறது. அடுத்து வருகிற படைப்புகளில் இக்கருத்துகளை பரிசீலனைச் செய்தபடி மேன் மேலும் எழுத வேண்டுகிறேன்..எழுத வாய்த்த பொழுதுகள் அற்புதமானது. கொண்டாட்டத்தின் அம்சங்கள். அவர் விரும்பிய படியே இந்த நாவல் திரைப்படமாக வெளிவந்து சிறப்பு கொள்ளட்டும் என்று வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு கண்ணம்மா- நாவல்- முதல் பதிப்பு- டிசம்பர்-2015
விலை-200 ரூ பக்-300 வெளியீடு-முடிவிலி- கரந்தை- தஞ்சாவூர்-613002
அலைபேசி-999 4384 941-































ஞாயிறு, 24 ஜூலை, 2016

கவிஞர் சிவ விஜயபாரதியின் “வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது..“ தொகுப்பு குறித்து......


கவிஞர் சிவ விஜயபாரதியின் “வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது..“ தொகுப்பு குறித்து......

 

 

திராவிட இயக்கப் படைப்புகளின் தற்கால நிலையென்ன.சமகாலத்தில் அப்படியான வகையில் எழுதப்படுகிறதா. அப்படியே திராவிட இயக்கக் கவிதைகள் எழுதப்படுகிறதா. திராவிட இயக்கக் கவிதைகள் என்பது எப்படி இருக்கும். அப்படியொன்று உள்ளதா இல்லையா எனும் கேள்விகள் உதித்து மறையும். ஒரு நாள் நண்பரொருவர் சொன்னார். தமிழ்நாடு கேரளம் கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் எழுதப்படுகிறவை அனைத்துமே திராவிட இயக்கப்படைப்புகள்தான் என்றார். அக்கருத்தை ஆனித்தரமாக நிறுவி வாதிட்டார். அந்த வாதத்தில் தமிழ்த்தேசியம் என்பது எந்த இடத்தில் உள்ளது. என்னும் வாதம் நீண்டு திராவிட இயக்கக் கவிஞர்கள் என்பவர்களெல்லாம் யார் என்னும் பட்டியல் நீண்டு கடைசியாக திராவிடக் கட்சிகளைக் கலைத்துவிடலாம் என்பதில் வந்த முடிந்து போனது. தனித்தமிழ் இயக்கங்கள் வகுத்த கட்டளைகள், பொதுத்தமிழ் வளர்த்து வருகிற தமிழாங்கிலசம்ஸ்கிருத தேவநாகரி மொழி வழக்குகளின் படைப்புகள் பற்றியும் விவாதங்களிடையில்தான் கவிஞர் சிவ விஜயபாரதியின் “வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது..“ தொகுப்பு வாசித்தேன்.

        முன்னுரைகள் முறையே வானம்பாடி மூத்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர் புவியரசு இந்த தொகுப்பு பற்றி இப்படி எழுதுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளாய் நின்று கொண்டிருக்கும் வள்ளுவ மரத்தின் புதுமலர்“ என வருணணை செய்திருக்கிறார். தோழர் கொளத்தூர் மணி “நம்பிக்கை தரும் பகுத்தறிவுக் கவிதைகள்என வகை செய்திருக்கிறார். கவிஞரின் உரையில் கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளின் வாசகர் என்பதைப் பதிவு செய்கிறார். நாம் இந்த வகையில் ஏறக்குறைய திராவிட இயக்கக் கவிதைகள் என்று முடிவுக்கு வருவதற்கு மேற்கண்ட அறிமுகங் கள் உதவி செய்துவிடுகிறது. பொதுவாக நாம் திராவிட இயக்கம் பற்றிப் பேசுகிற பொழுது ஆட்சி அரசியல் பகுதிகளை நீக்கிவிட்டு சிற்சில நடவடிக்கைகளைச சேர்த்துக் கொண்டால்தான் உரையாடலைத் தொடர முடியும் நீங்கள் திராவிட ஆட்சிகள் குறித்த விவாதங்களை உள்ளே நுழைத்தால் பிறகு இருவரும் காவல்,நீதிமன்றம்,சட்டம் ஒழுங்குகளுக்குச் செல்வதாக மாறிவிடும். ஆகவே..

“வெள்ளக்காக்கா மல்லாக்கப் பறக்குது...சாதிச் சண்டைகள் நடந்த சமயத்தில் தன் விசுவலிங்கமாமா பாடிய பாடலின் வரிகளையே தன்  தொகுப்பிற்குத் தலைப்பிட்டிருக்கிறார். பொதுவாக சமகாலத்தில் சமூக உணர்வு ஊட்டுதல்,சாதி சமய வேறுபாடுகளைக் களைதல், ஏற்றத்தாழவு களை உடைத்தல்.லஞ்ச ஊழல்களை ஒழித்தல் போன்ற ஆபாச நடவடிக் கைகள் நடைபெறுவதில்லை. அப்படியாக நடக்கும் போரட்டங்களுக்கு என்ன வரவேற்பு இருக்கிறது என்பதை நாம் அறிவோம். இருந்தாலும் போராடமல் இருக்கமுடியாது. இதெல்லாம் நடப்பதே திராவிட இயக்க ஆட்சிகளில்தானே என்று நீங்கள் எதிர்கேள்வி கேட்க கூடாது. இதற்குதான் நான் முன்பே எச்சரித்து தவிர்த்துவிட்டுவாசியுங்கள் என்று விண்ணப் பித்தேன்..இக்கட்டுரை எழுதும் பொழுது தாமிரபரணி ஆற்றில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு அஞ்சலி நாள் இன்று. பல்வேறு அரசியல் கட்சிக்காரர்கள் ஆற்றிற்குச் சென்று மலர் தூவி அஞ்சலி  செலுத்தினார்கள் (சில திராவிடக்கட்சிகள் போகவில்லை).

         சிவ விஜயபாரதியின் கவிதைகளிலிருந்து சிறப்பான கவிதை யுடன் உரையாடலைத் தொடங்குவோம்.

செம்பருத்திப் பூ

 

துவட்டப்படாத தலை

நீரைச் சொட்டிக் கொண்டிருக்க

 

துளசி மாடத்தைச் சுற்றிவந்து

துளசியின் மேல் செம்பத்திப் பூ

பரப்பி விட்டு விழுந்து வணங்கினாள்

 

எதிர்ப்பட்ட என்னிடம்

படபடத்த விழிகளோடு

வி பூதியை நீட்டினாள்

 

துளசிக்குள்

செம்பருத்தி பூத்திருந்தது

 

           தொகுப்பில் மேலும் சிறந்தகவிதைகள் உள்ளது. இயல்பான நேரடிக் கவிதைகள் அவை. இனக்குழு சார்ந்த கவிதைகள். முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோரின் குரலாக ஒரு கவிதை. அரசியல் விடுதலை பேசுகிற கவிதைகள். கிராமத்தில் நடக்கும் மூட நம்பிக்கை களுக்கு எதிரான கவிதை,சாதிய மோதல்கள்களால் பாதிக்கப்படுகிற மனிதம் பற்றிய கவிதைகள். சாதிய உருவாக்கங்கள் பற்றிய கருத்துகளின் மீதான கோபங்கள் எல்லாம் எதிரொலிக்கிறது. தமிழீழம் சார்ந்த துயரம் நிறைந்த கவிதைகள். தமிழ்க்கவிஞன் எழுதித்தீர்த்துக் கொள்ளவேண்டிய எல்லா அம்சங்களும் கொண்ட கவிதைகள். சமூக அரசியல் களப்பளியாள ர்கள் நடைமுறையில் உள்ள நேரெதிர் கள அரசியல் முறைகளை அறிவார்கள். அவர்களுக்கும் கவிதை வரிகளால் சமூகத்தின் இயல்புகளைச் சாடவேண்டும். அறைகூவல் விடுக்கவேண்டும். இக் கொடிய நிலைகளுக்கு எதிராக மக்கள் திரண்டு அநீதிகளைத் தட்டிக கேட்கவேண்டும். போதும் சகிப்புத்தன்மை பொங்கி எழுங்கள் மக்களே..ஏற்றத்தாழ்வு கொண்ட பழமைமுறையைத் தகர்ப்போம் என்னும் பொருளில் சில கவிதைகள். மீத்தேன் வாயுத் திட்டத்தை எதிர்த்து ஒரு கவிதை

 

சம்பா குருவ வெதவெதச்சோம்

களையெடுத்தோம் கதிரறுத் தோம்

தென்னை வாழை நட்டு வெச்சோம்

குலையும் சீப்புமா வளர்ந்து நிக்கும்

 

வகை வகையா வளர்ந்த  பூமி

மீத்தேனுக்குள்ள மாட்டும் கத

நெனச்சா வயிறு குமுறுது

 

காடும் கழனியும் கருகிப் போக

பசியும் பஞ்சமும் வந்து நிக்கும்

வெளைய வச்ச எங்க மக்க

வட்டிக் கடனுக்குச்ச் செத்தா போக?

     

          பொதுவாக புரட்சிகரமான கவிதைகள் என்கிற படிமத்தில் சமகாலத்தில் கவிதைகள் வருவதில்லை. அல்லது கவிதையில் புரட்சியைப் பேசி என்ன பயன் என்று கூட கவிஞர்கள் விட்டிருக்கலாம். அல்லது தமிழுக்கும் புரட்சிக்கும் சம்பந்தமில்லையென்று கூட நினைத்திருக்கலாம். எதற்கு வம்பு என்று கூட தவிர்த்துவிடலாம். கவிஞர் சிவ விஜயபாரதி கவிதை விமர்சகர்களைக் கண்டு அச்சமடையாமல் தைரியமாக கவிதை அல்லாத கவிப்பின்னல்களை எழுதியிருக்கிறார்.

கவிதை எப்படி வேண்டுமானாலும் எழுத சுதந்திரம் உண்டு. கவிதை எந்த இடத்தில் கவிதையாக மாறும். எதோடு கவிதையின் அழகு முடிந்து விடுகிறது என்பதை அறிந்து கொள்வதும் நலமே.. மேலும் ஒரு சிறந்த கவிதையை வாசிக்கலாம். புதுக்கவிதையின் உயரத்தின் நிழலுடன் ஒளிர்கிற கவிதையாக அமைந்திருக்கிறது.

 

மழை விட்டிருந்தது

 

வெக்கை குறையத் தொடங்கி

மாலைப் பொழுதில்

நட்பின் சுவை மாறாது

பேசிக் கொண்டிருக்க

திரண்டிருந்த மேகம்

கொட்டிக் கொண்டிருந்தது

 

ஆவியாய்

குறைந்து கொண்டிருந்தது

தேநீரின் சூடு

 

நட்பின் மேய்ச்சல் நிலத்தில்

மேய்ப்பராகிய நீ

பைபிளை ஒதுக்கி

அழைப்பிதழை எடுத்து நீட்டுகிறாய்

 

வெட்டும் மின்னலில்

முகிழ்க்கும் மூங்கில் குழந்தையென

நினைவுகள் நமக்குள்

 

அடைக்கும் தாளற்று

திரளும் கண்ணீரை

மறைக்கிறோம்

 

கட்டுடைத்த அன்பு

மௌனமாய்

நீண்டு கிடந்தது

 

மழை விட்டிருந்தது

 தனக்கு நண்பனாக இருந்து சாதிய அடுக்கில் உயர்ந்தவனாக அறியப்பட்டு விட்டவன் தன் இல்லத்து விழாவிற்கு அழைப்பிதழ் தருகிற காட்சியை அறிமுகப்படுத்துகிற இடத்தில் கவிஞனின் இயல்பு சிறப்பாக வெளிப்படுகிறது.பொதுவாக பல நூறு புரட்சிக்கவிதைகள் செய்ய வேண்டிய வேலையை இப்படியான ஒரு கவிதை செய்து விடுகிறது. இந்த நூலில் முழுக்கவும் மழை கவிதைகள் அதிகமாகப் பொழியப்பட்டிருக்கிறது. சாதியப் பற்றுகள் அதிகமாக உள்ள ஊர்களில் மழைக் காலங்கள் எப்படியிருக்கும் என்பதை உணர்த்துவதாக உள்ளது.

         இந்த நூலுக்கு தமுஎக சங்கம் வைத்திருந்த அறிமுக விழாவில் கவிஞர் சிவ விஜயபாரதியின் உரையைக் கேட்டிருக்கிறேன். நல்ல பேச்சாளராகவும் இருக்கிறார். அவர் உரையிலும் தமிழ்ச்சமூகத்தில் புறையோடிப் போய்விட்ட சாதிய அமைப்புகளைச் சாடினார். நம் பண்பாட்டில் சாதியத்திற்கு எதிராகப் பேசுகிற சாதியும் சாதி ஆதிக்கத்தைத் தான் நிலைநாட்டுகிறது என்பது பொருள். தங்கள் சாதிகளும் மேல்நிலையை அடைந்து தற் பொழுது உள்ள மேல் சாதிகள் அனைத்தும் கீழ்சாதிகளின் நிலைக்கு வந்து கீழ் சாதிகள் என்று கட்டமைக்கப்பட்டவர்கள் மேல்சாதிகளாக அதிகாரங்களைக் கைப்பற்றி பழிக்குப் பழி வாங்குவதல்ல என்பதை சாதியைத் தகர்க்க நினைக்கிறவர் களும் இன்ன பிற ஏனைய எதிர்ப்பாளர்களும் அறிவார்கள் என்று அறிகிறேன். நிலம் அதிகாரம் பணம் அடியாள் நிறுவனம் என்று சகல அள்ளக்கைகளுடன் இருக்கிற சாதிகள் எந்தக் காலத்திலும் அழியாது என்பதை கவிஞர் சிவ விஜயபாரதி உள்ளிட்ட முற் போக்காளர்கள் நம்புவார்கள் என்று கருதுகிறேன். காரணம் ஒன்றுமே இல்லாதவர்கள் கொள்கையில் வலுவாக இருக்கும் பொழுது மேற்கண்டவர்கள் தயிர் சாதம் மட்டுமே சாப்பிடுவார்கள் என்று கருதக் கூடாது. இறுதியாக அடுத்த ஒரு கவிதையுடன் முடிக்கிறேன். நினைத்துப் பாருங்கள் சாதிகளே இல்லாமல் போனால் நமக்கு மண்டை காயுமா காயாதா...

பூவரசனும் புவியரசனும்

 

புரியாத பெருநகரச் சாலையொன்றில்

பரிச்சயமற்ற முகங்கள்

விரைந்து கொண்டிருக்க

பூவரசம் பூக்கள்

உதிர்ந்து கிடந்த

பழைய மரத்தினடியில் நின்றேன்

மழை தூவிக் கொண்டிருந்தது

இருவர் முகத்திலும்           

 

நல்ல பேச்சாளராக இருப்பது கவிதை எழுதுபவர்களுக்கு பலம்..அப்படியே கவிஞர்கள் நல்ல பேச்சாளர்களாக இருப்பது கவிதைகளுக்கும் பலம். இரண்டில் எதையும் பேசியும் எழுதியும் சமூகத்துடன் நின்று கொள்ளலாம். இக்கவிதைகள் திராவிட இயக்கக் கவிதைகளா, திராவிடம் எனப்படும் பகுத்தறிவுக் கவிதைகளா என்பதை காலமும் அவருடைய இலக்கிய வாழ்வும் முடிவு செய்யும். அதுவரையிலும் திராவிட இலக்கியப் பரப்பில் கவிதைத் துறையில் ஒரு சிறந்த கவிதைப் பிரதி இதுவெனச் சொல்லலாம்...வாசித்துப் பாருங்கள்.. கைப்பற்றி வாழ்த்துங்கள்...

 

வாழ்த்துக்களுடன்..     

வெள்ளக்காக்கா மல்லாக்கா மல்லாக்காப் பறக்குது“

கவிதைகள்-ஆசிரியர் சிவ விஜயபாரதி

வெளியீடு-குயிலி பதிப்பகம்

44 ஊத்த மந்தை- கல்லூர் அஞ்சல்-

கும்பகோணம் தாலுக்கா

தஞ்சாவுர் மா

தமிழ்நாடு-612 503

அலைபேசி-97866 34522

விலை-70 ரூபாய்...

 

 

 

 

 

 

 

 

 

சனி, 9 ஜூலை, 2016

லெமூரியக் கண்டத்து மீன்கள்-ஆன்மன் கவிதைகள்

லெமூரியக் கண்டத்து மீன்கள்
ஆன்மன் கவிதைகள்
       கள இலக்கியப் பணியில் ஆன்மனின் பங்களிப்புகள் நண்பர்கள் அறிந்த ஒன்று. நண்பர்களின் குடும்ப,இலக்கிய, நட்பு விழாக்களில் அவரை நிச்சயம் பார்க்கமுடியும். அதிகப்படியான கவிதை வாசகர்களைக் கொண்ட எழுத்துக்காரர்.மிகப்பரவலாக நண்பர்கள் குழாமில் அறியப்பட்டவர். அவருடைய கவிதைகள் அதிக விருப்பங்களின் கட்டுகளுக்குள் கொண்டாடப்படுபவை. புதுக்கவிதையின் அழகும் கருத்துச் செறிவுமிக்க இயல்பான மொழியில் அமைந்தவையாக இருப்பதாகும். பொதுவாக சமூக அரசியல் பிரச்சனைகளைக் கவனித்துவிட்டால் கவிதை வந்துவிடும். தார்மீக கோபங்கள் அதிகமாக அதிகமாக கவிதைகள் வலிமைபெறும். அணையாத கோபத்தைக் கொண்டிருப்பவர்களால் நிச்சயமாக தமிழுக்கு நல்ல கவிதைகளைத் தந்துவிடமுடியும். ஆன்மன் கவிதைகள் கோபத்தின் பால்யத்தில் துவழ்கிறவையாக இருப்பது. முதல் தொகுப்புக்குரிய வசீகரம் அட்டையிலிருந்து சொற்கள் வரை ஈர்க்கிறது.
         இந்த தொகுப்பு குறித்து வெளியிட்ட தோழர் பாமரன் பேசிய உரை நினைவில் தள்ளாடுகிறது. அப்படியே தோழர் அகரமுதல்வன் பேசியதும் மருத்துவ மானிட்டரில் கீக் கீக் என்று வந்து போகிறது. இந்த நூலுக்கு அவர்கள் பேசிய பிறகான அறிமுகம் அவசியமற்றதாகிறது. எனினும் ஆன்மனின் கவிதைகள் குறித்து எழுதுவதும் கூட அவசியம் என்று கருதினேன். காரணம் ஆன்மன் இலக்கியக் களத்திலும் இயங்குகிறவர்.
        பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளியிட்ட எட்டு நூல்களில் இதுவும் ஒன்று.ஆன்மன் நினைத்திருந்தால் பிரபலமான பதிப்பகத்தில் கொண்டுவந்து தனக்கு இருக்கும் நட்பு வட்டத்தை வைத்து சென்னையில் பிரமாண்டமான விழாவை நடத்தி கவன ஈர்ப்பு செய்திருக்கலாம் (பொள்ளாச்சியில் நடந்த விழாவும் பிரமாண்டமான விழாதான்) ஆனாலும் சக கவிஞர்களின் படைப்புகளுடன் தன் நூலையும் வைத்துக் கொண்டு வெளியிடச் செய்த பெருந்தன்மை ஒரு கவிஞனுக்கே உரியது.
      முகநூல் வழியே அறிமுகம் ஆகியிருந்தாலும் நானும் எல்லாரும் போலவே அவருடைய எளிமையைப் பார்த்து நம்பமுடியாமல் ஒரு முறை அவரிடமே “நீங்க நண்பரே..“ என்றபோது “நான்தான் ஆன்மன்“ அது கவிஞர் அகிலாவின் நூல் வெளியீட்டு விழாவின் பொழுது. கவிஞர்கள் மனிதர்களாக இருப்பதைக் காண்கிற பொழுது வருகிற ஆச்சர்யம் அது. பிறகு சென்னையில் உயிர்மை விழாவில் சந்தித்தோம். அவர் முகம் நினைவுக்கு வரும் போது அவருடைய குரல் முதலில் காற்றில் ஒலிக்கும். அக்குரல் ஒரு தேர்ந்த கர்நாடக இசைப் பாடகர்களின் குரல் அது. இயற்கையாகவே சிலருக்கு அமைவது. சுருதியின் நாதமுமான குரல் அது. அவர் மேடையில் பேசும் போது யதார்த்தமாக சிரித்தபடியே பேசுவதைக் கவனித்திருக்கிறேன். கொஞம் சுயம் சார்த்த பிரச்சனைகள் அவதானிப்புகள் இருந்தாலும் அப்படி வெளிப்படையாகப் பேசுவதும் தேவையானது.
எந்திரப்பறவை
உமிழ்ந்த நச்சில்
தகர்ந்த பனைமரத்தில்
குடியிழந்த கிளிகள்
தாழப் பறந்து
இறங்கித்தேடின
தம் குஞ்சுகளை
பதுங்கு குழிகளில்       பக்-21
      
தமிழ்நாட்டின் தமிழ்க்கவிதையில் ஈழம்தான் கவித்துவத்திற்கு உயிர் கொடுப்பவை. இயலாமைக் குரூரமனங்களின் அடியாழம் முழுக்க ஏதும் ஆற்றமுடியா வெகுளிப்பைச் சொல்பவை. தமிழ் ஈழம் அமைந்தே தீரும் அமைத்தே தீருவோம் என்னும் பொருட்பொதிந்த சொற்கள் மீன்கள் மிதப்பதுபோல மிதக்கும் கவிதைகளில். இறுதிப் போர். பதுங்கு குழிகள், முள்வேலி முகாம்கள், அகதிமுகாம்கள்,மறுசீரமைப்பு,தேர்தல்,குறைந்த பட்ச அதிகாரம்,மீட்டெடுப்பு,மறு குடியமர்த்தல்கள்,பறிக்கப்பட்ட சொத்துகள் திரும்பத்தருதல். உடமைகள்,உடமைக்குரிய ஆவணங்கள். என்று இன்னும் தத்தளித்துக் கொண்டிருக்கிற இனத்தின் உறவினர்களாக நாம் குறைந்த பட்சம் எழுத்துக்களில் பதிவு செய்து கொண்டிருக்கிறோம். ஏறக்குறைய நாற்பதாண்டுகளாக ஒரு இனம் தொடர்ந்து போர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அந்த இனத்திற்காக தொடர்ந்து எழுதப்படுகிற கவிதைகள் புதினங்கள் கட்டுரைகள் கள இலக்கிய இயக்கங்கள். யாவும் யுத்த நீதியை, மனித உரிமையை, சுய அடையாளத்தை மீட்டுவதற்காக எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பதை உணர்வது முக்கியம்.
      ஆன்மனின் கவிதைகள் பல ஈழ நிலத்தையும் உறவுகளையும் பேசுகிறது. மிக நேரடியாகவும் படிமங்களாகவும் குறியீடுகளாகவும் கவிதைகள் பேசுகிறது. ஒவ்வொரு கவிஞனின் மனதின் ஈவு இரக்க சுபாவங்களுக்குட்பட்ட வகையில் அனுபவங்களின் வழியாக சொற்கள் சிறு சலனத்தை உண்டுபண்ணுகிறது. தர்க்கத்திற்கு அப்பால் சமநோக்கின் அதிகாரம் எழுப்பப்படுகிறது. கவிதையின் இடங்களும் அதுவே. தர்க்கமும் சமாதானமும் சமநோக்கும் தீர்வுகளும் நீதியையும் அறத்தைப் பேசும்.
மலைச்சரிவில்
ஆடு மேய்ப்பவள்
தாலிக்குத் தங்கம் வாங்கச்
சான்றிதழ் கேட்டுப்
பள்ளிக்குச் சென்ற பொழுதில்தான்
தெரிந்தது
(தான்) தேறிய
தேர்வு முடிவு-         பக்-43

           தேர்வு முடிவுகள் உளவியல் ரீதியாக ஏற்பத்தும் அதிர்வுகள் முக்கியமானவை. இக்கவிதை மூன்று கூறுகளை, முக்கியமான பிரச்சனைகளை நினைவு படுத்திவிடுகிறது. சாதி அடைப்படையிலான கல்வி, இலவசங்களால் சீரழிக்கப்படும் கல்வி, பின் தங்கிய பொருளாதார நிலை மலைவாழ் மக்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி. பள்ளிக்கல்விகளின் தரம், அதன் பீதியளிக்கிற தேர்வுமுறைகள், அளிக்கப்படுகிற கல்விகளின் தரம் பற்றியெல்லாம் இச்சிறுகவிதை மாபெரும் ஓவியக்கித்தானில் ஒரு நாவலுக்குரிய அழுத்தத்தைக் கொடுத்துவிடுகிறது. இவ் வகை கவிதைகளை நம் விமர்சகர்கள் இது எப்படி கவிதையாகும் என்று பேசுகிற பீடைகள் உள்ளது பெருங்கொண்ட கஷ்டம்தான்.
        நம் சமூகத்தில் பெண்கள் வழியாக அளிக்கப்படுகிற இலவசங்கள் மிகவும் உளவியல் ரீதியாக பெருஞ்சிக்கல்களை உண்டுசெய்பவை. குடும்பமுறைகளைச் சிதைக்க முயல்பவை. ஆண்கள் குடிக்கு அடிமையாகிவிடுவார்கள்( அதற்காகத்தான் கடைகள் திறந்திருக்கிறோம்) ஆகவே பெண்களே உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இலவசங்களைத் தந்து விடுகிறோம்.நீங்கள் காலமெல்லாம் குடும்ப முறை அடிமைச்சடங்குகளிலும் பிறருக்கு உழைத்து ஓடாகத்தேய்ந்து அறிவு வளராமல் நமக்கு எதனால் இந்த துயரம் என்று அறியாமலே செத்துப் போங்கள் என்பதுதான் இந்த குடும்பவரை இலவச முறைகள். குறிப்பாக மலையக மக்களுக்கு சாதிச் சான்றிதழ்கள் கூட தராமல் இழுத்தடிக்கிற நிலை இன்றும் நீடிக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. சில குழந்தைகள் தேர்வுகள் முடிவுகளில் வெற்றிபெற்றது அறியாமலே தேர்வு முடிவுகளின் மீது ஐயமும் பீதியுமடைந்து தற்கொலைகளில் ஈடுபட்டதையும் அறிவோம். தேர்வு முறைகளும் முடிவுகள் அறிவிக்கும் முறைகளையும் போர்தொடுக்கப்படுவதைப் போன்ற அச்சத்தை நம் சமூகம் பழக்கி வைத்திருக்கிறது. ஆன்மனின் பல கவிதைகள் நிகழ்கால சமூகத்தைப் பேசுகிறது.
கத்தயின்றி
ரத்தமின்றி
யுத்தஞ் செய்றான்
கார்ப்பரேட்டு
அட
கம்முனு கெட
கத்துனா
நீ நக்சலைட்டு---பக் 58

      அநேகமாக என் சிற்றறிவிற்கு எட்டிய வகையில் நக்ஸலைட் குறித்து எழுதப்பட்ட முக்கியமானதாக கருதுகிறேன். இன்றும் முக்கிமாக சமூத்தில் நடைபெறுகிற முக்கியமான உரிமைப்போராட்டங்கள் நடத்தப்படும் இடங்களில் முன்னணி வகிக்கின்ற பலருக்கு சூட்டப்படுகிற பெயர்கள் இந்த நக்சலைட்.அப்படியே சமூக  ஊழியர்கள் மக்களைத் திரட்ட கோரிக்கைகளை வென்றெடுக்க எடுக்கும் முயற்சிகளுக்கு ஆட்சியாளர்கள் சொல்லும் பெயர்களே இந்த நக்சலைட்.“ அவன் சொல்றானு அவங்க கூட சேராதீங்க உங்களக் கொண்டு போய் நக்சலைட்டுல சேர்த்தீருவானுகய்யா என்று திரட்டபடும் மக்களிடம் உளறிக்கொட்டி மக்களை மக்கள் இயக்கத்தைக் கொச்சைப்படுத்த உபயோகிப்படும் சொல் இது. ஆட்சியாளர்களின் கருத்துப்படியும் கணக்குப்படியும் பொதுப்பிரச்சனையில் நீங்கள் போய் சம்பந்தப்பட்டவர்களிடம் நியாயம் கேட்டால் அதிகாரிகள் கேட்பார்கள் யோவ் நீ நக்ஸலைட்தான..சொல்லிருக்காங்கயா ..பாத்துக்கறம் சமயம் வரட்டும் என்று மிரட்டுகிற நிலை நம் அதிகார வர்க்கத்திடம் இருக்கவே செய்கிறது. குறிப்பாக கார்ப்பரேட்களால் தான் நம் அரசுகள் நகர்கிற நிலை வந்தாயிற்று. அவர்களின் முடிவுகளை அறியாமல் நம் அரசுகள் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதில்லை. கார்ப்பரேட்டுகளைப் பகைத்துக் கொள்ள எந்த அரசும் முன்வருவதில்லை. கார்ப்பரேட்டுகள்தான் தேர்தல் செலவுகளுக்குப்பணம் தருகிறார்கள் நாமா தருகிறோம். தேர்தல் முறைகளின் வழியாக நாம் தொடர்ந்து சுதந்திரம் பெற்ற பிறகும் ஏமாற்றப்பட்டு  வந்து கொண்டிருக்கிறோம். இயந்திர முறைகள் சரிதானா நியாயம்தானா உண்மைதானா..வாக்குகள் சரியாகத்தான் பதிவாகிறதா அல்லது வேறு ஒரு சின்னத்திற்காக மாறிப்போகிறதாவென்று பைத்தியம் பிடித்த நிலையில்தான் மக்களின் நக்ஸ்லைட்கள் அதாவது பொதுமக்கள் அழுத்துகிறார்கன் பொத்தான்களை..
நீங்கள்
எங்களுக்கானவர்கள் அல்ல (கார்ப்பரேட்டுக்கானவர்கள்)
நாங்கள்
உங்களுக்கானவர்கள் அல்ல
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை
அறிந்தே அழுத்துகிறோம்
பொத்தான்களை      பக்-26   
         சமூகப் பிரக்ஞையுடன் எழுதப்படுகிற கவிதைகளுக்கு நம் இலக்கிய விமர்சன உலகில் என்றுமே மதிப்பில்லை. கவிதைகளின் தரம் மற்றும் எழுதப்படும் ஆள்,குழு,ஏரியா,சாதி,மதம்,இடம்,வலம். குருபீடம். இவையெல்லாம் பார்க்கிற சூழல் உள்ளது. சில கம்மானாட்டி படவா நாய்கள் உலவுகிறது. மொழியைத் திருகி கெண்டைக்கால்களுக்கு பேச்சூடு போட்டு தன் வாழ்க்கைக்கு இளங்கவிஞர்களை நரபலி கொடுத்து வாழ்ந்து வந்த பெரும்பாலான நாய்களை விரட்டிவிட்டுவிட்டோம். சொல்விளங்காத முண்டங்கள் சிலதுகள் நல்லபடியாக இயங்குபவர்களைக் குற்றம் கொண்டே பேசும். இது எல்லாக் காலகட்டங்களிலும் இவ்வகை கிருமிகள் இருக்கவே செய்யும். அவையெற்றைல்லாம் நாம் உணர்ந்தே செயலபடவேண்டும். இந்த தரித்திரம் பிடித்த இலவசத்திற்கு நாயாய்ப் பறக்கும் இந்த நாட்டில் சுத்தம் சுகாதாரம்,அறம் நீதி தர்மம் வடிவக் கோட்பாடு குறித்தெல்லாம் எழுப்பபடுகிற கேள்விகளுக்குரியவர்கள் சமூக இயக்கத்திற்கு சல்லி பைசா அளவு கூட உதவாதவர்கள். கவிஞனின் கவனம் தன் சொற்களின் மேம்பாட்டிற்கு மட்டுமிருக்கக் கூடாது. சமூகத்தின் சுற்றியியல்புகளின் மீதும் கவனம் தேவையாகிறது. கவிதைக்கு உண்மையாக இருப்போமாயின் புல்லுருவிகள் தானாக கரைந்து போய்விடுவார்கள் அல்லது வேறுவழியின்றி திருந்தி விடுவார்கள். ஆன்மன் முதல் தொகுப்புக்காரர் என்பதால் பொது வெளியில் நிகழும் நிலவுடைமைவாதிகளால் நிகழ்த்தப்படும் இலக்கிய அரசியலையும் சேர்த்தே பழகவேண்டும். கீழ்க்கண்ட கவிதைக்கான பொழிப்புரைதான்இந்த நெடிய விளக்கம்.
கிணற்றில் வீழ்த்தியும்
கயிற்றில் ஏற்றியும்
நெருப்பில் வாட்டியும்
கொல்வதை விடுத்து
உங்கள் மனுநீதி வெல்ல மொத்தமாக
தேர்க்காலில் இட்டிருப்பீர்கள்
தேர்வரும் தெருக்கள் எம்மை விடாது
எம் தெரு வழியே தேர் வராது
உரக்கச் சொல்வோம்
பாரத் மாதா கீ ஜே....           பக் 27

           கவிஞர் ஆன்மனுக்கு வாழ்த்துக்களும் கூடவே ஒரு ஜே...ஜே..
வெளியீடு பொள்ளாச்சி இலக்கிய வட்டம்-பில் சின்னாம்பாளையம்
சமத்தூர் அஞ்சல் பொள்ளாச்சி-9095507547-98422 75662